பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய எம்பிக்கள் குழு!
பாசிச எதிர்ப்பில் இந்தியா கூட்டணியின் இரட்டை வேடம்!

 
புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி
24-05-2025
 
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் ஆபரேசன் சிந்தூர் நடத்தியும் கண்டறியப்படவில்லை. தேசவெறி, போர்வெறி கூச்சல் ஓய்ந்தபாடில்லை. இந்த வெறியூட்டலில் இந்துமதவெறியார்களால் அப்பாவி இஸ்லாமியர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இந்திய அரசால் 2000 ற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன.
இந்நிலையில் கம்யூனிஸ்டுகள், திமுகவினர், காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் அடங்கிய இந்திய எம்பிக்கள் குழுக்கள் பயங்கரவாதம் குறித்த இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு விளக்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய நிலைப்பாடாக உலகு முழுவதும் சுற்றி இந்த எம்பிக்கள் குழு எதை விளக்கும்? இந்தியா பாதுகாப்பு குறைபாட்டுடன் இருக்கிறது அதுதான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு காரணம் என்று பேசுவார்களா? அல்லது பிஜேபி குரலில் தேச வெறியை கக்குவார்களா? போர் முடிந்த பிறகும் பயங்கரவாத பிரச்சினைக்கு என்ன காரணம் என்று பாராளுமன்றத்தில் கூட பேசாத இவர்கள் எதை போய் விளக்க போகிறார்கள்? இது பிஜேபியின் போர் வெறி, தேசிய வெறி கூச்சல்போட்டு பிஜேபியின் நடவடிக்கைக்கு ஒத்தூதுவதைத்தாண்டி வெறொன்றும் இல்லை..
பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு அனுதினமும் இசுலாமிய மக்கள் மீது அறிவிக்கப்படாத ஒரு போராக தாக்குதல் நடந்துவருவதும் பல்வேறு பாசிச சட்டங்கள் கொண்டுவரப்படுவதும் எதிர்கட்சிகளுக்கு தெரியாதவை அல்ல. இதன் எதிர்விளைவுதான் இஸ்லாமிய பயங்கரவாதம் தோன்றுவதற்கான அடிப்படை. இசுலாமிய பயங்கரவாத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அது ஒழிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதற்கு அடிப்படையாக இருக்கும் இந்துத்துவ பயங்கரவாதத்தை இங்கு கண்டிக்க யாரும் இல்லை. நீதிமன்றம் உள்ளிட்டு அரசின் அனைத்து உறுப்புகளும் இஸ்லாமியர்களை கைவிட்டுவிட்டது. ஆக, ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்று அறியாதவர்களா, இந்த எதிர்கட்சிகள்? ஏன் உண்மையை பேச மறுக்கிறார்கள்?
1992 பாபர் மசூதி இடிப்புத்தான் கோவை குண்டுவெடிப்புக்கு காரணம் என்று பேசினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. ஆனால் இன்றைக்கோ இசுலாமியர்களுக்கு எதிராக நடத்திவரும் தாக்குதல் பன்மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில், இதன் எதிரவினையாகத்தான் இசுலாமிய பயங்கரவாதம் நடக்கிறது என்று ஏன் எதிர்கட்சிகள் பேச மறுக்கிறார்கள்?. நோய்நாடி நோய் முதல்நாடி என்று ஏன் பார்க்க மறுக்கிறார்கள், இந்த ’பகுத்தறிவுவாதிகள்’? இயங்கியல் பார்வை கொண்டு ஏன் பார்க்க மறுக்கிறார்கள் இந்த ’கம்யூனிஸ்டுகள்’, ’மார்க்சிஸ்டுகள்’.?
மாற்று பொருளாதார கொள்கை இன்றி கார்ப்பரேட்டுகள் நம்மை கொள்ளையடிக்க அனுமதிக்கும் இந்தியா கூட்டணி கட்சியினர், நாட்டையே பயங்கரவாத பேரபாயத்திற்கு தள்ளி அனுதினமும் நம்மை அச்சத்தில் உறையவைத்திருக்கும் காவி பாசிசத்தை ஒழிக்க எந்த மாற்று திட்டமும் இல்லாமல் அம்மணமாக நிற்கிறார்கள்,
ஆக, முதலில் இந்துமதவெறி பயங்கரவாதத்தை நாட்டில் ஒழித்தால்தான் இசுலாமிய பயங்கரவாதத்தை ஒழிக்கமுடியும். இந்த கண்ணோட்டத்தில் புரட்சிகர ஜனநாயக சக்திகள், மக்கள் ஓரணியில் திரள்வோம். பயங்கரவாதத்தை வேரறுப்போம். பயங்கரவாதத்திற்கு அடிப்படையாக இருக்கும் எல்லா மதவெறி, தேசவெறி, சாதிவெறி அமைப்புகளையும் தடைசெய்ய போராடுவோம்! உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைவோம்!
 
இப்படிக்கு
இரா. முத்துக்குமார்,
மாநில பொதுச்செயலாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
97901 38614

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன