ஓரே ஒரு தீவிரவாத தாக்குதலைப் பயன்படுத்தி நாடு முழுவதையும் தனது போலி தேசிய வெறி, போர் வெறி அரசியலுக்குப் பின்னால் அணிதிரட்ட முடியும் என்பதை சமீபத்தில் காவி பாசிசக் கும்பல் நடத்திக் காட்டியது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்க வேண்டும், அவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற மனநிலையைச் சாமானிய இந்தியரின் மனதில் உருவாக்குவதற்கு, தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் சமூக ஊடகங்கள் என அனைத்தையும் காவிக் கும்பல் பயன்படுத்தியதை நாம் கண்டோம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட போரைப் புனிதப்படுத்தி, போலி தேசியவெறியையும், போர் வெறியையும் பரப்பும் வேலையை சத்தமே இல்லாமல் இந்தி திரையுலகம் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகிறது.
ஊரி ஸ்டிரைக், ஷேர்ஷா, மிஷன் மஜ்னு, பைட்டர், பூஜ் தி பிரைட் ஆப் இந்தியா, கேசரி, தி காஜி அட்டாக், பிப்பா எனத் தொடரும் இந்தப் பட்டியலில் “ஆபரேசன் சிந்தூரை” மகிமைப்படுத்தி விரைவில் சில திரைப்படங்கள் சேரக்கூடும்.
இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் தனிமனித சாகசங்களையும், கதாநாயக வழிபாட்டையும் அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை போரைப் புனிதப்படுத்துவதுடன், போலி தேசியப் பெருமிதத்தை பார்வையாளர்களுக்குக் கடத்துகின்றன.
இது போன்ற திரைப்படங்கள் இந்தி சினிமாவில் வருவது புதிதல்ல. 1997-ல் வெளியான பார்டர் திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இது போன்ற திரைப்படங்கள், போர் குறித்து மக்களிடம் இருந்த ஆர்வத்தைக் காசாக்கும் நோக்கத்துடன், தொடர்ந்து வெளிவந்தன. அவை பாகிஸ்தானையும், இஸ்லாமிய தீவிரவாதிகளையும் அடித்துத் துவைக்கும் நம்மூர் விஜயகாந்த் பட பாணியிலான கதைக்களங்களையே பெரும்பாலும் கொண்டிருந்தன.
ஆனால் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு வெளியான திரைப்படங்கள், குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ஹாலிடே, பூஜ், ஊரி, போன்ற திரைப்படங்கள், தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானுக்கு எதிராக மோடி அரசு மேற்கொண்ட பதில் தாக்குதல்களை மையப்படுத்தி அவற்றின் வெற்றியைக் கொண்டாடுகின்ற, ஆட்சியாளர்களுக்கு ஒளிவட்டம் கட்டுகின்ற வேலையைத் திறம்படச் செய்தன. அவை காவி பாசிசக் கும்பலின் சித்தாந்தத்தைப் பரப்புகின்ற வேலையைத் திறம்படச் செய்தன என்று சொன்னால் அது மிகையாகாது.
சர்ஜிகல் ஸ்டிரைக், பிரசிசன் ஸ்டிரைக், ஆபரேசன் சிந்தூர் எனத் தனது இராணுவ நடவடிக்கைகளுக்குப் பெயர் சூட்டி அவை குறித்த செய்திகளை ஆளும்வர்க்கம் வெளியிட்டாலும், மக்களுக்கு அவை வெறுமனே பெயர்களாக மட்டுமே பதிவாகிறது. ஆனால் இது போன்ற திரைப்படங்களில் எதிரியை இந்திய இராணுவமும், அதன் அதிகாரிகளும் எவ்வாறு அழித்தார்கள் என்பதைக் காட்சிகளாக விரிவுபடுத்திக் காட்டும் போது, எது உண்மை, எது பிரச்சாரம் எனப் பிரித்தறிய முடியாத படிக்கு பார்வையாளர்கள் அவற்றோடு ஒன்றிவிடுகின்றனர். இந்தத் திரைப்படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெறுவதை விட ஆளும்வர்க்கத்தின் பிரச்சாரத்தினை மக்களின் மனங்களில் பதியவைப்பதில் வெற்றி பெறுவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.
2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியான பைட்டர் திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் அந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு வசனமும் உள்துறை அமைச்சகத்தால் எழுதிக் கொடுக்கப்பட்டதோ எனத் தோன்றும்படியாக இருக்கிறது. அதில் கர்ஜிக்கும் போர்விமானங்களும், தெரிக்கும் தோட்டாக்களும், பிரமிக்கவைக்கும் விஷுவல் எபெக்ட்ஸ்களும், ஆளும் வர்க்கத்தின் பிரச்சாரத்திற்கு வண்ணமயமான மூடுதிரையைப் போர்த்திவிடுகின்றன.
இது போன்ற திரைப்படங்கள் போர் திரைப்படங்கள் என தம்மைக் கூறிக் கொண்டாலும் அவை போரையும் அது உருவாக்கும் அழிவையும் மையப்படுத்தி எடுக்கப்படுவதில்லை, மாறாக அவை வரலாற்றையும் உண்மையையும் திரித்து, வெறுமனே தேசியவாதக் கற்பனைகளாகத் திரையில் விரிகின்றன.
இது போன்ற திரைப்படங்கள் இந்து தேசியவாத சித்தாந்தத்தினை பரப்புவதற்கான சிறந்த வழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை திரையரங்குகளில் பார்வையாளர்களைப் போலி தேசியப் பெருமிதத்தில் ஆழ்த்தும் அதே சமயம், வெளியே சமூக ஊடகங்களில் இவற்றை விமர்சிப்பவர்களுக்கு எதிராகப் போர் புரியும் இணையப் படைகளையும் கொண்டிருக்கின்றன. இது போன்ற திரைப்படங்களை, அவற்றின் மிகையான பிரச்சார நெடியை பற்றிக் கூட இல்லாமல், அவற்றின் தொழில்நுட்ப தவறுகளைப் பற்றிக் கூட விமர்சிக்கும் எவரும் விரைவில் தேசத்துரோகியாக சித்தரிக்கப்பட்டு அவருக்கு எதிரான தாக்குதல் இணைய வெளியில் வெளிப்படையாகவே தொடுக்கப்படுகின்றது. விமர்சகரை மட்டுமன்றி அவர்களது குடும்பத்தையும், ஏன் அவர்களின் சிறு பிள்ளைகளையும் கூட கொச்சைப்படுத்தி, கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்கு காலித்தனம் செய்ய அவர்கள் தயாராய் இருக்கின்றனர்.
இந்தத் திரைப்படங்களில் காட்டப்படும் பாகிஸ்தானும் அதன் மக்களும் இந்துத்துவா அரசியல் எவ்வாறு அவர்களைக் கட்டமைத்துள்ளதோ அவ்வாறே காட்சிப்படுத்தப்படுகின்றனர். அந்நாட்டு மக்கள் எல்லோரும் தீவிரவாதிகளாக, அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களாக, ஆபத்தானவர்களாகக் காட்டப்படுகின்றனர். அதே சமயம் இந்தியத் துணிச்சலுடன் ஒப்பிடும்போது கோழைகளாக, பலவீனமானவர்களாகக் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.
பாகிஸ்தானியர்களுக்கு இந்த நிலை என்றால் இந்திய முஸ்லீம்களைப் பொருத்தவரை பெரும்பாலும் துரோகிகளாக, நம்பத் தகாதவர்களாகத்தான் சித்தரிக்கப்படுகின்றனர். இந்தத் திரைப்படங்களில் ஒரு முஸ்லீம் தனது நாட்டுப்பற்றை நிரூபிக்க உயிர்த்தியாகம் செய்யும் காட்சி நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். இதைத்தான் திரைப்படங்களுக்கு வெளியே இந்துத்துவா அரசியல் செய்யத்துடிக்கிறது. தனது நாட்டுப்பற்றை நிரூபிக்காதவரை ஒவ்வொரு முஸ்லீமும் நம்பத்தகாதவர்தான் எனக் காவிகளின் சித்தாந்தம் கூறுகிறது.
போரை புனிதப்படுத்தும் இந்தத் திரைப்படங்கள் போரின் இயல்பான தன்மையான துயரத்தைப் புறந்தள்ளிவிடுகின்றன. போர் உருவாக்கும் இழப்புகளையும், அதிர்ச்சியையும், உளவியல் சிக்கல்களையும், உடைந்துபோன குடும்பங்களையும், சிதைந்துபோன உறவுகளையும் பற்றி இவை பேசுவதில்லை. இந்தப் படங்களில் வரும் இராணுவ வீரர்களுக்கு PSTD என அழைக்கப்படும் போருக்குப் பின்னான உளவியல் சுமையில்லை, பொதுமக்கள் மரணமில்லை, வீரர்கள் இரத்தக்களரியின் மத்தியிலும் புன்னகைக்கிறார்கள், இன்ஸ்டாகிராமில் வெளியிடத் தயாராக இருக்கும் கடைசி வார்த்தைகளுடன் இறக்கிறார்கள். அவர்களின் குடும்பங்கள் தங்கள் துக்கத்தை முழக்கங்களாக மாற்றுவதற்கு முன்பு சுருக்கமாக மட்டுமே அழுகிறார்கள். இந்திய வீரர்களைத் துணிச்சலான, திறமையானவர்களாகக் காட்டுவதுடன் எதையும் சாதிக்கக் கூடிய அசாத்திய திறமைசாலிகளாக இவை காட்டுகின்றன. இந்தத் திரைப்படங்களில் போர் என்பது கொண்டாட்டமாக மாற்றப்படுகிறது.
பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று, எல்லையில் உண்மையான மோதல் சூழல் தோன்றும் போது, இந்தத் திரைப்படங்கள் பிரச்சார ஆயுதங்களாக இணையவெளியில் மீண்டும் வெளிவருகின்றன. ஊரி திரைப்படத்திலிருந்து வெட்டப்பட்ட காட்சிகள் வாட்ஸ்அப் குழுக்களை நிரப்புகின்றன. ஷெர்ஷாவின் வசனங்கள் ஹேஷ்டேக்குகளாகின்றன. அமைதிக்கான எந்தவொரு அழைப்பும் “தேச விரோதம்” என்ற குற்றச்சாட்டுகளுடன் சந்திக்கப்படுகிறது. புனைகதைக்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் இடையிலான எல்லை மங்கலாகிறது.
இந்தப் போக்கு இந்தி சினிமாவோடு நின்றுவிடவில்லை. தற்போது தமிழ் திரைப்படத்திலும் இது மெல்லத் தலைகாட்டுகிறது. கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற அமரன் திரைப்படம் ஒரு சமீபத்திய உதாரணம். நாயகனின் உயிர்த்தியாகத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்ட திரைக்கதையில் காஷ்மீர் மக்களின் கோரிக்கைகளும் போராட்டங்களும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு அவர்களை இந்தி சினிமா எவ்வாறு காட்சிப்படுத்தியதோ அதே பாணியில் துரோகிகளாக, நம்பத்தகாதவர்களாக, சித்தரிக்கப்பட்டிருந்தனர். போலி தேசியப் பெருமிதத்திற்காக உயிர்த்தியாகம் செய்வதை விதந்தோதுகின்ற, ஆளும்வர்க்க அரசியலின் பிரச்சாரப் படமாக அமரன் வெளியானது.
ஜெர்மனியில் நாஜிக்களின் ஆட்சியின் போது ஹிட்லரையும், நாசிக் கட்சியையும், மக்களை விடுவிக்கவந்த நாயகர்களாகக் காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட “டிரியம்ப் ஆப் தி வில்” (Triumph of the Will) திரைப்படம் ஆளும்வர்க்கத்தின் விருப்பத்திற்குத் தகுந்தது போன்று மக்களின் மனதை மாற்றியமைக்கவும், பொதுப்புத்தியை உருவாக்கவும், உரையாடலைக் கட்டியமைக்கவும் வசதியாக, ஆளும்வர்க்கத்தின் கையில் ஒரு ஆயுதமாக, திரைப்படம் மாற முடியும் என்பதை உணர்த்தியிருக்கிறது.
அந்த அளவிற்குத் தேர்ச்சியுடன் இல்லையென்றாலும் கூட காவி பாசிச சித்தாந்தம் முன்னிறுத்துகின்ற போலி தேசியப் பெருமையையும், தேசிய வெறியையும், இராணுவத்தின் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையையும், பரப்புவதில் அவை ஓரளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கின்றன. குறிப்பாக வடஇந்தியாவில் நிலவி வரும் பாசிச சித்தாந்தத்திற்கு ஆதரவான மனநிலை இந்தத் திரைப்படங்களின் வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.
- அறிவு