அசோகா பல்கலைக்கழக பேராசிரியரான அலி கான் மஹ்மூதாபாத், ஹரியானா போலீசினால் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் அரசியல் அறிவியல் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆபரேஷன் சிந்தூரை விளக்கி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு குறித்து தனது சமூக வலைதளத்தில் எழுதியதை ஒட்டி பாஜகவினர் கொடுத்த இரு புகார்களின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்துள்ளது ஹரியானா போலீஸ்.
பேராசிரியர் அலி தன்னுடைய facebook பதிவில் “வலதுசாரி விமர்சகர்கள் பலர் கர்னல் சோபியா குரேஷியை பாராட்டுவதைப் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் கும்பல் தாக்குதல்கள், தன்னிச்சையான புல்டோசர் தாக்குதல்கள் மற்றும் பாஜகவின் வெறுப்புத் தூண்டுதலால் பாதிக்கப்பட்ட மற்றவர்களை இந்திய குடிமக்களாகப் பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் சத்தமாகக் கோரலாம். இரண்டு பெண் வீரர்கள் போர் குறித்த விவரங்களை முன்வைக்கும் காட்சிகள் முக்கியம், அதேவேளையில் இந்தக் காட்சிகள் களத்திலும் பிரதிபலிக்க வேண்டும், இல்லையெனில் அது வெறும் பாசாங்குதான்.”
பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருந்த கர்னல் சோபியா குரேஷி ஒரு முஸ்லீம், காமாண்டர் வியோமிகா ஒரு இந்து. இருவரையும் வைத்து பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியதன் மூலம் இந்து-முஸ்லீம் ஒற்றுமையை முன்னிறுத்துவது போல காட்டிக் கொண்டது மோடி அரசாங்கம்.
சங்கிகள் சோபியா குரேஷியை பாராட்டும் அதே வேளையில், களத்தில் முஸ்லீம்கள் மீது சட்டத்திற்கு புறம்பான முறையில் அரச கட்டமைப்பின் உதவியுடன் பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வரும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலை நோக்கி முஸ்லீம்களும் இந்தியர்கள் தானே அவர்களையும் பாதுகாக்க வேண்டாமா? என சத்தமாக கேட்கலாமே என்று பாஜக-ஆ.ர்எஸ்.எஸ் கும்பலின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார் பேரா. அலி.
இது காவிக் கும்பலை எரிச்சலடையச் செய்திருக்கிறது. ஹரியானா மாநில பாஜக இளைஞரணி செயலாளர் யோகேஷ் ஜதேரி தனது புகாரில், “பேரா. அலி பேசியது தனிப்பட்ட ரீதியாக என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளதாகவும், மதத்தின் பெயரால் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, உள்நாடு அல்லது வெளிநாட்டு சக்திகளுக்கு பயனளிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக” கொடுத்திருக்கிறார். ஹரியானா மாநில பாஜக செய்தி தொடர்பாளர் சஞ்சய் சர்மா, “நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கையை எடுக்கப்பட்டிருப்பதாக” போலீசின் நடவடிக்கைகளுக்கு சப்பைக் கட்டு கட்டுகிறார்.
உண்மையை சொல்லியிருந்த ஒரு பேஸ்புக் பதிவு, சங்கி ஒருவனின் ‘மனதை புண்படுத்தியதற்காக’ வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கும் ஹரியானா மாநில பாஜக போலீஸ், கடந்த பல வருடங்களாக முஸ்லீம்களின் வீடுகளை சட்ட விரோதமாக இடித்தும் மதக்கலவரங்களை நடத்தி சொத்துக்களை நாசப்படுத்தியும் கொலை செய்வதையும் நடைமுறைத் திட்டமாக வைத்திருக்கும் காவி கும்பலின் அராஜகத்தை கண்டும் அதனை எதிர்கொள்ள முடியாத நிலையையும் எண்ணிக் கோடிக்கணக்கான முஸ்லீம்களின் மனம் சொல்லொனாத் துயரத்தில் இருந்திருக்குமே இதற்கு காரணமானவர்கள் மீது வழக்கோ அல்லது கைது நடவடிக்கைகளோ எடுத்திருக்கலாமே என்று கேள்வி எழுவது இயல்புதானே. அதைதான் பேரா. அலி கானும் கேட்டிருக்கிறார்.
ஹரியானா பாஜக இன்னும் ஒரு படி மேலே சென்று பெண்கள் ஆணையத்தின் மூலமாக பேரா. அலி மீது புகார் கொடுக்க வைத்திருக்கிறது. ஹரியானா மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேணு பாட்டியா தன்னுடைய புகாரில், “இந்திய ஆயுதப் படைகளில் பெண் அதிகாரிகளை இழிவுபடுத்தி, வகுப்புவாத ஒற்றுமையை ஊக்குவித்ததாக” தெரிவித்திருக்கிறார்.
இராணுவத்தைப் பற்றியோ அல்லது பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராணுவ பெண் அதிகாரிகளைப் பற்றியோ பேரா. அலி கான் எதுவும் தவறாக சொல்லவில்லை என்பது அவருடைய பதிவில் இருந்து எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். பாஜகவின் இந்து தேசவெறி கண்களுக்கு, உண்மையை சொல்லுபவர்கள் தேசவிரோதிகளாகவும்; கடைந்தெடுத்த மக்கள் விரோதிகளையும், காட்டிக்கொடுப்பவர்களையும் தேசபற்றாளர்களாகவும் முன்னிறுத்த தெரிகிறது.
மத்திய பிரதேச மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை பாகிஸ்தானி என்ற பொருளில் பேசியிருந்தார். ஆபரேசன் சிந்தூரையொட்டிய பாஜக கூட்டத்தில் பேசிய விஜய் ஷா, “பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாக அவர்களது சொந்த சகோதரி கொண்டே தகுந்த பாடம் புகட்டியுள்ளோம்” என்றார்.
இப்பேச்சுக்கு, பாஜக தவிர்த்து, அனைத்து தரப்புகளிலிருந்தும் மிக கடுமையான கண்டனங்கள் எழுந்தது. மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து, விஜய் ஷா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய பிரதேச அரசாங்கத்தை வலியுறுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ விஜய் ஷா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அம்மாநில பாஜக அரசாங்கம் விஜய் ஷா மீது எந்த நடவடிக்கை எடுப்பதற்கும் இன்றுவரை முனைப்பு காட்டவில்லை.
நடவடிக்கை எடுக்காததற்கு காரணம், விஜய் ஷா மத்திய பிரதேச மாநிலத்தின் கோண்டு பழங்குடி மக்களின் மிக முக்கிய முகம். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் அம்மக்களின் ஓட்டு வங்கி பாதிப்படையக் கூடும் என்று அம்மாநில பாஜக கருதுகிறது. மேலும் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை இந்தியா முழுவதும் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் விஜய் ஷா மீது நடவடிக்கை எடுப்பதானது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்து விடும், காலம் தாழ்த்தினால் இப்பிரச்சனை தானாக மறைந்துவிடும் என்று பாஜக டெல்லி தலைமை கருதுவதாக தி பிரிண்ட் செய்தி இணையதளம் கூறுகிறது.
தன் மீது வழக்குப் பதிவு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட விஜய் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததோடு அவர் மீது இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மத்திய பிரதேச பாஜக அரசாங்கத்தை கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்திரவிட்டுள்ளது.
‘நாங்கள் தான் உண்மையான தேசபக்தர்கள்’ என்று கூறிக் கொள்ளும் பாஜக, பேரா. அலியையும் ‘சங்கி அமைச்சர்’ விஜய் ஷா வையும் கையாளுவதை ஒப்பிட்டுப் பாருங்கள். கர்னல் சோபியா குரேஷி குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றமே குற்றம் என்று கூறிய பின்பும் விஜய் ஷா மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு காலம் தாழ்த்தப்படுகிறது. அதேவேளையில் பாஜகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியதற்காக எந்த குற்றமும் செய்யாத பேரா.அலியை தேச துரோக வழக்கிற்கு இணையான பிரிவுகளில் கைது செய்திருக்கிறது. இந்த இரண்டு நிகழ்வில் இருந்தே ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலின் ‘தேசபக்தி’ யோக்கியதையை நாம் புரிந்துகொள்ள முடியும்.
பஹல்காம் தாக்குதலையொட்டி பாஜகவை விமர்சிக்கும் அனைவரையுமே தேசவிரோதிகளாக முத்திரை குத்துகிறது காவி கும்பல். இந்தியாவிலுள்ள முஸ்லீம்கள் மீது நாள்தோறும் தாக்குதல்கள் நடக்கிறதே அதையும் கொஞ்சம் பாஜக காரர்கள் கேட்கலாமே என்று சொன்ன பேரா. அலியை வெளிநாட்டு கைகூலி என்கிறார் பாஜகவின் யோகேஷ் வைத்தேரி.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த காவி கும்பல் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நடத்தி வரும் கொடும் தாக்குதல்களுக்கு எதிர்வினை தான் இஸ்லாமிய தீவிரவாதம் அதன் விளைவு பஹல்காம் தாக்குதல் என்பது அடிப்படையான உண்மை. இதைத்தான் வேறு வார்த்தைகளில் பேராசிரியர் அலியும் கேட்டிருக்கிறார். அதை அம்பலப்படுத்தியதற்குத்தான் இந்த கைது நடவடிக்கை.
போரை நான் தான் நிறுத்தினேன், போரை நிறுத்தாவிட்டால் இந்தியா பாகிஸ்தான் மீது கடுமையான வர்த்தக தடைகள் விதிக்க வேண்டி இருக்கும் என்று சொன்னதன் பேரிலேயே இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன என்று போகின்ற பக்கம் எல்லாம் பேசி வருகிறார் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப். அப்பேச்சுக்கு இன்றுவரை மோடியோ அமித்ஷாவோ பாதுகாப்புத்துறை அமைச்சரோ அல்லது உள்துறை அமைச்சரோ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக அமெரிக்காவே நமது வளர்ச்சிக்கான நல்ல மேய்ப்பர் என்று டிரம்பின் பிட்டத்தைப் பிடித்து திரிகின்றனர். இவ்வாறு நாட்டின் இறையாண்மையை ட்ரம்பின் காலடியில் சமர்ப்பித்து விட்டு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தேசபக்தி வேடம் போடுகிறது இந்த காவி பாசிச கும்பல்.
- செல்வம்