2008-ஆம் ஆண்டு நவம்பரில், மகாராஷ்டிரா மாநிலத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய மலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகில் குண்டு வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இக்குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளான பிரயாக் சிங் தக்கூர் (இவர் ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்பான அபிநவ் பாரத்-இன் தலைவர் மற்றும் பாஜகவின் முன்னாள் எம்.பி.) மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளான பிரசாந்த் புரோகித், ரமேஷ் உபாத்தியா உள்ளிட்ட ஏழு பேர் மீதான வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், வரும் ஜூலை மாதம் 31-ஆம் தேதி தீர்ப்பை அறிவிக்க உள்ளதாக மும்பை NIA சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
தொடக்கத்தில் இவ்வழக்கு மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு போலீசினால் விசாரிக்கப்பட்டு வந்தது. பிறகு 2011-இல் NIA-க்கு அப்போதைய காங்கிரஸ் அரசு மாற்றியது. 2013-இல் இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரின் மீது NIA மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
2014-இல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இவ்வழக்கின் வேகம் குறைந்தது. பலர் பிறழ் சாட்சியங்களாக மாறினர்.
2015-இல், வழக்கு விசாரணையில் தீவிரம் காட்டவேண்டாம் என NIA உயர் அதிகாரி அழுத்தம் கொடுத்ததாக இவ்வழக்கின் சிறப்பு அரசு வழக்கறிஞரான ரோகிணி சாலியன் கூறியிருந்தார்.
2016-இல், ஏழு பேரில் பிரக்யா சிங் உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. எனவே அம்மூவரையும் வழக்கில் இருந்து வடுவிக்கலாம் எனக் கூடுதல் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது Nஈஆ. ஆனால் சிறப்பு நீதிமன்றமோ அதை நிராகரித்தது, குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. வழக்கு விசாரணை முடிந்து தற்போது தீர்ப்புக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2019 லோக்சபா தேர்தலில் பாஜக சார்பாக போபால் தொகுதியில் போட்டியிட்ட பிரக்யா சிங்கிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த மோடி, ”பல ஆயிரம் வருடம் பழமையான இந்து தர்மத்தை பயங்கரவாதம் என்று குற்றம் சாட்டுகின்றனர், அதற்கு எதிர் குறியீடாகத்தான் பிரக்யா சிங்கை வேட்பாளராக அறிவித்ததாக ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பேசினார். மோடி தனது செயலின் மூலம், வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, பிரக்யா சிங் குற்றமற்றவர் என்ற நற்சான்றிதழை வழங்கிவிட்டார்.
எனவே இவ்வழக்கில் இருந்து பிரக்யா சிங் விடுவிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம். இது வெறும் அனுமானம் அல்ல. இவ்வழக்கு கடந்து வந்த பாதையும், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்துமதக் கலவரங்கள், கொலைகள், குண்டு வெடிப்புகளில் தண்டனைப் பெற்று சிறையில் உள்ள அல்லது குற்றஞ்சாட்டப்பட்ட பல இந்துமதவெறிப் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து விடுவிக்கப்பட்டு வருவதிலிருந்தும் ஒருவர் இம்முடிவுக்குத்தான் வரமுடியும்.
உதாரணமாக, சம்ஜவ்தா இரயில் குண்டுவெடிப்பு, மெக்கா மசூதிக் குண்டு வெடிப்பு மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்புகளில் முக்கிய குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் அசீமானந்தா உள்ளிட்ட பலரை, போதிய ஆதாரம் இல்லை என்று சொல்லி NIA சிறப்பு நீதிமன்றம் 2019-இல் விடுதலை செய்துவிட்டது. இந்தப் பயங்கரவாதிகளோடு சம்பந்தப்பட்ட பிரக்யா சிங்கும் மலேகான் வழக்கிலிருந்து விடுதலை ஆகவோ அல்லது மிகக்குறைந்த தண்டனை பெறவோ அதிக வாய்ப்புகள் உள்ளது.
* * * * * *
2006 லிருந்து 2008 வரை ஐந்துக் குண்டு வெடிப்புகள் ஆர்.எஸ்.எஸ். இந்துவெறி பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இவையனைத்துமே முஸ்லீம்களைக் குறிவைத்து நடத்தப்பட்டவை. அதில் ஒன்றுதான் மேலே கூறியது.
2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரின் முஸ்லீம்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தது. 2007 நவம்பர் 11-ஆம் தேதி அன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் குண்டுகள் வெடித்தது. 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சம்ஜவ்தா விரைவு வண்டியில் குண்டு வெடித்தது. அதைத்தொடர்ந்து மே மாதத்தில் ஆந்திராவின் தலைநகர் ஐதராபாத்தின் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. மீண்டும் மலேகான் நகரில் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி அன்று குண்டுகள் வெடித்தது. குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயம் அடைந்தார்கள். இக்குண்டு வெடிப்புகள் வெவ்வேறு கால இடைவெளியில் நடந்திருந்தாலும் இவையனைத்தும் ஓரிடத்திலிருந்துதான் திட்டமிடப்பட்டன என்று பின்னால்தான் தெரியவந்தது.
இக்குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்கள் தான் காரணம் என்ற பிரச்சாரம் ஊடகங்களினால் அப்போது முன்னெடுக்கப்பட்டது. எவ்வித ஆரம்ப கட்ட விசாரணையும் இல்லாமல் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் மீது பொய்வழக்குகள் போடப்பட்டன. ஆரம்பத்தில் இவ்வழக்கை மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு சிறப்பு ( ATS) போலீஸ்தான் விசாரித்தது.
சம்ஜவ்தா விரைவு வண்டிக் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். இரகத்தைச் சேர்ந்த வெடிபொருள்களை முன்னாள் இராணுவ அதிகாரியான புரோஹித் கள்ளத்தனமாக ஜம்முவில் இருந்து வாங்கிக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. மலேகான் குண்டுவெடிப்பிலும் ஆர்.டி.எக்ஸ். இரக வெடி பொருள்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் அபிநவ் பாரத் அமைப்பின் பிரக்யா சிங்கினுடையது என்பதை ATS போலீஸ் கண்டறிந்தது. அதனையடுத்து பிரக்யா சிங் கைது செய்யப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித், ஜம்முவில் சாரதா பீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்த தயானந்த் பாண்டே மற்றும் மலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட 11 பேரை ATS போலீஸ் கைது செய்தது. பிரக்யா சிங்கை விசாரணை செய்தபோது, மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுனில் ஜோசி, இராமசந்திர கல்சங்கரா, சந்திப் டாங்கே, அசீமானந்தா, பாரத் ரித்தேஷ்வர் முதலானோர் இக்குண்டு வைப்பில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது.
தயானந்த் பாண்டேயின் கணினியில் இருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில், 2010-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி அன்று ஆர்.எஸ்.எஸ். இன் முழு நேர ஊழியரான சுவாமி அசீமானந்தாவை ATS போலீஸ் கைது செய்தது. ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18-ஆம் தேதி அன்று டெல்லி வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்பட்ட அசீமானந்தா, இரண்டு நாள் நீதிமன்றக் கண்காணிப்பில் வைக்கப்பட்ட பிறகு நீதிபதியின் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
டிசம்பர் 2010 மற்றும் ஜனவரி 2011-இல் ஹரியானா மற்றும் டெல்லி நீதிமன்றத்தில் அசீமானந்தா நீதிமன்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அதில் குண்டு வெடிப்புகளுக்குத் திட்டமிட்டு செயல்படுத்தியதையும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் கீழிருந்து மேல்வரையுள்ள பலர் இதில் தொடர்புள்ளதையும் வாக்குமூலங்களாகக் கொடுத்திருந்தார்.
“மலேகான் நகரில் முஸ்லீம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால் எங்களது முதலாவதுக் குண்டு வெடிப்பை மலேகானில் நடத்தினோம். இதற்காக 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி, பாரத் ரித்தேஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து நான் திட்டமிட்டேன். அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால் அதனைத் தடுக்கவும் இந்துக்களை அச்சுறுத்தவும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில்ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்.” இது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசிமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.
இக்குண்டுவைப்பு சதியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். மத்திய கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ்குமார், மத்திய பிரதேச ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான சுனில்ஜோஷி, இந்தூர் மாநகர ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான சந்திப் டாங்கு, மூத்த ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான இராம்ஜி தேவேந்திர குப்தா, மேல்மட்ட உறுப்பினரான சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோஹித், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான யோகி ஆதித்தியநாத், குஜராத்தின் விவேகானந்தா சேவா கேந்திரத்தின் பாரத் பாய், அந்த அமைப்பின் மாநில அமைப்பாளரான டாக்டர் அசோக், முக்கிய பிரமுகர்களான லொகேஷ் சர்மா, இராஜேஷ் மிஸ்ரா, ஜம்முவை சேர்ந்த சாரதா பீட சாமியார் தயானந்த் பாண்டே ஆகியோரின் பெயர்களையும் அவர் வாக்குமூலமாக அளித்துள்ளார். யாருடைய தூண்டுதலோ நிர்ப்பந்தமோ இல்லாமல் எவ்வித அச்சமின்றி சுயநினைவோடு தான் இந்த வாக்குமூலத்தை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அசீமானந்தா 1977-இல் இருந்து ஆர்.எஸ்.எஸ்-இன் முழுநேர ஊழியர். ஆர்.எஸ்.எஸ்.-இன் பரிவாரங்களில் ஒன்றான வனவாசி கல்யாண் ஆசிரமத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். அசீமானந்தா, அப்போதையக் குஜராத் முதல்வர் மோடி, முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் அதன் முன்னாள் தலைவரான சுதர்சன் ஆகியோருக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2011 மார்ச் 28-ஆம் தேதி, தனக்காக வழக்காடுவதற்காக ஒரு வழக்குரைஞரை நியமிக்கச் சம்மதித்தார். அதற்கு அடுத்த நாளே, தான் அளித்த ஒப்புதல் வாக்கு மூலங்களைத் திரும்பப்பெறுவதாகவும் அவை அனைத்தும் துன்புறுத்தி வாங்கப்பட்டதாகவும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஆனால் 2012-2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையே கேரவன் பத்திரிக்கைக்கு அசீமானந்த கொடுத்த நான்கு நேர்காணலில், தன்னை யாரும் துன்புறுத்தவில்லை என்றும் சுயநினைவோடு தான் நீதிமன்ற வாக்குமூலத்தைக் கொடுத்ததாகவும் அசீமானந்த கூறியாக இருக்கிறார்.
உடனே ஆர்.எஸ்.எஸ் இன் வழக்கறிஞர் அமைப்பான ABAP அசீமானந்தாவிற்காக வேலை செய்ய ஆரம்பித்தது. மேலும் சங்கப் பரிவார அமைப்புகளும் அதன் ஆதரவாளர்களும், காங்கிரஸ் அரசாங்கம் திட்டமிட்டு “இந்து பயங்கரவாதம்” என்று பொய் பரப்புவதாகப் பிரச்சாரம் செய்தனர். 2014-இல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வழக்குகள் படிப்படியாக திட்டமிட்டு நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறின. இதற்கு NIA-வும் துணையாக இருந்தது. பிறகு இக்குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்ட இந்துவெறி பயங்கரவாதிகள் நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டனர்.
பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு, பத்தாண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருந்த பேராசிரியர் சாய்பாபாவின் உடல் நிலையை (90% செயல்பட முடியாதநிலை) கூட இந்த நீதிமன்றங்கள் கணக்கில் கொள்ளவில்லை. பார்க்கின்சன் நோயால் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதனால் நீர் அருந்துவதற்கு சிப்பர் வேண்டுமென்று கோரிய பாதிரியார் ஸ்டேன்சாமிக்கு சிப்பர் கொடுக்கக் கூடாது என்று NIA தரப்பு நீதிமன்றத்தில் வாதாடியது. அதை நீதிமன்றமும் எற்றுக் கொண்டது.
பீமா கொரேகான் வழக்காகட்டும் சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களாகட்டும் ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் இவர்கள் மீது இன்னும் முழுமையான குற்றப் பத்திரிக்கையை NIA தாக்கல் செய்யவில்லை, நீதிமன்ற விசாரணையும் ஆரம்பிக்கவில்லை.
ஆனால் குண்டு வைத்தது நாங்கள் தான், சங்கப் பரிவாரங்களின் பல தலைவர்கள் இதனோடு சம்பந்தப்பட்டுள்ளனர் என்று நீதிமன்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்தும் ஒரு இந்துவெறி பயங்கரவாதிகள் கூடத் தண்டிக்கப்படவில்லை. அவர்களுக்குப் பதவி கிடைக்கிறது. அப்பாவி முஸ்லீம் மக்களோ பொய்வழக்கிலே தனது வாழ்நாளைச் சிறையிலே கழிக்கின்றனர் அல்லது இறந்து போகின்றனர்.
* * * * *
அசீமானந்தாவும் பிரக்யா சிங்-கும் இந்தரேஷ் குமாருக்கும் சங்க பரிவாரங்களின் பிற நபர்களுக்கும் இக்குண்டு வெடிப்புகளில் தொடர்பு இல்லை என்றால், இந்த குண்டுவெடிப்புகளை நடத்தியது யார்? இக்குண்டு வெடிப்புகளை ஒட்டிப் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லீம் இளைஞர்களின் நிலை என்ன? அவர்களின் வாழ்க்கை என்னவானது?
இந்தியாவின் முக்கிய பிரச்சினையே இஸ்லாமிய பயங்கரவாதம் தான் என்று சங்கப் பரிவாரங்களும் ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளும் கடந்த 40 வருடங்களாகப் பரப்புரை செய்து வருகின்றனர். ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு அடிப்படையாக உள்ள இந்து மதவெறிப் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளைப் பற்றி பெரும்பான்மை வாய் திறப்பதே இல்லை.
அத்வானி இரதயாத்திரைக் கலவரங்கள், பாபர் மசூதி இடிப்பு, அதையொட்டி இந்தியா முழுவதும் நடந்த கலவரங்கள், 2002-இல் குஜராத்தில் நடந்த முஸ்லீம் இனப்படுகொலைகள், 2006-2008 வரையிலான தொடர் குண்டு வெடிப்புகள், பசு அரசியல் கொலைகள், லவ் ஜிகாத், மசூதிகள் இடிப்பு, டெல்லியில் நடந்த சிஏஏ கலவரம், பொது சிவில் சட்டம், புல்டோசர் கொண்டு முஸ்லீம்களின் வீடுகளை இடிப்பது, வக்ஃபு சொத்தைக் கைப்பற்றுவதற்கான சட்டத்திருத்தம் எனக் கடந்த 40 வருடங்களாக பாஜகவும் சங்கப்பரிவார இந்துவெறி பயங்கரவாதிகளும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர்.
இத்தாக்குதல்களில் பல ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல முஸ்லீம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அப்பாவி இஸ்லாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. முஸ்லீம்களின் தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன.
இக்கலவரங்களுக்குத் தலைமை தாங்கிய பலர் இன்று அமைச்சர்களாகவும் ஆட்சி அதிகாரத்தில் முக்கிய பொறுப்புகளிலும் உள்ளனர். ஆனால் பொய்வழக்குகளில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லீம்களோ தங்களுடைய வாழ்க்கையையே இழந்துள்ளனர். இக்கையறு நிலை தான் அவ்விளைஞர்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு இயல்பாகவே பலியாவதற்கு அடிப்படையாக உள்ளது.
பாஜக-ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் இந்து மதவெறி பயங்கரவாத நடவடிக்கையென்பது சங்கிகளின் ஆரிய-வேத கோட்பாட்டிலிருந்தும் இந்துராஷ்ட்ரா கட்டமைப்பிற்கான அடிப்படையில் இருந்தும் வருவது. இதில் முஸ்லீம்களை பொதுவான எதிரியாகச் சித்தரிக்கின்றனர். இக்கண்ணோட்டம் கடந்த 40 வருடங்களில் இந்திய அரசியலில் முக்கிய பங்காற்றி இருக்கிறது.
- செல்வம்
https://www.livemint.com/news/india/17-years-later-malegaon-bomb-blast-case-trial-finally-ends-nia-special-court-reserves-verdict-for-may-8-11745071761727.html
https://www.hindustantimes.com/cities/mumbai-news/2008-malegaon-blast-case-special-nia-court-likely-to-give-judgment-on-july-31-101746731604099.html
https://www.aljazeera.com/news/2019/3/20/samjhauta-express-blast-case-court-acquits-four-accused
https://www.deccanherald.com/india/maharashtra/2008-malegaon-blast-case-all-you-need-to-know-3524864#4
https://caravanmagazine.in/vantage/how-senior-leaders-rss-aided-and-instigated-perpetrators-attacks-such-malegaon-2008-blasts
Puthiya jananayakam Febraury 2011.
https://caravanmagazine.in/reportage/believer