பஹல்காம் சம்பவத்தைக் காரணம் காட்டி முஸ்லீம்களைக் குறிவைத்து தாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல்

மோடி அரசாங்கத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளால் தான் பஹல்காம் தாக்குதல் நடந்தது என்கிறார் எதிர்கட்சித் தலைவர். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்நிறுத்தத்திற்கு நான் தான் காரணம் என்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் காற்றில் பறக்க விட்டு, பஹல்காம் போன்ற தீவிரவாத தாக்குதல் நடக்கக் காரணமான ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல்கள் அப்பாவி முஸ்லீம்களைக் காரணம் காட்டி கலவரம் செய்கிறது.

இந்திய இஸ்லாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்குவதை தனது அரசியல் திட்டமாக கொண்டு செயல்படும் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல், ஒவ்வொரு சமூக பிரச்சனைகளுக்கும் முஸ்லீம்கள் தான் காரணம் என்று பிரச்சாரம் செய்வதுடன், தனது குண்டர் படையைக் கொண்டு அவர்கள் மீது தாக்குதலையும் ஏவி விடுகிறது. ஏப்ரல் 22 முதல் மே 8 வரை முஸ்லீம்கள் மீது 184 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக குடிமை உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு (APCR) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மொத்தம் 84 வெறுப்புப் பேச்சுக்கள், 39 தாக்குதல்கள், 19 இடிப்புகள் மற்றும் 3 கொலைகள் நடந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. குறிப்பாக பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் பல இடங்களில் இந்துத்துவக் காலிகளால் அரங்கேற்றப்பட்டுள்ளது.  

உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில், பஹல்காம் வன்முறைக்குப் பழிவாங்கும் விதமாக, சத்ரிய கோ ரக்‌ஷா தள் குண்டர்கள் முஸ்லிம் ஒருவரைக் கொன்றதாகவும் கூடவே அவரது உறவினரைக் காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. கர்நாடகாவின் மங்களூரில் “பாகிஸ்தான் வாழ்க” என்று முழக்கமிட்டதாகக் கூறி முஸ்லிம் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளது. ஜார்க்கண்டின் பொகாரோவில் இந்து கும்பலால் ஒரு முஸ்லிம் நபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

இதில் அதிகமான தாக்குதல் சம்பவங்கள் ஆதித்யநாத் ஆளும் உத்தரபிரதேசத்தில் (43) நடந்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, உத்தராகண்டம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நடந்துள்ளன. இம்மாநிலங்கள் அனைத்துமே பாஜக வினால் ஆட்சி செய்யப்படும் மாநிலங்கள் ஆகும்.

உத்தரபிரதேசத்தின் அலிகரில், 15 வயது முஸ்லிம் சிறுவனை பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒரு கும்பல் தாக்கியுள்ளது. அச்சிறுவனை பாகிஸ்தான் கொடியில் சிறுநீர் கழிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

ஏப்ரல் 26 அன்று போபாலில் நடந்த மற்றொரு சம்பவத்தில், இரயில்வே தலைமை கான்ஸ்டபில் நஸார் தௌலத் கான் குடிபோதையில் இருந்த இந்து இளைஞர்களால் தாக்கப்பட்டுள்ளார். முதல்கட்டத் தகவல் அறிக்கைகளின்படி, நஸார் இரவு 2 மணி இரவு ரோந்தில் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்ட காரின் உள்ளே மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்களைக் வெளியேறச் சொல்லியிருக்கிறார். குடிகாரர்கள் கான்ஸ்டபில் முஸ்லீம் எனத் தெரிந்த பிறகு அவரது மத அடையாளத்தை சொல்லி தாக்கியிருக்கின்றனர். குடிபோதையிலும் இஸ்லாமிய வெறுப்பு தான் மேலோங்கியிருக்கிறது.

மும்பையில் முஸ்லிம் வியாபாரிகளை பாஜக குண்டர்கள் தாக்கியுள்ளனர். மகாராஷ்டிராவின் சாண்டாகுரூஸில் ஹாக்கி குச்சி மற்றும் வாள்களுடன் ஆயுதம் ஏந்திய பஜ்ரங் தள் குண்டர்கள்  முஸ்லிம் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களைத் தாக்கியதாகவும், ஒரு கட்டத்தில் தனது குழந்தையோடு சென்ற ஒரு முஸ்லிம் பெண்ணை “ஜெய் ஸ்ரீ ராம்” என்று சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தியதோடு, பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

சண்டிகர், உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் மீது தங்கள் விடுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. டேராடூனில், இந்து ரக்க்ஷா தளம் மற்றும் பிற வலதுசாரி குழுக்கள் சேர்ந்து அப்பகுதியிலுள்ள கல்லூரிகளில் படிக்கும் காஷ்மீர் முஸ்லிம் மாணவர்களை வெளியேற்றும்படி கல்லூரி நிர்வாகத்தை மிரட்டியுள்ளனர்.

பஹல்காம் தாக்குதலை காரணம் காட்டி காஷ்மீர் முஸ்லிம் வியாபாரிகள் தாக்கப்படும் பல சம்பவங்களின் காணொலிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. மசூரியில் நடந்த ஒரு சம்பவத்தில், இரண்டு காஷ்மீர் சால்வை வியாபாரிகள் பஜ்ரங் தள் குண்டர்களால் தாக்கப்பட்டனர். மசூரியில் நடந்த மற்றொரு சம்பவத்தில், சால்வை விற்பனை செய்யும் காஷ்மீர் வியாபாரிகள், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை விட்டுவிட்டு, ஒரே இரவில் இடத்தை காலி செய்யுமாறு மிரட்டப்பட்டிருக்கின்றனர்.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான மற்றும் அவர்களால் நிர்வகிக்கப்படும் சொத்துக்கள் மீதான தாக்குதல் வன்முறைகளும் பல பகுதிகளில் நடந்துள்ளன. இதில் மதரஸாக்கள், முஸ்லிகளின் கடைகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. ராஜஸ்தானின் பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா தான் கலந்து கொண்ட ஊர்வலத்தின் போது அவ்வழியில் இருந்த ஒரு மசூதியை சேதப்படுத்தியிருக்கிறார். உத்தராகண்ட் மாநிலத்தில் மற்றொரு மசூதி இந்துத்துவ காலிகளால் தாக்கப்பட்டிருக்கிறது.

“பஹல்காம் போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தனியான திடீர் நிகழ்வுகளல்ல. நாடு முழுவதும் இசுலாமியர் மீது நிகழ்த்தப்படும் இந்து மதவெறியாட்டத்தின் எதிர்விளைவுகளே! ஆர்,எஸ்.எஸ். – பா.ஜ.க. தலைமையிலான காவி பாசிச பயங்கரவாதம்தான் இந்தியாவில் இசுலாமிய பயங்கரவாதம் வளர்வதற்கான அடிப்படையாகும்.” மோடி அரசாங்கத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளால் தான் இத்தாக்குதல் நடந்தது என்கிறார் எதிர்கட்சித் தலைவர். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்நிறுத்தத்திற்கு நான் தான் காரணம் என்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் காற்றில் பறக்க விட்டு, பஹல்காம் போன்ற தீவிரவாத தாக்குதல் நடக்க காரணமாக இருக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் அப்பாவி முஸ்லீம்களைக் காரணம் காட்டி கலவரம் செய்கிறது.

  • செல்வம்    

https://maktoobmedia.com/india/civil-rights-group-documents-184-anti-muslim-hate-crimes-in-wake-of-pahalgam-attack/

https://thewire.in/communalism/apcr-report-muslims-targeted-after-pahalgam

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன