அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பாக 13-05-2025 அன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில், “தமிழகத்தில் 2,500-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியிடம் காலியாக உள்ளது. எனவே, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்” என வாதிடப்பட்டது. நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு “ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களை தவிர்த்துவிட்டு, ஆகம விதிக்கு உட்படாத கோயில்களில் மட்டுமே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும். அடுத்த 3 மாதங்களுக்குள் தமிழகத்தில் ஆகம விதிக்கு உட்படாத கோயில்களை தமிழக அரசு அடையாளம் காண வேண்டும்’’ என உத்தரவிட்டது. அதாவது தகுதி வாய்ந்த மாணவர்களை, பிறப்பின் காரணமாக, அர்ச்சகராவதற்குத் தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றத்தின் மூலம் வெளியேற்றும் வேலையை இத்தீர்ப்பு செய்துவிட்டது. சுருக்கமாக, ஆகமத்தின் பெயரில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இதற்கு முன்பு 2015-ல் உச்ச நீதிமன்றமானது ஆகமவிதிப்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள கோயில்களில் ஆகமவிதிப்படித் தான் நியமனம் நடைபெற வேண்டும் என தீர்ப்பளித்தது. அதன்பின் 14-08-2021 அன்று 28 பேருக்கு அர்ச்சகர் பணி நியமனம் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2022-ல் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணை 2006-ல் (அனைத்து சாதியினர் அர்ச்சகர்) செல்லும் என்றும், ஆகம விதிகள் படி இயங்கும் கோயில்களில், அந்தந்த ஆகம விதிப்படி அரச்சகர்களை நியமிக்கலாம் எனவும் அதே தீர்ப்பை அளித்தது.
“பார்ப்பனரல்லாதவர்கள் சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்று எந்த மரபு அல்லது பழக்கம் கூறினாலும் அது ஒரு தீண்டாமைக் குற்றம் என்று சட்டப்பிரிவு 17-ஐக் குறிப்பிட்டு 2015-ல் எமது மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக வாதிடப்பட்டது. அப்போது இது தீண்டாமை குற்றம் அல்ல என்பதற்கு உச்ச நீதிமன்றம் ஒரு விசித்திரமான விளக்கத்தைத் தனது தீர்ப்பில் “ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மட்டும்தான் பூசை செய்யவேண்டும் என்றும் அவ்வாறு இல்லையேல் சிலை தீட்டுப்பட்டு விடும் என்றும் கூறுவது தீண்டாமைக் குற்றமாகாது. குறிப்பிட்ட பிரிவினர் வரக்கூடாது என்று குறிப்பாகச் சொல்லாத வரைக்கும் அதனைத் தீண்டாமைக் குற்றமாக கருத இயலாது” என்று கூறியது. மத உரிமை அல்லது மத நிறுவனங்களின் உரிமை என்பது, ஒரு குடிமகனின் சமத்துவ உரிமையின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக ஒரு போதும் இருக்கக்கூடாது. ஆனால், சமூக ரீதியாக தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் தீண்டாமையை, மதரீதியில் பார்ப்பனியத்தின் மத உரிமையாக அரசியல் சட்டத்தின் பிரிவு 25 அங்கீகரிக்கிறது. பொதுவாக அனைவரும் சமம், பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என சொன்னாலும், தீண்டாமை ஒரு தண்டனைக்குரிய குற்றம் என்று அரசியல் சட்டம் அதை உறுதிபடுத்தினாலும், மீண்டும் மீண்டும் ஆகமம், மரபு, பழக்க-வழக்கம், வகையறா கோயில்கள் என்ற பெயரில் பார்ப்பனியத்தை காப்பதாகவே இவ்வகையான தீர்ப்புகள் இருக்கிறது.
அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்பது வெறும் வேலை வாய்ப்பு பற்றிய பிரச்சனை மட்டுமல்ல! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சமத்துவம், சமவாய்ப்பு, சமூக நீதி, சுயமரியாதை ஆகிய உரிமைகள் தொடர்பானது; குறிப்பாக கருவறைத் தீண்டாமையை ஒழிப்பதற்கானது. கருவறை தீண்டாமையை ஒழிப்பதற்காகத்தான் எமது அமைப்பு ஸ்ரீரங்கம் கோயிலில் கருவறை நுழைவுப்போராட்டம் நடத்தியது. மொழித்தீண்டாமைக்கெதிராக சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் பாடும் போராட்டம் நடத்தியது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை கொண்டு அர்ச்சகர் வழக்கை உச்ச நீதிமன்றம் வரை எடுத்து சென்று வழக்காடியது. நிதிமன்றங்களில் மட்டுமல்லாமல் மக்கள் மன்றங்களிலும் புரட்சிகர ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராடும் போதுதான் கருவறை தீண்டாமையை ஒழிக்க முடியும்.
- சுரேஷ்