சமஸ்கிருதத்தை விரட்டிய மெக்காலே கல்வி!

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியினர், தங்களது காலனியாதிக்கத் தேவைகளுக்குச் சேவை செய்கின்ற வேலையாட்களை உருவாக்குவதற்காக அன்றைக்கு இந்தியாவில் நிலவிவந்த கல்வி முறையை மாற்றியமைத்தனர். காலனியாதிக்கவாதிகள் தங்களது நலனுகாக இந்திய கல்விச் சூழலை மாற்றியமைத்த போது, அது – சாதி அடிப்படையில் சமூகத்தின் பெரும்பான்மையோருக்குக் கல்வி மறுக்கப்பட்டு பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி பெற உரிமை உண்டு என்ற சமஸ்கிருத கல்வி முறையை தகர்த்தது. மெக்காலே கல்வி முறை இந்தியக் கல்வியில் ஏற்படுத்திய எதிர்மறை விளைவுகள் பல இருந்தாலும், நேர்மறையாக அது சமஸ்கிருத கல்வியை விரட்டியடித்தது. 

இது குறித்து தோழர் விடுதலை ராஜேந்திரன் தொகுத்தளித்துள்ள ‘சமஸ்கிருத படையெடுப்பு’ நூலில் விவரித்துள்ளதை பிரசுரிக்கிறோம்.


இவர்களின் கல்வி மேன்மை குறித்து 200 ஆண்டுகளுக்கு முன்பு இராஜா ராம் மோகன் ராய் கவர்னர் ஜெனரலுக்கு எழுதிய கடிதத்தையும், அதற்கு தாமஸ் பேபிங்டன் மெக்காலே பிரபு எடுத்த நடவடிக்கையையும் இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறியும் போராட்டத்தில் ஒரு அறிவாயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வாசகர்களுக்குத் தருகிறோம்.

பிரிட்டிஷ் ஆட்சியில் வைதீக வெறிபிடித்த பார்ப்பனர்கள், பார்ப்பனர்களுக்கு மட்டும் சமஸ்கிருத கல்லூரியை ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த அழுத்தத்தினால் பிரிட்டிஷ் ஆட்சி காசியில் ஒரு சமஸ்கிருதப் பள்ளியைத் தொடங்கி, அடுத்து கல்கத்தாவிலும் ஒரு சமஸ்கிருதப் பள்ளியைத் தொடங்கும் முயற்சிகளில் இறங்கியது. இதற்கு கடும எதிர்ப்பு தெரிவித்தார் இந்து மத சீர்திருத்தவாதியும் பார்ப்பனருமான இராஜாராம் மோகன் ராய், “சமஸ்கிருதக் கல்வியானது இந்தியாவை என்றென்றும் இருளில் ஆழ்த்திவிடும். இந்திய குடிமக்களின் முன்னேற்றத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அக்கறை இருக்குமானால் கணிதம், இயற்கை தத்துவம், வேதியியல், உடற்கூறுயியல் ஆகிய பயனுள்ள அறிவியலைக் கற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கவர்னர் ஜெனரலுக்கு கடிதம் எழுதினார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வந்தன. பல ஆண்டுகாலம் கருத்து வேறுபாடுகள் நீடித்த பிறகு, பிரிட்டிஷ் அரசு சமஸ்கிருதக் கல்வித் திட்டத்தை கைவிட்டது. இந்த துணிச்சலான முடிவை எடுத்தவர் கவர்னர் ஜெனரல். அமைச்சரவை சட்டக்குழு உறுப்பினரான தாமஸ் பேபிங்டன் மெக்காலே பிரபு (1800 – 1859). 1855-ம் ஆண்டு அரசு கல்விக் கொள்கை குறித்து அவர் முன்வைத்த குறிப்பு மிகவும் ஆழமானது.

 

 

“பிரிட்டிஷ் அரசு மத சகிப்புத்தன்மையைக் கடைபிடிப்பதோடு அனைத்து மதத்தினரிடமும் பாகுபாடின்றி நடந்து கொள்ளவேண்டும். முக்கியமான பிரச்சினைகளில் தவறான வழிகளைப் போதிப்பதும், அற்பப் பயனை விளைவிப்பதுமான சமஸ்கிருத இலக்கியங்களைக்  கற்றுக் கொடுப்பது என்பது பகுத்தறிவுக்கும் ஒழுக்க நெறிக்கும் ஏற்புடையது அன்று. அத்தோடு அது நடுநிலையும் ஆகாது. சமஸ்கிருதம் வெறும் தரிசு நிலம். அதைக் கற்பதனால் அறிவு விளையாது. அதில் வானளாவிய மூட நம்பிக்கைகள் நிறைந்துள்ளன என்பதால் அந்த இலக்கியங்களைக் கற்பிக்க வேண்டும் என்று நம்மிடம் கூறுகிறார்கள். அதற்கு நாம் இசைந்தோமெனில் திரிபுபடுத்தப்பட்ட வரலாறு, தவறான வானவியல், ஏமாற்று மருத்துவம் ஆகியவற்றையே கற்பிக்க நேரிடும். இந்த மோசடிகள் நேர்மையற்ற ஒரு மதத்தின் புனித நூல்களில் இருப்பதனால் அவை கற்பிக்கப்பட வேண்டும் என்பது மூடத்தனம். இந்தியரைக் கிருத்துவத்திற்கு மாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து நாம் விலகியே இருந்துள்ளோம். இனியும் அவ்வாறே தொடர்வோம். அதற்காக, ஒரு கழுதையைத் தொட்டுவிட்டால் சுத்தி செய்வதற்கு என்ன மந்திரங்கள் கூற வேண்டும், ஒரு ஆடு கொல்லப்பட்டால் அதற்குப் பரிகாரங்கள் எந்த வேதப் பாடலைப் பாட வேண்டும் என்பதை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக நாட்டின் நிதியைச் செலவிட வேண்டும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

இன்றைய நிலையில் நமக்கும் நம்மாள் ஆளப்படும் கோடிக்கணக்கான மக்களுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தித் தரும் ஒரு வர்க்கத்தை உருவாக்குவதற்காக சிறந்த ஒரு திடடத்தை நிறைவேற்ற வேண்டும். நிறத்திலும் இரத்தத்திலும் இந்தியர்களாகவும் ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் செயல் முறையிலும் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஒரு வர்க்கத்தை உருவாக்குவோம்”

இப்படி துணிவுடன் அறிவித்தார் மெக்காலே. இந்தத் திட்டம்தான் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமை வழங்கிய சமஸ்கிருத கல்வி முறையை தகர்த்து, அனைவருக்குமான கல்விக்கு கதவு திறந்தது. இதற்கு மெக்காலேவுக்கு நன்றி சொல்ல வேண்டும். மெக்காலே கல்வி முறையில் மாற்றங்கள் வேண்டும் என்பது வேறு; ஆனால் அன்றைய சூழலில் இது மிகவும் முற்போக்கான நடவடிக்கைதான்.

 

நன்றி: ‘சமஸ்கிருத’ படையெடுப்பு, தொகுப்பு: விடுதலை இராசேந்திரன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன