காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதைக் கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஏப்ரல் 22-ம் தேதியன்று மதியம் 2:30 மணியளவில் பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாவுக்காகச் சென்ற பயணிகளின் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தி 28 பேரைக் கொன்றும்; பத்துக்கும் மேற்பட்டவர்களைப் படுகாயமடையச் செய்தும் முஸ்லீம் தீவிரவாதிகள் வெறியாட்டம் போட்டுள்ளனர்.
உலகின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, நன்கு திட்டமிட்டு, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்துவதை ஓர் யுக்தியாக கொண்டுள்ளன.
மோடியின் ஆட்சியில் புல்வாமா தாக்குதல், பஹெல்காம் துப்பாக்கிச்சூடு என இந்தியாவில் திரும்ப திரும்ப இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்கின்றனவே அது ஏன்?
மோடி-அமித்ஷா கும்பல் ஒன்றியத்தில் ஆட்சியில் அமர்ந்த பிறகு முஸ்லீம்கள் மீது குறிவைத்து நடத்தப்படும் பாசிசத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதற்கு சாட்சியாக நாடு முழுவதும் பல மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக காவிக் குண்டர்கள் நடத்தி வரும் பயங்கரவாதப் படுகொலைகள்; பாஜக ஆட்சியிலுள்ள மாநிலங்களில் அன்றாடம் ஏவிவிடப்படும் காவி பாசிசம்; முஸ்லீம் மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிப்பு; மாட்டிறைச்சி என்ற பெயரில் காவிக் குண்டர்களின் தாக்குதல்கள்; முஸ்லீம்கள் மீதான பொருளாதாரத் தாக்குதல்கள்; அவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் தகர்க்கப்படுதல்; ஊபா போன்ற கருப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி நிரந்தரமாக சிறையில் அடைப்பது; இந்துப் பண்டிகைகளின் போது ஊர்வலம் என்ற பெயரில் காவிக் குண்டர்கள் நடத்தும் அட்டூழியங்கள்; பொதுவெளியில் ரம்ஜான் தொழுகையை நடத்துவதற்குக் கூட அனுமதி மறுத்து அவர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பது; வீடுகளில் கூட்டுத் தொழுகை நடத்தினால் போலீசைக் கொண்டு கைது செய்து தண்டிப்பது என முஸ்லீம்கள் அன்றாடம் வதைக்கப்படுவது வடிக்கையாகி வருகிறது. சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். இதனால் முஸ்லீம்கள் மத்தியில் வெறுப்பையும் ஆத்திரத்தையும் கிளறிவிட்டுள்ளது. இந்தியா மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும், மதிப்பும் தகர்ந்து போய் வருகிறது.
இப்படி சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக, அன்றாடம் காவி பாசிஸ்டுகள் நடத்திவரும் கொடூரத் தாக்குதல்களுக்கு எதிர்வினையாகத்தான் முஸ்லீம் தீவிரவாதிகள் பஹல்காம் போன்ற தீவிரவாத தாக்குதல்களை நடத்துகின்றனர் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால் இதனை மறுக்கும் விதமாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் காவி பாசிஸ்டுகளும்; அவர்களின் ஊதுகுழல் ஊடகங்களும் முஸ்லீம் தீவிரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தானிலிருந்து ஏவிவிடப்படும் பயங்கரவாத தாக்குதல் என்று பெருங்கூச்சல் போடுகின்றனர். இதன் மூலம் இஸ்லாமிய மதவெறுப்புணர்வைத் தூண்டி இந்து வெறியைப் பரப்புகின்றனர். இதனை மறைப்பதற்காக பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க பாகிஸ்தானுடன் போர் என்று மோடி-அமித்ஷா கும்பல் பூச்சாண்டி காட்டி வருகின்றனர். இதையே காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் வெவ்வேறு வார்த்தைகளில் வாந்தியெடுக்கின்றன. மேலும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு பயங்கரவாதத்தின் மூலம், முஸ்லீம் தீவிரவாதத்தை முறியடித்து விடலாம் என மக்களை ஏய்த்து வருகின்றனர்.
ஆனால் முஸ்லீம்களின் மீதான அரசு பயங்கரவாதத்தையும், காவி பாசிசத் தாக்குதல்களையும் முடிவுக்கு கொண்டு வராத வரை, முஸ்லீம் பயங்கரவாதத்தை ஒருபோதும் முடிவுக்குக் கொண்டு வர முடியாது. ஏனெனில், இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு அடிப்படையே இந்து மதவெறி காவி பாசிசம் தான். குறிப்பாக மோடி-அமித்ஷா காவி பாசிசக் கும்பல் கடந்த 10 ஆண்டுகளில் முஸ்லீம்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட காவி பாசிசத் தாக்குதல்களின் சிலவற்றை வாசகர்களுக்கு நினைவூட்டுவதற்காகவும், புரிந்துகொண்டு வினையாற்றுவதற்காகவும் கீழே தருகிறோம்.
காவி பாசிஸ்டுகள் நடத்திய பயங்கரவாதப் படுகொலைகள்:
தில்லியில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச்சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிரான போராட்டத்தையொட்டி சுமார் 51 பேர் கொல்லப்பட்டனர். இதில் 9 முஸ்லீம் இளைஞர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கூறுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டு, ஆடைகள் கழற்றப்பட்டு இந்து மதவெறிப் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டனர். இத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், போராட்டப் பகுதி வழியாகச் செல்லும் மக்களைப் பிடித்து பெயர், முகவரி மற்றும் அடையாள அட்டை மூலம் அவர்கள் இஸ்லாமியர்கள் என்று உறுதிப்படுத்திய பிறகு அவர்களை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூற மறுத்த முஸ்லீம் ஒருவர், தில்லியிலுள்ள பாகீரதி விஹாரின் சாக்கடையில் வீசப்பட்டதாக தில்லி போலீசின் குற்றப்பத்திரிக்கை கூறுகிறது.
இரயில்வே கான்ஸ்டபிளான சேத்தன் சிங் என்ற இந்து மதவெறி பிடித்த மிருகம், ஜூலை 31, 2023-ஆம் ஆண்டு மும்பை – ஜெய்ப்பூர் இரயிலில் பயணம் செய்த போது, தனது துப்பாக்கியால் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த தன்னுடைய மூத்த போலீசு அதிகாரியான ஏ.எஸ்.ஐ திகாராம் மீனாவை சுட்டுக் கொன்றான். மேலும் நான்கு இரயில் பெட்டிகளைக் கடந்து சென்று முஸ்லீம் உடை, தாடி போன்ற முஸ்லீம் மத அடையாளத்தை மட்டுமே வைத்துக்கொண்டு மூன்று முஸ்லீம்களைச் சுட்டுக் கொன்றுள்ளான்.
அதேபோல் இந்த ஆண்டு ஹோலியின் போது வண்ணப் பொடிகளை தன் மீது பூசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு முஸ்லீம் பெரியவரை காவிக் கும்பல் வாளியால் அடித்தே கொன்றிருக்கின்றது.
2015-ஆம் ஆண்டு முகமது அக்லக்கை படுகொலை செய்த போது, தங்களை நியாயப்படுத்திக்கொள்ள காவி பாசிஸ்டுகளுக்கு மாட்டுக்கறி என்ற காரணமாவது தேவைப்பட்டது. ஆனால் இன்று, “உன்னைக் கொலை செய்ய நீ முஸ்லீமாக இருந்தால் மட்டுமே போதும்”, எனக் காவி வெறியர்கள் கூறும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.
காவி பாசிஸ்டுகளால் இடிக்கப்படும் மசூதிகள்:
காவி பாசிஸ்டுகள் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததோடு நின்றுவிடவில்லை; தற்போது மோடியின் ஆட்சியில் முன்னிலும் மூர்க்கமாக மசூதிகள் இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் உத்தரபிரதேசம்-நேபாள எல்லையிலுள்ள சுமார் 20 மசூதிகளையும், மதரஸாக்களையும் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாகக் கூறி உபி அரசு இடித்துள்ளது.
அரசு நிலத்தை ஆக்கிரமித்து மசூதிகள் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி மசூதிகளை இடிப்பது நாடு முழுவதும் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் உள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாஹி மசூதியை, சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ஜனவரி 2023-ல் புல்டோசர்களைக் கொண்டு இடிக்கப்பட்டது. அதேபோல் இதற்கு முன்பு 2022 நவம்பரில், உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைக்கு இடையூறாக இருந்த 300 ஆண்டுகள் பழமையான மற்றொரு மசூதியையும் சாலை விரிவாக்கத்திட்டத்திற்காக இடித்து தரைமட்டமாக்கியது.
இதுவே தமிழ்நாட்டில் இராமர் பாலம் என்ற புராணப் புழுகுகளை காரணம் காட்டி இன்றுவரை சேது சமுத்திர திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்து மதவெறிக் கும்பல்தான் என்பதை இங்கு நினைவில் கொள்ளவும்.
கடந்த 2022-ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் அகில பாரத இந்து மகாசபா (ABHM) ஆதரவுடன் உள்ளூரைச் சேர்ந்த இந்து விவசாயி சார்பாக பதாவுனில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான ஷம்சி ஜமா மசூதி 10-ஆம் நூற்றாண்டின் சிவன் கோவில் மீது கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
இதுமட்டுமில்லாமல் காஷ்மீரில் ஷரிப் மசூதியை இடிக்கும் முயற்சி; சிம்லாவின் நகரா சஞ்சௌலி பகுதியில் உள்ள ஒரு மசூதியின் மேல் மூன்று தளங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக கூறி இடிப்பு; குஜராத்தில் நீர்நிலைகளை ஆக்ரமித்து கட்டப்பட்டிருப்பதாக கூறி 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 தர்காக்கள், 10 மசூதிகள் இடிப்பு; அஸ்ஸாமில் சோனித்பூர் மாவட்டத்தில் வங்காள மொழி பேசும் முஸ்லீம்கள் அங்குள்ள வனப்பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிதாக கூறி 2500 குடும்பங்களை வெளியேற்றியதுடன், இரண்டு மசூதிகளையும் இடித்து தரைமட்டமாக்கியது.
மைசூரில் மசூதியின் தோற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு பேருந்து நிறுத்தத்தை கூட மோடி அரசு விட்டு வைக்கவில்லை. முகலாய கட்டிடக் கலையில் கட்டப்பட்டிருந்த அப்பேருந்து நிலையம் மதக் கலவரத்தை தூண்டுவதற்கு வாய்ப்பாக அமையும் எனக்கூறி அதனை இடிப்பதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மத வழிபாட்டுத்தளங்கள் தற்பொழுது இருப்பது அப்படியே தொடரும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இதுவே பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பில் இராமர் கோயில் கட்ட விதிவிலக்களித்து மற்றவை அப்படியே தொடரும் எனக் கூறியுள்ளது. எனவே கட்டிடத்தின் மீது குரோதம் கொண்டு இன்றுவரை கலவரங்களைத் தூண்டுவது யார் என்பதை வாசகர்களுக்கு சொல்லித் தெரியவேண்டியது இல்லை. எனவே பாபர் மசூதி ஒர் முன்னோட்டம் மட்டுமே; காசி, மதுரா இன்னும் இருக்கிறது என கொக்கரிக்கிறார்கள் காவி பாசிஸ்டுகள்.
முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல்கள்:
இஸ்லாமியர்களின் கடைகளில் பொருட்கள் வாங்குவதைப் புறக்கணிக்கவும், இந்துக்களின் கடைகளில் இஸ்லாமியர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது எனவும் கூறி முஸ்லீம்களின் மீது வெறுப்புப் பிரச்சாரம் செய்வதன் மூலம் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் மீது பாசிசத் தாக்குதல்களின் ஒரு பகுதியாக பொருளாதார தாக்குதல்களை காவி பாசிஸ்டுகள் அரங்கேற்றி வருகின்றனர்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் போபாலில் சமஸ்கிருத பஞ்சாவ் மன்ச் எனும் காவி பாசிஸ்டுகளின் அமைப்பு இந்துக் கடைகளில் ’நான் சனாதனி’ என்ற மதக்குறியீட்டை இட்டுச் சென்றனர். இதன் மூலம் நுகர்வோர் இந்து கடைகளிடமிருந்தே பொருட்களை வாங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இவ்வமைப்பின் தலைவரான சந்திரசேகர் திவாரி எனும் காவி பாசிஸ்டு இந்துக்களின் பணம் ஜிகாதிகளுக்கும், லவ் ஜிகாத் நடத்துபவர்களுக்கும் செல்லக்கூடாது எனச் செய்தி வெளியிட்டான்.
இதுபோன்று முஸ்லீம்கள் மீது தொடுக்கப்படும் பொருளாதார தாக்குதல்கள் பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு எளிதாகப் பரவி வருகின்றன. கடந்த ஜூலை 2024-இல் நடைப்பெற்ற இந்து மத கன்வர் யாத்திரையின் போது, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்திரகண்ட் மாநில அரசுகள் யாத்திரை செல்லும் வழியிலுள்ள உணவகங்களில் அதன் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக உத்திரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ’ஒருவர் தன்னை அறிமுகப்படுத்துவதற்கு பிரச்சினை எதுவும் இல்லையே’ என்றார். முஸ்லீம்கள் இந்துக்களுக்கு விற்கும் உணவுகளை மாசுபடுத்துகிறார்கள் எனக் கூறி டேக்-ஜிகாத் என இஸ்லாமிய மத வெறுப்புணர்வை பரப்பினார். இதுவே தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க-வை சேர்ந்த இராம. சீனிவாசன் ஒரு முஸ்லீம் கடைக்குச் சென்று உணவருந்தும் போது ”ஹலால் செய்யப்பட்ட உணவை நாங்கள் எப்படி உண்ண முடியும்” என கடையில் வேலைபார்க்கும் ஒருவரிடம் கேள்வி எழுப்பினார் என்பதை வாசகர்கள் இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.
உத்திரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் உணவில் எச்சில் கலப்பதாக கூறி துக் ஜிகாத் எனும் இஸ்லாமிய மதவெறுப்புணர்வு பரப்பப்பட்டது. இது போன்ற முஸ்லீம் வெறுப்புணர்வை மீண்டும் மீண்டும் கட்டமைப்பதன் மூலம் முஸ்லீம்களின் உணவகங்களில் உணவு உண்பதைக் கேள்விக்குள்ளாக்கி அவர்களை ஒதுக்கி வைப்பது தான் காவி பாசிஸ்டுகளின் நோக்கமாகும்.
ஹரியானாவில் நூஹ் எனும் பகுதியில் நடந்த கலவரத்தையொட்டி அந்நகர வீதிகளில் எந்த இந்துக் கடைக்காரரும் முஸ்லீம்களை வேலைக்கு வைத்திருந்தால் அந்தக் கடைகளைப் புறக்கணிக்குமாறு சுவரொட்டிகளை ஒட்டுவோம்; அந்தக் கடைகாரர்களை இந்து சமூகத்தின் துரோகிகளாக அறிவிப்போம். அப்பொழுதுதான் இங்கு இந்து வியாபாரிகள் மட்டுமே இருப்பார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்துக் கடைகளில் முஸ்லீம்கள் வேலையில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால், அவருக்கு என்ன நடந்தாலும் அந்தக் கடைகாரர்தான் பொறுப்பாவார்.” எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஹரியானாவின், குருகிராம் மாவட்டத்தில் உள்ள திக்ரா கிராமத்தில் துணை இமாமைக் கொன்றவர்களை விடுவிக்கப் போராட்டம் நடத்திய காவி குண்டர்கள், “குருகிராமில் நூற்றுக்கணக்கான முஸ்லீம் ஆண்கள் தச்சர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், காய்கறி விற்பனையாளர்கள், மெக்கானிக்குகள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் என வேலை செய்கிறார்கள். ஆனால் இப்போது அவர்கள் நகரத்தின் அமைதியைச் சீர்குலைப்பதற்குப் பொறுப்பானவர்கள் என்பதால், அவர்களுக்கு எங்கிருந்தும் எந்த ஆதரவும் கிடைக்காது என்பதை நாங்கள் உறுதி செய்வோம், ”முஸ்லீம்களை நகரத்தில் வாழ்வதற்கோ, வேலை செய்வதற்கோ அனுமதிக்கக்கூடாது. அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது வீடுகளை வாடகைக்கு விடக்கூடாது என்று நகர மக்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.” என குல்பூஷன் பரத்வாஜ் என்ற பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த காவி பாசிஸ்டு அக்கலவரத்தையொட்டி பகிரங்கமாக அறிவித்தான்.
நூஹ்வில் நடைபெற்ற கலவரத்தை அடுத்து முஸ்லீம் வணிகர்கள் தங்கள் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடை செய்ய முடிவு செய்துள்ளதாக ஹரியானாவின் மகேந்தர்கர், ரேவாரி மற்றும் ஜஜ்ஜார் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அமைப்புகள் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி அறிக்கைகளை வெளியிட்டன.
முஸ்லீம்களை பொருளாதார ரீதியில் நொடியச் செய்து நிலைகுலைய வைக்கும் யுக்தியாக காவி பாசிஸ்டுகள் இப்பொருளாதாரத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
முஸ்லீம்களின் வீடுகளை குறிவைத்து புல்டோசர் மூலம் தகர்க்கப்படுதல்:
கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அம்னெஸ்டி என்ற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் அவர்கள் விசாரித்த 128 கட்டிட இடிப்பு சம்பவங்களில் மட்டும் 617 இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; புல்டோசர் நடவடிக்கைகள் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளிலே நடைப்பெற்று வருவதாகவும் கூறுகிறது.
ஆட்சியில் இருக்கும் காவி பாசிஸ்டுகள் புல்டோசர் நடவடிக்கை எனும் பாசிச தாக்குதலை இன்றுள்ள சட்டமுறைகளை பயன்படுத்தியே மேற்கொண்டு வருகிறார்கள். நீதிமன்ற உத்தரவுகளை பொருட்படுத்தாமல் புல்டோசர் தாக்குதல்கள் மூலம் முஸ்லீம்கள் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்குகிறார்கள்.
சி.ஏ.ஏ.விற்கு எதிராக போராடிய ஜே.என்.யூ பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவியான அபிரீன் பாத்திமா உபி-யின் பிரக்யாரஜின் பகுதியை சார்ந்தவர். சி.ஏ.ஏ.விற்கு எதிராகப் போராடினார் என்பதற்காகவே அவரின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.
இப்படிதான் காவி பாசிஸ்டுகள் இஸ்லாமியர்களின் வீடுகளைக் குறிவைத்து புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கி அவர்கள் வீடற்ற ஏதிலிகளாக சொந்த நாட்டிலேயே அலையவிடுவது அல்லது அடித்துத் துரத்துவது என்றக் கொடுஞ்செயலை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
முஸ்லீம்கள் மீது ஏவப்படும் கறுப்புச் சட்டங்கள்:
மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், ஜம்மு காஷ்மீரில் மட்டும் 2019-ம் ஆண்டிலிருந்து 2021-ம் ஆண்டு வரை ஊபா சட்டத்தின் கீழ் 2364 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆகஸ்டு 2021-ம் ஆண்டு வரை 1100 பேர் சிறையில் இருந்திருக்கின்றனர் என்கிறார் ’முச்சந்தியில் நிற்கும் காஷ்மீர்’ எனும் நூலின் ஆசிரியரான சுமந்த்ரா போஸ்.
மோடியின் ஆட்சியில் ஆள்தூக்கி சட்டமான ஊபாவின் கீழ் முஸ்லீம்கள் கைது செய்யப்படுவது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சி.ஏ.ஏவிற்கு எதிராக போராட்டம் நடத்திய உமர்காலித் உள்ளிட்ட மாணவர்களை தேச விரோதிகள் எனக்கூறி ஊபா சட்டத்தின் கீழ் மோடி அரசு கைது செய்தது. இதில் பலர் இன்றும் சிறையில் உள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் ஆதித்தியநாத்தின் காட்டாச்சியை அம்பலப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ள பல பத்திரிக்கையாளர்கள், திரிபுராவில் வி.எச்.பி அரங்கேற்றிய கலவரத்தைக் கண்டித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காக 102 பேர் மீது வழக்கு, தீவிரவாதி என்று ஜம்மு-காஷ்மீர் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பல அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் என UAPA-வில் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
மோடியின் ஆட்சியில் 2016-ஆம் ஆண்டிலிருந்து 2020-ஆம் ஆண்டு வரை மட்டும் நாடு முழுவதும் ஊபா சட்டத்தின் கீழ் 5027 வழக்குகளில் 24,314 பேர் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்திய உள்துறை அமைச்சகத்தின் படி இந்த 24,314 பேரில் 212 பேர் மட்டுமே குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்ப்பட்டுள்ளது. ஊபா எனும் ஆள்தூக்கி சட்டம் மூலம் முஸ்லீம்கள், பல்வேறு செயற்பாட்டாளர்கள் அலைக்கழிக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இது போன்ற அரசு பயங்கரவாத ஒடுக்குமுறை மூலம் முஸ்லீம்களை வேட்டையாடி வருகிறது மோடி-அமித்ஷா கும்பல்.
முஸ்லீம்களின் மதவழிபாட்டு உரிமைக்கு எதிராக காவி கும்பல்களின் அட்டூழியங்கள்:
இந்த ஆண்டு ரம்ஜான் மாதத்தில் உத்திரப்பிரதேசத்தின் மீரட் நகரின் சாலைகளில் தொழுகை செய்தால் முஸ்லீம்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்படும் எனவும்; அவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும் எனவும் மீரட் போலீசு அச்சுறுத்தியது.
”யாரும் சாலைகளில் தொழுகை செய்யக்கூடாது. வீடுகளில் கூட்டுத்தொழுகை அனுமதிக்கப்படாது. மக்கள் தங்கள் வீடுகளில் பிரார்த்தனை செய்யலாம். ஆனால் எந்த அசம்பாவித சம்பவமும் நடக்காமல் கவனமாக இருக்க வேண்டும்” என்று சம்பல் எஸ்பி கிருஷ்ணகுமார் பிஷ்னோய் அறிக்கை வெளியிட்டார்.
கடந்த 2023-ஆம் ஆண்டில் ரம்ஜான் மாதத்தில் சுமார் 1700 முஸ்லீம்கள் மீது ரம்ஜான் கூட்டுத் தொழுகையை நடத்தியதற்காக உ.பியின் கான்பூர் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உ.பியில் ஒரு தனியார் பொருட்கிடங்கில் கூட்டுத் தொழுகை நடத்திய முஸ்லீம்களுக்கு ரூ.5 இலட்சம் அபராதம் ஏன் விதிக்க கூடாது என அப்பகுதி போலீசு நோட்டிஸ் அனுப்பியது.
ஆசாத் சமாஜ் கட்சி எம்.பி. சந்திர சேகர் ஆசாத், “உ.பி.யில், முஸ்லீம்களுக்கு எதிராக யார் அதிக அருவருப்பான அறிக்கைகளை வெளியிடுவது என்பதில் போலீசு அதிகாரிகளிடையே போட்டி நிலவுகிறது. இனி வரும் காலங்களில் முஸ்லீம்கள் மூச்சு விடுவதற்கு கூட அனுமதி பெற வேண்டியிருக்கும் என்று கூறுமளவுக்கு அங்கு முஸ்லீம்களின் மத வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது.
மீரட்டில் உள்ள ஒரு தனியார் பல்கலைக் கழகத்தின் திறந்த வெளியில் தொழுகை செய்ததற்காக காலித் மேவாதி என்ற ஒரு மாணவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் தங்களது ரம்ஜான் மாதத்தில் தராவீஹ் தொழுகை என்ற பெயரில் குர் ஆனில் உள்ள முக்கிய வாசகங்கள் சிலவற்றை வாசித்து தொழுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது நாட்டின் குடிமக்களாக, இஸ்லாமியர்களின் மத வழிபாட்டு சுதந்திரம், சமத்துவ உரிமை. ஆனால் முஸ்லீம்கள் தங்களது வீட்டில் கூட்டுத்தொழுகை நடத்தினாலே அதை ஒரு குற்றமாக கருதி போலீசு மூலம் நடவடிக்கை எடுக்கிறது காவி பாசிச கும்பல். இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் கூட்டுத்தொழுகை நடத்தினால், காவிக் குண்டர்களும், போலீசும் அவர்களது வீட்டுக் கதவை தட்டும் நிகழ்வுகள் மோடியின் ஆட்சியில் தொடர்கதையாகி வருகிறது.
இந்து மதப் பண்டிகை ஊர்வலங்களின் போது காவிகும்பல்கள் நடத்தும் அராஜகங்கள்:
ஒவ்வொரு ஆண்டும் இந்து மதப் பண்டிகைகளின் ஊர்வலத்தின் போது காவிக் குண்டர்கள் இந்து முஸ்லீம் கலவரத்தைத் தூண்டும் விதமாக முஸ்லீம் வெறுப்புப் பிரச்சாரங்களையும், முஸ்லீம் மக்களின் வீதிகளில் வேண்டுமெற்றே சென்று அராஜகம் செய்வதையும் முன்னிலும் மூர்க்கமாக செயல்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு மராட்டியத்தில் நடைபெற்ற இராமநவமி ஊர்வலத்தின் போது காவிக் குண்டர்கள், அங்குள்ள மசூதிகள் மீது ஏறி அராஜக செயல்களில் ஈடுபட்டுள்ளதோடு மட்டுமில்லாமல் பல முஸ்லீம் வெறுப்பு கோஷங்களையும் எழுப்பினர். பாதுகாப்பு என்ற பெயரில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், சிசிடிவி கேமராக்கள், ஆறு டிரோன்கள் இந்த ஊர்வலத்தில் இருந்தாலும் அராஜகச் செயலில் ஈடுபடும் எந்த காவிக் குண்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தொகுப்பாக மேற்கூறிய அனைத்து தகவல்களும் ஊடகங்களில் நாட்கணக்கில் மணிக்கணக்கில் வரும் செய்திகளாகிவிட்டன. காவி பாசிஸ்டுகளால் அன்றாடம் நடத்தப்படும் இந்நிகழ்வுகள் தற்போது சலிப்படையும் செய்திகளாகிவிட்டன. ஆனால் காவி பாசிஸ்டுகள் ஒவ்வொரு முறையும் நடத்தும் புதிய வகைப் பாசிசத் தாக்குதலில் வேறு வேறான முஸ்லீம்கள் குறி வைக்கப்படுகிறார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலைமையும் வேறு வேறாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் மசூதிகள் இடிக்கப்படும் போது அவமானச்சின்னம் ஒழிந்தது என கொக்கரிக்கின்றனர். சி.ஏ.ஏ கலவரத்தை தூண்டி 52 பேரை கொன்றனர், 9 முஸ்லீம்களை கொடுரமாக கொன்று சாக்கடையில் வீசி கோரத் தாண்டவமாடுகின்றனர். மாணவர்களை ஊபா சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்திருக்கின்றனர். முதியவரைக் கூட கையால் அடித்துக் கொன்று இந்து மத வெறி பாசிச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர். முஸ்லீம்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் உழைத்து கட்டிய வீடுகளை புல்டோசர் மூலம் தரைமட்டமாக்குகின்றனர். சொந்த வீட்டில் கூட தொழுகை செய்ய முடியவில்லை. உழைத்து வாழும் முஸ்லீம் வியாபாரிகளை அப்புறப்படுத்துகின்றனர். இப்படி போலீசாரும், ஆளும் காவி பாசிஸ்டுகளும் கூட்டுச்சேர்ந்து கொண்டு முஸ்லீம்கள் மீது பாசிசத் தாக்குதல்களை தினந்தோறும் மும்முரமாகத் தொடுத்து வருகின்றனர்.
இதனால் வெறுப்பும் ஆத்திரமும் அடையும் முஸ்லீம் இளைஞர்கள் சிலர் பயங்கரவாத பாதைக்குத் தள்ளப்படுகிறார்கள். சட்டப்பூர்வமாகவோ, ஜனநாயக வழியிலோ இந்தியாவில் இனி முஸ்லீம்களுக்கு பாதுகாப்போ, வாழும் உரிமையோ கிடையாது என்கிற விரக்தியினால் ஏற்பட்ட விளைவே இந்த பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்.
ஆனால் காவி பாசிஸ்டுகள் இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு அடிப்படையான காரணத்தை மூடி மறைத்துவிட்டு, காஷ்மீரின் அமைதி நிலையை முஸ்லீம் தீவிரவாதிகள் குலைக்க சதி செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காவி பாசிஸ்டுகள் தமது பாசிச வெறியாட்டங்களை மூடி மறைத்து திசை திருப்பவும், இந்து வெறியோடு தேசிய வெறியையும் கிளறிவிட்டு ஆதாயமடையவும் பஹல்காம் தீவிரவாத செயலுக்கு பாகிஸ்தான் மீது பழிசுமத்தி அவதூறு செய்து வருகின்றனர். மருத்துவத்திற்காக இந்தியாவில் தங்கி இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த நோயாளிகளைக் கூட வெளியேற்றுகின்றனர். பஹல்காமின் தீவிரவாத கோர நிகழ்வைக் கூறி நாடு முழுவதும் அவர்கள் அரங்கேற்றி வரும் காவி பாசிச பயங்கரவாதத்தை மக்களிடமிருந்து மறைக்க விரும்புகின்றனர்.
காவி பாசிஸ்டுகள் காஷ்மீர் தொடங்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடுத்து வரும் பாசிசத் தாக்குதல்களுக்கும், பஹல்காம் சம்பவத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்று இப்பொழுது உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? அல்லது இரண்டும் வேறு வேறானவை என்று தான் கூறமுடியுமா? இந்த உண்மைகளையெல்லாம் மூடி மறைப்பதற்காகவே காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் தொடுக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானின் சதித் தாக்குதல் எனக் கூச்சலிடுகின்றனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கான சிந்துநதி நீரை தடுக்க வேண்டும் என தேசிய வெறியை கிளப்புகின்றனர்.
ஆட்சியில் அமர்ந்திருக்கும் காவி பாசிஸ்டுகளுக்கு பாகிஸ்தான் மீது பழி போட எந்த அருகதையும் கிடையாது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் காவி பாசிச பயங்கரவாதத்தின் எதிர்விளைவு. முஸ்லீம் மக்களின் வழிபாட்டு உரிமையையும் அவர்களின் வாழும் உரிமையையும் பறித்து நரவேட்டையாடும் காவி பாசிச பயங்கரவாதத்திற்கான எதிர்விளைவு என்று தான் புரிந்துகொள்ள முடியும். எனவே பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டிய முதன்மைக் குற்றவாளிகள் ஆளும் காவி பாசிஸ்டுகளான மோடி-அமித்ஷா கும்பல்தான்.
எனவே காவி கும்பல்களும், அவர்களது ஊடகங்களும் நடத்தும் இந்து மத வெறி பிரச்சாரத்திற்கும்; முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள்; பாகிஸ்தான் கைக்கூலிகள் என்ற இந்து மதவெறி பிரச்சாரத்திற்கும் இந்து மக்கள் பலியாகிவிடக்கூடாது. இவ்வாறு பலியாவது காவி பாசிஸ்டுகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தான் வழிவகுக்கும்.
அதேபோல முஸ்லீம் மக்களும், காவி பாசிசத் தாக்குதல்களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பயங்கரவாத சக்திகளிடம் தஞ்சம் அடைவது இந்து மக்களிடமிருந்து முஸ்லீம் மக்களைத் தனிமைப்படுத்தவே செய்யும். எனவே இதுவும் காவி பாசிஸ்டுகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கே உதவிசெய்யும்.
எனவே இந்து-முஸ்லீம் உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத சக்திகளையும், காவி பாசிஸ்டுகளின் சூழ்ச்சிகளையும், பாசிசத் தாக்குதல்களையும் எதிர்த்து முறியடிக்க வேண்டிய தருணம் இது. எனவே நாட்டில் தொற்றுநோய் போல் பரவி வரும் காவி பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிக்க இந்து-முஸ்லீம் உழைக்கும் மக்கள் அனைவரும் புரட்சிகர அமைப்பின் கீழ் அணிதிரள வேண்டும்.
- தாமிரபரணி