சமீபத்தில் சென்னை வந்த ஒன்றிய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் கீழடி அகழாய்வின் ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த ஒன்றிய அமைச்சர், அந்த ஆய்வறிக்கையை ஏற்க அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகள் இன்னும் தேவைப்படுவதாக குறிப்பிட்டார். மேலும் பிராந்தியவாதத்தை வளர்க்க அதிகாரத்தில் இருப்பவர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது சரியானதல்ல. இதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எல்லா விதங்களிலும் ஆய்வுகள் முடிவடையட்டும் என்று கூறினார்.
ஒன்றிய அமைச்சரின் இந்தக் கருத்துக்கு தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், வரலாற்றாசிரியர்களும், புரட்சிகர ஜனநாயக சக்திகளும் உடனடியாக எதிர்வினையாற்றியுள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர், தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிடச் சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்வதற்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல் பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை. அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடர விரும்பும் ஒன்றிய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழ்நாடு அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம். தமிழ்நாடு அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்-பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையிலேயே ஒன்றிய அமைச்சர் அறிவின் மீதும், அறிவியல் மீதும் தீராக் காதல் கொண்டுதான் இத்தகைய கேள்விகளை எழுப்புகிறாரா? என்பதை மோடி-அமித்ஷா கும்பலின் தலைமையிலான அரசின் 11 ஆண்டுக் கால சோ(சா)தனைகளில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.
குளோனிங்க் முறை இந்தியாவில் இருந்தது, பிளாஸ்டிக் சர்ஜரி தொழில்நுட்பம் கொண்டு விநாயகர் உயிர்பெற்றார், புவிஈர்ப்பு விசையை இந்தியர்கள்தான் முதன்முதலில் கண்டறிந்தனர், ஆகாயவிமானம் பண்டைய காலத்தில் இருந்தது, அணுவைப் பற்றி பழைய இலக்கியங்களில் உள்ளது, பிதாகரஸ் தேற்றத்தை பிதாகரசுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் பயன்படுத்தினர், மாட்டு மூத்திரம் புற்றுநோயைக் குணப்படுத்தும், இராமாயணமும் மகாபாரதமும் உண்மையாக நடந்தவை எனத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ்-பிஜேபி கும்பல் பேசி வருகின்றனர். ஆனால் இதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் அதனடிப்படையிலான கோட்பாடு-செயல்முறை விளக்கங்கள் எதுவும் இதுவரை முன்வைக்கவிலை.
60,000 அறிவியல் ஆய்வாளர்களை உறுப்பினராகக் கொண்ட அறிவியல் காங்கிரஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பிரதமர், ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வைத் துவங்கி வைப்பார். அப்படியொரு நிகழ்வில், விநாயகருக்கு யானையின் தலையை ஆதி காலத்திலேயே பொருத்தியிருக்கிறார்கள். அப்படியெனில் அந்த காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறை இருந்திருக்கிறது என்று மோடி பேசியுள்ளார்.
மனிதனின் தலைக்குப் பதிலாக மிருகத்தின் தலையைப் பொருத்த முடியுமா? இது அறிவியல் கூறும் உடற்கூறியலுக்கு ( Anatomy) புறம்பானது ஆகாதா? அதேபோல் மனித மூளைக்குப் பகுத்தறியும் ஆற்றல் (ஆறாம் அறிவு) இருக்கிறது. இது விளங்குகளுக்கு கிடையாது என்பது கூட நாட்டின் பிரதம அமைச்சருக்குத் தெரியாதா? எனில் விநாயகர் பகுத்தறியும் ஆற்றல் அற்றவர் என்று பொருள் ஆகாதா? மேலும் இவர் எப்படிப் பகுத்தறியும் மனிதர் கூட்டத்தை வழிநடத்த முடியும் என்ற கேள்வி எழாதா? இப்படி அறிவியலுக்குப் புறம்பான ஆயிரம் கேள்விகளை கேட்டுக்கொண்டே போகலாம்.
அதேபோல், சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரையில் இருந்த காளை மாட்டின் படத்தினை கணினியில் குதிரையைப் போன்று மாற்றி வெளியிட்டு அங்கே வேத நாகரீகம் இருந்ததாக கதையளந்தனர். இது சர்வதேச அளவில் பேசு பொருளாகி இறுதியில் காவிக் கும்பலின் பித்தலாட்டம் அம்பலப்பட்டுப்போனது.
மேலும், சிந்து சமவெளி எழுத்துக்கள் இதுவரை புரிந்துகொள்ளப்பட முடியாத விடுவிக்கப்படாத புதிராகவே இருந்து வருகின்றன. அவற்றைச் சமஸ்கிருதத்தின் அடிப்படையில் விளக்க முடியும் என மற்றுமொரு புரளியையும் கிளப்பி அதிலும் அம்பலப்பட்டுப் போனார்கள்.
வேதங்களில் கூறப்படும் சரஸ்வதி நதியின் கரையில்தான் சிந்து சமவெளி நாகரீகம் உருவானது எனக் கூறி சிந்து சமவெளி நாகரீகத்தைச் சரஸ்வதி நதி நாகரீகம் எனப் பெயர்மாற்றம் செய்யப்போவதாக அறிவித்தனர். அதுமட்டுமன்றி சரஸ்வதி நதியைக் கண்டுபிடிப்பதற்காக பல நூறு கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன. அதேபோல் அழிந்து போன சரஸ்வதி நதியை உயிர்ப்பிக்கப் போவதாகக் கூறியதுடன், அதற்காக ஒரு அணையையே கட்டவிருப்பதாக அறிவித்த ஹரியாணா மாநில பாஜக அரசு, 200 கோடி ரூபாய் நிதியையும் இதற்கென ஒதுக்கியது.
பாபர் மசூதி தீர்ப்பின்படி, மசூதியை இடித்தது கொடுரமான குற்றம், இராமர் சிலையை மசூதிக்குள் திருட்டுத்தனமாக வைத்ததும் குற்றம், இருந்த போதிலும் அது இராமன் பிறந்த இடம் என்பதால் அது இராமனுக்குச் சொந்தமானது. நீங்கள் குடியிருக்கின்ற வீட்டை சில ரௌடிகள் அடித்து நொறுக்கியதும் நீதி கேட்டு நீதிமன்றத்துக்குப் போவதாக கருதிக்கொள்ளுங்கள். நீதிமன்றம் ரௌவுடிகளுக்கு தான் அந்த வீடு சொந்தம் என்று தீர்ப்பு எழுதுவதாக வைத்துக் கொள்வோம். இது எவ்வளவு கேலிக்கூத்தாகவும் சட்டவிரோதமாகவும் இருக்கும்.
இதைப்போலவே பாபர் மசூதி வழக்கிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கேலிக்கூத்தானதும் உண்மைக்குப் புறம்பானதும் சட்டத்திற்கு விரோதமானதுமாகும். வீடு விஷயத்தில் அதற்கான மூலபத்திரங்களை ஆதாரமாகக் கொள்ளலாம். ஆனால் பாபர் மசூதி இருந்த இடம் இராமனுக்குச் சொந்தமானது என்பதற்கோ அல்லது அது இராமன் பிறந்த இடம் என்பதற்கோ எந்த மூலப்பத்திரமும் இல்லை. இதிகாசங்களிலும் மற்ற புராணங்களில் இருந்தும் எடுத்துக்காட்டக்கூடிய மேற்கோள்களைத் தவிர அறிவியல் பூர்வமான ஆதாரம் என்று ஏதுமில்லை.
வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி, பழைய காசி விசுவநாதர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டது என்றும் அதனை இந்துக்களிடம்ஒப்படைக்க வேண்டும் என்றும் காவிக் கும்பல் நீதிமன்றத்திற்குச் சென்றது. 1993ம் ஆண்டு முதலே இந்த விசயம் நீதிமன்றத்தில் இருந்தாலும், 2019ம் ஆண்டு அயோத்தி பாபர் மசூதி வழக்கில் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்த பிறகு காவிகள் ஞானவாபி பிரச்சனையை தூசு தட்டிக் கையில் எடுத்தனர். கடந்த ஆண்டு மே மாதத்தில் வாரணாசி சிவில் நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்யவும் அதனைக் காணொளியில் பதிவு செய்யவும் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வின் போது பதிவு செய்யப்பட்ட காணொளி ஊடகங்களில் கசியவிடப்பட்டது. அதில் மசூதியின் உள்ளே இருந்த செயற்கை நீரூற்று லிங்க வடிவத்தில் இருந்ததை வைத்துக் கொண்டு மசூதியே கோவிலின் மீதுதான் கட்டப்பட்டுள்ளது உறுதியாகிவிட்டதாக காவிக் கும்பல் பிரச்சாரம் செய்தது.
கடந்த ஜனவரி 24ம் தேதியன்று தனது ஆய்வு முடிவுகளை இந்திய தொல்லியல் துறை சமர்ப்பித்தது . நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் ஊடகங்களில் பரவலாக பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. அதில் மசூதியின் அடித்தளத்தில் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் தங்களது ஆய்வில் கிடைத்திருப்பதாக தொல்லியல் துறை கூறியிருந்தது.
அதே சமயம் ஞானவாபி மசூதியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காவிகள் கையாண்ட வழிமுறையைக் கூர்ந்து கவனித்தால் அதில் இந்தியத் தொல்லியல் துறை, நீதிமன்றம், மாவட்ட நிர்வாகம், போலீசு, மத்திய மாநில அரசுகள், முன்னணி தேசிய ஊடகங்கள் என அரசுக் கட்டமைப்பு முழுவதும் பாசிஸ்களோடு தோளோடு தோள் நின்று செயல்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது .
2014-ம் ஆண்டு மோடி-அமித்ஷா கும்பல் ஒன்றியத்தில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட பிறகு, இந்திய வரலாற்றைத் திரிக்கும் வேலைக்கு இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையை தங்களது அறிவியல்பூர்வமற்ற செயல்களுக்கு அறிவியல் விளக்கம் கொடுக்கப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இந்தத் தரவுகளையெல்லாம் படித்த பிறகு மீண்டும் ஒருமுறை ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசியதையும், அதன்பின்னர் எழுந்த கண்டனங்களுக்கு எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளதையும் படித்துப்பாரூங்கள். அவர்கள் அறிவாகவும், அறிவியல் பூர்வமாகவும் தான் விசயங்களைப் பார்க்கிறார்களா என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் இந்தியாவை இந்து இராஷ்டிரமாக மாற்றவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் தனது அனைத்து அரசு உறுப்புக்களையும் பயன்படுத்திக்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் இந்திய தொல்லியல் துறை. இத்துறையின் அங்கீகாரம் இல்லாமல் தமிழ்நாட்டின் எந்தப் பெருமையையும் வெளியுலகிற்குக் கொண்டு செல்ல முடியாது என்பதை உணர்ந்துதான் அறிவாகவும், அறிவியல் பூர்வமாகவும் மெய்ப்பிப்பதற்குக் கூடுதல் ஆதாரம் தேவை என்ற தனக்குத் தெரிந்த பொய்யை அல்லது தனக்கு தெரியாத உண்மையைப் பேசி வருகிறார்கள்.
- மகேஷ்
தகவல் ஆதாரம்