எடப்பாடி தன் எடுபிடிகளுடன் டெல்லிக்கு சென்று பாசிச மோடி அரசின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்துள்ளார். சந்தித்தபோது, அண்ணாமலையை மாற்ற வேண்டும்; தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். கூட்டணி ஆட்சி என்பதை தேர்தலுக்குப் பிறகுதான் பேச வேண்டும் என்கிற மூன்று நிபந்தனைகளை முன்வைத்து பேசியுள்ளார். தமிழக சந்திப்பின் போதும், இதையே வலியுறுத்தி பாஜகவுடனான அதிமுக கூட்டணியை உறுதி செய்து கொண்டார்.
ஆனால், ஒன்றிய அரசால் மாநில உரிமைகள் நசுக்கப்படுவது குறித்தோ, வஞ்சிக்கப்படுவது குறித்தோ மறந்தும் ஒரு வார்த்தை கூட பேசாமல், வாய்மூடி மௌனியாகத் திரும்பியுள்ளார். இவர்தான் தமிழக நலனுக்காக குறைந்தபட்ச திட்டத்துடன் 2026 தேர்தலை சந்திக்கப் போவதாக காதில் பூசுற்றுகிறார்.
திமுகவினர் கூறுவது போல ரெய்டுக்கு பயந்து பாஜகவுடன் கூட்டணியை அமைத்திருக்கலாம். இது சந்தர்ப்பவாதக் கூட்டணி வெற்றி பெறாது என்பதெல்லாம் வெற்று கூச்சலாகும். எப்படி இருப்பினும் இது ஒரு நச்சுக் கூட்டணி.
இந்த நச்சுக் கூட்டணி தான் ‘திமுகவின் ஊழல் ஆட்சியைத் தோலுரித்து தொங்கவிடப் போகிறதாம்; அது செய்த வரலாற்றுப் பிழையை திருத்தியமைக்கப் போகிறதாம்: அதற்குத்தான் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு கருத்தொற்றுமை உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறதாம். அதன் முதற்கட்டமாக ‘கட்டு விரியனை மடியில் கட்டி வந்துள்ளதாக பிதற்றுகிறார் எடப்பாடி. இந்த கட்டுவிரியன் அதிமுகவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பதம் பார்த்து விடும்.
ஒருவேளை இது அறிவித்துள்ள குறைந்தபட்ச திட்டம் என்பது மதவெறி அரசியலை பரப்புவதாகக் கூட இருக்கலாம். விரைவில் எதிர்நோக்குவோம்.
இதுவரை சிறுபான்மை மக்களுடன் இரண்டர கலந்தவர்கள், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையால், தமிழின கொள்கையால், ஜனநாயக, புரட்சிகரக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள் தமிழக மக்கள்.
இவர்களை தனியாக மோதி வீழ்த்த முடியாது என்பதால், தமிழகத்தில், 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கரைகண்ட, கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ள வாக்கு வங்கி அதிமுகவை கோடரிக் கொம்பாக வைத்துக் கொண்டு, கூட்டணி அமைத்துள்ளது பாசிச மோடி அமித்ஷா கும்பல்.
எடப்பாடி அதிமுகவானது, எந்த காலத்திலும் பாஜாகவுடன் கூட்டணி இல்லை என வீர வசனம் பேசிவிட்டு மீண்டும் கூட்டணி அமைத்ததை வடிவேல் பாணியில் ‘இது எல்லாம். அரசியலில் சகசம்ப்பா’ என்று கூறலாம் ஓட்டுக் கட்சிகளின் இலக்கணப்படி அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; பகைவனும் இல்லை என்று கூறலாம். கருணாநிதி கூட பாஜகவை ‘பரதேசி பண்டாரக் கட்சி’ என்று கூறிவிட்டு 1990 இல் கூட்டணி அமைத்துக் கொள்ள வில்லையா? ஜெயலலிதா கூட ‘என் வாழ்நாளில் ஒருபோதும் இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு 2004 இல் கூட்டணி வைக்கவில்லையா? என்று கூட வியாக்கியானம் பேசலாம்.
எப்படி இருப்பினும் கருணாநிதி, ஜெயலலிதா செய்த அதே வரலாற்றுப் பிழையைத்தான் மீண்டும் எடப்பாடி செய்து உள்ளார்.
ஏனெனில், ஓட்டுக் கட்சித் தலைவர்கள் அனைவருமே ஏறக்குறைய ஊழலால், குறுக்கு வழியில் சொத்துகளைக் குவித்தவர்கள். இதை பாதுகாக்க எந்த வரலாற்றுப் பிழையையும் செய்ய தயங்காதவர்கள். இதற்கு எந்த பிழையையும் செய்யாமல் உழைப்பை மட்டுமே நம்பி வாழும், உழைக்கின்ற வர்க்கமாகிய நாம் பலியாக வேண்டுமா? இவர்களுக்காக தமிழ்நாட்டை பலியாக்க வேண்டுமா? ஒருபோதும் முடியாது.
இவர்கள் மேற்கொண்ட, வரலாற்றுப் பிழையை மாற்றியமைக்க ஓட்டுக் கட்சியில் உள்ள அனைத்து உழைக்கும் வர்க்கமும் ஒரே வர்க்கமாக ஒன்று திரள்வது மூலமே முடியும். ஒன்று சேர்வோம்! வரலாற்றுப் பிழையை மாற்றியமைப்போம்!
- மோகன்