பெண்களின் மாதவிடாய் விடுமுறையானது ஜனநாயக உரிமையே!

மகளிர் தினம், முதியோர் தினம், குழந்தைகள் தினம் என்கிற வரிசையில் மாதவிடாய் சுகாதார தினமும் அணிவகுக்கத் தொடங்கியுள்ளன. மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் மாற்றங்களில் ஒன்று. இவற்றை சமூகம் அறிவியல் பூர்வமாக அணுகுவதில்லை. தேவையற்ற கட்டுக்கதைகளையும், அழுத்தங்களையும் தினித்து வருகிறது. தீட்டாகவும், அருவறுப்பாகவும் பழமைவாதிகளால் இழிவுபடுத்தப்படுகிறது. புதுமைவாதிகளால் புகுத்தப்படும் நோய்க்கிருமி கோட்பாட்டால் தூய்மையற்றவர்களாகவும், அருவறுக்கத்தக்கவர்களாகவும், வலுவிழந்தவர்களாகவும் தூற்றப்படுகின்றனர். இதனால், பெண்கள் மன உளைச்சலுக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் உள்ளாகின்றனர்.

இவற்றை பயன்படுத்தி சந்தைப்பொருளாதாரமோ, மாதவிடாயின் போது பயன்படுத்தும் நாப்கின்களை விதவிதமாகவும், நறுமனமூட்டக் கூடியவையாகவும், சுகாதாரமானதாகவும் விளம்பரப்படுத்துகின்றது. மேலும், இவை உடலையும் இனப்பெருக்க உறுப்பையும் நறுமனத்துடன் வைத்திருக்கவும் உதவும் என்கிற வகையில் விளம்பரப்படுத்தி வாங்க வைத்து பெண்களின் சேமிப்பையும் உருவிக்கொள்கின்றன. இத்துடன், பெண்கள் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன், நறுமனத்துடன் இருக்க வேண்டும் என்கிற ஆணாதிக்க சிந்தனைக்கும், சந்தைப்பொருளாதாரத்திற்கும் தீனியும் போடுகின்றனர்.

மாதவிடாய் காலங்களில் அசுத்தம் என்ற பெயரில் வீட்டைவிட்டு ஒதுக்கி வைக்கின்றனர். ஆச்சாரம் மிகுந்த வீடுகளில் தீண்டத்தகாதவர்களாக நடத்துகின்றனர். கிராமங்களில் அருவறுப்பாகப் பார்த்து வீட்டுக்கு வெளியிலுள்ள கொட்டகையில் தங்கவைத்து கொசு மற்றும் பூச்சிக்கடிகளுக்கு இறையாக்குகின்றனர். குடும்ப நலனுக்கு நல்லது என புகுத்தப்படும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளுக்கு பெரும்பான்மை பெண்கள் பலியாகவே செய்கின்றனர்.

நகரங்களில் நெருக்கமான பகுதிகளில் வாழும் பெண்களுக்கு இவர்கள் விளம்பரப்படுத்தும் நாப்கின்களோ கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதன் விலையோ வாங்கும் நிலையில் இல்லை. அரிதாக வாங்கி விட்டாலும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள சுத்தமான கழிவரையோ, சுத்தமான தண்ணீரோ கிடைப்பது இல்லை. ஏன் ஒதுங்கக்கூட மறைவிடம் இல்லாமல் அவதிப்படுவது உண்டு. பல பெண்கள் நாப்கின்கள் வாங்க வசதியில்லாமல் துணிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலை நாடுகளில் பெரும்பான்மை ஏழை பெண்கள் டாய்லெட் பேப்பர்களைப் பயன்படுத்துவதாக அரசுசாரா நிறுவனமான பிளான்கிண்டர்-நேஷனலின் ஆய்வறிக்கை கூறுகிறது.

குடிசைப்பகுதிகள் மற்றும் கிராமங்களைப் பொருத்தவரை பொதுக்கழிப்பிடங்களும், வெட்டவெளிகளும் தான் கழிவறைகள். வெட்டவெளியைப் பொருத்தவரை இருட்டிய பிறகும், பொழுது விடிவதற்கு முன்பாகவும் செல்லவேண்டும். இல்லையென்றால் இயற்கை உபாதையைக்கூட போக்கிக்கொள்ள முடியாது. இச்சூழலில் மாதவிடாய் சங்கடங்களை சொல்லிமாளாது.

மாதவிடாய் நாட்களில் ஓய்வுதான் மிகவும் முக்கியம். இவற்றின் உபாதையை மனிதாபிமான முறையில் பெரும்பாலான முதலாளித்துவ நிறுவனங்கள் அங்கீகரித்து விடுமுறை அளிப்பதில்லை. ஒன்றிய அரசும், மாநில அரசும் மாதவிடாய் விடுமுறை குறித்து சட்டமோ, கொள்கையோ வகுக்கத் தயாராகவுமில்லை. பெண்களை போகப் பொருளாகவும், நுகரும் பொருளாகவும் கருதும் ஆணாதிக்கப்புத்தி நீடிக்கும் வரை இதில் மாற்றம் நிகழ்வது மிகவும் அரிதாகவே இருக்கும்.

ஆணுக்கு பெண் சமம் என்கிற கோட்பாட்டை வலியுறுத்திய சோசலிச இரஷ்யா, சமூக முன்னேற்றத்திற்கு பெண்களின் உழைப்பு மிகவும் இன்றியமையாதது என மதித்து உணர்ந்தது. எனவே, பெண்களின் மாதவிடாய் விடுமுறையை ஜனநாயக உரிமையாகவும், உடலில் நிகழும் இயற்கை மாற்றங்களில் ஒன்றாகவும் உணர்ந்து மாதவிடாய் விடுமுறையை அறிவித்தது. இதை தொடர்ந்து சீனா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனேசியா, மெக்சிக்கோ போன்ற நாடுகளும் மாதவிடாய் விடுமுறையை அறிவித்தன. இந்தியாவில், பிகார் மாநிலத்தில் முதல்முறையாக 1992-ஆம் ஆண்டு முதல் மாதத்திற்கு இரண்டு நாட்கள் மாதவிடாய் விடுமுறை அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கேரளாவில் உயர்கல்வித்துறையில் அனைத்து பல்கலைக்கழக மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறையை அறிவித்துள்ளது. அதேபோல் உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிசா மாநிலங்களில் மாதவிடாய் விடுமுறை வெவ்வேறு அளவுகளில் அளிக்கப்பட்டு வருகின்றது. ஸ்விகி, ஸொமோட்டோ போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும், 1 அல்லது 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை எடுத்து கொள்ள பெண்களை அனுமதிக்கின்றனர்.

நாட்டின் முன்னேற்றம் குறித்து வாய்கிழிய முழங்கும் மோடி அரசோ, நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாததாகத் திகழும் பெண்களின் உழைப்பை மதிப்பதேயில்லை. எனவே, சனாதனம் திணித்துள்ள சாதியின் பெயரால் தீண்டாமையையும், மாதவிடாயின் பெயரால் புகுத்தப்பட்ட தீட்டும் நிரம்பிவழியும் இவர்களிடம் மாதவிடாய் விடுமுறையை எதிர்பார்ப்பது அறிவீனம் ஆகும். இதுகுறித்து, 13-12-2023 அன்று ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி மனோஜ் குமார் ஜா, எழுப்பிய கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “அனைத்து பணியிடங்களிலும் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையைக் கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

எனவே, மாதவிடாய் காலத்தில் அனுபவித்துவரும் உடல்வலி, மனஅழுத்தம், வேலைச்சுமை ஆகியவற்றை சுமக்கும் பெண்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பெண்களுக்கான ஜனநாயக உரிமையான மாதவிடாய் விடுமுறையை இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் மீட்டெடுக்கப் போராட வேண்டும். இதற்கு புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஆதரவளிப்பதுடன் சாதியின் பெயரால் சுமத்தப்படும் தீண்டாமையைப் போல மாதவிடாயைத் தீட்டாக இழிவுபடுத்துவதற்கு எதிராகக் களமிறங்கவேண்டும்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன