குலைக்கும் நாயின் வீரமெல்லாம் அது கட்டப்பட்ட கயிற்றின் நீளத்திற்குத்தான் என்று கூறுவார்கள். அதுபோல கடந்த ஒரு மாதமாக போர் போர் என கூச்சலிட்டுவந்த காவிக் கும்பலின் வீரமெல்லாம் அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னால் மண்டியிட்டுப் படுத்தேவிட்டது.
போர் நிறுத்தம் குறித்து இந்தியா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாகவே, “இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்தார்.
— Rapid Response 47 (@RapidResponse47) May 10, 2025
பிறகு “கடந்த 48 மணி நேரத்தில், துணை ஜனாதிபதி வான்ஸும் நானும் பிரதமர்கள் நரேந்திர மோடி மற்றும் ஷேபாஸ் ஷெரீப், வெளியுறவு அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்சங்கர், ராணுவத் தளபதி அசிம் முனீர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அஜித் தோவல் மற்றும் அசிம் மாலிக் உள்ளிட்ட மூத்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம்.
இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், நடுநிலையான இடத்தில் பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதாகவும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர், மார்கோ ரூபியோ அறிவித்தார்[1].
அதன் பிறகே இந்திய தரப்பிலிருந்து ஜெய்சங்கரும், பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாரும் போர் நிறுத்தம் குறித்து தனித்தனியாக அறிவித்தனர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் போர்ச் சூழலை ஏற்படுத்தாமல், மோதலை மட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில் இரு நாட்டு ஆட்சியாளர்களையும் அழைத்துப் பேசி அமெரிக்கா இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது.
போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தப் போரில் நாங்கள் தான் வெற்றி பெற்றோம் என இரு நாடுகளும் தற்போது தம்பட்டம் அடித்து வருகின்றன. “பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் இந்தியத் தரப்பிற்கு ‘பலத்த பதிலடியை’ கொடுத்துள்ளதாகவும்”, இந்தியாவின் “இராணுவக் கிடங்குகள், வெடிமருந்து சேமிப்பு இடங்கள் மற்றும் விமான தளங்கள் இடித்துத் தள்ளப்படுள்ளன” எனவும் கூறியுள்ளார்[2].
ஏற்கெனவே “ஆபரேசன் சிந்தூர்” மூலமாக பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்களைக் குறிவைத்துக் காலிசெய்துவிட்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைக் கொன்றுவிட்டதாகவும் எல்லையில் ‘வாலாட்டிய’ பாகிஸ்தான் இராணுவத்தினரை ஓட ஒட விரட்டியடித்து விட்டதாகவும் இந்தியா கூறிவந்த நிலையில், இந்திய தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் போர் நிறுத்தத்திற்குப் பிறகு வெளியிடப்படவில்லை. அந்தக் குறையை, வடஇந்திய ஊடகங்கள் தீர்த்துவைத்துள்ளன. பாகிஸ்தானின் இராணுவ நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன, அதன் வான்வெளி பாதுகாப்பு அரண்கள் அழிக்கப்பட்டுவிட்டன, பாகிஸ்தான் இராணுவ ரீதியில் எளிதில் மீள முடியாத அளவிற்கு பின்தள்ளப்பட்டிருக்கிறது என அவை செய்தி வெளியிட்டு வருகின்றன[3].
கடந்த 20 நாட்களாக “பழிதீர்க்க வேண்டும் (#wewantrevenge)” என கூச்சலிட்டு, போர்வெறியைத் தூண்டிவந்த காவி கும்பலும், அதன் ஆதரவு ஊடகங்களும், அமெரிக்காவின் போர்நிறுத்த அறிவிப்பு வந்த ஒரு சில மணித்துளிகளில் இருந்தே தங்களது பிரச்சாரங்களை நிறுத்திவைத்துவிட்டன. நாடு முழுவதும் பீரிட்டு ஓடிய “தேச பக்திப்” பெருவெள்ளமானது டொனால்டு டிரம்பின் உதட்டசைவில் ஓன்றும் இல்லாமல் போய்விட்டது.
மறுகாலனியாக்க காலகட்டத்தில் ஏகாதிபத்தியங்களின் விருப்பம் இல்லாமல் எந்தவொரு நாடும் மற்ற நாடுகளுடன் போர் செய்வது என்பது நிச்சயமாக முடியாது. தமது குறுகிய அரசியல் லாபத்திற்காக, ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டும் வகையில், மோடியோ பாகிஸ்தானோ செயல்பட முடியாது. அப்படி செயல்பட எத்தனிக்கும் போது அமெரிக்கா தலையிட்டு அவர்களை வழிக்குக் கொண்டுவரும். இதுதான் காலம்காலமாக நடந்துவருகிறது.
2008 மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு ஏன் பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கவில்லை என்ற கேள்விக்கு, “2008ம் ஆண்டில் ஒட்டுமொத்த உலகமும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருந்த போது போர் என்பது அது வெற்றிகரமானதாக இருக்கும் என்ற போதிலும் இந்திய பொருளாதாரத்தை பின்னுக்கு இழுத்துவிடும்” என்றும் “அமெரிக்காவும், பிரிட்டனும் இரு அணுஆயுத பலம் கொண்ட நாடுகள் போரிடுவதை விரும்பவில்லை” என்றும் அப்போதைய வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்த சிவ சங்கர் மேனன், தனது சுய சரிதையில் கூறியிருக்கிறார்.[4]
அதாவது ஏகாதிபத்திய உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த நிகழ்வையும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் பொருத்துக் கொள்ளாது என இதன் மூலம் அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். சிவசங்கர் மேனன் கூறியிருப்பது 2008க்கு மட்டுமல்ல 2025க்கும் பொருந்தும் என தற்போது நிரூபணமாகியிருக்கிறது.
ஆபரேசன் சிந்தூர் குறித்து இந்தியா அறிவித்த பிறகு, இரண்டு நாட்களில் மட்டும் இந்திய பங்குச்சந்தை 7 லட்சம் கோடி ருபாய் அளவிற்கு இழப்பைச் சந்தித்திருக்கிறது[5].
ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை கணிசமான அளவிற்குச் சரிய ஆரம்பித்தது. இதன் காரணமாக இவற்றில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குச்சந்தையின் ஸ்திரத்தன்மை குலையக்கூடும் என கவலை கொள்ள ஆரம்பித்தனர்.
இந்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க ஆரம்பித்ததாக செய்திகள் வெளியானவுடன் அவர்கள் இந்திய பங்குச்சந்தையிலிருந்து உடனடியாக பணத்தை வெளியே எடுக்க ஆரம்பித்தனர். வெள்ளிக்கிழமை மாலையில் பங்கு வர்த்தகம் முடிவுக்கு வர ஒரு சில மணி நேரங்களில் மட்டும் இந்தியாவில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டாளர்கள் 4 ஆயிரம் கோடி ருபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்[6].
பங்குச்சந்தையில் மட்டுமல்ல சர்வதேச வர்த்தகத்திலும் இந்திய பாகிஸ்தான் மோதல் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா தனது கப்பற்படையை, பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு அருகில் நிறுத்தியதால் அந்த துறைமுகம் மூடப்பட்டது. இதன் காரணமாக அந்த துறைமுகம் வழியாக சரக்குகளைக் கையாண்டுவந்த காஸ்கோ (COSCO), ஓஓசிஎல் (OOCL) போன்ற சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் பலத்த நட்டத்தை சந்தித்தன. அதுமட்டுமன்றி குஜராத்தின் முத்ரா துறைமுகம் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கான பாகிஸ்தானின் ஏற்றுமதிகள் தடைசெய்யப்பட்டதால் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்க வேண்டியதாயிற்று[7].
இந்த இழப்புகள் எல்லாம் மிகவும் சொற்பமானதாக இருந்தாலும், இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதல் என்பது இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்பதால் இந்த மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சர்வதேச நிதிமூலதன நிறுவனங்கள் விரும்பின.
“பாகிஸ்தானுடன் போர் செய்தால் இந்தியா, சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்” என புலூம்பெர்க் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் அபிஷேக் குப்தா இந்தியாவை எச்சரித்துள்ளார். “நீண்டகால மோதல்கள், இந்தியாவில் தங்களது முதலீடுகளை விரிவாக்கம் செய்து, விநியோகச் சங்கிலிகளைப் பன்முகப்படுத்த விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முயற்சிகளை சிக்கலாக்கும்” என்று மதிப்பீட்டு நிறுவனமான எஸ்&பி தெரிவித்தது[8]. அமெரிக்க சீன வர்த்தகப் போர் காரணமாக ஐபோன் போன்ற அமெரிக்க நிறுவனங்கள், தங்களது தொழிற்சாலைகளை சீனாவிலிருந்து இந்தியாவிற்கு மாற்றி வரும் சூழலில் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்கி அதனை கெடுத்துக் கொள்ள் வேண்டாம் என பல இடங்களில் இருந்தும் இந்தியாவிற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன[9].
அதே போல பாகிஸ்தானும் தனது பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டுவர சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஏழு லட்சம் கோடி ருபாய் அளவிற்கான கடனுதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானிற்கு முதல் தவணையாக 70 ஆயிரம் கோடி ருபாயை வழங்கினாலும்[10], இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்தால் இந்தக் கடன் முழுமையாக பாகிஸ்தானிற்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படக் கூடும்.
ஏற்கெனவே ஷெல், டெலிநார் போன்ற சர்வதேச நிறுவனங்கள் பாகிஸ்தானின் அரசியல் ஸ்திரமின்மை, மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக அந்நாட்டைவிட்டு வெளியேறியுள்ளன[11]. இந்தச் சூழலில் இந்தியாவுடன் போர் என்பது அந்நாட்டில் அந்நிய முதலீட்டைக் கேள்விக் குறியாக்கிவிடும்.
இவ்வாறு இந்தியாவும் பாகிஸ்தானும் சர்வதேச வர்த்தகம், அந்நிய நேரடி மூலதனம், சர்வதேசக் கடன்கள், பொருளாதார ஒப்பந்தங்கள் என ஏகாதிபத்தியங்களின் பிடியில் சிக்கியிருக்கும் சூழலில் ஏகாதிபத்தியங்களின் விருப்பத்திற்கு மாறாக சுட்டுவிரலைக் கூட அவர்களால் அசைக்க முடியாது. ஏகாதிபத்தியங்கள் போரை உடனடியாக நிறுத்து என உத்தரவிட்டால் மறுபேச்சின்றி அதனை நிறைவேற்றியே தீர வேண்டும்.
இது மோடி அரசுக்குத் தெரியாததல்ல. பாகிஸ்தானுக்கு எதிராக முழுமையான போரைத் தொடங்கினால் சர்வதேச ரீதியில் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என அவர்களுக்குத் தெரியும். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததாக கணக்குக் காட்ட ஏதாவது செய்ய வேண்டும் அதேசமயம், போரில் சென்று முடிந்துவிடாதபடிக்கு அதனைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். இதுதான் ஆரம்பம் முதலே அவர்களது திட்டம். இதனை மறைத்துக் கொண்டு, நாடு முழுவதும் போர் பயிற்சி, “ஆபரேசன் சிந்தூர்”, சிந்து நதி ஒப்பந்த நிறுத்தம் எனக் கூறி பாகிஸ்தானுடன் போருக்கு போவது போல பாவலா காட்டி, போலி தேசிய வெறியைத் தூண்டிவிட்டு, காவி பாசிச கும்பல், மக்களை ஏமாற்றியிருக்கிறது.
- அறிவு
குறிப்புகள்
[1] https://www.state.gov/releases/office-of-the-spokesperson/2025/05/announcing-a-u-s-brokered-ceasefire-between-india-and-pakistan/
[2] https://www.theweek.in/news/world/2025/05/11/pakistan-pm-shehbaz-sharif-claims-victory-after-ceasefire-with-india.html
[3]https://www.hindustantimes.com/india-news/completely-crippled-what-losses-did-pakistan-suffer-after-operation-sindoor-101746883251277.html
[4] https://scroll.in/article/916259/insider-account-why-india-didnt-attack-pakistan-after-26-11
[5]https://timesofindia.indiatimes.com/business/india-business/india-pakistan-tensions-wipe-out-rs-7-lakh-crore-from-investor-wealth-in-2-days/articleshow/121033132.cms
[6] https://www.fortuneindia.com/markets/indo-pak-conflict-indian-share-market-and-the-curious-case-of-fpis-buying/122962
[7] https://www.taxscan.in/india-pak-tensions-impacts-on-trade-routes-import-of-goods-transit-issues/516445/
[8] https://www.bloomberg.com/news/articles/2025-05-07/india-s-global-rise-weighed-down-by-perpetual-pakistan-conflict
[9] https://www.reuters.com/breakingviews/attacks-cloud-indias-nascent-safe-haven-status-2025-05-07/
[10] https://www.reuters.com/world/asia-pacific/pakistan-says-imf-clears-loan-review-frees-1-bln-2025-05-09
[11] https://www.dawn.com/news/1801999/analysis-economic-woes-driving-global-firms-exodus
மோடியின் கெட்டிக்காரப் புழுகு 8 நாளைக்கு தாங்காது என்பது உண்மை.