இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. வழக்கம் போல தேர்வெழுத வந்த மாணவர்கள் மீது சோதனை என்ற பெயரில் இழிவான தாக்குதல்கள் தொடர்ந்திருக்கின்றன. இந்த ஆண்டு, ஒரு மாணவியின் சட்டையில் அதிக பொத்தான்கள் இருந்ததால் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது, உடனே ஒரு பெண் போலீசு, மாணவிக்கு வேறு சட்டை வாங்கிக் கொடுத்து தேர்வெழுத உதவியது, திருமணமான மாணவி ஒருவரை தாலிக்கயிற்றைக் கழட்டினால்தான் தேர்வெழுத அனுமதிக்க முடியும் என கூறியதால் அவரது கனவர் தாலியைக் கழட்டிட மாணவி தேர்வெழுதச் சென்றது போன்ற சம்பவங்கள் பத்திரிக்கைகளில் பரபரப்புச் செய்தியாகப் பேசப்பட்டன.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களைப் பொறுத்தவரை நீட் தேர்வை எழுதுவதற்கென கடன் வாங்கி கோச்சிங் சென்டர்களில் பல லட்சம் கட்டணமாக கொடுத்தது மட்டுமன்றி, எப்படியாவது தேர்வில் வெற்றிபெற்றிட வேண்டும் என்பதற்காக இரவு பகலாகப் படித்து, தாள முடியாத மன அழுத்தத்தை பரிசாக பெறுகின்றனர். இதன் காரணமாக தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னரே மாணவர்கள் தற்கொலை தொடங்கிவிடுகிறது. இவையெல்லாம் போதாதென்று மாணவர்களைத் திருடர்கள் போலவும், சமூக விரோதிகளைப் போலவும் சித்தரிக்கும் இதுபோன்ற சோதனைகள் வேறு அவர்களை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.
மாணவர்களிடம் இவ்வளவு கண்டிப்புடன் நடந்துகொள்ளும், நீட் தேர்வை நடத்துகின்ற, தேசிய தேர்வு முகமை, வினாத்தாள் கசிவது குறித்தும், தேர்வு முடிவுகளில் செய்யப்படும் குளறுபடிகள் குறித்தும் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. நீட் தேர்வு வினாத்தாளிலும், முடிவுகளிலும் குழப்பம் ஏற்படுவதும் அதனை எதிர்த்து மாணவர்கள் நீதிமன்றத்தை நாடுவதும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கடந்த ஆண்டு நீட் தேர்வு நடப்பதற்கு முன்னதாக அதன் வினாத்தாள் கசிந்தது என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, இது தொடர்பாக பிகார் மாநிலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அதற்குப் பிறகு அந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அவர்களிடம் வினாத்தாளை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கியவர்கள் குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. இது போதாதென்று தேர்வு முடிவுகள் வெளியான பிறகும் பல்வேறு குழப்பங்களை தேர்வு முகமை உருவாக்கியது, சில நூறு மாணவர்களின் மதிப்பெண்களை முடிவு வெளியான பிறகு திருத்தியது. இவையெல்லாவற்றையும் பார்த்து கொதித்துப் போன மாணவர்கள் பல இடங்களில் மறு தேர்வு வேண்டும் எனப் போராடினார்கள். ஆனால் தேசிய தேர்வு முகமை எதையும் கண்டுகொள்ளவில்லை. ஒன்றுமே நடவாதது போல இந்த ஆண்டும், மாணவர்களிடம் அதே கெடுபிடியைக் காட்டி தேர்வை நடத்தி முடித்திருக்கிறது.
மருத்துவக் கல்வியைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவப் படிப்பு எனும் கனவை தகர்த்தெரிந்திருக்கிறது. ஆண்டுக்கு லட்சம் கோடி ருபாய் புழங்கும் நீட் பயிற்சி மையம் எனும் இந்த தொழிற்துறையில் குறைந்தது இரண்டு முதல் மூன்று லட்சம் ருபாயைக் கட்டி பயிற்சி பெற வசதியில்லாத ஏழை மாணவர்கள் வெற்றி பெறுவதென்பது அரிதினும் அரிது. அப்படி தேர்ச்சி பெறும் ஒன்றிரண்டு மாணவர்களை மட்டும் விளம்பரப்படுத்தி எல்லோரும் நீட் தேர்வில் சாதிக்க முடியும் என பிரச்சாரம் வேறு செய்கிறார்கள்.
வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை உருவாக்குவதில், கடந்த பத்தாண்டுகளில், நீட் தேர்வு வெற்றிபெற்றிருக்கிறது. நகர்புற, மேல்தட்டு, ஆதிக்க சாதி மாணவர்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, மேலாளர்களாக அதிகாரிகளாக பணிபுரிய, கிராமப்புற, ஏழை, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் வாகன ஓட்டிகளாக, எலக்ட்ரீசியங்களாக, வீட்டுப் பணியாளர்களாக, குமாஸ்தாக்களாக, பியூன்களாக அவர்களுக்குச் சேவகம் செய்ய வேண்டும் என்ற புதிய கல்விக் கொள்கையின் நோக்கத்தை நிறைவேற்றுவதை நீட் தேர்வு செவ்வனே செய்து வருகிறது. நவீன வர்ணாஸ்ரம தர்மத்தை புகுத்தும் நீட் தேர்வை மட்டுமல்ல புதிய கல்விக் கொள்கையையும் சேர்த்தே முறியடிக்க வேண்டும்.
- மோகன்