நான் கற்றறிந்த மார்க்ஸ்

நாம் ஒரு படம் பார்க்கிறோம் என்று வைத்துகொள்வோம். படத்தில் வரும் கதாபாத்திரம் அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்க்கும் போதோ, அநியாயத்தை எதிர்க்கும் போதோ  நாம் அதிகமாக ரசிக்கிறோம்.  நிஜத்தில் செய்ய முடியாது என்று நாம் நினைக்கும் ஒன்றை ஒரு கதாபாத்திரம் செய்யும் போது நன்றாக இருக்கிறது. சரி நிஜத்தில் ஏன் செய்ய முடியவில்லை? அதிகாரத்தை கேள்வி கேட்டால் என்னவாகும்? எப்படியெல்லாம் எதிர்ப்பு வரும? என்ற ஒரு வகை பயம் கூட காரணமாக இருக்கலாம்.

நிஜத்தில் அதிகாரவர்க்கத்தைக் கேள்விக்குள்ளாக்கியவர்கள் வரலாறு நெடுக தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் காரல் மார்க்ஸ். அதிகாரத்தை எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டும் என்ற சிந்தனை மார்க்ஸுக்கு கலை மற்றும் இலக்கியத்தில் இருந்துதான் வந்தது.

மார்க்ஸ் ஆசிரியராகப் பணியாற்றிய ரைன் பத்திரிக்கை தடை செய்யப்படும் வரை அவர் ஒரு லிபரலாக தான் இருந்திருக்கிறார்.  இந்த காலகட்டத்தில் காட்டில் விறகு சேகரிப்பதை தடை செய்தது பிரஸ்ஸிய (பழைய ஜெர்மனி) அரசு. அனைவருக்கும் பொதுவான அரசு எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்து நிலையில் தான் விறகு சேகரிக்கும் மக்களுக்கு எதிரான புதிய சட்டங்களை சாடி எழுதியிருப்பார்.

அதற்கே பத்திரிக்கை தடை செய்யப்படும்போது தான் தன்னுடைய முந்தைய நிலைப்பாட்டை மாற்றியிருப்பார். அதாவது, அரசு அனைவருக்கும் பொதுவானது என் கருத்து முதல்வாதியாக தான் இருந்ததாக கூறுவார்.

உதாரணமாக நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் மாறிவிடும் எனக் கருதிக் கொண்டிருக்கிறோம். வர்க்கங்களைப் பற்றிய வரலாற்றில் அரசு எந்த வர்க்கத்துக்கு ஆதரவாக நின்றது என்பது தெரியாததால் மேற்கண்ட சிந்தனை வருகிறது. ஒரு அரசு அதிகாரியின் நடவடிக்கை என்பது அவரது குணாம்சத்தை சார்ந்தது அல்ல.  நிலவும் சமூக அமைப்பைப் பொருத்ததுதான் என்று பிற்காலங்களில் முடிவு செய்தார்.

இந்த சமயத்தில் அவரது சுதந்திர உணர்வை மேலும் விரிவுபடுத்தியது தத்துவஞானம்தான். இதுவரையில் இருந்த தத்துவ ஞானிகள் உலகத்தை வியாக்கியானம் செய்தார்கள். ஆனால், முதன் முதலில் மாற்றி அமைப்பது பற்றி யோசித்தவர்கள் காரல் மார்க்ஸ் மட்டுமே. மார்க்ஸை பற்றி முக்கியமான விசயம் தன்னுடைய கருத்து தவறு என்று தெரியவரும்போது உடனடியாக மாற்றிக்கொள்வார். இந்த நிலையில் தத்துவஞானம்தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே உள்ள பொதுவான தொடர்பை விளக்கி,  நாம் பெரிதாக கருதக்கூடிய பிரச்சனைகளுக்கு எப்படி பொருளியல் அடிப்படை காரணமாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முற்படுகிறார்.

பலராலும் அறியப்பட்ட புரோதானின் பொருளாதார கொள்கையில் உள்ள போதாமையை அறிந்து அதற்காகவே ஆய்வு செய்து வறுமையின் தத்துவம் என்ற புரோதானின் புத்தகத்திற்கு மறுப்பாக தத்துவத்தின் வறுமை என்ற புத்தகத்தை எழுதுகிறார்.

எதேச்சதிகார முடியரசை நோக்கிய அவரது கேள்வி தவிர்க்க முடியாமல் தனிசொத்துடைமையையும் கேள்வி எழுப்பியது.  ஒருவரின் அரசியல் வாழ்க்கை மனித் தன்மையுடையதாக மாறுவதற்கு மன்னராட்சி ஒழிப்பு மட்டும் போதாது. சமூகத்தில் வர்க்க வேற்றுமைகள், அதனால் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் சமத்துவமின்மை, இந்த சமத்துவமின்மையின் மீது கட்டப்பட்ட மொத்த கூம்பு வடிவ அதிகாரவர்க்கத்தையும் தகர்க்க வேண்டும் என்று நிறுவுகிறார். முடியரசுக்கு எதிரான அவரது விமர்சனம் தவிர்க்க இயலாமல் முதலாளித்துவ ஜனநாயகத்தை கேள்வி எழுப்பியது. சுருக்கமாக பாராளுமன்றத்தை, முதலாளிகளின் வேலைகளை செய்து கொடுக்கும் காரியக் கமிட்டி குழு என்று சாடியிருப்பார். இந்த காலகட்டத்தில்  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் விழுமியங்களாக மாறியிருந்தது.  வர்க்க சார்பான சமூகத்தில் இந்த விழுமியங்கள் அதன் உண்மையான பொருளில் இருக்கமுடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

மார்க்சின் பயணம் ஒரு பக்கம் தணிக்கை அதற்கெதிரான போரட்டம், அடக்குமுறை, நாடு கடத்தப்படுதல் (மேற்கு ஐரோப்பா முழுவதிலும்) இதற்கு மத்தியில் தத்துவ ஆராய்ச்சி, அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசத்தின் கோட்பாட்டு உருவாக்கம், தொழிலாளர் போராட்டம் மற்றும் புரட்சிகளில் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தி செழுமைப்படுத்தினார்.

முதலாளித்துவம் பண்டங்களோடு வறுமையையும் உற்பத்தி செய்கிறது. இதனால், பெரும்பான்மையான மக்கள் சொந்தவாழ்க்கையை நடத்துவதற்கே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் உழைப்பில் இருந்து அந்நியமாதல், சமூகத்தில் இருந்து அந்நியம் ஆகிறார்கள். மனிதகுல ஆற்றல் விரையமாகிறது. தேவைக்கான உற்பத்தி என்ற நிலை மாறினால் தான் இந்த மீளா சுழற்சியில் இருந்து விடுபட முடியும். ஒட்டுமொத்த மனித ஆற்றல் மொத்த சமூகத்தையும் மேம்படுத்த உபயோகப்படுத்த முடியும்.

  • சீராளன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன