இந்து மதவெறி பயங்கரவாதத்தின் எதிர்விளைவாகவே இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் வளர்ந்தது

2003-ஆம் ஆண்டில் மும்பை மாநகரைச் சேர்ந்த சாதாரண இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த ஒரு தந்தையும், தாயும் அவர்களது பதின்ம வயது மகளும் குண்டுவைத்து 53 பேரைக் கொலை செய்த கொடுஞ்செயலைச் செய்தனர். கோத்ரா ரயில் விபத்திற்குப் பிறகு நடந்த குஜராத் கலவரத்தின் போது ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், இந்துமதவெறிக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்குவதற்காகவே குண்டுவைத்ததாக போலீஸ் விசாரணையில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மோடி அரசு இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் எனப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருப்பது தொடங்கி, ‘ஆபரேசன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் இயங்கி வந்த தீவிரவாத முகாம்களை குறிவைத்து அழிப்பது வரை இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளில் “இனி எதிர்காலத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை உணர்த்துவதற்காக” இந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக மோடி கூறியிருக்கிறார்.

இத்தகைய பதிலடிகள் மூலம் எதிர்காலத்தில் இந்தியாவிற்குள் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெறாத வகையில் மோடி தடுத்துவிட்டாரா? நிச்சயமாக அப்படித் தடுக்க முடியாது என்றுதான் கூற வேண்டும். இதற்கு முன்பும் மோடியின் ஆட்சிக் காலத்திலேயே நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு பதிலடியாக இதே பாணியில் மோடி அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

2016 பஞ்சாப் பதான்கோட் விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்த போது, கடும் நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் எனத் தீவிரவாதிகளை எச்சரித்ததுடன், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என்றார் மோடி. அதே ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஊரி பகுதியில் இருந்த இராணுவ தளத்தை தீவிரவாதிகள் தாக்கிய போது “சர்ஜிகல் ஸ்டிரைக்” நடத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்ததாக இந்திய அரசு அறிவித்தது. 2019-ல் புல்வாமா தாக்குதலில் துணை இராணுவப் படை வீரர்கள் கொல்லப்பட்ட போது, பாகிஸ்தானின் பாலகோட்டில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது.

தீவிரவாத தாக்குதல்களைத் தடுக்கிறோம் என்ற பெயரில் மோடி அரசு கடந்த காலங்களில் எடுத்த நடவடிக்கைகளால் பஹல்காமில் நடந்த தாக்குதலைத் தடுக்க முடியவில்லை. தற்போது அதே பாணியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தாது. ஏனென்றால், இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்கள், அவை உள்நாட்டிலுள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதல்களாகட்டும் வெளிநாட்டிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதல்களாகட்டும், அவற்றினை நியாயப்படுத்துவதற்கும், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கும், இஸ்லாமிய இளைஞர்களை தூண்டிவிடுவதற்கான காரணிகளைக் கண்டறிந்து களையாதவரை இது போன்ற தாக்குதல்களை நிறுத்த முடியாது.

இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, இந்திய அரசும், ஊடகங்களும் கூறிவருகின்ற காரணங்கள் சரியானவைதானா என்பதை முதலில் பார்த்து விடுவோம். தீவிரவாதிகள் தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக புனிதப் போர் புரிகின்றனர், இஸ்லாமிய இளைஞர்கள் தாங்கள் இறந்த பிறகு சொர்க்கத்திற்குச் செல்வதற்காக இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர், அல்லது திரைப்படங்களில் வருவது போன்று இந்தியாவைத் துக்கடா துக்கடாவாக கூறு போடவேண்டும் என்ற வெறியில் செயல்படுகின்றனர் என்றுதான் இந்திய ஆளும்வர்க்கம் இதுவரை கூறி வந்திருக்கிறது.

இப்படி கூறுவது, விசயத்தை மேம்போக்காக அணுகி, உண்மையான காரணத்தை விட்டுவிட்டு தங்களுக்குச் சாதகமான காரணத்தை உருவாக்கிக் கூறுவதுதான் ஆளும் வர்க்கத்தின் யுக்தி. உண்மையான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ள இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்கள் எப்போது ஏன் தொடங்கியது என்றும், அன்று முதல் இன்று வரை தாக்குதல்கள் நடைபெற அடிப்படைக் காரணம் என்ன என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

பம்பாய் கலவரமும் குண்டு வெடிப்புகளும்

இந்தியாவின் முதல் இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் என்பது 1993-ல் நடைபெற்ற பம்பாய் குண்டு வெடிப்பிலிருந்து தொடங்குகிறது. பம்பாயின் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் கூட்டத்தினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்தது 1992-93-ல் நடந்த பம்பாய் கலவரமாகும். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து; இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்களுக்கு எதிர்வினையாக சிவசேனா கட்சி இந்தக் கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தியது,

இதில் கொல்லப்பட்ட 900 பேரில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள். இந்தக் கலவரங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை[1] சிவசேனா கட்சியினர்தான் கலவரத்தைத் தூண்டிவிட்டனர் என கூறியது. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த பிறகு மராட்டிய மாநிலம் முழுவதும் வெற்றி யாத்திரை என்ற பெயரில் சிவசேனா கட்சியினர், இஸ்லாமியர் அதிகமாக வசிக்கும் பகுதிகள் வழியாக ஊர்வலங்கள் நடத்தி, அதில் இஸ்லாமிய வெறுப்புக் கோஷங்கள் எழுப்பியதும், அதற்கெதிராக இஸ்லாமியர்கள் முதலில் அமைதியான வழியில் எதிர்ப்பு தெரிவித்தபோது சிவசேனாவின் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த போலீசார், இஸ்லாமியர்களின் போராட்டத்தை கடுமையாக ஒடுக்கியதும்தான் கலவரம் தொடங்க காரணம் என அந்த அறிக்கை கூறியிருக்கிறது.

கலவரத்தை தொடங்கியது மட்டுமல்லாமல் அதற்கு பிறகு நடந்த தாக்குதல்கள் அனைத்தையும் சிவசேனா கட்சிதான் திட்டமிட்டு நடத்தியது என, ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை அம்பலப்படுத்தியது. ஆனால் கலவரத்தைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த சிவசேனா கட்சி முதலில் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் விசாரணையை தடைசெய்தது, பின்னர் அதற்கெதிராக கடுமையான எதிர்ப்புகள் வந்த போது பின்வாங்கினாலும், அறிக்கை வெளியான பிறகு அதனைத்  தூக்கி குப்பையில் போட்டது. சிவசேனாவைச் சேர்ந்த ஒருவர் கூட இந்த கலவரத்திற்காக சிறைசெல்லவில்லை. கலவரங்களைத் திட்டமிட்டு நடத்தியதாக பம்பாய் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சிவசேனா கட்சியின் முன்னாள் எம்.பி. மதுக்கர் சர்ப்போதார் சிறைக்குச் செல்லாமலேயே இறந்து போனார்.

கோவை – குண்டுவெடிப்புக்கு வித்திட்ட கலவரம்

இந்திய அளவில் பம்பாய் குண்டுவெடிப்புகள் தான் முதல் இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் என்றால், தமிழ்நாட்டு அளவில் கோவை குண்டுவெடிப்புகள் தான் அத்தகைய முதல் தாக்குதல். 1998-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 58 பேர் கொல்லப்பட்டனர். கோவையைச் சேர்ந்த அல்-உமா அமைப்பினர்தான் இந்த தாக்குதல்களை நடத்தினர். இந்துமதவெறிக் கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கோவை கலவரத்திற்குப் பதிலடியாகத்தான் இந்த குண்டுவெடிப்புகள் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்பட்டன.

1997 நவம்பர் 29-ம் தேதியன்று கோவையில் சில இஸ்லாமிய இளைஞர்களால், போக்குவரத்து போலீஸ்காரர் செல்வராஜ் கொல்லப்பட்டார். இதையடுத்து, கோவை மாநகர போலீசார் பணிக்குச் செல்லாமல் போராட்டம் நடத்தினார்கள். இந்தச் சூழலைப் பயன்படுத்தி  இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துமதவெறி அமைப்புகள் கலவரத்தில் இறங்கின. அவர்கள் இஸ்லாமியர்கள் மீதும் அவர்களது கடைகள் மீதும் குறிவைத்துத் தாக்குதல் தொடுத்தனர். இஸ்லாமியர்கள் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தும், இந்து வியாபாரிகள் சங்கம் என்று தனியாக ஒன்றை உருவாக்கி இஸ்லாமியர்களை பொருளாதார ரீதியில் ஒடுக்குவதற்கு தொடர்ந்து வேலை செய்துவந்த இந்து மதவெறி அமைப்புகள், இந்தச் சூழலைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களின் கடைகளிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்ல ஆரம்பித்தனர். எடுத்துச் செல்ல முடியாத பொருட்களைக் கடையோடு சேர்த்து தீயிட்டுக் கொழுத்தினார்கள்.

பம்பாய் கலவரத்தின் போது நடந்ததைப் போன்றே கோவையிலும் போலீசார் இஸ்லாமியர்களை ஒடுக்குவதிலேயே குறியாக இருந்தனர். இந்து மதவெறிக் கும்பலிடமிருந்து தங்களது கடைகளைப் பாதுகாப்பதற்காக சென்ற அப்பாவி இஸ்லாமியர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட போலீசார் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 10 இஸ்லாமிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்[2].

போலீசின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இஸ்லாமியர்களை, மருத்துவமனையில் செல்வராஜின் உடலை பார்க்க திரண்டிருந்த நூற்றுக்கணக்கான போலீசார் முன்பாகவே, இந்து மதவெறி கும்பல் குத்திக் கொலை செய்தது[3]. பதற்றத்தைத் தணிக்க கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த அப்போதைய கோவை திமுக எம்.எல்.ஏ. சிடி தண்டபானி மீது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையிலான கும்பல் கொலைவெறி தாக்குதல் தொடுத்தது.

இரண்டு நாட்கள் நடந்த இந்தக் கலவரத்தில் 18 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதுடன், அன்றைய மதிப்பில் சுமார் 500 கோடி ருபாய் அளவிற்கு இஸ்லாமியர்களின் பொருட்கள் இந்து மதவெறி கும்பலால் சூறையாடப்பட்டது. கோவை கலவர வழக்கில் இதுவரை இந்து மதவெறி கும்பலைச் சேர்ந்த யாரும் தண்டிக்கப்படவில்லை.

கலவரம் நடந்து சில மாதங்களுக்குள்ளாகவே அன்றைய பாஜக தலைவர் அத்வானி கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது, இந்தக் கலவரத்திற்கு பழிவாங்கும் விதமாக அல்-உமா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல இடங்களில் குண்டு வைத்தனர்.

சாதாரண இஸ்லாமிய குடும்பத்தை தீவிரவாதிகளாக மாற்றிய குஜராத் கலவரம்

2003-ஆம் ஆண்டு மும்பை மாநகரில் தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நடந்து கொண்டே இருந்தன. அதிலும் குறிப்பாக 2003-ஆம் ஆண்டு ஆகஸ்டு 25 அன்று நடைபெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பில் 53 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டது, பாகிஸ்தானில் பயிற்சியளிக்கப்பட்டு, மதத்திற்காக உயிரைக் கொடுக்க மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் அல்ல. மாறாக மும்பை மாநகரைச் சேர்ந்த சாதாரண இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த ஒரு தந்தையும், தாயும் அவர்களது பதின்ம வயது மகளும் குண்டுவைத்து 53 பேரைக் கொலை செய்த கொடுஞ்செயலைச் செய்தனர். கோத்ரா ரயில் விபத்திற்குப் பிறகு நடந்த குஜராத் கலவரத்தின் போது ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், இந்துமதவெறிக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்குவதற்காகவே குண்டுவைத்ததாக போலீஸ் விசாரணையில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இது குறித்து அன்றைக்கு சிறப்புக் கட்டுரை வெளியிட்ட இந்தியா டுடே பத்திரிக்கை, “இதனை அவர்கள் பணத்திற்காகவோ, தனிப்பட்ட விரோதத்திற்காகவோ செய்யவில்லை, குஜராத் கலவரங்களுக்குப் பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இதனைச் செய்ததாக அவர்கள் வாக்குமூலம் தந்திருக்கிறார்கள். ஒரு சாமானியர் தனது குடும்பம் முழுவதையும் இத்தகைய பயங்கரவாதச் செயலில் ஈடுபடுத்தத் துணியும் போக்கு பயபீதியூட்டுவதாக உள்ளது” என கூறியுள்ளது[4].

மும்பையைச் சேர்ந்த ஒரு சிறு வியாபாரியான சையது முகமது ஹனிஃப், அவரது மனைவி ஃபாமிதா மற்றும் அவர்களது மகள் என மூவரும் குடும்பமாக குண்டுவைப்புகளில் ஈடுபட்டுள்ளனர். குண்டு வைத்துவிட்டு அவர்கள் தலைமறைவாக ஓடவில்லை. போலீசார் வந்து கைது செய்யும் வரை மும்பையில் ஒரு குடிசைப்பகுதியில் தங்களது வீட்டில் வழக்கம் போல வாழ்ந்து வந்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக மும்பை புறநகர் ரயிலில் பெண்கள் பெட்டியில் குண்டுவைத்துவிட்டு வந்த ஃபாமிதா எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி சாதாரண பெண்ணைப் போல காய்கறி வாங்கிக் கொண்டு வந்து சமையல் செய்து கொண்டிருந்திருக்கிறார்.

குண்டுவெடிப்புகளில் அப்பாவிகள் கொல்லப்பட்டிருப்பது பற்றிக் கேட்ட போது “குஜராத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட அப்பாவி கர்பிணிப் பெண்களுடன் ஒப்பிட்டால் இது ஒன்றுமில்லை” என்று ஃபாமிதா கூறியிருக்கிறார்.

இந்துமதவெறிக் கும்பலின் பயங்கரவாத தாக்குதல்கள் பொதுவாக இஸ்லாமியர்கள் மத்தியில் பயபீதியை உருவாக்குகிறது என்பது உண்மையென்றாலும், அது சில முஸ்லீம்கள் மத்தியில் எதிர்த்தாக்குதல் மனநிலையை உருவாக்கும் என்பதற்கு ஹனிஃபும் அவரது குடும்பமுமே சாட்சி.

இந்து மதவெறி பாசிச பயங்கரவாதம் அதற்கு எதிரான முஸ்லீம் எதிர் பயங்கரவாதம் என்ற விஷச் சுழல்

மேலே கூறப்பட்ட சம்பவங்கள் என்பது ஒரு சோற்று பதம்தான். 1980-களின் இறுதியில் அத்வானி நடத்திய இரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, பம்பாய் கலவரம், கோவைக் கலவரம், 2002 குஜராத் கலவரம் என கடந்த காலங்களில் ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு காவி பயங்கரவாத தாக்குதல் என்ற நிலை மாறி கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் நடைபெறாத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தினந்தோரும் தங்களது பாசிச பயங்கரவாதத்தை காவிக் கும்பல் அரங்கேற்றி வருகிறது.

இஸ்லாமியர்களின் பொருளாதாரத்தை, வாழ்வாதாரத்தை அழிப்பது, வீடுகளை இடிப்பது, மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என ஒரு சிலரது உயிரைப் பறிப்பது என்பதோடு அவர்கள் நிற்பதில்லை. இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் கூடத் தொழுகை நடத்தக் கூடாது, தங்களது மதப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது, இந்து மதப் பண்டிகைகளின் போது வெளியே வரக் கூடாது என அவர்களது சாதாரண மதநம்பிக்கையைக் கூட பின்பற்ற விடாமல் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் மீதும் ஒடுக்குமுறையை ஏவி அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக, உள்நாட்டு அகதிகளாக மாற்றுவதை காவி பாசிசக் கும்பல் செய்து வருகிறது.

காவி பாசிஸ்டுகள் தொடுக்கும் இந்தத் தாக்குதல்களை ஜனநாயாக முறையில் எதிர்கொள்ளவே பெரும்பாலான இஸ்லாமியர்கள் விரும்புகின்றனர். நாடு முழுவதும் முஸ்லீம்கள் ஒருங்கிணைந்து நடத்திய சிஏஏ எதிர்ப்புப் போராட்டமே அதற்குச் சாட்சி. ஆனால் இந்துமதவெறி பயங்கரவாதிகளின் தாகுதல்கள் முஸ்லீம்களில் ஒரு சிறுபிரிவினரை பயங்கரவாதத்தை நோக்கித் தள்ளுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த இஸ்லாமிய எதிர் பயங்கரவாதத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு காவி பாசிசக் கும்பல், இஸ்லாமியர்களுக்கு எதிரான அடுத்த சுற்றுத் தாக்குதல்களை விரைவுபடுத்துகின்றன. பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் போன்று தமக்கு கிடைத்த வாய்ப்பாக இதனை காவிக் கும்பல் பயன்படுத்திக் கொள்கிறது. அது மட்டுமன்றி தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் எல்லா போராட்டங்களையும் ஒடுக்கும் வேலையில் பாசிஸ்டுகள் இறங்கியிருக்கிறார்கள். இந்து மதவெறி பாசிச பயங்கரவாதம் அதற்கு எதிரான முஸ்லீம் எதிர் பயங்கரவாதம் என்ற விஷச் சுழற்சியில் நாட்டைச் சிக்கவைத்திருக்கிறார்கள்.

இந்த விஷச் சுழலில் இருந்து விடுபட வேண்டுமென்றால், நம் நாட்டைக் கவ்வியிருக்கின்ற காவி கார்ப்பரேட் பாசிசம் என்ற பேரிருளைக் கிழித்தெறிய வேண்டியிருக்கிறது. நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்திற்குள் தள்ளியிருக்கின்ற காவிக் கும்பலை வீழ்த்த வேண்டியது அவசியமாயிருக்கிறது.

கண்காணிப்பை பலப்படுத்தி, சோதனைகளை அதிகப்படுத்தி, தண்டனைகளைக் கடுமையாக்குவதன் மூலம் இஸ்லாமிய எதிர் பயங்கரவாதத்தை தடுத்துவிட முடியாது. எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும் என்பது போல காவி பயங்கரவாத தாக்குதல்கள் எனும் கொள்ளியை முதலில் பிடுங்கி எறிய வேண்டும்.

  • அறிவு

[1] Sri Krishna Committee Report 

[2] https://frontline.thehindu.com/cover-story/behind-the-coimbatore-tragedy/article64758046.ece

[3] https://frontline.thehindu.com/politics/article30160583.ece

[4] https://www.indiatoday.in/magazine/cover-story/story/20030908-who-planned-2003-mumbai-blasts-their-motives-and-the-new-face-of-terror-792659-2003-09-07

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன