கடந்த வாரம், தில்லியில் அரசு அடக்குமுறைக்கு எதிரான பிரச்சாரக் குழு (CASR) நடத்திய பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு வீடு திரும்பும் போது, பத்திரிகையாளரும், அரசியல் ஆர்வலருமான தோழர் ரெஜாஸ் மராட்டிய மாநில போலீசாரால் நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பிரிவுகள் 149 (இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்கத் தயாரிப்பு), பிரிவு 192 (கலவரத்தைத் தூண்டுதல்), பிரிவு 351 (அச்சுறுத்தல்) மற்றும் பிரிவு 353 (பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளைப் பரப்புதல்) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மோடி ஆட்சியின் கைப்பாவை போலீசால் போலியாக பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள். புரட்சிகர மக்கள் அதிகாரம் இப்பாசிச நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறது.
“ஆபரேஷன் சிந்தூர்” குறித்து விமர்சித்ததன் மூலம் அரசுக்கு எதிராக கலவரங்களைத் தூண்டுவதாகவும், “போர் வேண்டாம்” என்று ஆன்லைனில் பதிவிட்டதாலும் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
முன்னதாக, மக்தூப் மீடியா என்ற இணைய பத்திரிக்கையில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும் அவர் எழுதியிருந்தார். காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக கொச்சியில் ஒரு போராட்டத்தை அவர் சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரெஜாஸின் பையில் தோழர் ஜி.என். சாய்பாபா எழுதிய புத்தகம், லெனின் எழுதிய புத்தகம் மற்றும் நசாரியா பத்திரிகையின் “ஸ்டாப் காகர், அக்ரீ டு பீஸ் டாக்ஸ்” என்ற வெளியீடு ஆகியவை இருந்தன. இதைக் காரணம் காட்டி, நாக்பூர் போலீசு தோழர் ரெஜாஸைக் கைது செய்தது. இருப்பினும், மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து புத்தகங்களும் பொதுவில் கிடைக்கின்றன, வெளிப்படையாக விற்கப்படுகின்றன. போலீசார் தங்கள் அறிக்கைகளில் அவற்றை தடைசெய்யப்பட்ட பொருட்களாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு, கேரள மாநிலத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் உதவியுடன், போலீசார் ரெஜாஸின் வீட்டில் சோதனை நடத்தினர். சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்காததால், கார்ல் மார்க்ஸின் புத்தகங்கள் மற்றும் பிற மார்க்சிய-லெனினிச நூல்களை அவர்கள் கைப்பற்றினர்.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் எல்லைகளில் அதிக துருப்புக்களை நிறுத்துவது பற்றி அதிகளவில் பேசி வருகின்றனர். ஆனால் மறுக்க முடியாத உண்மை என்னவென்றால், எல்லையில் துருப்புக்களை நிறுத்துவது தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தாது. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில், போலீசார் ஜனநாயக சக்திகள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் ரெஜாஸ் போன்ற தோழர்கள் மீது ஏராளமான பொய் வழக்குகளைப் பதிவு செய்து, இங்கு இருக்கும் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளைக் கூட மறுத்து, குரல்களை நெரிக்க UAPA போன்ற கருப்புச் சட்டங்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல் என்ற பெயரில், பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் தனது காவி கார்ப்பரேட் பாசிச நிகழ்ச்சி நிரலை விரைவாக செயல்படுத்தி வருகிறது.
பாசிச இருள் நம்மை விழுங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், கருத்து சுதந்திரத்தை குறிவைக்கும் இத்தகைய தாக்குதல்கள் மற்றும் கைதுகளுக்கு நாம் வாய்மூடி மௌனமாக இருக்கக்கூடாது.
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
- மதவெறி, தேசவெறி அமைப்புகளைப் புறக்கணிப்போம்! ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளின் கீழ் அணிதிரள்வோம்!
- உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்! காவி பாசிசக் கும்பலுக்குக் கல்லறை எழுப்புவோம்!