கடந்த 2024, செப்டம்பரில் உலக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசும் போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் வரும் 2030 ஆண்டிற்குள் இந்தியாவில் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கூறினார். மேலும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பாரிஸில் நிறைவேற்றப்பட்ட இலக்குகளை இந்தியா 9 ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துவிட்டதாக அம்மாநாட்டில் பெருமையாகப் பேசினார்.
வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவேண்டும் என்ற திட்டத்திற்காக சோலார் ஆலைகள் மற்றும் காற்றாலைகளை அமைப்பதற்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தனியார் நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சோலார் மற்றும் காற்றாலைகள் குறைந்த அளவே மாசுகளை வெளியேற்றுகிறது எனக் கூறி இவைகளை ”வெள்ளை தொழிற்சாலைகள்” என அரசு வகைப்படுத்தியுள்ளது. இப்பிரிவின் கீழ் வரும் ஆலைகளை தொடங்குவதற்கு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி தேவையில்லை என ஒன்றிய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தது.
கடந்த அக்டோபர் 2024-ஆம் ஆண்டு வரை இந்தியா, 200 ஜிகாவாட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெற்றிருப்பதாக மார்தட்டிக்காண்டது. மேலும் வரும் 2030 ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆண்டொன்டிற்கு 50 ஜிகாவாட் (50,000 மெகாவாட்) மின்சாரத்தை இவ்வாலைகள் மூலம் உற்பத்தி செய்தாக வேண்டும். சூரிய மின்சக்தி மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவதற்கு சுமார் 4 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது என்று எரிசக்தி அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறப்படும் 175 ஜிகாவாட் மின்சாரத்திற்காக சுமார் 55,000 சதுர கி.மீ தேவைப்படுவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஆகையால் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் தனியார் ஆலைகளை நிறுவுவதற்கு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பொது நிலங்கள், விளைநிலங்கள் துரிதமாக கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலக் கையகப்படுத்தலில் சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம், விளைநிலங்கள், சட்டபூர்வ வழிமுறைகள் போன்றவற்றையெல்லாம் இந்த ஆலைகளும் அரசும் கடைப்பிடிப்பதில்லை.
லேண்ட் கான்பிளிக்ட் வாட்ச் (Land Conflict Watch) எனும் இணையதளம் 2005–2023 ஆண்டு வரை இந்தியாவில் அமைக்கப்பட்ட 31 பெரிய சோலார் ஆலைகள் நிலம் கையகப்படுத்துவதில் மோசடி செய்துள்ளதை ஆவணப்படுத்தியிருக்கிறது. இந்நிலப்பறிப்பு அனைத்தும் பல மாநிலங்களின் கிராமங்களிலேயே நடந்தேறியுள்ளது. இவ்வாலைகள் கையகப்படுத்திய மொத்த நிலத்தில் 54.8% அளவு விளைநிலங்களையும், 20% சுற்றுச்சூழல் விதிகளை மீறியும் கையகப்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் சோலார் ஆலைகள் அமைப்பதற்காக விவசாயிகளிடம் இருந்து எவ்வாறு விளை நிலங்களை பறித்து வருகிறது என்பதற்கான ஒரு சில உதாரணங்களை கீழே பார்க்கலாம்.
மராட்டிய மாநிலத்தில் சோலார் ஆலைகள் அமைப்பதற்காக விரட்டப்படும் விவசாயிகள்:
மராட்டிய மாநிலத்தில் ஜல்கான் மாவட்டத்திலுள்ள லோஞ்சே, போதரே, சிவபூர் மற்றும் பிம்பர்கெட் ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து சுமார் 1100 ஏக்கர் விளை நிலங்களை ஜே.பி.எல் குழுமம் மற்றும் அவாடா குழுமம் எனும் இரு தனியார் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மோசடியாகக் கைப்பற்றி இருக்கின்றன.
இத்தனியார் ஆலைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் பழங்குடியினர், தலித்துக்கள் மற்றும் சிறுபான்மையினர்; இக்கிராமங்களில் இவர்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். மராட்டிய நில வருவாய் குறியீட்டு(1966) 2வது பிரிவின் கீழ் இவ்விவசாயிகளுக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்நிலங்கள் மராட்டிய மாநில அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. இப்பிரிவின் கீழ் வழங்கப்படும் நிலங்கள் விவசாய நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்; இந்த நிலங்களை அரசின் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யவோ அல்லது பிறர் பேரில் மாற்றவோ முடியாது.
மேற்கூறிய நான்கு கிராமங்களில் போதரே மற்றும் சிவபூர் ஆகிய இரு கிராமங்கள் கெளதாலா வனவிலங்கு சரணாலயத்தின் மிக அருகாமையில் இருக்கிறது. அதனால் இவ்விரு கிராமங்களையும் மராட்டிய மாநில அரசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறது. ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகம் இச்சரணாலயத்தை சுற்றியுள்ள 1 சதுர கி.மீ பரப்பளவை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாகவே (Eco sensitive zone) கடந்த 2016-ஆம் ஆண்டில் அறிவித்தது. எனவே போதரே மற்றும் சிவபூர் ஆகிய இரு கிராமங்களும் இம்மண்டலத்தின் கீழ் வருகிறது.
ஆனால் ஜே.பி.எல் குழுமம் மற்றும் அவாடா குழுமத்தின் தரகர்கள், அங்குள்ள விவசாயிகளிடம் இருந்து நிலங்களை வாங்குவதற்காக பல ஆண்டுகளாக நயவஞ்சமாக அனுகியிருக்கின்றனர். “உங்கள் நிலம் அரசுக்கு சொந்தமானது; சூரிய ஒளி மின்சக்தி திட்டத்திற்காக உங்களது நிலங்களை ஒதுக்குவதற்கு அரசு முடிவெடுத்திருக்கிறது. ஆகையால் இவ்வாலைகள் கேட்கும் விலைக்கு உங்கள் நிலங்களை விற்க வேண்டும்; இந்நிறுவனங்களில் உங்களுக்கு வேலை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்” என அங்குள்ள விவசாயிகளிடம் தொடர்ச்சியாக பல்வேறு யுக்திகள் மூலம் அனுகியிருக்கின்றனர்.
ஜே.பி.எம் சோலார், அவாடா சோலார் தனியார் நிறுவனங்களின் 153 விற்பனைப் பத்திரங்களில் 54% பத்திரங்கள் அரசு நில மதீப்பீட்டை விட குறைந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளன.
போதரே கிராமத்தின் சக்ரு இரத்தோட் எனும் விவசாயினுடைய நிலத்தை ஏக்கருக்கு ரூ 11 இலட்சம் தருவதாக தரகர்கள் அனுகியிருக்கின்றனர். ஆனால் அவாடா குழுமம் ஒரு ஏக்கருக்கு வெறும் ரூ 4.25 இலட்சம் என 5 ஏக்கர் நிலத்தை வாங்கி விற்பனை பத்திரத்தை முடித்துள்ளது. பரசுராம் சௌகான் எனும் விவசாயினுடைய 12 ஏக்கர் நிலத்தை ரூ 12 இலட்சத்திற்கு அவாடா குழுமம் கையகப்படுத்தியுள்ளது. குறைந்த விலைக்கு தமது நிலம் விற்கப்பட்டதை எதிர்த்து பரசுராம் குரல் எழுப்பவே, அவரின் வீட்டை புல்டோசர் மூலம் இடிப்போம் எனவும்; அவரை சிறையில் தள்ளுவோம் எனவும் தரகர்கள் மிரட்டியுள்ளனர். பீமாராவ் எனும் விவசாயின் நிலத்தை அவரது உறவினர்களுக்கிடையே பாகப்பிரிவினை செய்வதாக கூறி தரகர்கள் ஏமாற்றி வாங்கியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் பீமாராவ் இறந்தே போனார்.
சுற்றுச்சுழல் மற்றும் விளை நிலங்கள் மீதான எந்த சட்டவிதிகளையும் கடைப்பிடிக்காமல் இத்தனியார் சோலார் ஆலைகள் விவசாயிகளிடமிருந்து சுமார் 1070 ஏக்கர் விளை நிலங்களை பிடுங்கியதோடு மட்டுமில்லாமல் இவ்வாலைகளின் 476 ஏக்கர் நிலம் கெளதாலா வனவிலங்கு சரணாலயத்திற்குள்ளே வருகிறது.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் எந்த பகுதியில் நடைமுறையில் இருக்கிறதோ அப்பகுதியில் நிலங்களை வாங்கவோ, விற்கவோ முடியாது. அந்நிலங்களை சட்டப்பூர்வ வாரிசுக்கு மட்டுமே மாற்ற முடியும். எந்த சொத்து பரிமாற்றத்திற்கான பத்திரங்களையும் நிறைவேற்ற முடியாது என வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் 2வது பிரிவு கூறுகிறது. இதுமட்டுமில்லாமல் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் நிலம் வாங்குவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் தேவை. ஆனால் இச்சட்டவிதிகள் எதையுமே இச்சோலார் ஆலைகள் பின்பற்றவில்லை என்கிறார்கள் இவ்விவசாயிகளுக்காக வழக்காடும் பரத் சவுகான் மற்றும் பூஷண் எனும் வழக்கறிஞர்கள்.
மராட்டியத்தின் eco-sensitive zones (ESZ) அதிகாரிகளோ புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டுக்கென்று இந்நிலத்தை ஒதுக்குவதாக இவ்வாலைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர். இந்த ஒப்புதலில் ஆலைகள் அமைப்பதற்கான ஒப்புதல் குறித்து எந்த விளக்கமும் இடம் பெறவில்லை என்கிறார்கள் இவ்வழக்கறிஞர்கள்.
விவசாயிகள் நிலங்களை இவ்வாலைகள் மோசடியாக அபகரித்ததை தொடர்ந்து இவ்விவசாயிகள் கடந்த 2017-ஆம் ஆண்டு ஷேத்காரி பச்சவ் கிருதி சமிதி என்ற அமைப்பை உருவாக்கி தாசில்தார் மற்றும் மாஜிஸ்திரேட் அலுவலகத்தின் முன்பு போராடிய போதும் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை தற்போது விவசாயிகள் தங்களது நிலத்தை மீட்க மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் டாட்டா சோலார் ஆலை அமைப்பதற்காக பறிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள்:
கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக அரசு திருநெல்வேலி மாவட்டத்தில் 4 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி மற்றும் மின்கல ஆலைகள் நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்தது. இவ்வாலை 1500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என முன்மொழியப்பட்டது. இவ்வாலைக்காக அலவந்தான்குளம், தென்கலம் மற்றும் இதைச் சுற்றியுள்ள ஆறு கிராமங்களிலிருந்து சுமார் 330 ஏக்கர் பஞ்சமி நிலங்களை இவ்வாலை கையகப்படுத்தியிருக்கிறது.
இப்பஞ்சமி நிலம் 1892-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது இக்கிராமத்தினருக்கு வழங்கப்பட்டதாகும். இந்நிலங்களை கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களாக இக்கிராமத்தினர் பயன்படுத்தி வந்தனர். கால்நடைகளே இவர்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இக்கிராமங்களில் சுமார் ஒரு இலட்சம் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. அலவந்தான்குளத்தில் மட்டும் தினமும் சுமார் 2500 லிட்டர் பால் கறக்கப்படுகிறது. இத்திட்டம் வந்தால் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போகும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். கடந்த 2022-ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை இப்பகுதி மக்கள் தவிர்த்து அதை கருப்பு தீபாவளி என அறிவித்தனர். தங்களது வீடுகளில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் கருப்பு கொடியை ஏற்றினர். இத்திட்டத்தை நிறுத்தவும், அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பை திரும்ப பெறவும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். கடந்த 2023 அக்டோபரில் பள்ளிக்கோட்டை கிராம சபை பஞ்சமி நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு பஞ்சாயத்து தீர்மானங்களை நிறைவேற்றியது. கிராம மக்கள் மூலம் மதுரையைச் சேர்ந்த ஆனந்த ராஜ் என்பவர் மூலம் மானூர் தாசில்தாரிடம் மனு அளித்தும் பயனில்லாததால் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை நீதிமன்றம் திருநெல்வேலி ஆட்சியருக்கு நில கையகப்படுத்தலை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.
ஆனால் இதற்கு பதிலளித்த சிப்காட் இயக்குனர் கே.பி. கார்த்திகேயன் ஜனவரி 2024-ல் அளித்த பதிலில் இந்நிலங்கள் பஞ்சமி நிலமே அல்ல என்றும்; மொத்தமுள்ள 407 ஏக்கர் நிலத்தில் 342 ஏக்கர் நிலமே சோலார் ஆலைக்காக கையகப்படுத்தப்படுகிறது; மீதமுள்ள 65 ஏக்கர் நிலம் மேய்ச்சலுக்கு போதுமானது; 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதில் விவசாயம் நடைபெறாமல் இருப்பதால் இது தரிசு நிலம் என நீதிமன்றத்திற்கு பதிலளித்தார். ஆனால் இக்கிராம மக்கள் தங்களது மனுவில் இந்நிலங்கள் மேய்ச்சலுக்கே பயன்படுத்தப்படுகிறது என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பின்னர் அலவந்தான்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்கள். டாட்டா சோலார் நிறுவனத்தால் பத்து கிராமங்களை சேர்ந்த சுமார் 20,000-திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறி இச்சோலார் ஆலை அமைக்கப்படுவதை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
தென்கலம் கிராமத்தில் 130 ஏக்கர் நிலத்தை விவசாயத்திற்காக பயன்படுத்தப்போவதாக கூறி இக்கிராம மக்களை ஏமாற்றி கையகப்படுத்தியது டாட்டா சோலார் ஆலை. இவ்வாலையின் தரகர்கள் மூலம் தங்களது நிலங்களை விவசாய பயன்பாடு என நம்பி இப்பகுதி விவசாயிகள் விற்றிருக்கின்றனர். மேலும் பெரும்பாலான நிலங்கள் போலி நில ஆவணங்கள் மூலம் கையகப்படுத்தப்பட்டதாக இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். தான் விற்ற நிலங்கள் விவசாய நோக்கத்திற்காக இல்லை; அது சோலார் ஆலைக்கு தான் விற்கப்பட்டிருக்கிறது என தெரிந்த பின்னர் இப்பகுதி மக்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று, கிராம மக்கள் ஒன்று கூடி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். கிராம மக்களின் பலத்த எதிர்ப்புகள் இருந்த போதிலும் இப்பகுதியில் டாட்டா சோலார் ஆலை அமைக்கப்பட்டு உற்பத்தி தற்போது நடைப்பெற்று வருகிறது
அஸ்ஸாமில் சோலார் ஆலைக்கு எதிராக நடைபெறும் விவசாயிகளின் போராட்டம்:
அஸ்ஸாமில் உள்ள கர்பி அங்கலாங் எனும் பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கியின் ரூ 3600 கோடி கடனுதவியுடன் 1000 மெகாவாட் சோலார் ஆலையை (அஸ்ஸாம் சோலார் திட்டம்) அமைக்க அஸ்ஸாம் அரசு முடிவு செய்து நிலம் கையகப்படுத்துதலை தீவிரமாக நடத்தி வருகிறது. இதனால் இம்மலைக் கிராமங்களில் வாழும் கர்பி மற்றும் ரெங்மா பழங்குடி மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சுமார் 6000 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் அஸ்ஸாம் மாநில அரசின் சோலார் ஆலையை விவசாய நிலத்தில் அமைக்க அம்மாநில அரசு முடிவெடுத்திருப்பதால், அக்கிராம மக்கள் இத்திட்டத்தை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகின்றனர். சுமார் நூறு வருடங்களுக்கு மேல் இக்கிராமங்களில் வசித்து வரும் இம்மக்கள் இந்நிலங்களில் பயிர் செய்தே வாழ்ந்து வருகின்றனர். மாநில அரசின் இத்திட்டத்தால் 23 கிராமங்களைச் சேர்ந்த 25,000 கிராம மக்களை இக்கிராமங்களிலிருந்து வெளியேற்ற அஸ்ஸாம் அரசு முடிவு செய்துள்ளது. இதுமட்டுமில்லாமல். சோலார் ஆலை அமைய இருக்கும் இடத்தில் சுமார் 10,100 மரங்கள் வெட்டப்பட இருக்கின்றன என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள். இம்மலைக் கிராமங்களில் இருக்கும் காடுகளில் யானைகள் வசித்து வந்தாலும் அஸ்ஸாம் அரசு இப்பகுதியை விலங்குகள் இல்லாத பிரதேசம் என பொய்யாக அறிவித்துள்ளது. இப்பகுதியின் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்காக அடிமாட்டு விலையாக ஏக்கருக்கு ரூ1.25 இலட்சத்தை நிர்ணயித்திருக்கிறது அம்மாநில அரசு. ஆனால் இக்கிராமங்களில், நூறாண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இம்மக்கள், தங்களது நிலத்தை விற்கப் போவதில்லை எனப் போராடி வருகின்றனர்.
சோலார் ஆலைகளுக்காக அஸ்ஸாம், மராட்டியம், தமிழ்நாடு மாநிலங்களில் மட்டுமல்ல; இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது இப்பொழுது சர்வசாதாரணமாகவும், துரிதமாகவும் நடந்து வருகிறது. விளைநிலங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி, அதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது மோடி அரசாங்கம். நிலத்தைப் பறிகொடுத்த விவசாயிகளுக்கு இதில் எந்தப் பலனுமின்றி ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் பெரும்பான்மையான மக்களின் நலன்களிலிருந்து இத்திட்டங்கள் போடப்படுவதில்லை.
சோலார் திட்டத்தால் பலனடையப் போவது பெரும்பாலும் தனியார் முதலாளிகள்தான். ஆனால், அது மூடிமறைக்கப்பட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், பொது நோக்கத்திற்காகவும்தான் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஒரு புளுகுணிப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
சோலார் ஆலைகளுக்காக விவசாயிகளைக் கிராமப்புறங்களிலிருந்து அப்புறப்படுத்துவதன் மூலம், கார்ப்பரேட் கும்பலுக்கு அடிமாட்டு விலைக்கு நிலம் கிடைப்பது மட்டும் உறுதி செய்யப்படவில்லை. இதன் மூலம் வேலை தேடி நகரங்களுக்கு ஓடிவரும் விவசாயிகளைக் கொண்டு ஒரு பெரும் ரிசர்வ் தொழிலாளர் பட்டாளமும் உருவாக்கப்படுகிறது. இந்த ரிசர்வ் பட்டாளத்தின் மூலம், மலிவான கூலிக்குத் தொழிலாளர்களை சுரண்டும் வாய்ப்பை முதலாளிகளுக்கு மாநில அரசுகளே உருவாக்கி கொடுக்கிறது. அதானியின் கிரீன் எனர்ஜிக்கு தங்களது நிலத்தை விற்ற இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள விவசாயிகள், அக்கிராமத்தை விட்டு நகர்ப்புறங்களில் வேலைக்காக புலம் பெயர்ந்துள்ளது இதற்கு ஒரு துலக்கமான எடுத்துக்காட்டாகும். இத்தகைய நில அபகரிப்பும் உழைப்புச் சுரண்டலும்தான் இந்தியத் தரகு முதலாளிகளை உலகக் கோடீசுவரர்களாக்கியிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக இந்தியாவை மாற்றியிருக்கிறது.
எனவே இந்தியா முழுவதும் நடைபெறும் நில அபகரிப்பிற்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் தனித்தனியாக போராடுவதன் மூலம் தரகு முதலாளிகளையும், பன்னாட்டு நிறுவனங்களையும், இவர்களுக்காக வேலைசெய்யும் இடைத்தரகர்களையும், அரசையும், அரஜாங்கத்தையும் அடிபனிய செய்வதோ, தூக்கி எரிவதோ சாத்தியம் இல்லை. மாறாக இந்தியா முழுவதிலும் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் என அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் மட்டுமே இத்தகைய கார்ப்பரேட் கொள்ளையை முறியடிக்க முடியும். புதிய விவசாய சட்டத்திற்கு எதிரான வீரம் செறிந்த போராட்டமே இத்தகைய போராட்டத்தில் வெல்வதற்கு கண்முன் சாட்சியாக இருக்கிறது.
- தாமிரபரணி