இன்று ஏப்ரல் 22, மார்க்சிய ஆசான் லெனினின் 155 வது பிறந்த தினம் மற்றும் இந்திய புரட்சிகர வானில் விடிவெள்ளியாக தோன்றிய இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) உதயமாகி 56 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
ஆரம்பத்தில் இடது தவறுகள் நக்சல்பாரிப் புரட்சியாளர்களைப் பிளவுக்கும் பின்னடைவுக்கும் தள்ளின. இதைச் சீர்செய்வதாக கூறிக்கொண்டு சில குழுக்கள் வலது சந்தர்ப்பவாதம் எனும் புதைக்குழிக்குள் பயணித்தன. இவைகளை திருத்துவதற்கான போராட்டமே இன்னும் நீடிக்கின்றன. நக்சல்பாரி இயக்கம் ஒன்றுதான் இந்தியப் புரட்சியின் வெற்றிக்குரிய நம்பிக்கைச் சின்னமாக இருக்கிறது என்று அதன் 56 ஆண்டுகால வரலாறு காட்டுகிறது.
இந்திய மக்களின் விடுதலை என்ற இலட்சியத்துடன் நாம் கடப்பாடு கொண்டுள்ளோம். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக மட்டுமே நாம் கடந்த காலத்தைப் பற்றி அக்கறை கொண்டிருக்கவில்லை. கடந்த காலத்திலிருந்து நாம் கற்றுக் கொண்டு, அது தற்போதைய காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பொருத்த வேண்டும் என்பதையே விரும்புகிறோம். அந்த வகையில் நக்சல்பாரி இயக்க வரலாறு பற்றி-புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம்.
– செங்கனல் ஆசிரியர் குழு
*******
1967ம் ஆண்டு இந்தியாவெங்கும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த காலம், விவசாயிகளின் போராட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கொந்தளிக்கத் தொடங்கியது. இந்தப் பின்னணியில்தான் நான்காவது பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது.
தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தின. இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் ஏகபோகம் முடிந்து எட்டு மாநிலங்களில் எதிர்க்கட்சி அமைச்சரவைகள் ஆட்சியில் அமர்ந்தன. மேற்கு வங்கத்தில் 14 கட்சி ஐக்கிய முன்னணி அரசு 1967ம் ஆண்டு மார்ச் 2-ல் பதவியேற்றது. வங்காள காங்கிரசின் தலைவர் அஜய் முகர்ஜி முதலமைச்சர்; இடது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜோதிபாசு போலீஸ் அமைச்சர்.
இந்த கட்டத்தில்தான். இந்திய அரசியலையே ஓர் உலுக்கு உலுக்கிய அந்த நிகழ்ச்சி நடந்தது; புரட்சிகர ஆயுதந்தாங்கிய பாதையில், மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனையின் ஒளியில் நடந்த நக்சல்பாரி விவசாயிகளின் பேரெழுச்சியே அது.
இதைத் தொடர்ந்து தான் முதன்முதலாக இந்தியாவில் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியும் தோன்றியது. வலது, இடதுகள் என்ற பெயர்களில் இயங்கிவந்த போலி கம்யூனிஸ்டு கட்சிகளின் சாயமும் வெளுக்கத் தொடங்கியது.
மே.வங்க. ஐ.மு. அரசாங்கத்தில் பங்கேற்றிருந்த இடது கம்யூனிஸ்டு கட்சி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிலச்சீர்திருத்தத்தை தீவிரமாக அமுல்படுத்துவோம் என சவடால் அடித்திருந்தது. நிலம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சரும் இடது கம்யூனிஸ்டு தலைவருமான ஹரிகிருஷ்ண கோனார் பதவி ஏற்றவுடன், நிலமற்ற விவசாயிகளுக்கு உபரி நிலங்கள் வினியோகிக்கப்படும் என்றும் குத்தகைதாரர்கள் வெளியேற்றப்படுவது தடுக்கப்படும் என்றும் பிரகடனம் செய்திருந்தார். விவசாயிகள் மிக்க ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், ஐ.மு,அரசு பதவிக்கு வந்தவுடனேயே நிலப்பிரபுக்கள். குத்தகைதாரர்களை வெளியேற்ற ஆரம்பித்து விட்டனர். ஏராளமான வெளியேற்றங்கள் நடந்தன. ஐ.மு. அரசு இதைத் தடுக்க முனையவில்லை. அதற்கான முயற்சி எதையும் உருப்படியாக ஐ.மு. அரசு செய்யவில்லை. மாறாக சட்டங்கள். கோர்ட்டுகள். அதிகாரிகள் மீது பழியைப் போட்டுவிட்டு தங்களால் எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக நடித்தது. இடது கம்யூனிஸ்டு தலைவர் ஹரிகிருஷ்ண கோனார் பின்வருமாறு புலம்பினார்:
”பினாமி பெயரால் நடந்துள்ள மோசடியான மாற்றங்களைப் பற்றி அரசாங்கம் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசியல் சட்டத்தாலும் நீதிமன்றங்களாலும் காகிதக் கட்டுக்களாலும் ஆவணங்களாலும் போடப்படுகின்ற தடங்கல்கள் ஏராளம், ஏராளம்.”
புரட்சியே தங்களின் நடைமுறை என்று போலியாக பேசி நடந்து வந்த இடது கம்யூனிஸ்டு தலைவர்கள் மாநில அரசாங்கங்களில் பதவியேற்பது தாங்கள் பதவிவெறி கொண்டதனால் அல்ல என்றும். ‘வர்க்கப் போராட்டத்தின் கருவியாக பயன்படுத்தவும்’ மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் தான் மாநில அரசாங்கங்களில் பங்கேற்பதாகவும் சொல்லி வந்தனர்.
ஆனால் குத்தகைதாரர்களின் வெளியேற்றங்களைத் தடுக்கவில்லை; நிலப்பிரபுக்களின் நிலங்களைப் பறிமுதல் செய்து கூலிஏழை விவசாயிகளுக்கு வினியோகிக்கவும் இல்லை; அப்படிச் செய்தால் தரகு முதலாளிகள் – நிலப்பிரபுக்களின் கருவியான மத்திய அரசு இவர்களின் மாநில அரசை டிஸ்மிஸ் செய்துவிடும் என்று இவர்களுக்குத் தெரியும். எனவேதான் பதவி சுகத்தை அனுபவிக்க விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தனர். நிலத்திற்காக அதிகாரிகளிடம் மனுகொடுக்கச் சொல்லி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
ஆனால் மே.வ. டார்ஜிலிங் மாவட்டத்தைச் சேர்ந்த இடது கம்யூனிஸ்டு தலைவர்களும், அணிகளும் இந்த துரோகத்தை எதிர்த்து நேரடி நடவடிக்கையில் இறங்கினர். கம்யூனிசத்தை போலித்தனமாக உச்சரிக்கும் தமது தலைமையை உதறியெறிந்து புரட்சிகரமான பாதையில் முன்சென்றனர். டார்ஜிலிங் மாவட்டம் சிலிகுரி உட்பிரிவு கிரிஷிக் சமிதியின் தலைவரான ஜங்கல் சந்தால் மற்றும் கனுசன்யால் (இருவரும் மாவட்ட அளவில் இடது கம்யூனிஸ்டு தலைவர்கள்) ஆகியோர் முன்முயற்சி எடுத்து 1967 மார்ச் 18-ல் விவசாயிகள் மாநாடொன்றை நடத்தினர். நிலப்பிரபுக்கள் நிலத்தின் மீது வைத்திருக்கின்ற ஏகபோகம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்; விவசாய கமிட்டிகள் மூலம் நிலங்கள் மறுவினியோகம் செய்யப்பட வேண்டும்; நிலப்பிரபுக்கள் மற்றும் கிராமப்புற பிற்போக்காளர்களின் எதிர்ப்புகளை உடைத்தெறிய விவசாயிகள் ஆயுதந்தாங்கி அணிதிரட்டப்பட வேண்டும் என்று இம்மாநாடு அழைப்புவிடுத்தது. தங்களது நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் மத்திய, மாநில ஐ.மு. அரசுகளின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருக்குமென்றும். எனவே. நீண்டகால ஆயுதப் போராட்டத்திற்கு தயாராவது அவசியம் என்றும் இம்மாநாடு நிலமற்ற விவசாயிகளை எச்சரித்தது.
இவ்வாறு விவசாயிகளைத் திரட்ட முன்கையெடுத்த இடது கம்யூனிஸ்ட் கட்சியின் டார்ஜிலிங் மாவட்டக் கமிட்டிக்கு சாரு மஜீம்தார் செயலாளராக இருந்தார். 1964-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டு வலது. இடது என பிரிவாயிற்று. புரட்சி பேசிக் கொண்டு அதற்கு துரோகமிழைத்து, அரசுடன் சமரசமாக ஒத்துழைத்து தொழிற்சங்க ஜமீன்தார்களாக இருந்த தலைமையை எதிர்த்து, புரட்சிக்காகப் போராடிய அணிகளின் உணர்வைப் பயன்படுத்தி இடது கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள், சுந்தரய்யா, பி.ராமமூர்த்தி போன்றவர்கள். ஆனால் இவர்களும் பழைய சந்தர்ப்பவாத வழியிலேயே செல்லவே அணிகள் இடது கம்யூனிஸ்டு கட்சித் தலைமையின் நவீன திரிபுவாதத்தையும் எதிர்த்துப் போராடினர். மாற்றுபுரட்சிகர பாதையை முன்வைத்து நடைமுறையில் செய்து காட்டியவர்கள்தான் டார்ஜிலிங் மாவட்டக் கமிட்டியைச் சேர்ந்தவர்களாவர்.
மார்க்சிய – லெனினிய மாசேதுங் சிந்தனை, இந்தியா அரசியல் சுதந்திரம் பெறாத அரைக் காலனிய – அரை நிலப்பிரபுத்துவ நாடு. நீண்டகால மக்கள் யுத்தப்பாதை,விவசாயிகளின் விவசாயப் புரட்சியை சாராம்சமாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சி என்ற நிலைப்பாடுகளை முன்வைத்து விவசாயிகளின் ஆயுதந்தாங்கிய போராட்டங்களை கட்டியமைக்க முனைந்தனர்.
இதன் முதல் வெடிதான் விவசாயிகளின் மாநாடாகும். மாநாட்டைத் தொடர்ந்து போர்க் குணமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 1967 மார்ச்சிலிருந்து 1967 ஏப்ரல் வரை டார்ஜிலிங் மாவட்டத்தில் எல்லா கிராம விவசாயிகளும் அணி திரட்டப்பட்டனர். ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகளின் கமிட்டி அமைக்கப்பட்டது; ஆயுதந்தாங்கிய குழுக்களாக அவை மாற்றப்பட்டன. விவசாயக் கமிட்டிகள் நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டு நிலம் தொடர்பான ‘ரெக்கார்டுகள்’ அனைத்தையும் எரித்தனர். விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கொடுமையான நிலப்பிரபுக்களுக்கு மரண தண்டனைகளை வழங்கியது. நிலப்பிரபுக்களிடம் இருந்து பறிமுதல் செய்த துப்பாக்கிகளையும் மரபுவழி ஆயுதங்களையும் பயன்படுத்தி வலுப்படுத்திக் கொண்டனர்; கிராமங்களை நிர்வகிக்க கூலி ஏழை விவசாயிகளைக் கொண்ட நிர்வாக கமிட்டிகள் அமைக்கப்பட்டன.
அந்த ஆண்டு மே மாதத்திற்குள் நக்சல்பாரி போலீஸ் சரகத்துக்குள் அடங்கிய ஹடிகிஷா; கரிபாரி போலீஸ் நிலையத்திற்குள் அடங்கிய பரகன்ஞ்ச்: பன்சிதேவா போலீஸ் நிலையத்திற்குள் அடங்கிய சௌடிகுரியா பகுதிகள் டார்ஜிலிங் மாவட்டக் கமிட்டி புரட்சியாளர்களின் கோட்டைகளாக மாறின. இப்படித்தான் புகழ் பெற்ற நக்சல்பாரி விவசாயிகளின் பேரெழுச்சி உதயமாயிற்று.
நிலைமை தனது கையை மீறிப்போவதை உணர்ந்த இடது கம்யூனிஸ்டு தலைமை டார்ஜிலிங் மாவட்டக் கமிட்டித் தலைவர்களுடன் பேசி போராட்டத்தை கைவிடச் செய்ய ஹரிகிருஷ்ண கோனாரை அனுப்பியது. புரட்சியாளர்களுடன் பேசிவிட்டு ஓர் அறிக்கையை அவர் வெளியிட்டார். சட்டவிரோத நடவடிக்கைகள் நிறுத்தப்படும்: நிலத்திற்காக விவசாயிகள் அரசாங்கத்திடம் மனு கொடுப்பார்கள்; உள்ளூர் விவசாய சங்கங்கள் ஆலோசனை செய்த பின் அதிகார வட்டாரங்கள் மூலம் நிலம் மறுவினியோகம் செய்யப்படும் ஆகியவை பேச்சு வார்த்தைகளில் ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் மேலும் ஜங்கல் சந்தால், கனுசன்யால் உட்பட போலீசாரால் தேடப்பட்டு வந்த அனைவரும் போலீசில் சரணடைவதென முடிவெடுக்கப்பட்டதாகவும் கோனார் தனது அறிக்கையில் பொய்யாக கூறினார். புரட்சியாளர்கள் இதை உடனடியாக மறுத்தனர்.

இதைத் தொடர்ந்து நக்சல்பாரி விவசாயிகளின் எழுச்சி மீது போலீஸின் அடக்குமுறை தீவிரப்படுத்தப்பட்டது: இடது கம்யூனிஸ்டு தலைமை தன்னை முற்றாக நிலப்பிரபுக்களுடனும் எதிர்ப்புரட்சி முகாமோடும் வெளிப்படையாக இணைத்துக் கொண்டது.
இந்த துரோகத்தையும் போலீஸ் அடக்குமுறையையும் எதிர்த்து நக்சல்பாரி போராட்டம் முன்னேறியது.
நக்சல்பாரி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இடதுகம்யூனிஸ்டு ஆதரவு மாணவர்கள் திரண்டனர்; கல்கத்தா நகர பிரசிடென்சி கல்லூரியைச் சேர்ந்த இம்மாணவர்கள் நக்சல்பாரியை ஆதரித்து சுவரொட்டிகள் ஒட்டினர். “நக்சல்பாரி பாதையே விவசாயப் புரட்சியின் பாதை”. “கொலைகாரன் அஜய் முகர்ஜியே ராஜினாமா செய்” போன்ற முழக்கங்கள் அவைகளில் பளிச்சிட்டன.
கல்கத்தாவின் ராம் மோகன் நூலக அரங்கில் பிரசிடென்சி கல்லூரி மாணவத்தலைவர்களால் தலைமை தாங்கப்பட்ட இடது கம்யூனிஸ்டு அதிருப்தியாளர்கள் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் “நக்சல்பாரி விவசாயிகளின் போராட்ட உதவிக் கமிட்டி” என்ற அமைப்பை உருவாக்குகின்றனர்.1967 ஜூன் 27-ம் தேதி அவர்கள் மேற்குவங்க சட்டமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
ஜூன் 18. 19 தேதிகளில் கூடிய இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மே.வ. மாநிலக் கமிட்டி, மாநிலக் கமிட்டி உறுப்பினரான சுசி தல்ராய் சௌத்திரி உட்பட 19 பேரை நக்சல்பாரி போராட்டத்தை ஆதரித்ததற்காக கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது. இடது கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளரான பிரமோதாஸ் குப்தா நக்சல்பாரி போராட்டக்காரர்களை சி.ஐ.ஏ. ஏஜண்டுகள் என முத்திரை குத்தினார்.
நக்சல்பாரி விவசாயிகளின் பேரெழுச்சியை சீனக் கம்யூனிஸ்டு கட்சி ஆதரித்தது; ஜூன் 28ம் தேதி ரேடியோ பீகிங் தனது ஒலிபரப்பில் இப்போராட்டத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டது: “மாசேதுங் சிந்தனையின் வழிகாட்டுதலில் இந்திய மக்கள் தொடுத்த ஆயுதப் போராட்டத்தின் முதல் பாய்ச்சல்”; மேலும் அது மேற்குவங்க ஐ.மு. அரசை “இந்திய மக்களை ஏய்ப்பதற்கான இந்தியப் பிற்போக்காளர்களின் கருவி” என சித்தரித்தது.
1967 ஜூலை 12-ல் போராட்டத்தை ஓடுக்க மிகப் பெரிய போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜூலை 20-ல் ஜங்கல் சந்தால் கைது செய்யப்படுகிறார். வேறு சில தலைவர்களும் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்; நக்சல்பாரி இயக்கம் ஒரு தேக்கத்திற்கு ஆளாகிறது.
1967ம் ஆண்டின் இறுதியில் நக்சல்பாரி போராட்டம் ஒரு பின்னடைவிற்கு உள்ளானாலும், அது. இந்தியாவெங்கும் புரட்சிகர சக்திகளை ஊக்குவித்து முதன்முதலாக புரட்சிகரமான, உண்மையான கம்யூனிஸ்டு கட்சியைத் தோற்றுவிக்க வித்திடுகிறது.
நக்சல்பாரி போராட்டத்தினால் உந்தப்பட்ட இடது கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த அணிகள் பல்வேறு மாநிலங்களில் தலைமையை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தினர். நிலைமையைச் சமாளிக்க இடது கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் கமிட்டி 1967 ஆகஸ்டில் மதுரையில் கூடியது; மத்திய கமிட்டி நிறைவேற்றிய தீர்மானங்கள் நக்சல்பாரி எழுச்சியை தவறென்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பீடுகளை மறுத்தன; ஏற்கனவே நக்சல்பாரி போராட்டத்தையொட்டி சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை சில நிலைப்பாடுகளை ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தது. இந்திய ஆளும் வர்க்கங்கள் பற்றி தவறான நிலைப்பாடு கொண்டிருந்ததற்காகவும் ஐ.மு. அரசில் பங்கேற்றதற்காகவும் இடது கம்யூனிஸ்டு தலைமையை தாக்கியிருந்தது. ஆயுதந்தாங்கிய எழுச்சிக்கு மக்களைத் தயார் செய்ய ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி தேவை எனவும் பிரச்சாரம் செய்தது. மதுரை மத்திய கமிட்டித் தீர்மானங்கள் சீனக் கட்சியின் மதிப்பீடுகளை புறக்கணித்து சந்தர்ப்பவாத நிலை எடுத்தன. இந்த சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து முதலில் நிலை எடுத்தவர் உ.பி.மாநில இடது கம்யூனிஸ்டு கட்சி செயலாளரான சிவகுமார் மிஸ்ரா என்பவர் ஆவார். உத்திரப்பிரதேசத்தைத் தொடர்ந்து பஞ்சாப். ஆந்திரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், பீகார், தமிழ்நாடு முதலிய மாநிலங்களிலும் இடது கம்யூனிஸ்டு கட்சிக்குள் கலகங்கள் துவங்கின. இந்த அதிருப்தியாளர்கள் அனைவரும் மாற்று செயல்திட்டம் ஒன்றின் அடிப்படையில் ஒருங்கிணைய ஆரம்பித்தனர். நக்சல்பாரி புரட்சியாளர்களின் அடிப்படை அரசியல் நிலைபாடுகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.
பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் அமைத்த நக்சல்பாரி உழவர் போராட்டக் கமிட்டியிலிருந்து ‘அகில இந்திய கிரிஷிக் சங்கராம் சஹாயக் சமிதி’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் முன்முயற்சியால் 1967 நவம்பர் மத்தியில் கல்கத்தாவில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாடு இடது கம்யூனிஸ்டு கட்சியில் உள்ள புரட்சியாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதென முடிவு செய்தது. இந்தியா முழுவதும் உள்ள புரட்சியாளர்களை ஒருங்கிணைக்கவும் படிப்படியாக ஒரு புரட்சிகர கட்சி அமைப்பதை நோக்கி போகவும் தற்காலிக கமிட்டி ஒன்றை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக 1967 நவம்பர் மாதம் 13-ம் தேதி சுசிதல்ராய் என்பவரைக் கன்வீனராகக் கொண்டு கல்கத்தாவில் ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் அகில இந்தியப் பொதுவுடமைப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் கமிட்டி அமைக்கப்பட்டது. இதில் மே.வ. ஒரிசா.கேரளா, மைசூர், தமிழ்நாடு. உ.பி.. புரட்சியாளர்கள் பங்கேற்றனர். ஆந்திரா. ஜம்மு காஷ்மீர் புரட்சியாளர்கள் தனியே இருந்தனர்.
தனது முதல் பிரகடனத்தில் ஒருங்கிணைப்புக் கமிட்டி நாட்டின் பல பகுதிகளிலும் வெடித்திருந்த விவசாயிகளின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு புரட்சிகர கட்சியைக் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தது. ஒருங்கிணைப்பு கமிட்டியின் சார்பாக ‘லிபரேஷன்’ என்ற ஆங்கில பத்திரிக்கை கொண்டு வரப்பட்டது. இந்தியா அரசியல் சுதந்திரம் பெறாத அரைக் காலனிய – அரை நிலப்பிரபுத்துவ நாடு இந்தியப் புரட்சியின் இலக்குகள் அமெரிக்க ஏகாதிபத்தியம். ரசிய சமூக ஏகாதிபத்தியம், தரகு அதிகார வர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்; இந்திய புரட்சி விவசாயிகளின் விவசாயப் புரட்சியை சாராம்சமாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சி: புரட்சிக்கான பாதை நீண்டகால மக்கள் யுத்தப் பாதையே; தேர்தலை புரட்சிக் காலம் முழுவதும் புறக்கணிப்பது போன்ற அரசியல் அடிப்படை நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்புக் கமிட்டி அறிவித்தது. மார்க்சிய – லெனினிய மாசேதுங் சிந்தனையே சித்தாந்த வழிகாட்டி எனவும் பிரகடனம் செய்தது.
பின்னர் ஆந்திராவிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் ஒருங்கிணைப்புக் கமிட்டியில் புரட்சியாளர்கள் இணைந்தனர்: இதன் அடுத்த கட்டமாக 1969 ஏப்ரல் 22-ல் இந்திய மண்ணில் முதன் முதலாக ஒரு உண்மையான புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி) (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) ஏற்படுத்தப்பட்டது.
- புதிய ஜனநாயகம் – ஏப்ரல், 1990 இதழ்