கல்வியையும் கல்வி வளாகங்களையும் கைப்பற்ற சங்கிகள் ஏன் தீவிரமாக முயற்சிக்கின்றனர்? இந்துத்துவக் கருத்துக்களை மாணவர்களிடம் பரப்பி தங்களுடைய அரசியல் மேலான்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், அதற்கான ஆதரவை இளைய தலைமுறையிடம் உருவாக்குவதற்கும் தான் இவ்வளவு தீவிரமாக முயற்சிக்கின்றனர்.
மூன்று தினங்களுக்கு முன்பு விஷ்வ ஹிந்து பரிஷத், தி ஹிந்து மேனிபெஸ்டொ என்ற புத்தகத்தை வெளியிட்டது. அதில் ஆர்எஸ்எஸ் இன் தலைவர் மோகன் பகவத் மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தினுடைய துணைவேந்தர் யோகேஷ் சிங் கலந்து கொண்டுள்ளனர். அந்த புத்தகம் வழக்கம் போல சங்கிகளின் உருட்டுக்களைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. அதாவது வேதம், இராமாயணம், பகவத்கீதை, மகாபாரதம், ஸ்மிருதிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய வாழ்க்கை முறையைச் சொல்லியிருக்கிறார்களாம்.
என்ன சொல்லி என்ன ஆவது, மோகன் பகவத்திற்கே இதய நோய் வந்தால் பச்சிலையும் மாட்டுக்கோமியமுமே போதும் என்று சொல்லமாட்டார்கள். நவீன மருந்துகளையும், மருத்துவ முறைகளையுமே பயன்படுத்துவார்கள். சங்கிகளைப் பொருத்தவரை இந்து பழம்பெருமை பேசுவதெல்லாம் மக்களை ஏமாற்றத் தேவையான ஒரு அரசியல் முகமுடி அவ்வளவுதான். மற்றபடி இக்கருத்துக்கள் எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்துவராது என்று காவிக் கும்பலுக்குத் தெரியும்.
இங்கு கவனிக்க வேண்டியது தில்லி பல்கலைக்கழகத்தினுடைய துணைவேந்தர் யோகேஷ் சிங் அப்புத்தகத்தை வெளியிட்டு அதனைப் பாராட்டிப் பேசி இருப்பதைத்தான். இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு அறிவியல் கண்ணோட்டத்தையும், மனப்பாங்கையும் கொடுக்க வேண்டிய உயர் பொறுப்பில் உள்ள ஒரு நபர் எவ்வித அற உணர்வும் இல்லாமல் முனையளவும் நவீன அறிவியலுக்கு ஒத்துவராத முற்றிலும் கற்பனை கதைகளான வேத-இதிகாச-புராணக் குப்பைகளை வாழ்க்கை முறை என்றும் அறிவியல் என்றும் பேசியிருக்கிறார். இதற்கு யோகோஷ் மட்டும் விதிவிலக்கல்ல மொத்த நிர்வாக அமைப்புமே இவ்வாறு தான் உள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு தில்லி பல்கலைக்கழகத்தின் இலட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் பிரதிக்ஷா வட்சல வகுப்பறைக்குள் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக வகுப்பறையின் சுவர்களில் மாட்டுச் சாணியைப் பூசி இருக்கிறார்.
தில்லி பல்கலைக்கழகத்தின் கீழுள்ள மற்றொரு கல்லூரியான சரதானந் கல்லூரி நிர்வாகம் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் சித்தார்த் யாதவை சிறப்பு பேச்சாளராகக் கொண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கை நடத்துகிறது.
தில்லி நேரு விளையாட்டு அரங்கில் ஆர்எஸ்எஸ் நடத்தக்கூடிய நிகழ்ச்சியில் மாணவர்களை கலந்து கொள்ள சொல்லுமாறு தில்லி பல்கலைக்கழகம் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புகிறது.
மேற்சொன்னவைகளெல்லாம் கடந்த பத்து நாட்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பத்திரிக்கைகளில் வந்த செய்திகள். மேலும் NEP ஐ அமல்படுத்துவதில் தில்லிப் பலகலைக்கழகத்தை ஒரு சோதனைச்சாலை எனலாம்.
மதத்தின் பெயரால் கலவரங்களை செய்துவரும் ஒரு பாசிச அமைப்புடன் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு என்ன வேலை என்ற கேள்வியை இதுவரை யாரும் எழுப்பவில்லை. இப்பிரச்சனை குறித்த சமூக ஊடகப் பதிவில் “யோகேஷ் சிங் ஒரு இந்து. தனது மத அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கு அவருக்கு சுகந்திரம் உண்டு. தான் சரியென நினைக்கும் அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார், இதில் என்ன தவறு” என்று ஒரு இளைஞர் கேள்வி எழுப்புகிறார்.
யோகோஷ் சிங்-கிற்கு மதசுகந்திரம் உண்டென்பதை மறுப்பதற்கில்லை. ஒரு வாதத்திற்காக இதே போன்று ஒரு உயர் பதவியில் உள்ள முஸ்லீம் மத சுகந்திரம் என்ற உரிமையில் தனது மதம் சார்ந்த நிகழ்வில் வெளிப்படையாகக் கலந்துகொள்ள முடியுமா? அவ்வாறு கலந்து கொண்டிருந்தால் அவரது வீடு இடிக்கப்பட்டிருக்கும், அவர் வேலை இழந்திருப்பார், பிணை கிடைக்காத பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்.
ஆர்எஸ்எஸ்-பாஜக-வின் நோக்கமே மேற்சொன்ன இளைஞரைப் போல கண்ணோட்டத்தைக் கொண்ட இளம்தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என்பதே. சமூகப் பிரச்சனைகளை மதக்கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடிய, பழம்பெருமைகளை விமர்சமின்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய, இந்தி தேசிய வெறிகொண்ட மாணவர்களைத் தயாரிப்பதே காவிக் கும்பல் முன்வைக்கும் கல்விக்கொள்கையின் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான அறிவுக் கூலிப்படைதான் துணைவேந்தர் யோகேஷ் சிங். இந்த உள்நோக்கத்தோடுதான் கடந்த 11 ஆண்டுகளாக சங்கிகளையும் தங்களது ஆதரவாளர்களையும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உயர் பதவிகளில் பணியமர்த்தி வருகிறது பாஜக கும்பல். மாணவர்களுடைய கண்ணோட்டத்தில் இந்துத்துவ அரசியலையும் இந்து தேசிய வெறியையும் புகுத்துவதற்காகவே பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதும் ஆர்எஸ்எஸ் நபர்களை நியமிப்பதையும் செய்து வருகின்றனர்.
- செல்வம்