புரட்சியின் கனலாக ஒளிவீச வருகிறது
செங்கனல் – அச்சு இதழ்

“ஒரு பத்திரிக்கை என்பது பிரச்சாரகன், கிளர்ச்சியாளன் மட்டுமல்ல; ஒரு அமைப்பாளனும் ஆகும்” என்ற லெனினின் வார்த்தைகளுக்கு ஏற்ப, 1985 நவம்பர் முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் மார்க்சிய – லெனினிய அரசியலை ஏந்தி வெளிவந்து கொண்டிருந்தது, எமது “புதிய ஜனநாயகம்” இதழ். தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மா-லெ புரட்சிகர அரசியலைக் கொண்டு சென்று புரட்சித் தீயை மூட்டி வந்தது. ஆளும் வர்க்கத்திற்கு அச்சுறுத்தலாகவும் புரட்சிகர உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையாகவும் அவ்விதழ் திகழ்ந்ததை வாசகர்கள் அனைவரும் அறிவீர்கள். 

எனினும், 2020-க்குப் பிறகு எமது அமைப்புகளில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிளவுகள் காரணமாக அவ்விதழின் சட்ட உரிமமும் கட்டமைப்புகளும் ஓர் அரசியலற்ற லும்பன் கையில் சிக்கிக் கொண்டது.  

இதன் பின்னர், எமது அமைப்புகளைப் புணரமைத்து, கடந்த ஜூலை 20, 2022 முதல் ஏறத்தாழ மூன்றாண்டுகளாக “செங்கனல்” என்ற பெயரில் நாங்கள் இணையதளமாக இயங்கி வருவதையும் வாசகர்கள் அறிவீர்கள். இச்சூழலில், தற்போதைய அரசியல் தேவை, வாசகர்களின் கோரிக்கை இவற்றைப் பரிசீலித்த வகையில் செங்கனலை அச்சிதழாகக் கொண்டுவரவுள்ளோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

தற்போது செங்கனலை இருமாத இதழாகக் கொண்டு வருகிறோம். எதிர்வரும் காலத்தில், ஆசிரியர் குழுவை முறைப்படுத்தியும் இதழுக்கான கட்டமைப்புகளை விரிவுபடுத்தியும் மாதாந்திர இதழாகக் கொண்டுவர முயற்சிக்கிறோம். சிறப்புக் கட்டுரைகளை எழுதி மேலும் சிறப்பாகவும் புதிய ஜனநாயகம் இதழின் தரத்திற்கும் செங்கனலைக் கொண்டுவர முயற்சிக்கிறோம். 

வாசகத் தோழர்கள் வாங்கிப் படித்து ஆதரவு தருவதோடு இதழைத் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் கொண்டு செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். எமது “புதிய ஜனநாயகம்” இதழுக்கு வழங்கிய அதே ஆதரவை செங்கனலுக்கும் வழங்குமாறும், கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகளைக் கூறி மேலும் சிறப்புற இதழைக் கொண்டுவர உதவுமாறும் கேட்டுக் கொள்கிறோம். 

ஆசிரியர் குழு, 

செங்கனல்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன