போலி தேசிய போர்வெறியைப் பரப்பும் காவி கும்பல்!

ஒருபுறம் போர் போர் என வீரவசனம் பேசுவதும், மறுபுறம் போர்களத்தில் வெள்ளைக் கொடியை பறக்கவிடும் இருபத்திமூன்றாம் புலிகேசியைப் போல தான் ‘அவதார புருசரான’ பிரதமர் மோடியின் நிலை.

‘தேச பக்தியை குத்தகைக்கு எடுத்திருக்கும்’ ஆர்.எஸ்.எஸ்-பாஜக,  பஹல்காம் தாக்குதலை அடுத்து மோடி-அமித்ஷா பாசிசக் கும்பல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தேசப்பாதுகாப்பு என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு இந்து தேசிய வெறியைப் பிரச்சாரம் செய்துவருகிறது.

இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாகுதலுக்கு இந்தியா பழிவாங்க வேண்டும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் (we want revenge) என்ற ஹேஸ்டேக்குகளோடு மோடிக்கு ஆதரவாக கோடி மீடியாவும் (Godi media) அதன் செய்தியாளர்களும் (ரிப்பபிளிக் டிவி-அர்னப், டைம்ஸ் நவ்-நல்விகா குமார் ஆஜ் தக் டிவி தொடங்கி தமிழ்நியூஸ் 24×7, தந்தி டிவி, தமிழ் ஜனம் வரை) தங்களது பிரைம் டைம் ஷோக்களின் வழியாக மக்களை ‘தேசபக்தியின் வெள்ளத்தில்’ திக்குமுக்காட வைக்கின்றனர்.

ஆஜ் தக், ஏபிபி, ஜீ நியூஸ் உள்ளிட்ட சில சேனல்கள், ‘ஆபரேஷன் சிந்தூர்தாக்குதலாக 2023ல் இஸ்ரேல் காஸா மீது நடத்திய வான்வழித் தாக்குதலின் பழைய காட்சிகளை ஒளிபரப்புகின்றன. ஜீ நியூஸ் ஒருபடி மேலே சென்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை இந்தியா கைப்பற்றி விட்டதாக காட்சி செய்தி வெளியிடுகிறது. அர்னாப் கோஸ்வாமியின் சத்தமோ மும்பையிலிருந்து சென்னை வரை ஆம்பிளிபயர் இல்லாமலே கேட்க முடிகிறது. போர் போர் போர் என,  இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உக்கிரமான போர் நடப்பது போன்ற பிம்பத்தை இந்த ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன. மக்களிடையே “இந்து தேசிய வெறியைத்” தூண்டுவதும் அதன்மூலம் இந்திய ஆளும்வர்க்கத்தின் நடவடிக்கைகளை நியாப்படுத்துவதுமே இவர்களின் நோக்கம்.

ஆனால் இந்திய இராணுவமோ தனது அறிக்கையில், நாங்கள் பாகிஸ்தான் இரணுவத்தை தாக்கவில்லை. தீவிரவாத முகாம்களை  மட்டுமே தாக்கியுள்ளோம். பதட்டத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தவில்லை என்று கூறுகிறது. அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் பதட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு அன்புக் கட்டளை விடுத்திருக்கின்றனர். ஒருபுறம் போர் போர் என வீரவசனம் பேசியும், மறுபுறம் போர்களத்தில் வெள்ளைக் கொடியை பறக்கவிடும் இருபத்திமூன்றாம் புலிகேசியைப் போல தான் ‘அவதாரப்புருசரான’ பிரதமர் மோடியின் நிலை.

* * * * * * *

தாக்குதலுக்குக் காரணமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினால் “நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய நேரமிது” என்று நல்ல பிள்ளை போல பாடம் எடுக்கிறது பாஜக கும்பல். அரசியல் நோக்கத்தை அம்பலப்படுத்தினால் தேசவிரோதிகளாக சித்தரிப்பது, கைது செய்வது, செய்தி ஊடகங்களை முடக்குவது என மிரட்டுகிறது.

பிரபல இணைய செய்தி ஊடகமான தி வயர் இணையதளம் மோடி அரசாங்கத்தால் முடக்கப்பட்டு இருப்பதாக அதன் நிறுவனர் சித்தார்த் வரதராஜன் நேற்று செய்தி வெளியிட்டு இருந்தார். இந்தியாவின் ரபேல் விமானத்தை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதாக CNN செய்தியை மேற்கோள் காட்டி தி வயர் கட்டுரை வெளியிட்டிருந்தது. இக்கட்டுரையை மேற்கோள் காட்டி, இது தவறான செய்தியென்றும் இதற்காக இணையதளம் முடக்கப்படுவதாகவும் மோடி அரசாங்கம் விளக்கம் கொடுத்துள்ளது.  அக்கட்டுரையை நீக்கிய பிறகு (15 மணிநேரம் கழித்து) மீண்டும் இணையதளம் செயல்பட  அனுமதிக்கப்பட்டிடுக்கிறது.    

இந்தியாவிலுள்ள 8000 எக்ஸ் சமூக வலைதளக் கணக்குகளை முடக்குமாறு மோடி அரசாங்கம் எக்ஸ் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அவ்வாறு செய்யவில்லையெனில் எக்ஸ் நிறுவனத்தின் இந்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது மோடி கும்பல். ஆப்பரேஷன் சிந்தூர் ஒட்டி சமூக வலைதளங்களில் இந்திய அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் பலருடைய எக்ஸ் சமூக வலைதள கணக்குகள் இந்த பட்டியலில் உள்ளது. குறிப்பாக பிரீ பிரஸ் காஷ்மீர், மக்தூப் உள்ளிட்ட பல பத்திரிகைகளின் எக்ஸ் வலைதளக் கணக்குகளும் பல வெளிநாட்டுப் பத்திரிகைகள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் எக்ஸ் வலைதளக் கணக்குகளையும் மூட சொல்லி மத்திய அரசாங்கம் கடிதம் அனுப்பி இருப்பதாக செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.

இவர்கள் மக்களையும் விட்டுவைக்கவில்லை. “உங்களையும் என்னையும் போல இருபத்தேழு சாதாரண இந்தியர்கள் கொல்லப்பட்டனர். ஊடகங்கள் TRP- ஐ உயர்த்துவதிலேயே மும்முரமாக இருக்கின்றன, அதிகாரத்தில் இருப்பவர்களிடம் எந்த முக்கிய கேள்விகளும் கேட்கவில்லை. உள்நாட்டுப் பாதுகாப்பில் ஏற்பட்ட ஒரு பெரிய குறைபாடு கவனிக்கப்படாமல் போனது, உள்துறை அமைச்சருக்கு எதுவும் தெரியாது.” இது பஹல்காம் தாக்குதலை ஒட்டி லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர் மாதுரி ககோடி தனது எக்ஸ் தளத்தில் எழுதியது. இப்பதிவினால் மனம் புண்பட்டுப் போன பல்கலைக்கழக மாணவன் ஒருவனின் (ABVP ஐ சேர்ந்தவர்) புகாரின் போரில் மாதுரி மீது தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு பதிந்துள்ளது ஆதித்தியநாத் போலீஸ். “எந்தவொரு மாணவரோ அல்லது பேராசிரியரோ இது போன்ற விஷயங்களை மீண்டும் செய்யக்கூடாது என்பதற்காக நாங்கள் இந்த FIR ஐ பதிவு செய்துள்ளோம்.” என்கிறான் அந்த சங்கி.

“மோடியின் நடவடிக்கை என்பது தேர்தலுக்காக செய்யப்படும் ஒரு நாடகம்” என்று  தனது சமூக வலைதளத்தில் விமர்சித்திருந்த ஒரு பேராசிரியரை இடைநீக்கம் செய்திருக்கிறது திருச்சி எஸ்.ஆர்.எம் கல்லூரி. என்ன இருந்தாலும் பச்சமுத்துவின்  ஐஜெகே கட்சி பிஜேபி கூட்டணி அல்லவா? குறைந்தபட்சம் கூட்டணி தர்மத்திற்காகவாவது நடவடிக்கை எடுதால் தானே வேண்டியது கிடைக்கும். இப்பேராசிரியருக்கு யாரும் வேலை கொடுக்கக்கூடாது என மிரட்டியிருக்கிறார் தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ். ஜி. சூர்யா.

இதுபோல இந்தியா முழுவதும் பலரும் மிரட்டப்படுவதும் இஸ்லாமியர்கள்/காஷ்மீரிகள் என்றால் தாக்கப்படுவதும் சங்கிகளால் அரங்கேற்றப்படுகிறது. இப்பிரச்சனையில் மோடியிலிருந்து சங்கப்பரிவாரத்தின் கடைக்கோடி உறுப்பினர் வரை அனைவருமே தங்களை நோக்கிக் கேள்வி கேட்பவர்களை அல்லது விமர்சிப்பவர்களை ஒடுக்க வேண்டும் என்ற ஒரே புள்ளியில் செயல்படுகின்றனர். இப்பிரச்சனையில் தாங்கள் சொல்லுகின்ற நரேஷனை (narration) கேள்விக்கிடமற்று ஏற்றுக்கொள்ள வேண்டும் மீறினால் தண்டனை என்பதே காவி பாசிஸ்ட்டுகளின் அணுகுமுறை.

* * * * * * * *

தாக்குதலுக்கு, பாதுகாப்புக் குறைபாடும் உளவுத்துறையின் தோல்வியும் தான் முக்கிய காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. பாதுகாப்புக் குறைபாடுதான் காரணம் என்பதை அனைத்துக்கட்சி கூட்டத்தில் அமித்ஷாவே ஒப்புக்கொண்டதாக எதிர்கட்சித் தலைவர் கார்கே கூறுகிறார். அறைக்குள் பேசிய இரகசியத்தை வெளியில் சொல்லலாமா? ‘தேச நலனுக்காக’ எங்களுடைய நடவடிக்கைகளை ஆதரிக்கிறோம் என்று கூறிவிட்டு உண்மையை வெளியில் சொல்லவது நாகரீகமா? என்று புலம்புகிறார் பாஜகவின் ரவிசங்கர் பிரசாத்.

இத்தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டிய பிரதமர் மோடியோ மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றிருக்கிறார். பஹல்காம் தாக்குதலை ஒட்டி மோடி அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு அனைத்துக் கட்சி கூட்டத்திலும் மோடி கலந்து கொள்ளவில்லை. ஏப்ரல் 24-ல் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் பீகாரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டார். இதனை எப்படி ஓட்டாக மாற்றுவது எனபதே  மோடியின் கவலை. இன்றுவரை மோடி பஹல்காம் செல்லவில்லை. அதில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. பத்திரிக்கையாளர்களையும் சந்திக்கவில்லை.  

மணிப்பூரை எடுத்துகொள்ளுங்கள், இரண்டு வருடங்களாக பாஜக அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்ட கலவரத்தில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏறத்தாழ உள்நாட்டு போரே அங்கு நடந்து வருகிறது. ஆனால் மோடி இன்றுவரை மணிப்பூர் செல்லவில்லை, பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை. அதற்கு பொறுப்பேற்று மக்களுக்கு பதிலளிக்கவும் இல்லை.

விவசாயிகள் போராட்டம், இயற்கை பேரிடர், பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், அதானி ஊழல் என எதற்கும் மோடி பொறுப்பேர்க்க மாட்டார். மோடி/பாஜக வைப் பொறுத்தவரை இவை எதற்கும் மோடி பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் இவையெல்லாம் பாஜக-வை வீழ்த்துவதற்காக எதிர்க் கட்சிகள் செய்யும் சதி அல்லது இந்தியாவை வீழ்த்த சர்வதேச சக்திகளின் சதித் திட்டம்.

மோடி பக்தர்களைப் பொறுத்தவரை,  இந்தியாவைக் காப்பதற்காகவே ‘தெய்வத்தால் அனுப்பப்பட்ட’ இலட்சியப் புருசர் மோடி. அவர் அனைத்துக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. இந்த பில்டப்பை பாஜக வினர் இன்றுவரை மெயிண்டன் பன்னுகின்றனர். ஆன்மீக பாசையில் சொல்வதென்றால், சாதாரண ஆத்மாவாகிய மக்களுக்கு பரமாத்மா மோடி பதில் சொல்ல அவசியமில்லை. தேவையென்றால் மோடியின் அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ பதில் சொல்லுவார்கள். விளக்கம் கேட்டால் காங்கிரஸ் தலைவர்களின் சமாதிகளை கை காட்டுவார்கள். அம்பலப்படுத்தினால் சங்கிகளைக் கொண்டு துன்புறுத்துவார்கள்.

ஒவ்வொரு பிரச்சனைகளையும் தங்களது அரசியல் நோக்கத்திற்கு ஏற்றார் போல் மதசாயம் பூசியும் தேசவெறியை கலந்தும் பிரச்சாரம் செய்வதின் மூலம் தங்களது ஆளும்வர்க்க சேவையையும் (காவி-கார்ப்பரேட் கும்பலுக்கான) மக்களின் அடிப்படை பிரச்சனைகளையும் மூடிமறைக்கின்றனர். தற்போது இதே வேலையைத்தான் பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினை என்ற பெயரில் பாஜக கும்பல் செய்துவருகிறது.  

  • செல்வம்

https://www.altnews.in/aaj-tak-abp-zee-news-others-air-2023-footage-of-israeli-airstrikes-in-gaza-as-visuals-of-indias-operation-sindoor/

https://www.thehindu.com/news/national/centre-admitted-to-security-lapse-in-terror-attack-in-pahalgam-kharge/article69494204.ece

https://www.deccanherald.com/india/tamil-nadu/chennai-professor-suspended-for-anti-india-comments-over-operation-sindoor-against-pakistan-3531403

https://www.telegraphindia.com/india/8000-x-accounts-blocked-in-india-following-executive-orders-from-the-government-prnt/cid/2098256

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. இதே நிலை நீடித்தால் நாளை மோடியை கேள்வி கேட்பவர்களை பார்த்து, நீங்கள் என்னை கேட்க கூடாது. அந்த கடவுளைத்தான் கேட்க வேண்டும் என்று திசை திருப்பி விடுவார்கள்.