விடுதலைப் போராட்ட வீரர்களை விழுங்கத் துடிக்கும் காவி பாசிஸ்டுகள்

விடுதலைப் போராட்ட வீரர்களைக் காவிமயமாக்க தொடர்ந்து முயன்று வரும் காவி பாசிஸ்டுகள்

தேசப்பக்தியைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் ஆர் எஸ் எஸ்-பாஜக கும்பல், பிரிட்டீஸ் காலனியாதிக்கவாதிகளை சமரசமின்றி எதிர்த்துப்போரிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை இந்து தேசியவாதிகளாக சித்தரித்து அதற்கான கதைகளை ஜோடித்து வருகின்றனர். சமீபத்தில் தீரன் சின்னமலையின் 217 வது நினைவுவேந்தல் விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ரவி “திரன் சின்னமலை குலதெய்வ வழிபாட்டின் மூலம், பாரதத்தின் ஆன்மாவை பாதுகாத்தார். உலகளாவிய சகோதரத்துவத்தைத்தான், சனாதனம், கலாசாரம், தர்மம் என்று சொல்கிறோம். உலகின் உயர்ந்த கடவுள் நம் அனைவருள்ளும் வாழ்கிறார் என்றுதான் வேதம் சொல்கிறது….” எனப் பேசியுள்ளார்.

தீரன் சின்னமலையை சனாதனம்-வேதத்தோடு தொடர்பு படுத்தி அவருக்கு காவிசாயத்தை பூசியுள்ளார் ஆர் எஸ் எஸ்-பாஜக கும்பலின் தமிழக ஏஜெண்டான ஆளுநர் ரவி.  பிரிட்டீஸ் காலனியாதிக்கவாதிகளை எதிர்த்த போரிட்டதில் தீரன் சின்னமலையின் பங்களிப்பைப் பற்றி ஒருவர் அறிந்தாலே  சின்னமலையைப் பற்றி இந்துத்துவா கும்பல் சொல்வது பொய் என்று அறிந்து கொள்ளமுடியும். அதற்கு உதவியாக புதிய கலாச்சார இதழில் தீரன் சின்னமலை குறித்து வந்த கட்டுரையை இங்கே மீண்டும் வெளியிடுகிறோம்.

திப்புவுக்குத் தோள் கொடுத்த வீரன் தீரன் சின்னமலை

கீழ்த்தரமான கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை அகற்ற  பாளையக்காரர்கள் ஒன்றுபட்டு ஏற்படுத்தியிருந்த தீபகற்பக் கூட்டிணைவில் தெற்கே மருது பாண்டியர், திண்டுக்கல்லில் கோபால் நாயக்கர் எனக் கூட்டிணைவை வழிநடத்தி வந்தனர். இதில் மலபாரையும், தமிழகத்தையும் தென்னிந்தியப் புரட்சிக் கண்ணியில் இணைப்பதற்கான இடமாக விளங்கியது கொங்கு மண்டலம். அதில் ஆங்கிலேயர்களுக்கு அடங்க மறுத்த பாளையக்காரர்களில் ஒருவர் சின்னமலை.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தைக் கருவறுக்க ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, திருநெல்வேலி எனப் பரந்து விரிந்த கூட்டிணைவை உருவாக்க மராட்டியப் போராளி ‘துந்தாஜிவாக்”கைச் சந்திக்கச் சென்ற மூன்று தூதுக்குழுவில் சின்னமலையின் பெருந்துறை பாளையமும் பங்கேற்றது. கொங்குப் பகுதி மைசூர் ஆட்சியில் கீழ் வரிவசூல் பகுதியாக இருந்தாலும் பொது எதிரியான கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை வீழ்த்த நாம் ஒன்றுபட வேண்டும் என்ற திப்புவின் வேண்டுகோளை ஏற்று ஆங்கிலேய படைகளை திப்புவுடன் சேர்ந்து எதிர்த்துப் போராட 10,000 படை வீரர்களுடன் தன்னையும் இனணத்துக் கொண்டார் சின்னமலை. அங்கெ ஜாக்கோபின் என்ற பிரெஞ்சு புரட்சி வீரர்களால் சின்னமலை படைக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டு, சீரங்கப்பட்டினப் போரில் சிறப்பாக மாலவல்லி எனுமிடத்தில் ஆங்கிலேய  படைக்கு பெருத்த சேதத்தையும் விளைவிக்கிறது கொங்குப்படை.

 

 

மேலும் நெப்போலியனுக்கு திப்புவின் கோரிக்கையோடு பிரான்சுக்குத் தூது செல்லும் வேலையை தீரன் சின்னமலையின் வீரர் கருப்பச்சேர்வை செய்கிறார். திப்புவின் முடிவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தைத் தவிர பிற பகுதிகள் கும்பனிப் படை வசமாகின்றன. அடங்க மறுக்கும் சின்னமலைக்கு ஆங்கிலேயப் படை குறி வைக்கிறது.

அறச்சலூர்ப் போரில் ஆங்கிலப்படையைத் துரத்தி அடிக்கிறார் சின்னமலை. காவிரிக்கரைப் போரில் 1801-இல் கர்னல் மாக்ஸ்வெல் படையை துரத்துகிறார். அதே மாக்ஸ்வெல்லின் தலையை 1842-இல் ஓடாநிலைப் போரில் வெட்டி வீசினார் சின்னமலை.  வெறியோடு 1803இல் குதிரைப்படையுடன் சின்னமலையைக் கைது செய்ய வந்த ஜெனரல் ஹாரிஸின் படைகள் மீது எறிகுண்டை வீசித் துரத்தியடிக்கிறார் சின்னமலை. மீண்டும் பெரும்படையுடன் ஜெனரல் ஹாரிஸ் வருவதை அறிந்த சின்னமலை ஓடாநிலை கோட்டை வாசலில் பீரங்கியால் தாக்குவது போல வெறும் பீரங்கியை வைத்துவிட்டு கோட்டையிலிருந்து தலைமறைவாகி, காங்கேயம் சென்று அங்கிருந்து வாழை வியாபாரி போன்ற வேடத்தில் பழனி சென்று பிற பாளையக்காரர்களுடன் கும்பனிப் படையைத் தாக்கத் திட்டமிடுகிறார்.  எட்டப்பனைப் போல இங்கும் சமையல்காரன் நல்லப்பன் காட்டிக் கொடுக்க தீரன் சின்னமலை கும்பனிப் படையால் கைது செய்யபடுகிறார்.

கும்பனி ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டால் விட்டுவிடுவதாக ஹாரிஸ் பேரம் பேசியும், சோரம் போகாத தீரனும் அவனது சகோதரர்கள் பெரியதம்பி, கிலேதர் ஆகியோருடன் மூவரையும் சங்ககிரி மலைக்கோட்டையில் ஆலமரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றது கும்பனி ஆட்சி. கல்லாய்ச் சமைத்த துயரம் என 1500 அடி உயர சங்ககரி மலை நம் கண்முன்னே தீரன் சின்னமலையின் நாட்டுப்பற்றை உயர்த்திக் காட்டி நிற்கிறது. பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு இந்த மண் அடிபணியாது என்று கல்லும் மண்ணும் நம்மைப் பார்த்து நம்பிக் கொண்டிருக்கிறது. மறந்து விட வேண்டாம்!

சுடர்விழி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன