ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி, குஜராத் மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அத்தருணத்தில் வறுமையை ஒழித்து, பொருளாதார வளர்ச்சியடைய இலக்கு வைத்து தமது அரசு செயல்படுவதாகவும், இதற்கு எதிராக வெறுப்பை கக்குவதையும், தீங்கு விளைவிப்பதையுமே நோக்கமாகக் கொண்டு பாகிஸ்தான் செயல்பட்டுவருவதாக திருவாய் மலர்ந்துள்ளார்.
சொந்த நாட்டில் வறுமையை ஒழிப்பதாகக் கூறுவதும், பாகிஸ்தான் இந்தியாவை வெறுப்பதாக் கூறுவதும், தீங்கு விளைவிப்பதாகக் கூறுவதும் நம்பும்படியாகவா உள்ளது? உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் வரிசையில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா என மார்தட்டிக் கொண்டிருக்கிறார் மோடியும், அவருடைய வகையறாக்களும். அந்நிய நாடுகளிடமும், (IMF, WB) ஐ.எம்.எப், உலக வங்கி நிறுவனங்களிடமும் கையேந்தி நிற்கும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள பாகிஸ்தான், உலகிலேயே நான்காவது இடத்தை எட்டியுள்ள இந்தியாவுடன் போட்டிப் போட விரும்புமா? அல்லது முடியுமா?
போட்டிக்கான வாய்ப்புகளே இல்லாத போது வெறுப்புகளுக்கும், தீங்கு விளைவிப்பதற்கும் எந்த அடிப்படையும் இல்லை. வேண்டுமானால் மோடி-அமித்ஷா கும்பலுக்கு அந்த நோக்கமும், விருப்பமும் இருக்கலாம். ஏனெனில், சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் விரும்பினால் அதன் வளர்ச்சிக்கு பொருளாதார உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக கூறினார், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதை பாகிஸ்தான் ஏற்க மறுப்பதால், அதானி-அம்பானி கார்ப்பரேட்டுகளுக்கு பாகிஸ்தான் கட்டுமான பணிகளை தாரை வார்ப்பது தடைபட்டுவிட்டதே என்கிற வெறுப்பு அடிப்படையாக இருக்கலாம்.
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தான் பிரிவினைவாத இயக்கங்களான BLA, BLF ஆகிய அமைப்புகளுக்கு நிதி, ஆயுத உதவிகளை இந்தியா செய்வதாக பாகிஸ்தான் கருதுகிறது. சர்வதேச செய்திகளும் கூறுகின்றன. இதற்காக கூட பாகிஸ்தான் வெறுப்பை வெளிப்படுத்தலாம், தீங்கை விளைவிக்கலாம். ஆனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வெறுப்படையவோ, தீங்கு விளைவிக்கவோ எந்த அடிப்படையும் இல்லை.
பாகிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளை ஆதரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தலைமை அமைச்சர் மோடியோ, பாகிஸ்தான் மக்களுக்கு பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர கோரிக்கை விடுக்கிறார். இதே கோரிக்கையை பாகிஸ்தான் அதிபர் இந்தியாவிலுள்ள இந்து மக்களிடம் காவி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர கோர முடியுமா? முடியாது. ஏனெனில், பயங்கரவாதத்தை விதைத்தவர்களால், பயங்கரவாதத்தை வேரறுக்க முடியாது. இந்துக்கள், இஸ்லாமியர்கள், மற்ற சமயத்தினரின் ஒற்றுமையால் மட்டுமே முடியும்.
வறுமையை ஒழிக்க வேண்டுமானால், வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும். அதற்கான வேலை வாய்ப்பும், அதற்கேற்ப ஊதியமும் அவசியம். இந்தியாவைப் பொருத்தவரை, வறுமையில் வாடும் மக்கள் தொகையோ 37% பேர், மொத்த மக்கள் தொகை 143 கோடியில் 37% என்பது ஏறக்குறைய 57 கோடி மக்கள். இதுவும் கூட தனிநபர் மாத வருமானம் நகரத்தில் ரூ.1407 க்கும், கிராமத்தில் ரூ.972 க்கும் கீழாக உள்ளவர்களையே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என அரசு வரையறுத்துள்ளது.
இந்த வருமானத்தை வைத்துக் கொண்டு, கிராமத்தைப் பொருத்தவரை அரை வயிறு பட்டினியோடு கூட வாழ முடியாது. அதுவும், நகரத்தில் அறவே முடியாது என்பதுதான் நிதர்சனம். நகரத்தைப் பொறுத்தவரை தனிநபர் மாத வருமானம் (வாடகை, இதர செலவுகள் உட்பட) ரூ.25,000 வரை இருந்தால்தான் அரை வயிறு கஞ்சியோடு வறுமை இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட முடியும். அரசு வரையறுத்துள்ள வருவாய் படி கணக்கிட்டால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஏறக்குறைய 80% மேல் எகிறும். இதன்படி எண்ணிக்கைகளைக் கணக்கிட்டால் 122 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.
இந்த இலட்சணத்தில் வறுமையை ஒழிக்கப் போவதாக மோடி சவடால் அடிக்கிறார். ஆசான் மார்க்ஸ் கூறுவது போல வறுமை ஒரு பக்கம் அதிகரிக்க, அதிகரிக்க மறுபக்கம் செல்வம் பெரும் அளவில் குவியும் என்பதை இன்று நிலவும் 80% மக்களின் வறுமையும், அதானி-அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளின் செல்வம் பெருமளவில் அதிகரித்து வருவதும் கண்முன் சாட்சியாக இருக்கிறது.
காவி பயங்கரவாதத்தையும், பலுசிஸ்தான் பயங்கரவாதத்தையும் ஆதரித்து வரும் மோடி-அமித்ஷா கும்பல் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பதாக கூறுவது ஒரு நகைமுரன். அதேபோல் கார்ப்பரேட்டுகளின் கல்லாவை நிரப்புவதற்காக இயற்கை வளங்களையும், பொது சொத்துக்களையும் தாரைவார்ப்பதுடன், மண்ணின் மைந்தர்களை ஏதிலிகளாக்கும் இவர்கள்தான், வறுமையை ஒழிக்க போகிறார்களாம்! உங்களால் நம்ப முடிகிறதா? ‘நம்புவோமாக’!
- மோகன்