பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு இந்திய அரசுப் படைகள் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் உள்ள எட்டு வீடுகளை தீவிரவாதிகளுடையது எனக்கூறி வெடிபொருட்களை வைத்து இடித்துத் தரைமட்டமாக்கியது. இந்தியாவின் பிற மாநிலங்களில் நடத்தி வரும் புல்டோசர் இராஜ்ஜியத்தை காஷ்மீருக்குள்ளும் விரிவுபடுத்தியிருக்கின்றனர் காவி பாசிஸ்டுகள். பிற மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் புல்டோசர் இராஜ்ஜியத்திற்கும் காஷ்மீருக்கும் சில வேறுபாடுகள் இருக்கிறது. காஷ்மீரில் இருக்கும் வீடுகளை போலீசோ, நகராட்சி அலுவலர்களோ புல்டோசர் மூலம் இடிப்பதில்லை; மாறாக இந்திய இராணுவம், இராணுவ வெடிபொருட்கள் வைத்து வீடுகளை இடித்துத் தள்ளுகின்றன.
பஹல்காம் தாக்குதலின் பின்விளைவாக காஷ்மீரில் வசிக்கும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் அரசு பயங்கரவாதத்தையும், இதன் மூலம் அம்மக்கள் எவ்வாறு துயரப்படுகிறார்கள் என்பதையும் ஜூன் மாத கேரவன் இதழ் வெளியிட்டிருந்தது. அதிலிருந்து ஒரு பகுதியை இங்கு சுருக்கி வெளியிடுகிறோம்.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் உள்ள நரிகூட் கிராமத்தைச் சேர்ந்த ஃபரூக் தீத்வா என்பவர் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது காணாமல் போகிறார். 1990-களில் இஸ்லாமிய தீவிரவாதம் காஷ்மீரில் வளர்ந்து வந்த பொழுது நரிகூட்டைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பலர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இயங்கி வந்த இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளனர்.
குப்வாரா மாவட்டத்திலிருந்து மட்டும் கிட்டத்தட்ட நான்காயிரம் பேர் வெளியேறியதாக அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் கேரவன் நிருபரிடம் கூறியுள்ளார். இப்படிச் சேர்ந்த சிறுவர்களை தீவிரவாதக் குழுக்களின் பொருட்களை எல்லை தாண்டி எடுத்துச் செல்லவும், கடத்தல் மற்றும் கட்டாய உழைப்புக்கு பழக்கியதாகவும் அக்கிராமத்தை சேர்ந்த முதியவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் ஃபரூக் சிறுவயதில் காணாமல் போனதை பற்றி அவர்களது குடும்பத்தினருக்கு மர்மமாகவே இருந்தது. இதனால் ஃபரூக் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். கடந்த முப்பத்தைந்து வருடங்களாக ஃபரூக்கின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது தான் அவர்களுக்கு கூறப்பட்டு வந்த செய்தி.
ஃபரூக் காணாமல் போனபோது அவரது தம்பி யாகூப்பிற்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும். ஃபரூக்கின் இழப்பை சமாளித்து கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தது அக்குடும்பம். யாகூப்போ பள்ளிப் படிப்பை கூட முடிக்கவில்லை இருந்தும் இந்திய இராணுவத்தில் தினக்கூலிக்கு வேலைப் பார்த்து தனது குடும்பத்தை பராமரித்து வந்திருக்கிறார். யாகூப்பிற்கு திருமணமாகி ஜாகீர் உசேன் (22) நசீர் அகமது என்ற இரு மகன்களோடும், தாய் சுல்தான் பீபியோடும் வாழ்ந்து வருகிறார். ஜாகீருக்கும் திருமணமாகி தற்போது ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.
ஃபரூக் காணாமல் போய் பதினேழு வருடங்கள் கழித்தே 2007-ஆம் ஆண்டு வீடு ஒன்றை யாகூப்பால் கட்ட முடிந்தது. யாகூப் சிறுவனாக இருக்கும் போது குடிசை வீடுகளே அப்பகுதியில் இருந்தன. தற்போது தான் அப்பகுதியில் தகரத்தை கூரையாக கொண்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஜாகீரும் தன் ஊரில் இருக்கும் இந்திய இராணுவ கேம்பில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு இந்திய இராணுவம், துணை இராணுவம் மற்றும் உள்ளூர் போலீசு நரிகூட்டிற்கு மாலை ஆறு மணியளவில் வந்த போது அங்குள்ள இளைஞர்கள் இது வழக்கமான ஆய்வு தான் என நினைத்தனர். ஒவ்வொரு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்குப் பிறகும் அக்கிராமத்தில் வசிப்பவர்கள் யாராவது பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார்களா என சோதிக்க இந்திய அரசுப்படைகள் வருவார்கள். அதே போல இதுவும் ஒரு சோதனை தான் என்று நினைத்திருக்கின்றனர்.
ஆனால் இந்தமுறை இந்திய அரசுப்படைகளான 41-வது இராஷ்ட்ரிய ரைபிள் மற்றும் 162-வது சிஆர்பிஎப் நரிகூட் கிராமத்தை சுற்றி வளைத்து, அக்கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றினர். யாகூப்பின் வீட்டிற்குள் நுழைந்து வெடிபொருட்களை வைத்தனர். சில நிமிடங்களில் அக்கிராமம் முழுவதும் வெடிகுண்டு சத்தம் காதைப் பிளந்தது. வீட்டில் எதுவும் மிச்சமில்லை; உள்ளே இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து போயின. யாகூப் வீட்டினுள் வைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததால் அருகில் இருந்த வீடுகளின் ஜன்னல்களும் உடைந்து போயின.
இதில் யாகூப்பின் வீடு தரைமட்டமாயின. யாகூப் சிறுவயதாக இருக்கும் போது காணாமல் போன அவரது அண்ணன் ஃபரூக் தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் எனவும் அதனால் தான் யாகூப்பின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது எனவும் உள்ளூர் போலீசார் யாகூப்பிடம் தெரிவிக்கின்றனர். ஆனால் யாகூப்பிற்கோ ஃபரூக்கின் முகம் கூட தற்போது நினைவில் இல்லை.
யாகூப்பின் மகன் ஜாகீர், அங்கு வந்த இராணுவத்திடம், இந்த வீடு எனக்கும், என் பெற்றோருக்கு, என் இளைய சகோதரனுக்கு, என் ஒன்றரை வயது மகனுக்கு சொந்தமானது என தான் கூறியதை கேரவன் நிருபரிடம் நினைவுபடுத்தியிருக்கிறார்.
ஃபரூக் காணாமல் போய் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு கட்டப்பட்ட யாகூப்பின் வீடு தற்போது வெடிபொருட்கள் வைக்கப்பட்டு தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. போராளியாக மாற நினைப்பவர்கள் யாரும், குடும்பத்தினரின் அனுமதியைப் பெறுவதில்லை என்கிறார் ஜம்மு & காஷ்மீரின் முன்னாள் முதல்வரான மெகபூபா முப்தி.
இந்நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருந்த ஜாகீரின் சகோதரர் நசீர் அகமதின் திருமணத்திற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகளும், துணிமணிகளும் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது புதுமணத் தம்பதிகள் மணமகளின் பெற்றோர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாகூப்பின் குடும்பம் தற்போது கால்நடை கொட்டகைகளில் வசித்து வருகின்றனர். அக்குடும்பம் பிரதான் மந்திரி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 2.2 இலட்சம் கடன் வாங்கியிருக்கிறது. மேலும், ஜாகீர் மற்றும் நசீர் இருவரும் சேர்ந்து இராணுவத்தில் தினக்கூலியில் கடினப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் நகைகளையும், துணிமணிகளையும் வாங்கினார்கள். அவை மொத்தமும் எரிந்து நாசமாகி விட்டது என்கிறது அக்குடும்பம்.
சிறுவயதில் காணாமல் போன ஃபரூக்கை அவரது தாயார் சுல்தான் பீபியை தவிர யாருக்கும் ஞாபகம் இல்லை. பீபி எரிந்து போன மரக்கட்டைகள், வெந்து போன சாம்பல்கள் அருகே அமைதியாக தனது ஒன்றரை வயது கொள்ளுப் பேரன் ஜூஜான் ஜாகீரோடு உட்கார்ந்திருக்கிறார். அக்குழந்தை தனது பொம்மைகள் அனைத்தும் எரிந்து நாசமாகிவிட்டன என ஓயாமல் அழுது கொண்டே இருக்கிறது. அக்குழந்தையை சமாதானப்படுத்த பீபி முயற்சித்தும் பலனில்லை. பீபிக்கும் தற்போது ஃபரூக் எப்படி இருந்தார் என நினைவில் இல்லை. குழந்தை அழுது கொண்டே இருக்கிறது; அந்த அழுகை சத்தத்தின் ஊடே பீபி, ”அவர்கள் எங்களை கொடிய வறுமையில் தள்ளிவிட்டுள்ளனர்” எனக் கண்கலங்கி நிற்கிறார்.
- தாமிரபரணி