கிராமங்களில், யாராவது இறந்து விட்டால் “எமன் இவ்வளவு சீக்கிரமா ஏன் கூப்டுகிட்டாண்” என்று ஆதங்கப்படுவார்கள். இந்து மத புராணங்களின் படி ஒருவருடைய உயிரை பறிப்பது எமதர்மனுடைய வேலை. ஒருவன் முந்தைய மற்றும் தற்போதைய பிறவிகளில் செய்த பாவ புண்ணிய கணக்கில் இருந்து அவனுடைய வாழ்நாளை எமதர்மன் தீர்மானிப்பதாக பொதுவான நம்பிக்கை இந்திய மக்களிடம் உண்டு. இது, இறப்பின் பயத்தால் கற்பனையாக உருவாக்கப்பட்ட கடவுளை பற்றி மக்கள் கொண்டிருக்கும் மூடநம்பிக்கை.
ஆனால் மக்களுக்கு நன்மை செய்வேன் என்று பொய்வாக்குறுதி கொடுத்து விட்டு, உண்மையில் முதலாளி வர்க்கத்தின் உண்மையான சேவகனாக இருந்து பல இலட்சம் இந்தியர்களின் உயிரை பறித்த ஆதார் அட்டை உள்ள ஒரிஜினல் பூலோக எமன் யார் தெரியுமா? “தெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட” திருவாளர் மோடி தான் அது.
மேலுலக எமனோ இறப்புக் கணக்குகளில் சிறுபிழையும் செய்யமாட்டார் என்பார்கள். ஆனால், பூலோக எமனோ தனது 56 இஞ்ச் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ள கொரோனா இறப்புக் கணக்குகளில் பிராடுத்தனம் செய்தும் உண்மை தெரியாமல் இருக்க மக்களை திசைத்திருப்பவும் செய்திருக்கிறார்.
இங்கு மதக்கலவரத்தில் மோடி கும்பல் கொன்ற முஸ்லீம்களின் எண்ணிக்கையைப் பற்றி சொல்லவில்லை. மோடி கும்பலின் கையாலாகாத தனத்தினாலும் முதலாளிகளுக்கு ஆதரவான தனியார்மய மருத்துவக் கொள்கையினாலும் கொரோனா காலகட்டத்தில் இலட்சக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் உயிரிழந்ததைப் பற்றி தான் சொல்கிறோம்.
கடந்த மாதம் ஏழாம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மோடி அரசு பாகிஸ்தானின் மீது இராணுவத் தாக்குதலை நடத்தியது. மொத்த இந்தியாவும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசிக் கொண்டிருக்கையில், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான (கொரோனா தொற்று காலம்) பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களை (சிவில் பதிவு அமைப்பு –CRS) மோடி அரசு வெளியிட்டது. அதில், சராசரி இறப்பு எண்ணிக்கையை விட 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் மட்டும் பல இலட்சம் இந்தியர்கள் கூடுதலாக இறந்து போயிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இது கொரோனா இறப்பு குறித்த மோடி அரசாங்கம் சொன்ன பொய்மூட்டைகளை அம்பலப்படுத்தியிருக்கிறது.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் மற்றும் இறப்புகள் குறித்த தரவுகளின்படி, கோவிட் தொற்றுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளான 2018 மற்றும் 2019 களில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளுடன் ஒப்பிடும்போது, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் 37.4 இலட்சம் இறப்புகள் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக அவ்வறிக்கையின் விவரங்கள் கூறுகின்றன.
இந்த ‘அதிகப்படியான இறப்புகள்’ என்பது ஒரு தொற்றுநோய் அல்லது வேறு எந்த இயற்கை பேரழிவின் போதும் ஏற்படும் மொத்த இறப்புகளின் எண்ணிக்கைக்கும், சாதாரண நிலைமைகளில் ஏற்படும் மொத்த இறப்புகளின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள வேறுபாடாகும்.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மொத்த இறப்புகள் 145 இலட்சம். ஆனால் 2020 மற்றும் 2021 ஆகிய தொற்றுநோய் ஆண்டுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 183 இலட்சம் என உள்ளூர் அரசாங்க அமைப்புகளில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் அதிகாரப்பூர்வ பதிவான CRS தரவு காட்டுகிறது.
இந்தியா முழுவதும், 2021 ஆம் ஆண்டில் பதிவான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 102 இலட்சமாகவும், 2020 ஆம் ஆண்டில் அது 81 இலட்சமாகவும் இருந்ததாக, மொத்தம் 183 இலட்சம், CRS இன் அறிக்கை கூறுகிறது. அதேவேளையில் கோவிட்-க்கு முந்தைய இரண்டாண்டுகளில், 2018 இல் 69 இலட்சம் பேர் இறந்துள்ளதாகவும் 2019 இல் 76 இலட்சம் பேர் இறந்துள்ளதாகவும், மொத்தம் 145 இலட்சம் பேர் இருந்துள்ளதாக அதே அறிக்க கூறுகிறது.
கொரோனா காலகட்டத்தில் மட்டும் (2020. 2021 ஆண்டுகள்) அதற்கு முந்தைய ஆண்டுகளை விட 38 இலட்சம் பேர் (25.9%) அதிகமாக இறந்துள்ளனர். ஆனால், இதற்கு நேர்மாறாக, இன்றுவரை இந்தியாவின் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 5.33 இலட்சம் என்கிறது மோடி அரசாங்கம். மோடி அரசாங்கம் கொடுத்த இறப்பு எண்ணிக்கையை பல ஆய்வாளர்கள் அப்போதே மறுத்தனர். 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏறத்தாழ 47 லட்சமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியது.
இதற்கு மிகக்கடுமையான எதிர்ப்புகள் மோடி அரசாங்கத்திடம் இருந்து வந்தது. கொரோனா தொற்றை நிர்வகித்த உயர்மட்ட குழுவில் இருந்த மருத்துவர்கள் (நிதி ஆயோக் உறுப்பினர் உள்ளிட்ட) இதை மறுத்து அறிக்கை வெளியிட்டனர். அரசாங்கம் அமைத்த வல்லுநர்கள் குழுவோ, (பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள்) மோடியின் மனம் நோகாத வகையில் ஆய்வறிக்கையை தயாரித்தனர். அதையே அரசின் நிலைப்பாடாக மோடி அரசு ஏற்றுக் கொண்டது. அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்வியா “இது இந்தியாவின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் முயற்சி” என்று உண்மையை மறைக்க தேசபக்தி கவசத்தைக் கொண்டு விமர்சித்தார்.
CRS வெளியிட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கையும் WHO கணித்த இறப்புகளின் எண்ணிக்கையும் ஓரளவுக்கு பொருந்தி வருகின்றன. மோடி தன்னுடைய பிம்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக உண்மையை மக்களுக்கு சொல்லாமல் இவ்வளவு நாள் மறைத்து வைத்திருந்தார் என்பதே உண்மை.
ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட வேண்டிய CRS அறிக்கை கடந்த ஐந்து வருடங்களாக வெளியிடப்படவே இல்லை. சமீபத்தில் வெளியிட்டது கூட பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய அதே நாளில் மிகவும் இரகசியமாக இந்த அறிக்கையை பாசிச கும்பல் வெளியிட்டு இருக்கிறது. இதிலிருந்து இவர்களது உள்நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.
கொரோனாவினால் மக்கள் செத்துக் கொண்டிருந்த போது, 2021 ஜனவரி இல் டாவோசில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் பேசிய மோடி, “இந்தியா கொரோனாவை திறம்பட கட்டுப்படுத்தியதன் மூலம் மனிதகுலத்தை ஒரு பெரிய பேரழிவிலிருந்து காப்பாற்றியது…… கோவிட்-சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தியதின் மூலமும், பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்கு தொழில்நுட்பத்தை பெருமளவில் பயன்படுத்தியதன் மூலமும் இந்தியா கொரோனா வைரஸை தோற்கடித்துள்ளது…” என சவடால் அடித்திருந்தார்.
ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, போதிய படுக்கைகள் இல்லாமை, மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை மேலும் கொரோனா சிகிச்சை என்ற பெயரில் தனியார்/கார்ப்பரேட் மருத்துவமனைகள் நடத்திய பகற்கொள்ளை என மத்திய மாநில அரசுகளின் மருத்துவக் கட்டமைப்பின் இலட்சணம் சந்தி சிரித்ததை யாரும் மறக்கமுடியாது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பின் விளைவாக இறந்ததைக் காட்டிலும் மருத்துவக் கட்டமைப்பு குறைபாடுகளினாலும் மருத்துவர்கள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறையினாலும் மருத்துவத்திற்கு பணமின்மையாலுமே ஏராளமானோர் இறந்து போயினர் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் மோடியோ, இந்தியா போதுமான சுகாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்தியது என்று டாவோஸ் கூட்டத்தில் வாய் கூசாமல் பொய் பேசினார்.
அதேவேளையில் தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காக, முஸ்லீம்கள் கூட்டத்தினால் (தப்லீக் ஜமாத்) தான் கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்தது என்று கொரோனா தொற்றை காரணம் காட்டி முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தையும் செய்தனர். கொரோனா தொற்றை இந்தியா திறம்பட கையாளுவது போன்ற பிம்பத்தை கோடி மீடியாக்கள் மூலமும் வாட்ஸாப் மூலமும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் இப்பிரச்சாரங்கள் அனைத்துமே பொய் என்பதை, மோடியின் முகத்திலேயே காரி உமிழ்வது போல, சமீபத்திய CRS தரவுகள் வெளிச்சம் போட்டு காட்டி விட்டன.
மேலுலக எமனோ இறப்புக் கணக்குகளில் சிறுபிழையும் செய்யமாட்டார் என்பார்கள். ஆனால், பூலோக எமனான பாசிஸ்ட் மோடியோ தன்னுடைய அரசியல் இலாபத்திற்காக கொரோனா இறப்பு எண்ணிக்கையை குறைத்து திட்டமிட்டு பொய் சொல்லியிருக்கிறார். மோடியோடு ஒப்பிடும்போது அந்த எமதர்மனே தேவல போல.
- செல்வம்