திமுக பேரணி : போலி தேசிய வெறியைப் பரப்புவதில் பாஜகவுடன் ஓரணி

திமுகவின் பாசிச எதிர்ப்பு என்பது அதன் கொள்கையிலிருந்து தோன்றியதல்ல. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பொதுவாக உள்ள பாஜகவிற்கு எதிரான மனநிலையை, அறுவடை செய்து ஓட்டாக மாற்றிக் கொள்வதற்காகவே பாசிச எதிர்ப்பை திமுக கையிலேந்தி நிற்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கொண்டு பாஜகவின் காவி கார்ப்பரேட் பாசிச திட்டங்களுக்குத் தமிழ்நாட்டைத் திறந்துவிட்டதன் விளைவாக எழுந்த எதிர்ப்பலையில் நீந்தி திமுக ஆட்சியைப்பிடித்தது என்று கூறினால் அது மிகையாகாது.

ஜல்லிக்கட்டு தடை, அதனை எதிர்த்த மாணவர் இளைஞர் போராட்டத்தை ஒடுக்கியது, நீட் தேர்வைக் கொண்டு வந்து ஏழை எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை பொசுக்கியது, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை மக்களின் இரத்தத்தில் மூழ்கடித்தது, எட்டுவழிச் சாலை என்ற பெயரில் விவசாய நிலங்களை அபகரித்து கார்ப்பரேட்டுகளுக்கு விரைவாக பொருட்களைக் கொண்டு சேர்க்க வசதி செய்தது, ஹைடிரோ கார்பன் என்ற பெயரில் தஞ்சை டெல்டா பகுதியையே சுடுகாடாக மாற்ற முயன்றது என காவி கார்ப்பரேட் பாசிச சக்திகளால் அடுத்தடுத்து தொடுக்கப்பட்ட தாக்குதல்களைத் தமிழக மக்கள் எதிர்த்து நின்று போராடினார்கள்.

ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த பாஜகவிற்கும், தமிழகத்தில் அவர்களது ஏஜென்டுகளாக ஆட்சி நடத்தி வந்த அதிமுகவினருக்கும், தமிழக மக்கள் மத்தியில் இருந்த எதிர்ப்பை பயன்படுத்திக் கொள்ள, இந்த போராட்டங்கள் அனைத்தையும் திமுக ஆதரிப்பதாக கூறிவந்தது. ஆதரிப்பதாக கூறியதேயொழிய எந்த போராட்டத்திலும் அது முன்னிற்கவில்லை. முன்னின்று போராடியது எல்லாம் மக்களும் அவர்களுடன் நின்ற ஒரு சில இயக்கங்களும் தான். ஆனால் தேர்தல் சமயத்தில் இந்த அதிருப்தியை ஓட்டாக மாற்றுவதில் திமுக வெற்றி கண்டது.

திமுகவின் கூட்டணியில் இருக்கும் சிபிஐ, சிபிஎம் கட்சிகளும், மருதையன் வகையறாக்களும்தான் பாசிச எதிர்ப்பு எனும் முகமூடியை திமுகவிற்கு பொருத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். பரந்தூர் விமான நிலையம், 12 மணி நேர வேலைச் சட்டம், சாம்சங் தொழிலாளர் போராட்டம், தேசிய கல்விக் கொள்கையை புறக்கடையில் அமுல்படுத்துவது என வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அந்த முகமூடியினைக் கழட்டி தனது உண்மை முகத்தை திமுக காட்டிவிடுகிறது.

அப்படிப்பட்டதொரு நிகழ்வுதான் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை ஆதரித்து திமுக நடத்திய பேரணி. ‘இந்திய இராணுவத்துக்கு துணை நிற்கும் பேரணி’ என்ற பெயரில் கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் ஒரு பேரணியை நடத்தியிருக்கிறது திமுக. தமிழ்நாட்டு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த பேரணிக்கு சிபிஐ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கூட ஆதரவளித்துள்ளன. “இராணுவத்திற்கு ஆதரவாக திமுக பேரணி நடத்துவது வரவேற்கத்தக்கது” என்றும் “பாகிஸ்தானை எதிர்க்கும் விஷயத்தில் திமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளது பாராட்டுக்குரியது” என்றும் தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையே பாராட்டியிருக்கிறார்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அதனைத் தனது நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதற்காக காவி பாசிசக் கும்பல், நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கும் காஷ்மீர் மக்களுக்கும் எதிராக இந்து மதவெறியைத் தூண்டி கோடி மீடியாக்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருவதுடன், போர் ஓத்திகை, ஆபரேசன் சிந்தூர் என போலி தேசியப் போர் வெறியையும் தூண்டி வருகிறது.

காவி பாசிஸ்டுகளின் இந்தப் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு பதிலாக, இந்த பேரணியை நடத்தியிருப்பதன் மூலம் தன் பங்கிற்கு தேசிய வெறியைத் தூண்டும் வேலையைச் செய்திருக்கிறது திமுக. அதாவது தனது பாசிச எதிர்ப்பு முகமூடியை மீண்டும் ஒருமுறை கழட்டி தனது உண்மை முகத்தை திமுக காட்டியிருக்கிறது.

  • மகேஷ்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன