ஈழத்தமிழர் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புடையவர் என்கிற காரணத்தால், கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, 2018-ம் ஆண்டு 10 வருடம் சிறைத் தண்டனையும் பெற்றார். இதற்கிடையில் அவருடைய தண்டனைக் காலம் 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. மேலும் தண்டனைக் காலம் முடிவடைந்தவுடன் இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
இதை எதிர்த்த மேல்முறையீட்டில் ‘3 ஆண்டுகள் அகதிகள் முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டேன். என்னுடைய மனைவியும், பிள்ளைகளும் இங்கேயே தங்கியுள்ளனர். தாய் நாடான இலங்கையில் நிலைமை மோசமாக உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, எனது தண்டனையை இரத்து செய்வதோடு, எங்களை இங்கேயே தங்கியிருக்க அனுமதிக்குமாறு’ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகளான தீபாங்கர் தத்தா, வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, ‘இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் அல்ல, உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் இங்கு வந்து தங்குகின்றனர். அனைவரும் இங்குவந்து தங்குவதற்கு இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது’ என திருவாய் மலர்ந்துள்ளனர்.
அரசு எந்திரம் என்பது நிர்வாகம், நீதி, போலீஸ் மற்றும் இராணுவம் என நான்கு துறைகளை உள்ளடக்கியது. இதற்கான கடமைகள், உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் வரையறுக்கபட்டுள்ளன. இந்த வகையில் அகதிகள் தங்குவது, வெளியேறுவது குறித்து நிர்வாகத் துறையே முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவை.
இவை குறித்து நீதித்துறை ஏதும் அறியாததும் அல்ல, பாதிக்கப்பட்ட நபர் இங்கே தங்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்தால், அவற்றை சம்மந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்வதே சரியான அணுகுமுறை. அதை விடுத்து வந்தவன், போனவன் எல்லாம் இங்குவந்து தங்குவதற்கும், போவதற்கும் இது ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது என கூறுவது வாய்கொழுப்பு இல்லாமல் வேறென்ன?
நீதித்துறை என்பது ஜனநாயகப் பூர்வமான அமைப்பு என்று அனைவரும் நம்புகின்றனர். அதனடிப்படையில்தான் தங்களது கோரிக்கையை சுதந்திரமாக முன் வைக்கின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் கடைசிப் புகலிடமாக கருதுவதும் நீதிமன்றமே. இவற்றை நீதிபதிகள் உளப்பூர்வமாக உணர்ந்து பாதிக்கப்பட்டவர், முன்வைத்த கோரிக்கைகளை கரிசனையோடு பரிசீலித்து தகுந்த ஆலோசனைகளைக் கொடுத்திருக்க வேண்டும்.
மாறாக, இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது என்று கூறுவது ஆணவம் நிறைந்த திமிர்த்தனமே என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு அடிப்படை நீதிபதிகள் தங்கள் இருக்கைகள் அரசர்களின் அரியாசனத்திற்கு ஒப்பானது என்கிற வானளாவிய அதிகார மமதையே. நீதிபதிகள் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளையும் தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்களுக்கு வழங்கும் போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமே இவர்களின் ஆணவம் கலந்த அதிகாரத் திமிரை அடக்கமுடியும்.
- மோகன்