இன்றைக்கு தமிழ்நாட்டில் காவி கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பில் முன்னணியில் இருப்பதாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. மும்மொழிக் கொள்கை, இந்தி எதிர்ப்பு, மாநில உரிமை, தொகுதி மறுசீரமைப்பு, நீட் என காவி பாசிஸ்டுகளுக்குத் திமுக தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும், பாசிசத்தை எதிர்க்க திராவிட மாடலை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் அனைத்தையும் காட்சி ஊடகங்களின் வாயிலாக தெரிந்து கொள்ள நினைக்கும் தலைமுறையினரிடம் தனது கடந்த காலம் குறித்து, இந்தி எதிர்ப்பு குறித்து, மாநில சுயாட்சி குறித்து, இடஒதுக்கீடு குறித்து திமுக ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கிறது. திமுக சார்பு ஊடகவியலாளர்களால் திரும்பத் திரும்ப முன்னிறுத்தப்படும் இந்த வரலாற்றில் தமிழ், தமிழ்நாடு, மாநில உரிமை எல்லாவற்றிற்காகவும் திராவிட இயக்கத்தின் போராட்டங்களும், தியாகங்களும் விதந்தோதப்படுகின்றன. திராவிட இயக்கங்கள் இல்லை என்றால் தமிழ்நாடு காட்டுமிராண்டிகளின் தேசமாக இருந்திருக்கும் என்று கூறும் அளவிற்கு அவர்களது பிரச்சாரம் காதைப் பிளக்கிறது.
இதுதான் உண்மையா எனப் பார்த்தால் திமுக மட்டுமல்ல திராவிடர் கழகம், அதிமுக, மதிமுக என எல்லா திராவிட இயக்கங்களின் வரலாறும் பொய்களாலும், துரோகங்களாலும் நிறைந்திருப்பதைக் காணமுடியும். அப்படி திராவிட இயக்கத்தின் உண்மை முகத்தை, அவர்களின் துரோக வரலாற்றை, தோலுரித்துக் காட்டிய, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் “புதிய ஜனநாயகம்” இதழில் வெளியானதொரு கட்டுரையை, இங்கே மீள்பிரசுரம் செய்கிறோம்.
– செங்கனல் ஆசிரியர் குழு
*********
சேஷன் எதிர்ப்புப் போராட்டத்தின் மறுபக்கம் திராவிட இயக்கங்களின் துரோகங்கள் நிரம்பியது
தலைமைத் தேர்தல் கமிசனர் சேஷனைத் தமிழ்நாட்டுக்குள் நுழையவிடாமல் துரத்தித் துரத்தி “அடிக்கின்றன” திராவிடக் கட்சிகள். “தமிழர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், தமிழர் தலைவர் பேரறிஞர் அண்ணாவையும் இழிவுபடுத்தி விட்டார்” என்பது சேஷன் மீதான குற்றச்சாட்டு. மதுரை மாவட்ட ஆட்சியாளர் என்கிற முறையில் அன்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கியும் இன்று அப்போராட்டத்தை இழிவுபடுத்தியும் வருகிறார் பார்ப்பன – பாசிச சேஷன். ஆனால் திராவிட இயக்கத் தந்தை ஈ.வெ.ரா. அதே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கடுமையாக எதிர்த்து அவதூறு செய்தார்; அண்ணாதுரை காட்டிக் கொடுத்து துரோகமிழைத்தார் என்பதுதான் உண்மை. இந்த உண்மையை மூடிமறைத்து தமிழின் பெயராலும் தமிழினத்தின் பெயராலும் திராவிட இயக்கத்தினர் தொடர்ந்து அரசியல் ஆதாயம் அடைந்து வருகின்றனர். சேஷன் எதிர்ப்புப் போராட்டத்தின் மறுபக்கம் திராவிட இயக்கங்களின் துரோகங்கள் நிரம்பியது.
திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சென்று சொல்லப்படுபவை மூன்று உரிமைகள் – தமிழ் இன உரிமை: தமிழ் மொழி உரிமை; வகுப்புரிமை ஆகியன.
”அவர்கள் பேசுவதில் பத்தில் ஒன்பது பொய், மீதி ஒன்றும் திரிக்கப்பட்து” என்று திருத்தல்வாதிகளைப் பற்றி லெனின் சொன்னார். இது திராவிட இயக்கத்தினருக்கும் பொருந்தும்.
அரசியல் ஆதாயத்துக்காக தமிழ் இன உரிமையையும் மொழி உரிமையையும் காட்டிக் கொடுத்து பச்சை துரோகம் செய்துள்ளார்கள் என்பதே அவர்களின் வரலாறு; இருந்தாலும் இன, மொழி உரிமை தங்களின் உயிர் மூச்சென்று இன்னமும் புளுகி வருகிறார்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வகுப்புரிமை என்பதை பார்ப்பனரல்லாத மேல்சாதி, மேட்டுக்குடி வகுப்புரிமை என்பதாகத் திரித்து விட்டார்கள்.
இதற்கு திராவிட இயக்கத்தின் தந்தையான பெரியார் ஈ.வே.ரா. முதல் அதன் வாரிசுரிமை கோரி களத்தில் புதிதாகக் குதித்துள்ள வை.கோ. வரையில் யாரும் விதிவிலக்கல்ல. இப்படிச் சொல்வதற்காக அந்த இயக்கத்தினர் மட்டுமல்ல, பெரியாரைத் தமது சித்தாந்த குருவாக ஏற்றுக் கொண்டு புறப்பட்டிருக்கும் இனவாதக் குழுக்களும் கூட நம்மீது பாய்வார்கள்; நம்மீது பார்ப்பன முத்திரை குத்துவார்கள்; துரோகப்பட்டம் கட்டுவார்கள். ஆனால் இப்படிச் செய்வதைத் தவிர நாம் முன் வைக்கும் சான்றுகளுக்குத் தகுந்த பதிலேதும் அவர்களால் கூறமுடியாது.
சூத்திரன் என்கிற முறையில் அடக்கி ஒடுக்கிப் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையாக வகுப்புரிமை இடஒதுக்கீடு கோரிக்கை நியாயமாகிறது. ஆனால் திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான நீதிக் கட்சியின் மேல்சாதி, மேட்டுக்குடியினர் – முக்கியமாக சத்திரிய, வைசிய சாதியினர் – தாம்தான் சூத்திரர்கள் என்று சாதித்து, பார்ப்பனர்களுடன் போட்டியிட்டு அதிகார அரசியலில் பங்கு கோரிப் பெற்றனர். பின்னர் வந்த திராவிட இயக்கத்தினரும் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் சூத்திரர்தாம் என்று திரித்துச் சொல்லி அதே மேல் சாதி மேட்டுக் குடியின் நலன்களையே முன்னிறுத்தினர். இந்த ஏற்பாட்டினால் ஒருசில மேல்சாதிகளே ஆதாயம் அடைந்தன என்பதை சட்டநாதன் கமிசன் மற்றும் மண்டல் கமிசன் ஆய்வுரைகள் எடுத்துச் சொல்லியும் கருணாநிதி தலைமையில் திராவிட இயக்கம் அதே கொள்கையைப் பற்றி நின்றது. இடையில் இடஒதுக்கீட்டிற்குத் தகுதியற்றவை என்று தள்ளி வைக்கப்பட்டிருந்த மேல்சாதிகளையும் சூத்திர சாதிகள் – பிற்பட்டவர்கள் என்று சேர்த்துக் கொண்டனர். பிற்படுத்தப்பட்ட சாதிகள் நூற்றுக் கணக்கிலானவை என்று பட்டியல் இருப்பினும் ஒரு சில சாதிகள், அதிலும் சில மேல் தட்டு வர்க்கத்தினரே இந்த “வகுப்புரிமை”யினால் பயனடைகின்றனர் என்று ஆய்வுகள் பலவும் எடுத்துக் காட்டியும் அவர்களின் நலன்களையே எப்போதும் திராவிட இயக்கத்தினர் முன்னிறுத்துகின்றனர்.

1938 இறுதியில் வேலூரில் நடந்த மாகாணத் தமிழர் மாநாட்டில் “தனித் தமிழ்நாடு” திட்ட விவாதம் நடத்தி அதற்கான பணியைத் துவக்கி 1939 இறுதியில் விளக்க விழாவும் நடத்தினர், திராவிட இயக்கத்தினர்; 1940 -திருவாரூர் நீதிக் கட்சி மாகாண மாநாட்டில் பெரியார் தலைமையில் “திராவிட நாடு” கோரிக்கைத் தீர்மானம் நிறைவேற்றி திட்டவட்டமான விளக்கமும் அளித்தனர். நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக மாறிய 1945 சேலம் மாநாட்டிலும் அதன் பிறகு நடந்த திருச்சி மாநாட்டிலும், 1949 இல் தி.மு.க. நிறுவப்பட்டபோதும் அதன் பிறகு 1961 வரை நடந்த ஒவ்வொரு மாநாட்டிலும் “திராவிட நாடு” கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரியாரின் “விடுதலை” ஏட்டின் மூல முழக்கமாக முதலில் “திராவிட நாடு, திராவிடருக்கே” என்றும் பிறகு ”தமிழ்நாடு தமிழருக்கே” என்றும் தாங்கி வந்தது. பெரியார் உணர்ச்சி வசப்பட்டுப் பேசும்போது மட்டும் இதை நினைத்துக் கொண்டு விளக்கமும், உறுதி மொழியும், முழக்கமும் போட்டார். ஆனால் இதை அடைவதற்கான வழிவகை நடைமுறை எதுவும் பெரியாரிடம் இருந்ததில்லை. அவர் “பச்சைத் தமிழர்” ஆட்சியைக் காப்பது, அதன் மூலம் அரசியல் செல்வாக்குச் செலுத்துவது என்ற கொள்கையை மேற்கொண்டு தனது தன்னுரிமைக் கோரிக்கைக்கு சமாதி கட்டி விட்டார். தனது இயக்கம் ஒரு அரசியல் இயக்கமல்ல; சமூக-பண்பாட்டு இயக்கம்தான் என்கிற அவரது பிரகடனமே இதை உறுதிசெய்து விட்டது. “தமிழ்நாடு தமிழருக்கே!” – “தமிழர் தன்னுரிமை” என்பது அடிப்படையில் ஒரு அரசியல் முழக்கம்; அரசியல் இயக்கமின்றி அதை அடைந்திட முடியாது என்பது அவருக்கு நன்கு தெரியும்.
1949-ல் தி.மு.க. நிறுவிய நாளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17- அன்று திராவிட நாடு விடுதலை விழாவாகக் கொண்டாடினர். ஆனால் இப்போது நடத்தும் முப்பெரும் விழாக்களில் ஒன்றாக, “திராவிட நாடு விடுதலை’ யை எடுத்துவிட்டு கழக நிறுவன விழா மட்டுமே உள்ளது. 1960- இல், சி.பி. ராமசாமி அய்யர் “தேசிய ஒருமைப்பாடு குழு” ஒன்றமைத்து அதன் ஆய்வறிக்கை என்கிற பெயரில் “பிரிவினைத் தடை சட்டம்” இயற்றும்படி கோரினார். பார்ப்பனர் முன் முயற்சியில் அது சட்டமாக்கப்பட்டவுடன் தி.மு.க வெறும் முணுமுணுப்புக்கூட இல்லாது அதற்கு அடிபணிந்தது. கழகத்தின் அணிகளையோ, பொதுக் குழுவையோ கூட கூட்டவில்லை; சில சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளடங்கிய செயற்குழுவைக் கூட்டி பின்வருமாறு கழகத்தின் குறிக்கோள் என்ற விதியைத் திருத்திவிட்டனர். “தமிழகம், ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத்தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றிற்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது.”
அப்போதே, அண்ணாதுரை காலத்திலேயே இந்திய ஒருமைத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாநில சுயாட்சி கூடக் கிடையாது, கூடுதல் அதிகாரம் தான் கோரிக்கை; திராவிடக் கூட்டமைப்பு என்பது “திராவிட நாடு” என்பது தொடர்வதான வெறும் பிரமையூட்டுவதற்குத்தான். ஆகவே பின்னாளில் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும்தான் துரோகம் செய்துவிட்டார்கள் என்பதுசரியல்ல.
பிரிவினைத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து 1963 ஏப்ரலில் ஓர் ஆட்சி மொழிசட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேறியது. அதன்படி “1965 ஜனவரி 26 முதல் இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழியாகும்; இந்திக்குத் துணையாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்” என்றானது. இச்சட்டத்தின் மூன்றாவது விதியின்படி ஆங்கிலத்தின் இடத்தை இந்தி ஆக்கிரமித்துக் கொள்ளும்; குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அரசினர் வெளியிடும் இந்தி மொழி பெயர்ப்பு, மத்திய அரசு சட்டங்கள், ஆணைகள், கட்டளைகள், நெறிகள், துணைச்சட்டங்கள் முதலியவைதாம் அதிகார பூர்வமானவையாகக் கருதப்படும். இதேபோல இவற்றின் இந்தி மொழிபெயர்ப்புகளை அரசிதழ்களில் வெளியிட்டால்தான் அவை அதிகார பூர்வமானவையாகக் கருதப்படும். மற்றபடி மாநிலங்கள் அவற்றின் தாய் மொழியிலோ, ஆங்கிலத்திலோ வெளியிடுபவை அதிகார பூர்வமானவையாக ஏற்கப்படமாட்டா என்றானது.
அப்போதிருந்து இந்தச் சட்டம்தான் அமுலில் இருக்கிறது. ஆனால் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, “இந்தி பேசாத” மாநிலங்களில் இது உடனடியாக அமுலுக்கு வருவது ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது; அதேசமயம் இதை அமுலாக்குவதற்காக அவ்வப்போதும், மறைமுகமாகவும், மெதுவாகவும் இந்தித் திணிப்பு செய்துவருகிறார்கள். இந்த நிலை திராவிட இயக்கத்தினரின் அரசியலுக்கு மிகவும் வசதியானதாகத் தான் இருக்கிறது. ஏனென்றால் இந்தித் திணிப்பில் இருந்து நிரந்தரமான பாதுகாப்பு தேடித் தருவதோ. தமிழை ஆட்சிமொழி ஆக்குவதோ அவர்களுடைய நோக்கமே கிடையாது. இதுவரை திராவிட இயக்கத்தின் கோரிக்கை எல்லாம் ஆங்கிலம் இணைப்பு மொழியாக நீடிக்க வேண்டும்; தமிழ் மக்களாக ஏற்கும்வரை இந்தி ஆட்சி மொழியாகவும் கூடாது; திணிக்கவும் கூடாது என்பது தான்.
பிரிவினைத் தடைச் சட்டம் வந்து. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடும் வரை இந்தியாவுக்கு என்று ஆட்சி மொழி எதுவும் தேவை இல்லை; இணைப்பு மொழியாக ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கக் கோரிக்கை. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், “இந்தியப் பேரரசில் ஒரு பகுதியாக அடக்கி வைக்கப்பட்டுள்ள திராவிடம் விடுதலைபெற்று, திராவிட கூட்டாட்சி எனும் தனியரசாக மலர வேண்டும் எனப் பணியாற்றி வரும் திராவிட முன்னேற்றக் கழகம், துணைக் கண்டமாக உள்ள இந்தியா முழுமைக்கும் ஒரு ஆட்சி மொழி தேவை என்ற தத்துவத்தை மறுக்கிறது” (மதுரை மாநாட்டுத் தீர்மானம் 1961 சூலை 13-16). ஆட்சி மொழித் தத்துவமே போலியானது; இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் இந்தி மொழி ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவர டில்லி ஆதிக்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்று கண்டித்தது.
ஆக, பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையும் – திராவிட இயக்கத்தின் திராவிட நாடு கோரிக்கையும் – மொழி உரிமையும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் தன்னுரிமை – தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு இந்திய அரசின் ஒருமைத் தன்மையை ஏற்றுக் கொண்டபிறகு மொழி உரிமைப் போராட்டங்கள் எல்லாம் நிழல் சண்டைதான். ‘அதுவும் தமிழ் ஆட்சி மொழி ஆகவேண்டும் என்பதற்காக அல்ல. இந்தி திணிப்புக் கூடாது; ஆங்கிலம் இணைப்பு மொழியாக நீடிக்க வேண்டும்; அதற்கான நேருவின் வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும் என்பது தான்.
இந்தி ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றிய 1963-ஆம் ஆண்டு முதல் 1969 வரை ஆறாண்டுகள் அதற்கு எதிராகப் போராடப் போவதாக தி.மு.க. அறிவித்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இந்தி ஆட்சிமொழிச் சட்ட எரிப்பு மற்றும் அறவழி மறியல் போராட்டங்கள்; அண்ணாதுரை, கருணாநிதி உட்பட ஆயிரக்கணக்கான தலைவர்களும், அணிகளும் சிறையிலடைக்கப்பட்டனர். அதன் தொண்டர்கள் இருவர் சிறையிலேயே மாண்டனர். இறுதியாக 1965 ஜனவரி 26 குடியரசு நாளை – இந்தி ஆட்சி மொழியாகும் துக்க நாளாக அறிவித்து கருப்புக் கொடிகள் ஏற்றி, கருப்புச் சின்னமணிந்து கடும் அடக்குமுறைகளை எதிர்கொண்டு போராடினர். ஆக்கபூர்வமான பணிகளினால் மொழியை வளர்த்தும், பல போராட்டங்கள், பிரச்சாரங்களினால் மொழிப்பற்றையும், இன உணர்வையும் ஊட்டித் தமிழ் மக்களை விழிப்புறச் செய்ததில் திராவிட இயக்கத்துக்குரிய தனிச்சிறப்பான பங்கை உரிமை பாராட்டிக்கொள்வதில் அதற்கு நியாயமிருக்கிறது. ஆனால் அது அந்தத் துக்க நாள் போராட்டத்தோடு முடிந்து போனது.
மொழி உரிமைப் போராட்டத்தில் தீக்குளித்த தி.மு.க. தியாகிகளின் கல்லறையிலேயே திராவிட இயக்கத்தினர் தமது மொழிப் பற்றையும் உணர்வையும் வைத்துச் சமாதி கட்டி விட்டனர். மொழிப் போரின் பலன்களை 1967 பொதுத் தேர்தல்களில் அறுவடை செய்துகொள்வது என்று குறிவைத்தபோதே துரோகப்பாதையில் நடைபோடத் துவங்கி விட்டனர்.
மொழிப்பற்று – உணர்வால் எழுச்சியுற்ற மாணவர்கள் 1965 ஜனவரி 25-ம் நாளையே மாநிலந் தழுவிய துக்கநாளாகக் கடைபிடித்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு “இந்தி அரக்கி” எரிப்பு, ஊர்வலம் எனப் பெரும் போராட்டத்தில் இறங்கினர். பல இடங்களில் கட்சி சாரா மாணவர்கள் தன்னெழுச்சியாகவும், திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தினரும் இவற்றுக்குத் தலைமையேற்றனர். அன்றைய காங்கிரசு – பக்தவச்சலம் அரசு மாணவர்களைக் கைதுசெய்தும், காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கியும், துப்பாக்கிச் சூடுகள் நடத்தி பல மாணவர்களைப் படுகொலை செய்தும் மொழிப் போரை அடக்க முயன்றது. அடிபணிய மறுத்த மாணவர்கள் பிப்ரவரி 9 முதல் அஞ்சல் நிலைய மறியல். இரயில் நிறுத்தம், பொதுவேலை நிறுத்தம். இந்திப் பிரச்சாரப் புத்தகங்கள் எரிப்பு என அமைதி வழிப் பேராட்டத்திற்குத் திட்டமிட்டு இறங்கினர். தமிழகத்தின் பல இடங்களிலும் போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தி மிருகத்தனமாக மாணவர்களைப் படுகொலை செய்தது; அதைக் கண்டு கொதித்தெழுந்த மக்கள் மாணவர்களோடு மொழிப்போரில் குதித்தனர்; போலிசுக்கெதிரான தாக்குதலிலும், தபால், இரயில் நிலையங்கள், பஸ் – இரயில்களுக்குத் தீயிடலிலும் இறங்கினர். அதுவரைக் கண்டிறாத மாபெரும் எழுச்சியைத் தமிழகம் கண்டது.
இந்த நேரத்தில் மாணவர்கள் – மக்களோடு களத்தில் நிற்கவேண்டிய தி.மு.க.; பின்னாளில் மொழிப் போருக்கும் தியாகத்திற்கும் உரிமை பாரட்டிக் கொள்ளும் தி.மு.க, “இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது: ஜனவரி 26 துக்க நாள் கடைப்பிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து போனது’ என்று பகிரங்கமாக அறிவித்து துரோகமிழைத்தது; கழகத்தின் முக்கியப் பிரமுகர்கள் பலர் “மன்னிப்பு” எழுதிக் கொடுத்துவிட்டு சிறையில் இருந்து விடுதலையடைந்தனர். இந்தத் துரோகத்துக்கு தி.மு.க. தலைமை அதிகாரபூர்வ ஒப்புதல் அளித்த வரலாறு பின்வரும் காரணம் கூறியது:
“போராட்டம் பலாத்கார உருவெடுத்து வளரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்த நாட்டில் அமைதியான சூழ்நிலை உண்டாக்கத் தி.மு.க தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் போராட்டத்தை நிறுத்தி நாட்டில் அமைதியையுண்டாக்கும்படி மாணவர்களையும் பொதுமக்களையும் கேட்டுக் கொண்டார். அவரது முயற்சி பயனற்றதாகியது”

பிப்ரவரி 12 பொது வேலை நிறுத்தத்தை நடத்தியே தீருவது என்று மாணவர்கள் உறுதியாக இருந்தனர். அதை அடக்கி ஒடுக்க இராணுவம் வரவழைக்கப்பட்டது. “போராட்டம் மாணவர் கையிலிருந்து சமூக விரோதிகள் கைக்குச் சென்றுவிட்டது” என்று கூறி கண்டதும் சுடும் உத்திரவு போட்டது காங்கிரசு இந்தி ஆதிக்க அரசு. பாண்டியிலும், தமிழ்நாட்டிலும் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு மேலும் பலர் பலியாயினர். அப்போது காங்கிரசின் எண்ணத்திற்கும் நோக்கத்திற்கும் இசைவாகவே அண்ணாத்துரை செயல்பட்டார்.
”மாணவர் கிளர்ச்சியில், தீய சக்திகளுக்கு இடமளிக்கப்பட்டதைக் கண்ட அறிஞர் அண்ணா அவர்கள் மிக்க மன வேதனையடைந்து ஒருமுறைக்கு இருமுறை அறிக்கைகள் மூலம் அமைதியைக் காக்க முயற்சித்தார். மாணவர் தலைவர்களை அழைத்து விவாதித்தார். இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த தானும் தன்னுடைய கட்சியும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக வாக்களித்தார். நாட்டில் நடைபெற்றுள்ள வன்முறைச் செயல்களால் ஏற்பட்டுள்ள இழப்புகளை எடுத்துக்காட்டி அறிவுரை வழங்கினார். மாணவர் தலைவர்களும் அறிஞர் அண்ணா அவர்களின் அறிவுரையை ஏற்று இந்தி ஆதிக்க எதிர்ப்பு குழுவில் ஆலோசனை செய்வதற்கு முற்பட்டனர்.
மாணவர் போராட்டத்தின் காரணமாகச் சிறை செய்யப்பட்டுள்ள மாணவர் தலைவர்கள் பெரும்பாலோர் சிறையில் இருந்தனர்.எஞ்சியுள்ள சிலர் கூடி மாணவர்களின் “நேரடி நடவடிக்கை நிறுத்தப்பட்டது” என்று முடிவு எடுத்தனர். எல்லா தினசரி இதழ்களிலும் இவை வெளிவந்தன. தி.மு.கழகத் தோழர்கள் நாடெங்கும் சென்று அமைதிக்கான வழி வகைகளைக் கண்டனர்; பத்து நாட்களுக்குப் பிறகு நாட்டில் அமைதி ஏற்பட்டது.” (தி.மு.க. வரலாறு: டி.எம். பார்த்த சாரதி. பக்:520,522).
எவ்விதத் தீர்வும் காணாமல், “இந்தித் திணிக்கப்படமாட்டாது” என்கிற காங்கிரசின் வழக்கமான வாக்குறுதியை மட்டும் நம்பி, மொழிப் போராட்டத்தை விலக்கிக் கொள்ளும்படி செய்த அண்ணாதுரையும் அவரது கட்சியும் மாணவர்களுக்கு அளித்த வாக்குப்படி இந்தி ஆதிக்கத்தைத் தடுக்கும் பொறுப்பை எந்த அளவு நிறைவேற்றினார்கள்?
எதிர்க்கட்சியாக இருந்தபோது, தமிழை ஆட்சி மொழியாக்கும் தீர்மானத்தை மதியழகன் கொண்டு வந்தார்; நிறைவேறவில்லை. அதன் பிறகு சட்ட மன்றத்தில் பெரும்பான்மை பெற்றபோதும், மத்தியில் கூட ஜனதா அரசுகளில் பங்கேற்றபோதும் தமிழை ஆட்சி மொழி ஆக்கவும், இந்தித் திணிப்பைத் தடுக்க நேருவின் வாக்குறுதியைச் சட்டமாக்கி நிரந்தரத் தீர்வு காணவும் எந்தவொரு பாரதூரமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு தொடர்ந்து பல முறை, பல வழிகளில் இந்தித் திணிப்பு செய்து கொண்டுதான் வருகிறது. திராவிடக் கட்சிகள் மத்திய அரசு. ஆளும் கட்சிகளுடனான உறவைப் பொருத்து, அதைச் சகித்துக் கொள்கின்றன; அல்லது சட்டப்பூர்வமாக அடையாள எதிர்ப்பை மட்டுமே காட்டுகின்றன. ஆளும் கட்சியாக இருக்கும்போது இந்தித் திணிப்பை எதிர்க்காத அதே சமயம், எதிர்கட்சியாக இருக்கும்போது தனது அரசியல் வலுவைக் கூட்டிக்கொள்ளப் போராடுகின்றன. அண்ணாத்துரை காலத்திலேயே 1968 ஜனவரியில் மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் துவங்கியபோது அவர், அதை அடக்கினார். கருணாநிதி, எம்.ஜி.ஆர் கழகங்கள் ”இந்தி ஆட்சிமொழி” அமுலாக்கத்திற்கு துணைபோன சம்பவங்களும் உண்டு. கருணாநிதி கழகத்தினர் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை, பக்தவச்சலம் செய்ததைப் போலவே எம்.ஜி.ஆர். கடுமையாக ஒடுக்கினார்.
திராவிட இயக்கத்தின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் மொழி உரிமைத் துரோகம் இன்னும் மோசமானது. 1937ல் இராசாசி தலைமையிலான காங்கிரசு அரசு இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியது. அப்போது ஜனநாயக பூர்வமாகவும், உறுதியாகவும் மக்களைத் திரட்டி கட்டாயப்பாட உத்திரவு விலக்கிக் கொள்ளும்வரை, முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தலைமையேற்று வழி நடத்தியவர் பெரியார் ஈ.வெ.ரா. அதற்காக மூன்றாண்டு சிறைத் தண்டனையும் பெற்றார். அதேபோல, 1946 இல் இரண்டாவது இந்தித் திணிப்புப் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தினார். இந்தி எதிர்ப்புக்குத் தானே முதல் களப்பலியாவதாகவும் அதனால் மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டு கழகத்துக்கு வாரிசாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் கூடச் சொன்னார். ஆனால் இந்தி ஆட்சி மொழியானபோது அதற்கு எதிரான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி தீவிரமாகச் சாடினார்.
(1965 ஜன 25 -பிப் 12) “அண்மையில் நடந்த அராஜக நாசவேலைகள் மொழி பற்றியதல்ல; காங்கிரசுக் கட்சியின் சமதர்மத் திட்டத்தைக் குலைக்கவே “நடந்தவை என்று கி.வீரமணி தலைமையில் கூடிய தஞ்சை மாவட்ட தி.க. செயற்குழு தீர்மானம் போட்டது. “இந்தி எதிர்ப்பு பெயரால் நடைபெற்ற கலவரங்கள், காலித்தனங்களைப் பார்ப்பனர்களும் பணக்காரர்களும் அவர்களது அரசியல் காலிகளும் நாட்டில் அராஜகத்தைக் கிளப்பிவிடவேண்டும் என்ற எண்ணத்தில்கிளப்பிவிட்டதே தவிர மற்றபடி அது மொழி பற்றிய உண்மையான அச்சத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. சமதர்மத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தக் காங்கிரசு ஆட்சியைக் கவிழ்க்கும் உள்நோக்கத்தைக் கொண்டதேயாகும் என்று இக்குழு கருதுகிறது.
“மீண்டும் அம்மாதிரிக் காலித்தனங்களும் கலவரங்களும் வன்முறைகளும் தலைதூக்கினால் அவற்றை சமாளிக்கவும் பொதுச் சொத்திற்கு ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்கவும் அரசாங்கத்தை மட்டுமே நம்பியிராமல், ஆங்காங்கு உள்ளவர்களைக் கொண்டு பொதுச் சொத்துக் காப்புக் கமிட்டி, பொது ஒழுங்கு பராமரிப்புக் குழு போன்றவைகள் அமைத்தல் வேண்டும் என்ற தந்தை பெரியார் அவர்களது அறிவுரையை செயலாக்க கழகத் தோழர்கள் வழிவகை செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறது” (விடுதலை ’65 ஏப் 8)
இதையும் விஞ்சிவிடும் வகையில் திராவிட இயக்கத்தின் தந்தையான பெரியார் ஈ.வெ.ரா இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி அவதூறும் செய்தார் என்பதுதான் மிகவும் வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உரியது. அதற்கு பின்வருவது ஒருசிறு சான்று.
”சமீபத்தில் ஜன 26ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை என்று நினைக்கிறேன்; நாட்டில் மிகப் பெரிய காலித்தனமும் அராஜகமும் நடைபெற்றது. ரயில்நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கோர்ட்டுகள் கொளுத்தப்பட்டன;… எனது வண்டியும் திருச்சியில் தாக்கப்பட்டது. வீதியில் எரிந்து கொண்டிருந்த லைட்டுகள் யாவும் நொறுக்கப்பட்டது…. உங்களிடம் சொல்லப்பட்ட காரணம் எல்லாம் இந்தி ஆட்சி மொழியாகிறது; இனி நீங்கள் உங்கள் மனைவியிடம் இந்தியில் தான் பேச வேண்டும். தாயை மாதாஜி என்றுதான் அழைக்க வேண்டும். அம்மா என்று அழைத்தால் தண்டிப்பார்கள். கடைகளில் சென்று சாமான் வாங்க வேண்டுமானால் இந்தியில்தான் கேட்க வேண்டும். இனி உங்கள் குழந்தைகள் இந்திதான் படிக்க வேண்டும். இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும். வேலையில் உயர்வு வேண்டுமானால் இந்தி படிக்க வேண்டும். இனி இந்தி படிக்காமல் இந்த நாட்டில் இருக்க முடியாது என பல கற்பனை காரணங்களை மாணவர்களிடம் கூறி அவர்களை தூண்டிவிட்டு அவர்களோடு காலிகளையும் கூலிகளையும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவனையும் சமூக விரோதிகளையும் கலக்க விட்டு மாணவர்களின் பெயரை உபயோகப்படுத்திக் கொண்டு இந்தக் காலிகள் செய்தவைதான் இத்தனை நாசமும் சேதமும்; இவைகள் மாணவர்களால் செய்யப்பட்டதல்ல.
ஒரு ஆட்சியைக் கவிழ்க்க மற்ற என்னென்ன காரியங்களை செய்ய வேண்டுமோ அவற்றைத் திட்டம் போட்டு செய்திருக்கிறார்கள். இதை இப்படியே விட்டால் வரும் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் தோல்வியடையும் என்பதோடு காங்கிரஸ் பெயரால் நிற்பவர்கள் தாங்கள் ஜாமீன் தொகையை வாங்குவது கூட சிரமமாக இருக்கும்.
மக்களிடத்திலே அரசாங்கத்திற்கு விரோதமான எண்ணத்தைத் தூண்டி மக்கள் மனத்திலே அரசாங்கத்தின் மீது வெறுப்பு ஏற்படும் படியாக செய்து விட்டார்கள். என்னிடமே சிலர் நீங்கள்தானே முதன்முதலில் 1938-ல் இந்தி கூடாது என்று இந்தி எதிர்ப்பைத் துவக்கினீர்கள்; இப்போது மக்கள் இந்தியை எதிர்க்கத் திரும்பி இருக்கும்போது நீங்கள்- இந்தியை எதிர்க்காமல் ஆதரிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள்.
தோழர்களே, நீங்கள் நன்கு சிந்திக்க வேண்டும்; இந்தியில் உங்களுக்கு வந்த கேடு என்ன? தமிழகத்தில் இந்தி எங்கு வந்திருக்கிறது? எந்தப் பள்ளியில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்கிறது? இந்திப் படித்தால்தான் உத்யோகம் என்று எங்கே இருக்கிறது? இந்தியில் மார்க் வாங்கினால்தான் பரீட்சையில் பாஸ் செய்ய முடியுமென்று எங்கேயாகிலும் சொல்கிறார்களா என்று கேட்டால் இப்படிப்பட்ட கட்டாயம் இல்லாமலே இவ்வளவு தூரம் செய்தார்கள் என்று திருப்பிக் கேட்கிறார்களேயொழிய உண்மை நிலையை இன்னும் மக்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
….இந்தி வந்துவிட்டது என்பதானது (பிசாசு, பேய், பூதம் இருக்கிறது என்பதுபோல்) பொய்மையான, கற்பனையான ஒரு நிலையேயாகும். இதைக்கூறியே மக்களை ஏமாற்றி விட்டார்கள்.
முதல் மந்திரி திரு. பக்தவத்சலானர் கூட நடைபெற்ற கிளர்ச்சி காலித்தனம் இவைகளை செய்தவர்கள், பின்னிருந்து தூண்டிவிட்டவர்கள் பார்ப்பனர் என்று சொல்ல பயப்படுகிறார்கள். கண்ணீர் துளி செய்தான். பணக்காரன் செய்தான். மில் முதலாளி செய்தான் என்றுதான் சொல்கிறாரே ஒழிய பார்ப்பான் செய்தான் என்று சொல்லவே அஞ்சுகிறாரே! அவர் மட்டுமல்ல சாதாரண காங்கிரஸ்காரர்களும் கூட அப்படியே பயப்படுகின்றனர்.
காங்கிரசு போய் வேறு யாராவது வந்துவிட்டுப் போகட்டும் என்கிறார்கள்; இது மாறினால் அடுத்து ஆட்சி க.து.விடம் போனாலும் அணார்க்கிஷம் வந்தாலும் பரவாயில்லை. எப்படியாவது போகட்டும். இந்த ஆட்சிப் போனால் அடுத்தது வருவது பார்ப்பானுடைய ஆட்சியாகத்தானிருக்கும். பார்ப்பான் வரவில்லை என்றாலும் அவனுடைய அடிமைகளே அவன் சொல்படி ஆட்சி செய்வான். கண்ணீர்த் துளியின் மூலவரான அண்ணாதுரை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இராஜாஜியின் சொற்படி அவர் அறிவுரைப்படிதான் ஆட்சி நடத்துவோம் என்று சொல்லியிருக்கிறார். காங். ஒழிந்து விட்டது என்று கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்கள்! என்ன நேரும். அடுத்து மனுதர்ம (ஆச்சாரியாரின்) ஆட்சிதானே வரும். மக்களுக்குப் பாதுகாப்பே இருக்காதே!
தோழர்களே, உங்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.1857-ல் நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்கும் தற்போது இந்தியின் பெயரால் நடைபெற்ற கலவரம், காலித்தனங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. சிப்பாய் கலகத்தைத் தூண்டி விட்டவன் பார்ப்பான். இதை நான் சொல்லவில்லை. அண்ணாமலை பல்கலைக் கழகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கும் “இந்திய வரலாறு” என்ற புத்தகத்தில் இருக்கிறது. அதை எழுதியவன் பார்ப்பான் தான். அவனால்

உண்மையை மறைக்க முடியவில்லை. வெள்ளைக்காரன் பள்ளிக்கூடம் வைக்கிறான். மூட நம்பிக்கை செய்கைகளை தடைசெய்கிறான். பெண்களையெல்லாம் படிக்க வைக்கிறான். கல்வியை வளர்க்கிறான். இது பார்ப்பன சமுதாயத்தை அழிக்கும் என்று எண்ணி சிப்பாய்களிடம் பொய்யான, சமூக விரோதமான மத விரோதமான, கருத்துக்களை சொல்லித் தூண்டினானோ அப்படியே தான் தற்போது காமராசர் வந்ததும் மிக வேகமாக யாருமே நினைத்துப் பார்க்கக் கூட முடியாத வகையில் நடப்பதற்கு எங்கு பார்த்தாலும்… (காமராஜரின் கல்விப் பணி விளக்கப்படுகிறது – கட்டுரையாளர்)… தமிழகத்தில் இல்லாத இந்தியை இருப்பதாகச் சொல்லி இந்தக் கலவரத்தைத் தூண்டினான்.
முன் நடந்த சிப்பாய் கலகத்திலும் பார்ப்பான் எவனும் பாதிக்கப்பட்டவில்லை. தற்போது நடைபெற்ற இந்தக் கலவரத்திலும் பார்ப்பான் ஒருவன் கூட ஒரு சிறிது கூடப் பாதிக்கப்படவில்லை. செத்தவர்கள் அனைவரும் நம் தமிழ்மக்களே! நாசமடைந்த சொத்துக்கள் யாவும் தமிழர்களின் சொத்துக்களே!”
மொழிப் போராட்டம் முடிந்து 19-4-65 அன்று பெரியார் ஈ.வெ.ரா. காரைக்குடியில் ஆற்றிய உரை இது. போராட்டத்துக்கு முன்னும் பின்னும் அதை எதிர்த்து பெரியாரும் வீரமணியும் அவர்தம் கழகமும் செய்த “துரோகத்தனங்கள்” வெளியே தெரியக்கூடாது என்று அப்போதைய “விடுதலை” இதழ் தொகுதி எண் 1 பெரியார் நூலகத்தில் இருந்து அகற்றப்பட்டிருக்கிறது.
அரசியல் ஆதாயம் கருதி ஒரு ஆட்சியை ஆதரிப்பது என்று முடிவு செய்தால் அதற்கு எதிரான, எல்லா போராட்டங்களையும் கொச்சைப்படுத்தி, பார்ப்பன முத்திரை குத்தி இழிவு படுத்துவதும் அவதூறு செய்வதும் பெரியாருடைய, அவரது வழியில் வீரமணியுடைய நடைமுறையாக உள்ளது. முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் முதல் இறுதிக் கட்ட சுதந்திர எழுச்சி வரை அனைத்தையும் இந்த வகையில்தான் பெரியார் அணுகினார். இதே அணுகுமுறைதான் இந்தி எதிர்ப்புப் போரின் போதும், கருணாநிதி அரசை எதிர்த்த நச்சல்பாரிப் புரட்சியாளர்களிடமும் பெரியார் மேற்கொண்டது; இன்று ஜெயலலிதாவின் பார்ப்பன – பாசிச ஆட்சியை எதிர்ப்பவர்களிடம் வீரமணி மேற்கொள்வது.
இன்றைய தலைமைத் தேர்தல் அதிகாரி சேஷன் அடிப்படையில் ஒரு பார்ப்பன-பாசிஸ்டு; இன்னொரு ஜெயலலிதா: இன்னொரு எம்.ஜி.ஆர் என்றும் கருதலாம். அவர் மதுரை மாவட்ட ஆட்சியாளர் என்கிற முறையில் “ஒரு தோட்டா கூட வீணாகக் கூடாது; ஒவ்வொரு தோட்டாவும் ஒரு தமிழனை பலி வாங்க வேண்டும்” என்று அன்று நேரடி எதிரியாக நின்று மொழி உரிமைப் போராட்டத்தை ஒடுக்கியவர்; இன்று அதைக் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துகிறார். அவர் தமிழ் மக்களின், மொழியின் எதிரி என்பது பகிரங்கமாகத் தெரிகிறது. ஆனால் தமிழர் தன்னுரிமைக்கும், தமிழ்மொழிக்கும் தொடர்ந்து துரோகம் செய்து வரும் இந்தத் திராவிட இயக்கத்தவரை என்ன சொல்வது: என்ன செய்வது என்று தமிழினம் ஒரு இறுதி முடிவு செய்திட வேண்டும்.
- ஆர்.கே. – (புதிய ஜனநாயகம் – 15 ஜனவரி 1995)
பெரியாரை பெரியார் என்று அழைக்காமல் ஈவேரா என்று அழைப்பது சங்கிகளின் வேலை அதனை புதிய ஜனநாயகமும் செய்துள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கிறது