நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ரோஸ்மேரி என்கிற தனியார் பள்ளியில், 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், சக மாணவரை அறிவாளால் வெட்டியுள்ளார். தடுக்க வந்த சமூக அறிவியல் ஆசிரியையையும் தாக்கியுள்ளார். மாணவர் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இதுவரை பழகி வந்துள்ளனர். பென்சில், பேனா வாங்கும் போது கூட இருவரும் ஒரே மாதிரியான, ஒரே நிறத்தில் வாங்குவது வழக்கம். இந்த அளவுக்கு நகமும், சதையுமாக இருந்த மாணவ நண்பனை, தொலைந்த பென்சிலுக்காக, பலி வாங்கும் எண்ணத்துடன் புத்தகப் பையிலையே அறிவாளை வைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். அந்தளவுக்கு இந்த வன்மம் வளர்வதற்கு என்ன காரணம்?
ஊடகங்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை மாணவர்களின் பெற்றோர்களையும், பள்ளி ஆசிரியர்களையும் வசை பாடுகின்றனர். ஒரு வகையில் பெற்றோர்கள் அன்றாடம் தங்கள் பிள்ளைகளின் புத்தகப் பைகளை, உடுப்புகளை அவ்வப்போது சோதிப்பதும், அவர்கள் வளர்ப்பில் கவனம் செலுத்துவதும் அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை. இது அவர்களைக் கண்காணிப்பில் வைத்து கெட்ட பழக்க வழக்கங்களுக்கு ஆளாகாமல் தடுக்க உதவும். ஆனால், ஆசிரியர்கள் அவர்கள் புத்தகப் பையை, உடுப்புகளை அன்றாடம் சோதித்துக் கொண்டிருக்க முடியாது. சந்தேகத்தின் பெயரில் வேண்டுமானால் எப்பொழுதாவது ஒருமுறை சோதிக்கலாம். தினசரி என்பது சாத்தியமில்லை. அப்படி மேற்கொள்ளும் பட்சத்தில் வகுப்பறையே சிறைக்கூடம் ஆகிவிடும்.
இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு இதே மாவட்டத்தில் நான்குநேரி பகுதியில் +2 மாணவர் சின்னத்துரை சக மாணவரால், கடந்த 2023-இல் ஜாதி வெறியால் தாக்கப்பட்டுள்ளனர். மீண்டும் தற்போது தாக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இதில் குடும்பமே வெட்டிய மாணவனுக்கு ஆதரவாக இருந்து செயல்பட்டுள்ளது. இதிலிருந்து ஜாதி வெறி என்பது குடும்பத்தில் இருந்து தொடங்கி சமூக முழுவதும் நிலவி வருவது, மேலும், மேலும் உறுதியாகி விடுகிறது.
நகமும், சதையுமாய் பழகி வந்த சக மாணவன், ஆசானாக இருந்து போதித்து வந்த ஆசிரியர் என்பதைக் கூட மறந்து, அற்ப பென்சிலுக்காக அறிவாளால் வெட்டும் அளவிற்கு வன்மம் எங்கிருந்து வந்தது? எல்லாம் இந்த சீரழிந்த சமூகத்தின் விளைவே. செல்போன்கள், சினிமாக்கள், சீரியல், இணையம், சமூக வலைதளம் போன்ற ஊடகங்கள் பிஞ்சுகளின் நெஞ்சுகளில் விதைத்து வரும் ஜாதி, மத, இன விரோத விச வித்துக்களுமே பிரதான காரணங்களாக உள்ளன.
இவை குறித்து எவ்விதப் பரிசிலனைக் குள்ளும் போகாமல், அப்பகுதியைச் சார்ந்த மக்கள் பிரதிநிதியான ‘தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இவற்றை அரசியலாக்கி ஆதாயம் அடைய எத்தனிக்கிறார்‘. அதாவது, பள்ளி சிறுவர்கள் பைகளிலும் ஆயுதங்கள் புழங்கும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது ஆபத்தானது‘ என்று பிதற்றுகிறார்.
இந்த அளவிற்கு இளம்பருவத்தினர் நெஞ்சுகளில் பலி வாங்கும் வன்மம் வளர்வதற்கு இவரும், இவர் அங்கம் வைக்கும் ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற பாசிச நிறுவனங்களுமே பிரதான காரணம் என்பதை நாணயம் இருந்தால் ஒப்புக்கொள்ள வேண்டும். இவர்களைப் பொருத்தவரை இது ஒரு செலெக்ட்டிவ் அம்னிசியா.
ஜாதி, மத, இன வெறுப்பு அரசியலை ஒன்றியம் முழுவதும் சகாக்கள் மூலம் இவர்கள் நடத்தும் சனாதனப் பள்ளி, கல்லூரிகள் மூலமும் அரங்கேற்றி வருகின்றனர். மேலும், இஸ்லாமியர்கள் மீதும், தலித் மக்கள் மீதும் வெறுப்பு அரசியலை விதைத்து நாட்டையே இரத்தக்களரியாக்கி, ஜனநாயகப் பண்பை சிதைத்து வருகின்றனர். இதற்கு அடிநாதமாக விளங்குவதே காவி – கார்ப்பரேட் பாசிசம். இதை தமிழகத்தில் வேருன்றவிடாமல் பிடுங்கி எரியும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
இதன் மூலமே, ஜனநாயகப் பண்பை வளர்த்து, அவற்றை வழக்கமாக்கி, ஜாதி, மத, இன மோதல் இல்லாமல் வாழ முடியும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழக்கூடிய, மதித்து வாழக்கூடிய ஜனநாயகப் பண்பில் ஒரு இணக்கமாக தமிழகத்தை மாற்றி அமைக்க முடியும்.
இதற்கான போராட்டத்தை இன்றிலிருந்தே, அதுவும் அவரவர் குடும்பங்கள், நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களிடம் இருந்து தொடங்குவோம். தமிழகத்தை பகுத்தறிவு பாசறையாக மாற்றியமைப்போம்.
- மோகன்