இந்திய ரிசர்வ் வங்கி 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், ‘கடன்கள் வழங்கப்படுவதில் சில முறைகேடுகள் நடக்கின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.
முறைகேடுகளைத் தவிர்க்க கடன் காலத்திற்குப் பிறகு, தங்க நகையை அசலும் வட்டியும் செலுத்தி மீட்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அதாவது முறைகேடுகளைச் செய்யும் வங்கி ஊழியர்களை தண்டிப்பதற்குப் பதிலாக ஒட்டு மொத்த வாடிக்கையாளர்களையும் அதுவும் கல்வி செலவு, வியாபார தேவை, மருத்துவ செலவு, அவசர தேவை என பல்வேறு காரணங்களுக்காக அடமானம் வைக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களை தண்டிப்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்?
இந்திய ரிசர்வ் வங்கி இத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. சமீபத்தில் தங்க நகைக்கடன் தொடர்பாக 9 புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. அதில் தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு காரணமாக வாடிக்கையாளர்கள் வருடத்திற்கு ஒருமுறை வட்டியை மட்டும் கட்டி கடனைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தால் வங்கிகள் நஷ்டம் அடைந்து விடும் எனவே அதனைத் தவிர்ப்பதற்கு 25 சதவீதம் குறைவாக கொடுப்பதாகக் கூறுகிறது.
இது மேலோட்டமாக பார்ப்பதற்கு சரி என்று தெரிந்தாலும், இத்தகைய முடிவை எடுப்பதற்கான புள்ளிவிபரங்கள் எதுவும் இல்லை. அதாவது இதுவரை எத்தனைமுறை வங்கிகளுக்கு இத்தகைய நஷ்டம் ஏற்பட்டது என்று கூறவில்லை. மேலும் 1964 – 2020 வரை தங்கத்தின் விலை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு குறையவில்லை. 2021 – தற்போது வரை தங்கத்தின் விலை உச்சத்தில் இருப்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தங்க நகைக்கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும் என்பது மற்றொரு விதிமுறை. இந்தியாவில் நகைகளை பாரம்பரியமாக கொடுப்பது ஒரு வழக்கமாக இருக்கிறது. அதாவது பாட்டி, அம்மாவிற்கும், அம்மா, மகளுக்கும், மகள், தனது குழந்தைகளுக்கும் என மூன்று தலைமுறை தாண்டியும் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதற்கு தீர்வாக, நகை வாங்கியதற்கான இரசீது இல்லாத பட்சத்தில், நகை தன்னுடையதுதான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழை வங்கியிடம் வாடிக்கையாளர் அளிக்க வேண்டும். ஆடிட்டர் போன்றவர்களிடம் இந்த உறுதிமொழிப் பத்திரத்தை பெற்று வங்கியிடம் சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் உறவினரிடம் அவசரத் தேவைக்கு நகையை வாங்கி அடமானம் வைப்பது சாத்தியமில்லாமல் போய்விடும்.
மேலும் தனிநபர் 1 கிலோ தங்கம் வரையில் தான் அடமானம் வைக்க முடியும், தங்க ஆபரணங்களுக்கு மட்டுமே கடன்கள் வழங்கப்பட வேண்டும் போன்ற புதிய கட்டுப்பாடுகளால் மக்கள் தங்க நகை அடமானக் கடன் பெறுவதை கடினமாக்குகிறது.
இதுவே வங்கிகளுக்கு கடனை வசூல் செய்வதை உத்திரவாதப்படுத்தும் வகையில் புல்லட் ரீபேமென்ட் கடன், இ.எம்.ஐ கடன் என இரண்டு உள்ளது. புல்லட் ரீபேமென்ட் கடன் என்றால், அசலும் வட்டியும் ஒன்றாக கட்டி முடிப்பது. இ.எம்.ஐ கடன் என்றால் மாதா மாதம் கட்டப்படும் தொகையில் கழியும் அசல் மற்றும் அந்த அசலுக்கேற்ற வட்டியை கட்டுவது ஆகும்.
புல்லட் கடனைப் பொறுத்தவரையில் 75% கடன் மதிப்பு என்பது அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய தொகையாகும். இதில் ஒரண்டிற்கான வட்டித்தொகையை எடுத்துக்கொண்டு மீதியை தான் கடனாகக் கொடுப்பார்கள். எனவே மக்கள் தங்களது தேவைக்கு ஏற்ப கூடுதலான நகையை அடமானம் வைக்க வேண்டிய சூழலை இது உருவாக்குகிறது.
இ.எம்.ஐ கடன் என்றால் தங்க நகையின் மதிப்பான 75 சதவிகிதத்தை அப்படியே தந்து விடுவார்கள். இதில் கூடுதலான பணம் கிடைக்கிறது என்றாலும் அதிக வட்டி கட்டவேண்டியிருக்கும்.
எனவே இது ஏழை, எளிய, நடுத்தர மக்களை அநியாய வட்டிக்குள் தள்ளி நிரந்தரக் கடனாலிகளாக்குவதில் தான் முடியும்.
மறுபுறமோ, உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும் முதலாளிகளுக்கு கடன் கொடுப்பதிலோ, வாங்குவதிலோ இதுபோன்ற விதிமுறைகள் எதுவும் விதிப்பதில்லை. எனவேதான் அணில் அம்பானி தொழிலில் நஷ்டம் அடையும் பொழுது, அதை வாங்குவதற்கு அண்ணன் முகேஷ் அம்பானிக்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றன. நஷ்டம் அடைந்த தொழிலுக்கு கடன் கொடுக்க கூடாது என்ற விதிமுறை இல்லை.
இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் பணமோசடி குற்றவாளிகள் நாட்டைவிட்டு தப்பியோடியிருக்கிறார்கள். விஜய் மல்லையா 9000 கோடி ரூபாயை எஸ்.பி.ஐ வங்கியிடம் ஏய்த்து விட்டு நாட்டை விட்டு தப்பியோடினார். பணமோசடி தடுப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட முதல் குற்றவாளி விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு பணமோசடி குற்றவாளி லலித் மோடி இங்கிலாந்துக்கு விமானம் ஏறி தப்பி செல்வதற்கு துணை புரிந்த அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பற்றி பல கேள்விகள் அப்பொழுதே எழுப்பப்பட்டன.
டிசம்பர் 2021-ம் ஆண்டு ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில், சி.பி.ஐ பதிவு செய்த வங்கி மோசடி வழக்குகளின் 33 குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக தெரிவித்தது.
மே 2017 முதல் டிசம்பர் 2021 வரை பணமோசடி தடுப்பு சட்ட வழக்குகளின் கீழ் மெஹூல் சோக்சி, நீரவ் மோடியின் 13000 கோடி மோசடி வழக்கு, ரிஷி அகர்வாலுக்கு சொந்தமான ஏபிஜி கப்பல் கட்டும் தளத்தின் 23000 கோடி மோசடி வழக்கு போன்றவற்றில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களின் பணத்தை வங்கியிடம் இருந்து கடன் என்ற பெயரில் கொள்ளையடித்த இந்த பணமோசடி குற்றவாளிகளின் வழக்குகளை பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டது.
இப்படி எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி மக்களின் சேமிப்பை வங்கிகளிடமிருந்து மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளில் சுகபோகமாக வாழ்கிறார்கள். இதனை தடுப்பதற்கோ, மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ இந்திய ரிசர்வ் வங்கிக்கு துப்பில்லை. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களுடைய பிள்ளைகளின் கல்விக்காக, மருத்துவச் செலவிற்காக, தொழில் தொடங்குவதற்காக, அவசரத் தேவைகளுக்காக எனத் தங்களது அல்லது உறவினர்களது நகைகளை அடமானம் வைக்கச் சென்றால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரவிடாமல் தடுப்பதன் மூலம் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதற்கு மக்களை தள்ளுவதுதான் இந்திய ரிசர்வ் வங்கியின் வேலையாக இருக்கிறது. எனவே இது மக்களின் மீது திணிக்கப்பட்ட மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் என்பதில் எல்லளவும் சந்தேகம் இல்லை.
- மகேஷ்
செய்தி ஆதாரம்:
http://senkanal.com/index.php/2023/06/26/scams-of-bjp/
https://www.vikatan.com/personal-finance/banking/rbi-gold-loan-new-rules-2025
https://www.bbc.com/tamil/articles/cz70l15w4ndo
https://ibctamilnadu.com/article/rbi-new-rules-for-gold-jewel-loans-full-details-1747723438
https://www.dailythanthi.com/news/thalayangam/eye-popping-jewelry-loan-rules-1159934
https://yourstory.com/tamil/rbi-new-rules-for-gold-jewel-loans-more-debt-burden-for-people-explained
மார்வாடிகளுக்கும் சேட்டுகளுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகவும் அமையும்.