பொள்ளாச்சி வழக்கு: நீதிமன்றங்களால் மட்டுமே பாலியல் குற்றங்களைத் தடுத்திட முடியமா?

குடும்பத்திலோ, பணிபுரியும் இடத்திலோ அல்லது கல்லூரிகளுக்குள்ளோ பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆணாதிக்க வக்கிர புத்தியும், அதற்கு அடிப்படையாக சனாதனக் கருத்தியலும், அதிகார வர்க்க கட்டமைப்பும் தான் காரணமாக இருக்கிறது. இதனை மாற்றாமல், இது போன்ற குற்றங்களை நீதிமன்றங்களைக் கொண்டு மட்டுமே தடுத்திட முடியாது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இந்த ஒன்பது பேருக்கும் அபராதத்துடன், சாகும் வரை ஆயுள் தண்டனையும் வழங்கியுள்ளது.

இத்தீர்ப்பினை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இவ்வழக்கு விசாரணையை நேர்மையாக நடத்த திமுக அரசாங்கம் உதவியது, அதனாலேயே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இது திமுகவிற்கு கிடைத்த வெற்றி என்கின்றனர் ஆளும் திமுகவினர். முதல்வர் ஸ்டாலினோ, இவ்வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எடப்பாடி வெட்கித்தலை குனிய வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

“அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி” என்று திமுகவை விமர்சித்துள்ள எடப்பாடி, எங்கள் ஆட்சியில் தான் இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதனாலேயே இத்தீர்ப்பு கிடைத்திருக்கிறது என்கிறார்.

பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்திருப்பதற்கு தாங்கள் தான் காரணம் என்று இரு கட்சிகளும் தொலைக்காட்சி விவாதங்களில் போடும் குழாயடிச் சண்டை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

2019 பிப்ரவரியில், ஒரு கும்பல் தன்னைப் பலவந்தம் செய்ததாகவும் கூடவே தன்னுடைய நகையைப் பறித்துக் கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். அடுத்த இரு வாரங்களுக்குள்ளாகவே இதே போல ஒரு புகாரை மற்றொரு பெண்ணும் கொடுக்கிறார். இவ்வழக்கில் சபரி ராஜன், வசந்தகுமார், சதீஷ், திருநாவுக்கரசு உள்ளிட்ட நான்கு பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட திறன் பேசியில், இக்கும்பல் பெண்களை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த நூற்றுக்கணக்கான வீடியோக்கள் கைப்பற்றப்படுகிறது.

கசிந்த ஒரு காணொலியில் “அண்ணா வலிக்குதுண்ணா… தாங்க முடியலண்ணா… பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா…” என்று கெஞ்சிய ஒரு பெண்ணின் அழுகுரல் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. 2016-ல் இருந்தே இந்தக் குற்ற கும்பல் பொள்ளாச்சியை சுற்றியுள்ள 100 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அதனை வீடியோ எடுத்து, மிரட்டிப் பணம் பறிப்பது மற்றும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதை பல வருடங்களாக செய்து வந்திருப்பது அம்பலமானது.

இவ்வழக்கில் அதிமுகவின் முன்னாள் மாவட்ட மாணவரணி நிர்வாகி அருள் ஆனந்தம் மற்றும் சிறுபான்மையினர் அணி முன்னாள் நிர்வாகி ஹேரோன் பால் இருவருமே குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. மேலும் அப்பகுதி அதிமுக நிர்வாகிகள் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அதிமுகவின் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் இரு மகன்களும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் நக்கீரன் பத்திரிக்கை கூறுகிறது.

இவ்வழக்கை எப்படியாவது நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்று அப்போதைய எடப்பாடி அரசும் போலீசும் முயற்சித்தது அப்போதே அம்பலமானது. ஆனால் ஜனநாயக மற்றும் புரட்சிகர அமைப்புகள், மாணவர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டத்திற்கு பிறகு இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பலர் அப்பகுதியில் பைனான்ஸ், டாஸ்மாக் பார், கடைகள் போன்ற தொழில்களை செய்து வந்தவர்கள், கூடவே அதிமுகவில் பொறுப்புகளில் இருந்தவர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களோடு நெருக்கமாகயும் இருந்துள்ளனர். கட்சி செல்வாக்கு மற்றும் போலீசின் ஆதரவுடன் இக்குற்றக் கும்பல் மூன்று வருடங்களாக இக்கொடூரச் செயலை செய்து வந்திருப்பதாக நக்கீரன் கூறுகிறது.

பொள்ளாச்சி வழக்கிற்கு எதிராக அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை முன் வைக்கிறது அதிமுக. இளங்கலை பொறியியல் படிக்கும் ஒரு மாணவி கல்லூரிக்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக ஆதரவாளர்  என்றும் ஞானசேகரன் மீது நடவடிக்கை எடுப்பதை திமுகவினர் தடுத்ததாகவும் பத்திரிகைகள் அம்பலப்படுத்தியது. “அதிமுக-வைப் போல குற்றவாளியை காப்பாற்ற நாங்கள் முயற்சிக்கவில்லை, உடனே கைது செய்தோம்” என்று திமுக வாதாடுகிறது. இதெல்லாம் தொலைகாட்சி விவாதங்களுக்கு பயன்படலாம். ஆனால் களத்தில் இதுபோன்ற குற்றவாளிகளின் புகலிடமாக கட்சிகள் உள்ளன எனபதே எதார்த்தம்.

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு வரவேற்கதக்கது தான் என்றாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை சட்டமும், நீதிமன்றங்களும், ஓட்டுக் கட்சிகளும் தடுத்துவிடுமா? இல்லை என்பதே நமது அனுபவம்.

தாழ்த்தப்பட்ட பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலாகட்டும் அல்லது வேலை செய்யும் இடங்களில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களாகட்டும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யவே கடுமையான போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. பாதிப்புக்குள்ளாகும் வீட்டிலுள்ள பெண்களிலிருந்து பெண் நீதிபதி வரைக்கும் இதுதான் நிலைமை.

இரண்டு வருடங்களுக்கு முன்பு உத்திர பிரதேச மாவட்ட பெண் நீதிபதி “நான் நீதிபதியாக இருக்கும் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் ஒருவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளேன் அவருடன் பணியாற்றும் சகாக்களாலும் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளேன். எனவே எனது உயிரை மாய்த்துக் கொள்ள அனுமதி வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் வெளிவந்தது. பெண் நீதிபதிக்கே இதுதான் நிலைமை என்றால் சாதாரணப் பெண்களின் நிலைமையை என்னவென்பது. 

குடும்பத்திலோ, பணிபுரியும் இடத்திலோ அல்லது கல்லூரிகளுக்குள்ளோ பெண்கள் மீது நடத்தப்படும் இந்த பாலியல் துன்புறுத்துகளுக்கு காரணமாக இருப்பது ஆணாதிக்க வக்கிர புத்தியும் அதற்கு அடிப்படையாக சனாதனக் கருத்தியலும், அதிகார வர்க்க கட்டமைப்பும் தான் காரணமாக இருக்கிறது. இதனை மாற்றாமல் இது போன்ற குற்றங்களை இல்லாமல் செய்ய முடியாது.

  • செல்வம்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன