காவி பாசிஸ்டுகளின் போலி தேசிய வெறிக்கு ஒத்தூதும் எதிர்க்கட்சிகள்

இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்கள் நடப்பதற்குக் என்ன காரணம் என்பதை எடுத்துக் கூறி, பாசிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரங்களை அம்பலப்படுத்தி, அந்தப் பிரச்சாரங்கள் ஏற்படுத்தும் மயக்கத்தில் இருந்து சாமானிய மக்களை விடுவிக்க வேண்டியது, காவி பாசிசத்தை எதிர்த்துப் போராடுகின்ற கட்சிகளின் கடமையாகும்.

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம், அதுவும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படும்போது, அது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் உண்டாக்குகிறது. இந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, மதவெறியையும், போலி தேசிய வெறியையும் தூண்டிவிடும் வகையில் காவி பாசிச சக்திகள் அரை உண்மையை முழுப்பொய்யாகப் பிரச்சாரம் செய்கின்றனர். இவை இரண்டும் இணையும் போது அது சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நாடு முழுவதையும் இந்நிகழ்வுக்குள் ஆழ்த்தி விடுகிறது.

2008ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தீவிரவாத தாக்குதலின் போதும் இதே போன்றதொரு தாக்கத்தில் ஒட்டுமொத்த நாடும் ஆழ்த்தப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். 

தீவிரவாத தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது கண்டிக்கத்தக்கது. அதேசமயம் இந்த தீவிரவாத தாக்குதல் ஏன் நடந்தது? அதற்கு அடிப்படையான காரணம் என்ன? இனி இதுபோன்றதொரு தாக்குதல் நடக்காமல் எப்படி தடுப்பது? என யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மாறாக, ஆளும்வர்க்கத்தால் கட்டமைக்கப்படும் சட்டகத்தின் ஊடாக மட்டுமே பார்ப்பதற்கு மக்களை பழக்கப்படுத்தி இருக்கின்றனர். அனைத்து ஊடகங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காவி பாசிஸ்டுகளால் திட்டமிட்டுப் பரப்பப்படும் இது போன்ற பிரச்சாரங்களுக்குச் சாமானிய மக்கள் மிக எளிதில் ஆட்பட்டுவிடுகின்றனர்.

தற்போதும் பாகிஸ்தானுக்கு எதிராக காவி பாசிஸ்டுகள் எடுத்து வரும் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் பிரச்சாரம் தொடங்கியிருக்கிறது. பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானைப் பழிதீர்க்க வேண்டும் என்ற உணர்வு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக யாரேனும் வாய் திறந்தால் கூட அவர்களை தேசவிரோதி என்றும் பாகிஸ்தான் கைக்கூலி என்றும் முத்திரை குத்துவதும், வழக்குகள் போடுவதும் நடக்கின்றன.

ஆனால் அதே சமயம், இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்கள் நடப்பதற்குக் காரணம் என்ன என்பதை எடுத்துக் கூறி, பாசிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரங்களை அம்பலப்படுத்தி, அந்தப் பிரச்சாரங்கள் ஏற்படுத்தும் மயக்கத்தில் இருந்து சாமானிய மக்களை விடுவிக்க வேண்டியது, காவி பாசிசத்தை எதிர்த்துப் போராடுகின்ற கட்சிகளின் கடமையாகும்.

காவி பாசிசத்தை எதிர்ப்பதில் முன்னணியில் இருப்பவர்கள் நாங்கள்தான், எங்களால் மட்டுமே பாசிசத்தை முறியடிக்க முடியும் என மார்தட்டிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள் பஹல்காம் விசயத்தில் என்ன செய்து கொண்டிருக்கின்றன.

“பாகிஸ்தானுக்குத் தக்க பாடம் கற்பிக்க வேண்டிய நேரமிது”, “பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை குறைபாடுகள் குறித்து உடனடி விசாரணை தேவை” என்ற தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி, தனது காரியக் கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளது.

சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், “பாதுகாப்புக் குறைபாடுகளே இது போன்ற தாக்குதல்கள் நடைபெறக் காரணம்” எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது குறித்து தீர்மானம் கொண்டு வந்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “இது தொடர்பாக ஓன்றிய அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம்” எனக் கூறியிருந்தார்.

எதிர்க்கட்சிகளில் திருமாவளவன் மட்டும்தான் “காஷ்மீர் விசயத்தில் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் தான் இத்தகைய விளைவை ஏற்படுத்தியிருக்கிறது” என கூறியிருக்கிறார் மற்ற எல்லாக் கட்சியினரும் இதனை மோடி அரசின் நிர்வாகத் தவறாகவும், பாதுகாப்பு குளறுபடியாகவும், உளவுத்துறையின் தோல்வியாகவும் பார்க்கின்றனர்.

மோடி அரசிற்கு எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்றுக் கொள்வது ஒன்றும் கடினமான காரியமல்ல. தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்க்கட்சிகள் கூறுவதை சரி செய்யும் முயற்சியாக முன்னிறுத்தி அதற்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்றிருக்கிறது மோடி அரசு.

இது போன்ற பயங்கரவாத தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும்போது இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களையும், திட்டமிட்டவர்களையும், அதற்கு உதவி செய்தவர்களையும் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடப்பதற்கு காரணம் என்ன என்று யாரும் பேசுவதில்லை.

2014-ம் ஆண்டு மோடி அரசு பதவியேற்றது முதல் இஸ்லாமியர்களுக்கு எதிரான காவி பாசிச நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இஸ்லாமியர்கள் மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என அடித்துக் கொலை செய்வது, சிஏஏ என்.ஆர்.சி. சட்டம் கொண்டுவந்து அவர்களை அகதிகளாக்குவது, அவர்களது வழிபாட்டுத் தலங்களை அடுத்தடுத்து கைப்பற்றுவது, 370 சட்டப்பிரிவை நீக்கியதுடன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியது, அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக காஷ்மீரை கடுமையான இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. இராம நவமி, ஹனுமன் ஜெயந்தி, ஹோலி என ஒவ்வொரு இந்துப் பண்டிகையின் போதும் இஸ்லாமியர்கள் குடியிருக்கும் பகுதிகளில் கலவரம் செய்வது. ரம்ஜான், பக்ரீத் போன்ற இஸ்லாமியப் பண்டிகைகளின் போது அவர்கள் தொழுகை நடத்துவதையும், ஆடு மாடுகளைப் பலி கொடுப்பதையும் கூடத் தடை செய்வது, வக்பு வாரியச் சட்ட திருத்தம் கொண்டு வருவது, சாதாரணமாகத் தங்களது உரிமைகளைக் கேட்கும் இஸ்லாமியர்களின் வீடுகளைக் கூட புல்டோசர்களைக் கொண்டு இடித்துத் தள்ளுவது என அரசின் மூலமாகவும், காவி பாசிச குண்டர் படை மூலமாகவும் இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

 

இங்கே பட்டியலிடப்பட்டிருப்பது மிகக் குறைவே, தினந்தோறும் நாட்டின் ஏதாவதொரு மூலையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறையும் தாக்குதலும் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. வேறு எதுவும் இல்லையென்றால் சாவா போன்ற ஒரு திரைப்படத்தை வெளியிட்டு அவுரங்கசிப் காலத்தில் நடந்ததற்கு இப்போது பழிவாங்குகிறோம் என ஒரு மாநிலத்தையே பல வாரங்களுக்குக் கலவரப் பீதியில் ஆழ்த்துகின்றனர்.

காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசும், காவி பாசிசக் கும்பலும் இந்திய இஸ்லாமியர்களைத் தொடர்ந்து பதற்றத்திலேயே வைத்திருக்கின்றன. “காறை விதைத்தால் சூறாவளியைத்தான் அறுவடை செய்யமுடியும்” என்றொரு பழமொழியிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான காவி பாசிசக் கும்பலின் தாக்குதல் எனும் விதைதான் இன்றைக்கு இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலாக விளைந்து நிற்கிறது.

இன்று காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் கொலை செய்த தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து தண்டிக்கலாம். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது குண்டுபோட்டு அழிக்கலாம். பாதுகாப்பு குளறுபடிகளைச் சரி செய்து, உளவுத்துறையை மேம்படுத்தி வெளிநாட்டிலிருந்து வரும் ஆபத்துக்களைத் தடுக்க நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கலாம். ஆனால் இந்தியாவிற்கு எதிரான இஸ்லாமியத் தீவிரவாதத்தின் அடிப்படைக் காரணமாக இருக்கின்ற காவி பாசிஸ்டுகளின் தாக்குதல்களை நிறுத்தாத வரை இஸ்லாமிய தீவிரவாதிகள் உருவாவதை ஒருபோதும் தடுக்க முடியாது.

இந்த உண்மையை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல எந்தவொரு ஓட்டுக் கட்சிக்கும் துணிவில்லை. தங்களை தேசதுரோகியாக, பாகிஸ்தான் ஆதரவாளராக முத்திரை குத்திவிடுவார்கள் என அவை அஞ்சுகின்றன. காவி பாசிஸ்டுகளைவிட தாங்கள்தான் சிறந்த தேசியவாதிகள் என நிரூபிக்க நினைக்கின்றன.

தேசப்பற்று என்ற முகமூடிக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் பாசிசத்தின் உண்மை முகத்தை மக்களுக்கு அம்பலப்படுத்தி, போலி தேசிய வெறியூட்டும் அவர்களது பிரச்சாரத்தை முறியடிப்பதுதான் இன்றைக்கு பாசிசத்தை எதிர்த்து நிற்கும் அமைப்புகளின் முக்கியக் கடமையாக இருக்க முடியும்.

  • அறிவு

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. பிஜேபி ஆர் எஸ் எஸ் பாசிச போலி தேச வெறியை ஊட்டுகிறது. அதற்கு நேரடியாக காங்கிரஸ் இந்திய கூட்டணி கட்சிகள் ஆதரிக்கிறது. இது வெட்கப்பட வேண்டிய ஒன்று. பாசிசத்தை நடைமுறைப்படுத்தினால் இந்திய கூட்டணியே முதலில் ஆதரிக்கும் என்பது இதில் புரிகிறது.