காவிமயமாகிறதா இந்திய இராணுவம்?

ஒரு சாதாரண இராணுவ அதிகாரி, தனது கிறிஸ்தவ மதநம்பிக்கையைக் காரணம் காட்டி இராணுவத்தின் மதச்சார்பின்மை கொள்கைக்குக் கட்டுப்பட மறுக்கும் போது, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, சம்பளமும் ஓய்வூதியமும் கொடுக்கமுடியாது எனக் கூறி இந்திய இராணுவம் அவரைப் பணிநீக்கம் செய்கிறது. ஆனால் அதே இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி, முழுச் சீருடையில் இந்து மத சாமியாரைச் சந்திக்கிறார், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை வென்று தட்சணையாக கொடுப்பதாக வாக்களிக்கிறார்.

 

இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி மதகுரு ஒருவரை, முழுச் சீருடையில் சென்று சந்தித்தது தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருப்பவர் உபேந்திர திவேதி, இவர் சில நாட்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தின் சித்ரகூட் பகுதியில் உள்ள இராமபத்ராசார்யா என்ற இந்து மதகுருவின் ஆசிரமத்திற்குச் சென்றுள்ளார். முழுமையான இராணுவ உடையில் ஆசிரமத்திற்குச் சென்ற திவேதி தற்போது நாட்டில் நிலவும் சூழல் குறித்து இராமபத்ராசார்யாவிடம் எடுத்துரைத்திருக்கிறார்.

தலைமைத் தளபதிக்கு “வெற்றிக்கான மந்திரம்” (இராம தீட்சை) என்று சில மந்திரங்களை உபதேசித்த இராமபத்ராசார்யா, இதனைப் பயன்படுத்தினால் போரில் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும் எனக் கூறியிருக்கிறார். அதன் பிறகு இந்த மந்திரங்களை உபதேசித்ததற்கு தனக்கு குரு தட்சணை வழங்க வேண்டும் எனக் கூறிய இராமபத்ராசார்யா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை குருதட்சிணையாக கேட்டிருக்கிறார். அதற்கு இராணுவத் தளபதி திவேதியும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை வென்று குருதட்சிணையாக கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.  

இந்தச் சந்திப்பு பல முக்கிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இராணுவச் சீருடையில், ஒரு தலைமைத் தளபதி மத நிகழ்வுகளில் பொதுவில் கலந்துகொள்ளலாமா? நாட்டின் வெளியுறவுக் கொள்கையில், அரசியல் ரீதியில் முக்கிய பங்காற்றும் ஒரு விசயம் குறித்து அவர் வாக்குறுதிகளை அளிக்க முடியுமா? இந்திய இராணுவத்தில் தலைமையானது வலதுசாரி இந்துத்துவ அரசியல் சித்தாந்தத்துடன் இணக்கமாகி வருகிறதா?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இராணுவத்தை மதச்சார்பற்றதாக, அரசியல் சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும் எனக் கூறுகிறது. இராணுவ ஒழுங்குமுறை விதி 510, அனைத்துப் படையினரும் அரசியல் பிரச்சினைகள் குறித்து பகிரங்கமாகக் கருத்துக்களை வெளியிடுவதைத் தடை செய்கிறது. சீருடையில் ஆன்மீகத் தலைவர்களைப் பார்ப்பது அதிலும் குறிப்பாக பரவலாக விளம்பரப்படுத்தப்படும் ஒரு நிகழ்வாக அதனை வெளியிடும் போது,  அது  ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை ஆதரிப்பதாகவே கருதப்படும், இது இராணுவச் சட்டப்படியே அதன் மதச்சார்பின்மையின் கொள்கையை மீறுகிறது.

தனது மதச்சார்பின்மையைப் பறைசாற்றுவதற்காக அனைத்து மத நம்பிக்கைகளையும் அங்கீகரிக்கும் வகையில் இராணுவம் வாராந்திர மத அணிவகுப்புகளை நடத்துகிறது. அப்போது இராணுவத்தினர் தாங்கள் எல்லா மதத்தையும் சரி சமமாகப் பார்க்கிறோம் எனக் காட்டுவதற்காக தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து மத வழிபாட்டுத் தளங்களுக்குள்ளும் சென்று பூசைகள் செய்வார்கள். அப்படி நடந்த வாராந்திர மத அணிவகுப்பில், தனது கிறிஸ்தவ நம்பிக்கையைக் காரணம் காட்டி, பங்கேற்க மறுத்த ஒரு இந்திய இராணுவ அதிகாரி கடந்த 2021-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். அவரது பணிநீக்கத்தை தில்லி உயர் நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.

தான் கிறிஸ்தவர் என்பதால் இந்து மத கோவிலின் கருவறைக்குள் சென்று பூசை செய்ய முடியாது என்று கூறிய காரணத்திற்காக, அந்த அதிகாரிக்கு சம்பளமும் ஓய்வூதியமும் கொடுக்கப்படாமல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு ஒரு சாதாரண இராணுவ அதிகாரி, தனது கிறிஸ்தவ மதநம்பிக்கையைக் காரணம் காட்டி இராணுவத்தின் மதச்சார்பின்மை கொள்கைக்குக் கட்டுப்பட மறுக்கும் போது, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, சம்பளமும் ஓய்வூதியமும் கொடுக்கமுடியாது எனக் கூறி இந்திய இராணுவம் அவரைப் பணிநீக்கம் செய்கிறது. ஆனால் அதே இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி, முழுச் சீருடையில் இந்து மத சாமியாரைச் சந்திக்கிறார், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை வென்று தட்சணையாக கொடுப்பதாக வாக்களிக்கிறார்..

ஒருபுறம் இது இராணுவத்தின் மதச்சார்பின்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது என்றால் இன்னொருபுறம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விசயத்தில், வலதுசாரி இந்துத்துவ கொள்கையை முன்னிறுத்துகின்ற வாக்குறுதியை ஒரு இராணுவத் தலைமைத் தளபதி எவ்வாறு வழங்க முடியும் என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இது போன்ற வெளியுறவுக் கொள்கை சார்ந்த முடிவுகளை நாடாளுமன்றமோ, கேபினட் அமைச்சர்களின் கூட்டமோ, பிரதமரோ, ஜனாதிபதியோ தான் எடுக்க முடியும். ஒரு மதச் சாமியாரின் வேண்டுகோளுக்கு ஒரு இராணுவத் தலைமைத் தளபதி தன்னிச்சையாக எதிரிநாட்டின் பகுதியைப் போர் புரிந்து வென்று கொடுப்பதாக வாக்களிக்க முடியாது.

இது இந்திய இராணுவத்தின் தலைமையானது காவி பாசிச சித்தாந்தத்துடன் ஒன்றுகலந்திருப்பதையே காட்டுகிறது. தனது மதச்சார்பின்மையைக் கேள்விக்குட்படுத்திய கிறிஸ்தவ இராணுவ அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவரைப் பணிநீக்கம் செய்த இந்திய இராணுவம், அதே தவறைப் பகிரங்மாகச் செய்திருக்கும் தலைமைத் தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவி பாசிச சித்தாந்தம் படிப்படியாக எல்லா அரசுத் துறைகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. தற்போது இராணுவத்திலும் அதன் பிடி இறுகியிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இராணுவத்தின் தலைமைத் தளபதியே ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் போல காவி பாசிஸ்டுகளின் அரசியலை பொது வெளியில் பேசிக் கொண்டிருக்கிறார். நிலைமை இவ்வாறு இருக்க, பாசிசத்தை வீழ்த்தப்போவதாக கூறிக் கொண்டிருப்பவர்களோ, இராணுவத்திற்கு ஆதரவாக பேரணி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

  • மகேஷ்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன