‘‘கல்வி, எதிர்காலத்திற்கான கடவுச்சீட்டு. ஏனெனில் நிகழ்காலத்தில் தயாராக இருக்கும் ஒருவருக்குத்தான் எதிர்காலம் சொந்தமாகும் என்றார் கறுப்பினப் புரட்சியாளர் மால்கம் எக்ஸ். அதனால்தான் நாட்டின் எதிர்காலம், இன்றைய வகுப்பறையில் தீர்மானிக்கப் படுகிறது எனக் குறிப்பிடுகிறோம்.
கல்வி என்பது வெறும் செய்திச் சேகரிப்பல்ல! அது உயர் விழுமியங்களை உருவாக்கும் உன்னத நிகழ்வாகும். அனைத்து வகையான அடிமைச் சங்கலிகளையும் தகர்த்தெறிந்து, விடுதலைக்கான சாவியாகத் திகழ்வது கல்வி. அதனால் தான் ‘‘கல்வி அறிவற்ற குழந்தை, இறகு இல்லாத பறவை போன்றது எனத் திபெத்தியப் பழமொழி குறிப்பிடுகிறது.
இதை உணர்ந்த காரணத்தால்தான் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளியும், மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு நடுநிலைப் பள்ளியும், ஐந்து கிலோமீட்டருக்கு ஓர் உயர்நிலைப் பள்ளியும், எட்டு கிலோ மீட்டருக்கு ஒரு மேனிலைப் பள்ளியும் தமிழ்நாட்டில் அமைக்கப் பட்டது. தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை (Quantity) அதிகமாக இருந்தாலும், ஒப்பீட்டளவில் தரம் (Quality) அந்த அளவு இல்லை என்பதுதான் மிகப் பெரும் அவலம்.
தனியார் பள்ளிகளைக் காட்டிலும், அரசுப் பள்ளிகளில் அதிக அளவு சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக இரண்டு சிக்கல்களைக் குறிப்பிட வேண்டும்.
(1) போதிய ஆசிரியர்கள் இன்மை
(2) பள்ளிகளில் கட்டமைப்பு வசதி இன்மை.
1964 வரை 20 மாணவர்களுக்கு மிகாமல் ஒரு வகுப்பு என்பது பின்பற்றப் பட்டது. கல்வி உரிமைச் சட்டம் 2009 நடைமுறைக்கு வந்த பிறகு தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர், நடுநிலைப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். வகுப்புக்கு ஓர் ஆசிரியர் / பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
ஆனால் அப்படிப்பட்ட நிலை இப்பொழுது பள்ளிக் கல்வியில் இல்லை. தொடக்கப் பள்ளிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் ஒரு வகுப்பில் 70 மாணவர்கள் உள்ளனர். மேனிலைப் பள்ளிகளில் மொழிப்பாடம் போன்ற குறிப்பிட்ட பாட வகுப்புகளில் 70 மாணவர்களை இணைத்துப் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
சுமார் 10 இலட்சம் பேர் ஆசிரியர் கல்விப் படிப்பை முடித்து விட்டு, அரசுப் பள்ளி ஆசிரியர் வேலைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது முரண்நகையாகும்.. மேனிலைப் பள்ளிகளில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற முக்கியப் பாடங்களுக்குக் கூடப் போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில், அரசுப் பள்ளிகளில் சிறந்த கல்வித்தரத்தைக் கொண்டு வருவது எதிர்நீச்சல் போடும் வேலைதான்.
இதைச் சரிக்கட்டும் வகையில் மிகக் குறைந்த ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப் படுகின்றனர். இது ஒரு சிறிதும் ஏற்கத்தக்கதல்ல! தமிழக அரசு பள்ளிகளின் தேவைக்கேற்ப நிரந்தர ஆசிரியர்களை ஆண்டுதோறும் நியமித்தால் மட்டுமே அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த முடியும்.
அதே போல் பள்ளிக் கட்டமைப்பைப் பொறுத்தவரை போதிய வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், நூலகம், கழிப்பறைகள், சுற்றுச் சுவர் போன்றவை இல்லாதிருப்பது வேதனை அளிக்கிறது.
ஒரு கல்வியாண்டில் 220 நாள்கள் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் ஆசிரியர்கள் முறைப்படி கற்பிப்பதற்கு உரிய வாய்ப்புக் கொடுத்தாலே போதுமானது. ஆனால், கல்வி சாராப் பணிகள் பல ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுவதால், முறையான கற்பித்தல் நிகழ்வதில்லை. இதனால் பாதிக்கப் படுபவர்கள் இறுதியில் மாணவர்கள்தான் என்பது கவலைக்குரியது.
100% தேர்ச்சி எனும் மாயமான் பின்னால் ஓடும் தேர்வு முறை ஒழிக்கப்பட வேண்டும். ‘‘அனைவரும் தேர்ச்சி என்ற இலக்கு, சிறப்பு வகுப்புகளை நியாயப் படுத்துகிறது. இது மாணவர்களிடையே மன அழுத்தத்தையும், உளவியல் சிக்கல்களையும் உண்டாக்குகிறது. எனவே சிறப்பு வகுப்புகளைத் தடை செய்வதோடு, அவை நடைபெறாமல் தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். வகுப்பறையில் முழுமையான கற்றல் செயல்பாடுகள் ஒழுங்காக நடைபெற்றாலே இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க முடியும். மேலும் மனப்பாடக் கல்விக்கு மாற்றான தேர்வு முறைகள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.
பள்ளிகளில் சாதியப் பாகுபாடும், தீண்டாமையும் நிலவி வருவது கடும் அதிர்ச்சியைத் தருகிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் சின்னதுரை எனும் மாணவன் தனது சக வகுப்பு மாணவர்களால் சாதிய வன்மத்தோடு வெட்டப் பட்டுள்ளான். அதைத் தடுத்த அவனது தங்கையும் தாக்கப்பட்டுள்ளார். இது தமிழகக் கல்வித் துறைக்கே மிகப் பெரும் தலைக்குனிவை உண்டாக்கி விட்டது. எனவே இப்படிப் பட்ட சமூக இழிவுகளை அடியோடு ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். சமத்துவம், சமூகநீதி ஆகிய செவ்வியல் விழுமியங்கள் மாணவப் பருவத்திலேயே ஊட்டப்பட வேண்டும்.
மாணவர்களை வாட்டி வதைக்கும் மற்றுமோர் சிக்கல் பாடச்சுமை ஆகும். பள்ளிப் பாடத்திட்டங்கள் மாணவர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில் பாடங்களை முடிக்க முடியாத அளவு அவை வீங்கிப் பெருத்துக் காணப் படுகின்றன. எனவே அறிவியல் கண்ணோட்டத்தோடு பள்ளிப் பாடங்கள் சீர்திருத்தி அமைக்கப்பட வேண்டும்.
பள்ளி அளவில் மிகச் சவாலான பிரச்சனை தமிழ் வழிக் கல்வி ஆகும். இதற்கு எதிரான விஷயங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தனியார் மழலையர் பள்ளிகளை ( Nursery Schools) உடனடியாகத் தடை செய்ய வேண்டும்
தமிழக அரசு மட்டுந்தான் தொடக்கக் கல்விக்கு முன்னுள்ள மழலையர் பள்ளிகளைத் தமிழில் நடத்த வேண்டும். அதே போல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி மட்டுமே இருக்க வேண்டும். ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாக இருக்க வேண்டும். ஆங்கிலக் கல்விக்கும் ஆங்கில வழிக் கல்விக்கும் உள்ள வேறுபாட்டைக் கல்வியாளர்கள் மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்
அரசுப் பள்ளிகளில் எக்காரணம் கொண்டும் ஆங்கில வழிக் கல்வியை ஊக்குவிக்கக் கூடாது. போதிய ஆசிரியர்கள், திறமையான கல்வி, சிறந்த அடிப்படைக் கட்டுமானம், வேலை உத்தரவாதம் ஆகியன அரசுப் பள்ளிகளில் இருந்தால், பெற்றோர்களது ஆங்கில வழிக் கல்வி மோகத்தைச் சிறிது சிறிதாக மாற்ற முடியும். நமது மிகப்பெரிய பலவீனம், நல்ல முயற்சிகளை இடையிலேயே கைவிடுவதுதான் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
தமிழ்நாட்டைப்போல், தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கூடப் பயிலாமல் பட்டம் பெறக் கூடிய இழிநிலை தமிழகத்தைத் தவிர, இந்தியாவில் வேறு எங்கும் இல்லை என்பது வெட்கக்கேடானது. கல்வி நிலையங்களில் தமிழ் இல்லை என்றால், தமிழ் மொழி அழிவது உறுதி.
விரைவில் அழியக்கூடிய மொழிகளின் பட்டியலில் தமிழும் உள்ளதை ஐ.நா. அறிக்கை சுட்டிக் காட்டி எச்சரிக்கிறது. கல்விப் புலத்தில் இது முக்கியமானதொரு கோட்பாட்டுப் பிரச்சனை ஆகும். எனவே இதைத் தள்ளி வைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. நடைமுறைச் சிக்கல்கள் பல இருந்தாலும், கோட்பாட்டுப் பிரச்சனைக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.
தேசியக் கல்விக் கொள்கை 2020, மாநிலங்களின் கல்வி இறையாண்மையை முற்றிலும் அழிக்கக்கூடியது. வணிக மயம், ஒற்றை மயம், காவி மயம் ஆகியவற்றை இது ஊக்குவிக்கிறது. தவிரவும் தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைக்கக் கூடியது இது. எனவே தமிழக அரசு இதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். மாறாக, தேசியக் கல்விக் கொள்கை 2020 உள்ள கூறுகளை வெவ்வேறு பெயர்களில் மறைமுகமாகத் திணிப்பது ஏற்கத்தக்கதல்ல!
தவிரவும், கல்வி சார்பான திட்டங்களைச் செயல்படுத்த அவற்றைத் தனியார் வசம் ஒப்படைப்பது சனநாயக நெறி முறைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும். ஏற்கெனவே கல்வியில் தனியார் மூலதனம் குவிந்திருக்கும் தமிழகத்தில் ‘‘கல்வி என்பது ஒரு சேவை என்ற நிலையிலிருந்து ‘‘கல்வி என்பது ஒரு சரக்கு என்றாகி வருகிறது. இத்தகைய சூழலில், அரசே தனியார் அமைப்புகளை ஊக்குவிப்பது கல்விப் புலத்தை நாசமாக்கி விடும். எனவே இதில் கூடுதல் விழிப்புணர்வு தேவை.
கல்வி உரிமை 1975 வரை மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. ஆனால், நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி இந்திரா காந்தி அதை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றி விட்டார். ஒத்திசைவுப் பட்டியல் என்பது மறைமுகமாக ஒன்றியப் பட்டியல்தான்.
நீட் தேர்வு எனும் சித்திரவதையை அகற்ற முடியாமல் இருப்பதற்குக் கல்வியின் மீது மாநில அரசுக்குப் போதிய உரிமை இல்லாமல் போனது முக்கியக் காரணமாகும். எனவே கல்வி உரிமை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்பது அடிப்படை உரிமையாகும். அதற்கான முனைப்புகளைத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். அரசுக்குப் பற்றுறுதி இருந்தால், இதில் வெற்றி பெற முடியும்.
நீண்ட காலமாக அரசுப் பள்ளிகளில் நிலவி வரும் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசு ஆசிரியர்கள் மக்கள் ஆகிய முத்தரப்பினருக்கும் உள்ளது. குறிப்பாக ஏழை எளிய மாணவர்களின் ஒரே புகலிடமாக அரசுப் பள்ளிகள் மட்டுமே உள்ளன. எனவே அதிகம் பேசப்படாமல் உறைந்து கிடக்கும் அரசுப் பள்ளிச் சிக்கல்களையும் தீர்வுகளையும் தொகுக்கும் பணியை மக்கள் கல்விக் கூட்டியக்கம் மேற்கொண்டது.
இதன் அடிப்படையில் மக்கள் கல்விக் கூட்டியக்கம் திசம்பர் 24, 2023 அன்று ஓர் இணைய வழியிலான சிறப்புக் கலந்துரையாடலை நடத்தியது. அதில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவற்றில் பணியாற்றி வரும் பல்வேறு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்களது பரிந்துரைகள் தொகுக்கப் பட்டு, மக்கள் கல்வி கூட்டியக்கத்தின் பரிந்துரைகளையும் இணைத்து, ‘‘தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளின் கல்விச்சிக்கல்களும் தீர்வுகளும் எனும் நூல் உருவாக்கப் பட்டுள்ளது.
நேற்று வீழ்ந்திருந்தாலும், இன்று எழுந்து நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் கல்விசார் தீர்வுகளுக்காக 2024 பிப்ரவரி 17 நாளன்று ஓரு முழு நாள் கருத்தரங்கை மக்கள் கல்விக் கூட்டியக்கம் சென்னையில் ஏற்பாடு செய்துள்ளது. அக்கருத்தரங்கில் இந்த நூல் வெளியிடப் படுகிறது.
இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதோடு, மக்கள் மன்றத்திலும் இது குறித்த பரப்புரைகள் மேற்கொள்ளப் பட உள்ளது. எத்தகைய தீர்வும் மேலிருந்து கீழ் என்ற முறையில் அல்லாமல், கீழிருந்து மேல் எனும் சனநாயக வழியில் நடைபெற வேண்டும். அதனால், தீர்வுகள் அனைத்தும் மாணவர்களை மையப் படுத்தியும், மாணவர்கள் மீதான நேயத்தின் அடிப்படையிலும் உருவாக்கப்பட வேண்டும் என மக்கள் கல்விக் கூட்டியக்கம் கருதுகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்தப் புத்தகம். இது அரசுப் பள்ளிச் சிக்கல்களில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் என நம்புகிறோம்.
மிக நீண்ட பயணமும் முதல் அடியிலிருந்துதான் தொடங்க வேண்டும். அவ்வகையில், சமத்துவம், சமூகநீதி ஆகியவை அரசுப் பள்ளிகளில் நிலவ, பொதுப்பள்ளி முறை மற்றும் அருகமைப்பள்ளி முறை ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு கல்வியாளர்கள் அனைவருக்கும் உண்டு. அப்பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள மக்கள் கல்விக் கூட்டியக்கம் உறுதி ஏற்கிறது.
பிப்ரவரி 12, 2024
கண. குறிஞ்சி, ஒருங்கிணைப்பாளர்
மக்கள் கல்விக் கூட்டியக்கம்