கனிமவளக் கொள்ளை:
மறுகாலனியாதிக்கத்தின் கீழ் வேட்டைக்காடாகும் தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள்!

பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நாட்டின் பொதுச் சொத்துக்களை ஏன் தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்ற மையமான கேள்வியை விட்டுவிட்டு, அதில் அம்பலமாகும் ஊழல் முறைகேடுகளை மட்டும் பெரிதாக்கிக் காட்டியும், அரசு நடவடிக்கை எடுப்பதாகப் பரபரப்பூட்டியும் மக்களைத் திசை திருப்பும் பணியைத்தான் ஊடகங்களும் அரசும் செய்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் தண்டகாரண்யா பகுதிகளில் உள்ள கனிமவளங்களை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு எதிராகப் பழங்குடி மக்களும், மாவோயிஸ்ட்டுகளும் போராடி வருகிறார்கள். போராடுகின்ற அம்மக்களையும், மாவோயிஸ்ட்டுகளையும் விரட்டியடிப்பதற்காக இந்திய அரசு, ஆபரேசன் காகர் எனும் உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. ஆபரேசன் காகரின் நோக்கம் குறித்து அமித்ஷா கூறும் போது  நாட்டின் பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் அப்பகுதியை முன்னேற்றவும், வளர்ச்சித் திட்டங்களை அமலாக்கவும் தடையாக உள்ள மாவோயிஸ்ட்டுகளை ஒழித்துக் கட்ட வேண்டும்” என்கிறார்.

என்னென்ன வளர்ச்சித் திட்டங்கள்? யாருக்கான வளர்ச்சித் திட்டங்கள்? என்ற கேள்விகளுக்கான பதிலை ஆளும் வர்க்கம் ஒருபோதும் நாட்டு மக்களுக்கு  சொல்லப்போவதில்லை.

தண்டகாரண்யா பகுதிகளில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இயற்கையாக அமைந்திருக்கும் நிலங்களைப் பிளந்தும், மலைகளை தகர்த்தும் தோண்டியெடுக்கப்படும் இரும்புத்தாது, பாக்சைட், கிராணைட், மார்பிள்கள், கட்டிடப் பயன்பாட்டு கற்கள் போன்ற தாதுக்கள் மற்றும் கனிமங்கள் மூலம் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிக்கின்றனர்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய தாராளாவாதக் கொள்கைப் புகுத்தப்பட்ட பின் ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதாரத்தோடு இந்தியாவை இணைப்பதன் மூலமே நாடு வளர்ச்சி அடையும் என்று ஆளும் வர்க்கங்கள் பிரச்சாரம் செய்தன. ஆனால் புதிய தாராளாவாதக் கொள்கைகள், திட்டங்களுக்குப் பிறகு உலக மேல்நிலை வல்லரசுகள், சர்வதேசியமான நிதிமூலதனம், பன்னாட்டு தொழிற்நிறுவனங்கள், இந்திய தரகு முதலாளிகள் ஆகியோரின் தடையற்ற சுரண்டலுக்காக நாட்டின் இயற்கை வளங்கள் பல இலட்சம் கோடி ரூபாய் அளவில் கொள்ளை போகின்றன. மலைகளிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட பாறைகளும், கடற்கரை மணலும் அப்படியே பார்சல் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதைத் தான் வளர்ச்சி என்கிறது ஆளும் வர்க்கம்.

இந்திய சுரங்க அமைச்சம் வெளியிட்ட இந்திய கனிமங்கள் பற்றிய ஆண்டறிக்கை 2023-ன் படி  2022-23 ஆண்டில் மட்டும் நாட்டின் கனிமங்கள் மற்றும் தாதுக்களின் மொத்த ஏற்றுமதி மதிப்பு ரூ.2,42,326 கோடியாகும். இதில் கட்டுமான மூலப் பொருட்களான கிராணைட் மட்டும் 5.18% அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.

நாட்டின் கனிமங்கள் பெரும்பாலும் அமெரிக்கா (28.45%) ஹாங்காங் (18.84%) அரபு எமிரேட்ஸ் (8.82%) பெல்ஜியம் (8.62%) சீனா (8.32%) இஸ்ரேல் (4.09%) போன்ற நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுவதாக இவ்வாண்டறிக்கை கூறுகிறது.

தனியார்மயத்திற்கு பின்பு கட்டுமானத்துறையின் வளர்ச்சி ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் ஒருபகுதியாக M-சாண்ட், கிராணைட், மார்பிள் இன்னும் பிற கட்டுமான கற்களை வெட்டி எடுக்கும் கல்குவாரி தொழில் பல்லாயிரக்கணக்கான  கோடி ரூபாய் மதிப்பில் வளர்ந்து நிற்கிறது. இத்துறையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக கல்குவாரிகள் கனிம வளமிக்க பகுதிகளை விலைக்கு வாங்கியோ, குத்தகைக்கு எடுத்தோ  கட்டுமான மூலப் பொருட்களை வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்வது தனியார்மயத்தின் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆட்சியிலிருக்கும் அரசு மற்றும் அதிகார வர்க்க உறுப்புகளின் துணையுடன் இக்குவாரிகளை வைத்திருக்கும் கோடீஸ்வரர்கள் நாட்டின் இயற்கை வளங்களை நாசப்படுத்தி வருகிறார்கள்.

2022-23 ஆம் ஆண்டில் மட்டும் கட்டுமானத் தொழிற்துறையின் மூலப்பொருட்களான கிராணைட், மார்பிள், சாண்ட்ஸ்டோன் பிற கட்டிடக் கற்கள் கனிமங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட் போன்றவை ரூ 18,242 கோடி அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.

இப்பூமியிலுள்ள கனிம வளங்கள் அரசுக்கு அதாவது மக்களுக்குச் சொந்தமானது என்பது மறுகாலனியாக்கத்திற்கு முன்பு வரை பொது நியதியாக இருந்தது. ஆனால் அரியவகைக் கனிமங்கள் குறித்த விதிகள், மறுகாலனியாக்கத்திற்கு ஏற்ப நாடு முழுவதும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மறுகாலனியாதிக்க கொள்கையின் கீழ் தமிழகத்தின் இயற்கை வளத்தை இங்குள்ள குவாரிகள் எப்படி அழித்து வருகிறது என்பது ஒரு துலக்கமான எடுத்துக்காட்டாக இருக்கிறது.

தமிழகத்தில் புதைந்திருக்கும் கனிமங்களை பிரித்தெடுத்து அதன் மூலம் வரும் வருவாய் இலக்கை 2024-25 ஆண்டில் ரூ.2100 கோடியாக தமிழக அரசு நிர்ணயித்திருக்கிறது. சுரங்கத்தொழில் மூலம் கனிமங்களை பிரித்தெடுப்பதற்காக 21,550 ஏக்கர் பரப்பளவில் 2931 குத்தகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.  கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விமுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களின் மலைகளை வெட்டியெடுத்து கிராணைட் ஏற்றுமதி செய்யும் தொழிலில் உலக அளவில் தமிழகம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

மாநில அரசின் தரவுகளின் படி தமிழகத்தில் 1900 குவாரிகள் மற்றும் 300 கிரஷர்கள் சட்டப்பூர்வமாக செயல்பட்டு வருகின்றன. இதைத் தவிர சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகளின் மற்றும் கிரஷர்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை.

குவாரிகளின் உரிமையாளர்கள் திமுக, அதிமுக கட்சிகளின் செல்வாக்குடனும், துணையுடனும் தான் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை அனைவரும் அறிவர். மதுரை மாவட்டத்திலுள்ள குவாரிகளில் நடைபெற்ற இலட்சக்கணக்கான கோடி ரூபாய் முறைகேட்டைப் பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளித்த முன்னாள் ஆட்சியர் சகாயம், சமீபத்தில் நீதிமன்றத்திற்கு நேரில் வரும்படி உத்தரவிட்டபோது, நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்க வரும் வழியில் தான் கொலை செய்யப்படலாம் என்று கூறியிருக்கிறார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் பகாசுர குவாரி உரிமையாளர்கள் அந்தப் பகுதிகளில் தனி அரசாங்கமே நடத்தி வருகின்றனர் என்பதே உண்மை. தமிழகம் முழுவதும் 38 கருப்பு கிராணைட்டுகள், 74 வண்ண கிராணைட்டுகள் முதலான அரியவகை கனிமங்கள் கிடைக்கின்றன. மலையிலிருந்து வெட்டியெடுத்து அவற்றை பிரித்தெடுத்தும், அப்படியே கற்களாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தான் இக்குவாரி உரிமையாளர்களின் தொழில். ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை, மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், போக்குவரத்துச் சட்டம், வெடிப்பொருள் சட்டம், பல்வேறு துறைகளின் விதிகள், கட்டுப்பாடுகளையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டும், கிராணைட் மலைகளையும் அதையொட்டியுள்ள பகுதிகளையும்  தனது பண பலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமித்து கிராணைட் கொள்ளையை இக்கும்பல் நடத்தி வருகிறது.

தன்னுடைய சாதியினரை அடித்தளமாகக் கொண்டு கிராம மக்களை சாதி ரீதியாக பிரித்து கோயில் விழாக்களை முன்நின்று நடத்தி தன் செல்லவாக்கை நிலைநாட்டுகிறார்கள் என்கிறார் சுற்றுப்புற சூழல் செயற்பாட்டாளர் முகிலன். எல்லா ஊர்களிலும் பிழைப்புவாதிகளை கையாள்களாகக் கொண்டு குவாரி உரிமையாளர்கள் தமது மாஃபியா சாம்ராஜயத்தை நடத்தி வருகிறார்கள். இச்சூறையாடலை யாராவது எதிர்த்தால் அடுத்த சில நாட்களிலேயே அவர்களைத் தாக்குவதும், கொலை செய்வதும் நடக்கும்.  இதனால் உயிருக்கு அஞ்சி பல குடும்பங்கள் ஊரை விட்டே ஓடி விட்டன. பண பலம், சாதிய பலம், அதிகார பலத்தைக் கொண்டு இவர்கள் நடத்திவரும்  சூறையாடல்கள் கேள்வி முறையின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைப்பெற்று வந்த குவாரி முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜக்பர் அலி எனும் சமூக ஆர்வலர் விபத்து என்ற பெயரில் பல டன்கள் சுமையை ஏற்றி வந்த லாரி மூலம் கை, கால், தொடைகளில் டயர் ஏற்றப்பட்டு சிறுநீரகங்கள் நசுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இவர் இப்பகுதியில் இயங்கி வரும் குவாரிகள் ஆண்டுக்கு 6 இலட்சம் கனமீட்டர் கற்களை வெட்டியெடுப்பதற்குப் பதிலாக 63 இலட்சம் கனமீட்டர்  கற்களை வெட்டியெடுக்கிறது என்பதையும், பல சட்டவிரோத குவாரிகளையும் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருந்தார்.

ஜக்பர் அலி மட்டுமல்ல, தமிழ்நாட்டில் கல், கிரானைட், ஆற்று மணல் அல்லது கடற்கரை மணல் என அனைத்து பிரிவுகளிலும் சுரங்கத்தை எதிர்க்கும் ஆர்வலர்கள், தகவல் தெரிவிப்பவர்கள் அல்லது அதிகாரிகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் குவாரி விபத்துக்கள் பல டன் லோடு ஏற்றப்பட்ட குவாரி லாரிகளால் ஹிட் அண்டு ரன் என்ற முறையில் நடைபெறுகின்றன.

கரூரில் ஜெகநாதன் எனும் விவசாயி, திருநெல்வேலியின் காவல்கிணற்றில் மணி என்ற  சமூக ஆர்வலர், , காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழையசீவரம் அருகே வருவாய் ஆய்வாளர் ஆர். சண்முகசுந்தரம். , காஞ்சிபுரத்தில் உள்ள எருமையூரில் தாசில்தார். புண்ணியக்கொடி, தக்கோலம் போலீசு ஜி. கனகராஜ், திருக்கழுக்குன்றம் துணை தாசில்தார் ஆர். வெங்கடேசன் ஆகியோர் லாரி ஏற்றி விபத்து என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலையின் சுற்றுச்சூழல் ஆர்வலர் பி. தமிழ்செல்வன் மீது இரும்புக் கம்பி கொண்டு தாக்குதல், ,2014 செப்டம்பரில் புதுக்கோட்டையில் ஆவுடையார்கோயில் தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நான்கு உதவியாளர்கள் மீது விபத்து மூலம் கொலை முயற்சி, ஸ்ரீவைகுண்டத்தின் கிராம நிர்வாக அதிகாரி  லூர்து பிரான்சிஸ் மணல் மாபியாவால் படுகொலை என  மாநிலம் முழுவதும் இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இத்தகைய கொலைகள் மற்றும் குவாரிகள் மீதான புகார்கள், இழப்பீடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கணக்குக் காட்டும் நோக்கத்தில் கண்துடைப்பு விசாரணை, ஆய்வு  நடத்துவதென்பது வழக்கமான அதிகார வர்க்கச் சடங்கு. குவாரிகளில் முறைகேடுகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

ஆனால் ஜக்பர் அலியின் கொலைக்குப் பிறகுதான் குவாரிக் கொள்ளை பற்றி தெரிய வந்தது போல சட்டவிரோத குவாரிகள் குறித்து விசாரிக்க டிரோன்கள் மூலம் குவாரிகளை அளவீடும் பணியை துவக்கியும், ஜக்பர் அலி கொலை விசாரனையை சிபிசிஐடிக்கு மாற்றியும் தன்னை யோக்கியனாக காட்டிக் கொள்ள முயல்கிறது மு.க. ஸ்டாலின் அரசு. இன்று நேற்றல்ல, பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இப்பகற்கொள்ளை பற்றி பல்வேறு தரப்பினரும் அரசிடம் முறையிட்டுள்ள போதிலும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தமிழகத்தை பொறுத்தவரையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பகாசுர கம்பெனிகள் கொள்ளை அடிக்க  இயற்கை வளங்களை வாரி வாரி வழங்கப்படுகின்றன. இயற்கை வளங்களை பகற்கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கும் ஒரு கருவியாகத் தான் திமுகவும், அதிமுகவும் பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது.

குவாரிகள் எல்லையைத் தாண்டி கிராணைட்டை வெட்டி எடுத்துள்ளதா? அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிகமாக தோண்டியுள்ளதா? வெடி பொருட்கள் பயன்பாடு, டிப்பர் லாரிகளின் போக்குவரத்து விதிமீறல்கள், குவாரிகளில் வெட்டப்படும் கனிமங்களை அளக்கும் முறை போன்ற முறைகேடுகளைப் பற்றி தான் ஆய்வு நடத்தப்படுகின்றன. அனுமதி பெறாத இடத்தில் நடைபெறும் சட்டவிரோத குவாரிகளின் சூறையாடல்களைப் பற்றியோ, சட்டவிரோத கடத்தல் பற்றியோ எவ்வித விசாரணையுமில்லை.

இருப்பினும், இத்தனியார் குவாரிகளில் அரசு அமைக்கும் ஆய்வுக் குழு கறாராக விசாரணை நடத்துவதன் மூலம் இவைகள் நெறிமுறைப்படுத்தப்படும் என  ஊடகங்கள் பரபரப்பூட்டுகின்றன. கிராணைட் குவாரிகள் உள்ளிட்டு, பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நாட்டின் பொதுச் சொத்துக்களை ஏன் தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்ற மையமான கேள்வியை விட்டுவிட்டு, அதில் அம்பலமாகும் ஊழல் முறைகேடுகளை மட்டும் பெரிதாக்கிக் காட்டியும், அரசு நடவடிக்கை எடுப்பதாகப் பரபரப்பூட்டியும் மக்களைத் திசை திருப்பும் பணியைத்தான் ஊடகங்களும் அரசும் செய்து கொண்டிருக்கின்றன. சகாயம் போன்ற முன்னாள் அதிகாரவர்க்கத்தினர் கூட தனியார்மயத்தை பற்றி கேள்வி எழுப்புவதில்லை.

திருநெல்வேலியில் வைகுண்டராஜனின் தாதுமணல் கொள்ளை, மதுரை  பி.ஆர்.பி கிராணைட் கொள்ளை, கர்நாடகா ரெட்டி சகோதர்களின் இரும்பு கனிமவளக் கொள்ளைகளை போலவே தமிழகமெங்கும் சுரங்க மாஃபியாக்கள் கனிம வளங்களை கொள்ளையடித்து வருகின்றனர். பொதுச் சொத்தான கனிம வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் இத்தகைய மாஃபியாக்களின் – கார்ப்பரேட் முதலாளிகளின் தனிச்சொத்தாக மாற்றும் தனியார்மயக் கொள்கைதான் இவை அனைத்துக்கும் அடிப்படை.

இக்கனிமச் சுரங்க மாஃபியாக்கள் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது போலவே சோலார் ஆலைகள் அமைக்க, பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துதல், மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் பன்னாட்டு கம்பெனிகள் தொடங்க என விளைநிலங்கள், புறம்போக்கு நிலங்களை வாங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், சொத்துபத்திர அலுவலர்கள், ஓட்டுக் கட்சி பிரமுகர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆகியோர் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். அரசே இதை ஊக்குவிக்கிறது.

மறுகாலனியாதிக்க கொள்கைகளுக்கு பிறகு இது போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நிலங்களையும் மலைகளையும் வாங்கி தரும் புரோக்கராக  அரசு நிறுவனங்கள் செயல்படுகின்றன. டாடா சோலார் ஆலை அமைப்பதற்கு எதிராக தென்கலம் கிராம மக்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய போது அங்கு வந்த தாசில்தாரும், கிராம நிர்வாக அலுவலர்களும் அம்மக்களிடம் பேச்சுவார்த்தைக்கு கூட செல்லாமல் ஆர்ப்பாட்டத்தைப் புகைப்படம் எடுத்துச் சென்றிருக்கின்றனர். இந்த சேவைக்காக பகாசுர முதலாளிகள் அடிக்கும் பகற்கொள்ளையில் பங்கை பெறுவதற்காகவே திமுகவும், அதிமுகவும் தங்களுக்குள் போட்டி போடுகின்றனர்.

மறுகாலனியாதிக்கம் ஓட்டுக் கட்சித் தலைவர்களையும் முதலாளிகளாக மாற்றியிருக்கிறது என்பதற்கான உதாரணம் தான்  தமிழக அதிமுக திமுக அரசியல் கட்சித் தலைவர்களின் உறவினர்களே இக்கனிமவள சுரங்கங்களை நடத்தி கொள்ளையடிக்கின்றனர். இதனால் இவர்கள் நேரடியாக சுரண்டுபவர்களாகவும், மக்களை ஒடுக்குபவர்களாகவும் இருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட ஜக்பர் அலி அதிமுகவை சார்ந்தவர். அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர்கள் தான் அம்மாவட்டத்தில் குவாரி தொழிலை நடத்தி வருகிறார்கள். திமுகவை சார்ந்த அழகிரி மகன் துரை தயாநிதி குவாரி தொழிலில் ஈடுபட்டு வந்தது ஊரறிந்த உண்மை.

இப்படி அரசியல்வாதிகள், சுரங்க மாஃபியாக்கள், பன்னாட்டு கம்பெனிகள் நாட்டின் இயற்கை வளங்களை கூட்டுச் சேர்ந்து கொண்டு சட்டப்பூர்வமாகவே பகற்கொள்ளையடிப்பது அதிகரித்து வருகிறது.

இதனை தடுத்து நிறுத்த ஜக்பர் அலி போன்ற ஒரு சில நேர்மையானவர்கள் இருந்தால் மட்டும் போதாது. நம்மை ஆண்டு கொண்டிருப்பது ஆட்சியாளர்களும், ஆளும் வர்க்கங்களும், அதிகார வர்க்கங்களும் தான். இங்கு இயங்கக் கூடிய நிறுவனங்கள் அனைத்தும் இந்த சுரண்டும் கும்பலுக்கானது என்பது குவாரி தொழில் மூலம் நன்கு அம்பலமாகிறது.

பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை மலிவான கூலிக்கு சுரண்டுவது போல, விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்குவது போல, நம்முடைய இயற்கை வளங்களும் பகற்கொள்ளை அடிக்கப்படுகின்றன.

நம்முடைய நிலங்கள், ஆறுகள், மலைகள், கடல்கள் போன்ற இயற்கை வளங்களை பாதுகாக்க ஜக்பர் அலி போன்ற தனிமனிதர்களால் சாத்தியமில்லை. அதேபோல் அதிகாரவர்க்கத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் போன்று சட்டத்தின் மூலம் நீதியைப் பெறமுடியும் என்று நம்பி பலனில்லை. ஆதலால் அனைத்து உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு தீங்கிழைக்கும் மாஃபியா கும்பல்கள், பன்னாட்டு முதலாளிகள், அரசு நிறுவனங்கள், ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகள் ஆகியவற்றின் சுரண்டலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடும் போது தான் நாட்டின் இயற்கை வளத்தை நம் எதிர்கால சந்ததிக்கு விட்டுச் செல்ல முடியும்.

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன