ஆர்.எஸ்.எஸ்.-ன் ‘தேச’துரோக பார்ப்பன – பாசிச பாரம்பரியம் பாகம் – 1

1993ம் ஆண்டு மே மாதம் புதிய ஜனநாயகம் இதழில் வெளியான தொடர் கட்டுரைகளை இங்கே மீள் பிரசுரம் செய்கிறோம். 

************

அடுத்து அரசு அமைக்கத் தயாராகக் காத்திருக்கும் கட்சியாகவே பாரதீய ஜனதா நடந்து கொள்கிறது. நாட்டின் அடுத்த பிரதமர் அத்வானிதான் என்கிற தோரணையில் அந்தக் கட்சியும் அதன் பரிவாரங்களும் மட்டுமல்ல பிரபல “தேசிய” பத்திரிகைகளும் ஆளும் தரகு அதிகார முதலாளிகளும் நீதிபதிகள் உட்பட அரசு அதிகாரிகளும் கூட நம்புகின்றனர்.

வட இந்தியா முழுவதும் இந்துத்துவ அலை அடிக்கிறது; கர்நாடகா, ஆந்திரா வரை அது எதிரொலிக்கிறது” என்று அக்கட்சியின் எதிரிகள் கூட தனிப்பட்ட முறை யில் ஒப்புக் கொள்கின்றனர். கருத்துக் கணிப்புகள் இதையே மறைமுகமாக உறுதிப்படுத்துகின்றன. நரசிம்மராவ் தலைமையிலான மத்திய காங்கிரசு அரசு கவிழ்ந்து, பொதுத் தேர்தல் வந்தால் அறுதிப் பெரும்பான்மை பலம் பெறாவிட்டாலும் பாரதிய ஜனதாக் கட்சி தனிப்பெரும் கட்சியாக மாறுவதைத் தடுத்திட முடியாது என்றே பிற எதிர்க் கட்சிகள் அஞ்சுகின்றன. எதிர்க் கட்சிகளின் இந்த அச்சம் காரணமாகவே சிறுபான்மை காங்கிரசு அரசு இன்னமும் நீடித்திருக்கிறது..

ஆனால், பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வருவதென்பது வழமையான நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ் ஒரு அரசாங்கம் போய் இன்னொரு அரசாங்கம் வருவதாக இருக்காது. அதாவது காங்கிரசு அரசாங்கம் போய் ஜனதா அரசாங்கம் அமைவது, ஜனதா அரசாங்கம் போய் மீண்டும் காங்கிரசு அரசாங்கம் அமைவது போன்ற சாதாரண மாற்றமாக இருக்காது.

இந்து மதவெறி பாசிசத்தின் பகிரங்கமான பயங்கரவாத வடிவிலான சர்வாதிகாரமாகவே பாரதீய ஜனதா அரசாங்கம் இருக்கும் என்பது மட்டும் நிச்சயமானது. இந்த வேறுபாட்டைக் காணத் தவறும் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் நாடும் மக்களும் எதிர்கொண்டுள்ள பேராபத்தைத் தடுக்கவே முடியாது. அயோத்தி பாபர் மசூ தியை இடித்த டிசம்பர் – 6 நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட மதவெறிப் படுகொலைகளும் இதைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துவிட்டன.

 

 

பாரதீய ஜனதா என்பது இந்து மதவெறி பாசிஸ்டுகளால் முன்னிறுத்தப்படும் ஒரு அரசியல் கட்சி, அதன் பின்னணியில் விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள். சிவசேனா, இந்து முன்னணி போன்ற பரிவாரங்களும் இவை அனைத்துக்கும் தாயும் தந்தையுமாக ராஷ்டிரீய சுயம் சேவக் சங்கமும் (ஆர்.எஸ். எஸ்) திட்டமிட்டு இயங்குவது இப்போது பகிரங்கமான உண்மை.

இந்த இந்து மதவெறி பாசிச பரிவாரங்கள் எப்போதுமே இரட்டை முகங்களைக் கொண்டு, இரட்டை நாக்கோடு பேசி, இரண்டு வேறுவேறான வழிகளில் இயங்கி வந்திருக்கின்றன. அத்வானியின் நிதானமிகு. கவர்ச்சிப் புன்னகையுடன் தரும் அரசியல் விளக்கங்களும் வாஜ்பாயினுடைய வெகுளிச் சிரிப்புடன் கூடிய இலக்கிய சொற்பொழிவுகளும் அப் பரிவாரங்களின் மாண்பும் பண்பும் கூடியதாகக் காட்டும் ஒரு பக்கம்; அதே சமயம் அது ரீதம்பரா, உமாபாரதி ஆகிய “சந்நியாசினி”களின் ஆத்திரம், அகங்காரம், காட்டுமிராண்டித்தனமான ஆபாச, கழிசடைப் பேச்சுகள் அவற்றின் இன்னொரு பக்கம்.

இந்து மதவெறி பரிவாரங்களில் ஒரு நாக்கு சட்டபூர்வ ஜனநாயகம் பேசினால் இன்னொன்று வன்முறை, பயங்கரவாத பாசிசம் பேசுகிறது. அதன் பாரதீய ஜனதா அரசியல் நிர்ணய சட்டப்படி. ஜனநாயகப் படி, நீதி – ஒழுங்குப்படி நடப்பதாகக் கூறிக் கொள்ளும் அதே சமயம் அவற்றை அதன் ஆர்.எஸ்.எஸ்., வி.இ.ப. பஜ்ரங்கள், சிவ சேனா ஆகியவை கேலிக் கூத்தாக்கி விடுகின்றன.

வி.இ.ப.. பஜ்ரங்தள் ஆகியவை மத அமைப்புகள்தாம் என்றும் ஆர்.எஸ்.எஸ். ஒரு கலாச்சார அமைப்புதான் என்றும் இவை எதுவும் அரசியல் அமைப்புகள் அல்லவென்றும் இந்து மதவெறி பாசிஸ்டுகள் சாதிக்கின்றனர். ஆனால், சினிமா, விளையாட்டு வரை அனைத்திலும் அவை இந்து மதவெறி அரசியல் நஞ்சு கலந்து விடுகின்றன. ”அரசியலை இந்துமயமாக்கு: இந்துத்துவத்தை இராணுவமயமாக்கு என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.க்கு அதன் ஆதி சித்தாந்த குரு சவார்கர் வழங்கிய மூல முழக்கமாகும்.

அயோத்தியில் மசூதியை இடித்து ராமன் கோவில் கட்டுவது உட்பட இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு இந்து அடையாளத்தைத் தேடிக்கொள்வதற்காக நடத்தும் ஒரு தன்னெழுச்சியான மக்கள் திரள் இயக்கத்தைப் பிரதிபலிப்பதே, இந்துத்துவம் என்று ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் கூறிக் கொள்கின்றன. ஆனால் இப்படிச் சொல்வதன் மூலம் ஒரு இந்து ராஷ்டிரத்துக்கான நன்கு திட்டமிட்ட அமைப்பு ரீதியிலான சதி முயற்சிகளை அவை மூடி மறைக்கின்றன.

இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களது உணர்வுகளை, நலன்களை தான் பிரதி நிதித்துவப்படுத்துவதாகப் பீற்றிக் கொள்வதன் மூலம் ஒரு “ஜனநாயக”, “தேசிய” நாடகமாடுகிறது இந்து மதவெறி பாசிசம். அது பெரும்பான்மை என உரிமை பாராட்டுவது, மக்கள் தொகை கணக்கின்படி இசுலாமியர், கிறித்துவர் அல்லாத அனைவரும் அடங்கிய 85 சதவீத மக்களைத்தான். ஆனால், இந்த 85 சதவீத மக்களுக்குள்ளே நிலவும் சாதி, மத, இன, மொழி, வர்க்க வேறுபாடுகள் உணர்வுகள், நலன்கள் அனைத்தையும் மூடி மறைக்கிறது. இப்பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையை யாரும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்கு வழங்கிவிடவில்லை. ஆனால் “இந்து மதம்” என்பதற்குத் தாமே ஒரு சொந்த விளக்கம் கொடுத்து, அதன் பிரதிநிதியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளன.

இந்தியாவே இந்து, இந்துதான் இந்தியா” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் மூலமந்திரம் இதை ஏற்பதுதான் நாட்டு விசுவாசம், தேசப்பற்று. அல்லாதது அனைத்தும் தேச துரோகம். இந்த தேசத்துக்கு அந்நியமானது என்பதுதான் அவர்களது கண்ணோட்டம். ஆக, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் தவிர அனைவருமே இந்த நாட்டின் எதிரிகள்தாம்!

இந்தியாவின் வரலாறு என்பதே இசுலாமியர்களுக்கு எதிரான ஓராயிரம் ஆண்டுகால தொடர்ச்சியான போராட்ட வரலாறு என்கிற புணைச் சுருட்டுத்தான் இந்துத்துவத்தின் அடிநாதமாக உள்ளது. இசுலாமியர்கள் அனைவரும் வேறுபாடுகளே இல்லாத அந்நிய, கொடூர ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்கள்: மற்றவர்கள் அனைவரும் ஒரே வார்ப்பாக விளங்கிய வீரதீரமாகப் போராடிய இந்து தேச பக்தர்கள் என்கிற இந்து மதவெறி பாசிஸ்டுகளின் வரலாற்றுப் புரட்டு பல வல்லுநர்களால் ஏற்கனவே தகர்த்தெறியப்பட்டுவிட்டது. ஆரம்பகால இசுலாமிய ஆட்சியாளர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்றால் ஆரியர்களை என்ன சொல்வது என்கிற கேள்விக்கு அவர்களிடமிருந்து பதிலே கிடையாது.

உண்மை என்னவென்றால் அன்றைய “இசுலாமிய” ஆளும் வர்க்கம் என்பது பல ஆயிரம் இந்து அரசர்களையும், மிட்டா மிராசுகளையும் ஜமீன்தார் – ஜோத்தோதர் ஆகிய நிலப்பிரபுக்களையும் உள்ளடக்கியது: மராத்திய சீக்கிய அரசர்களுக்கு எதிராக “கொடிய இசுலாமிய” ஔரங்கசீப் நடத்திய அடக்குமுறை யுத்தங்களுக்குத் தலைமையேற்றவர்கள் பெரும்பான்மையாக இந்துத் தளபதிகளே. அதே சமயம் கோடிக்கணக்கான இசுலாமிய விவசாயிகளும் கைவினைஞர்களும் இந்த “இசுலாமிய ஆளும் வர்க்கத்தின் அங்கமாக இருந்ததோ, ஆதாயம் அடைந்ததோ. தமது சக “இந்து” மக்களை அடக்கி ஒடுக்கியதோ கிடையாது. மொகலாயர் ஆட்சியின் கீழ் (வழிபாட்டு) மத வரி என்பதாக சிலகாலம் ”ஜெசியா வரி” இந்துக்களிடம் வசூலிக்கப்பட்டதைப் போலவே. இசுலாமியர்களிடமும் வேறுபிற மதவரிகள் வசூலிக்கப்பட்டன. இசுலாமிய ஆட்சியாளர்கள் வழிபாட்டுத் தலங்களைத் தாக்கி சூறையாடி கொள்ளையிட்டதைப் போலவே இந்து ஆட்சியாளர்களும் செய்துள்ளார்கள்; குறிப்பாக அந்நிய இசுலாமிய பேரரசை எதிர்த்துப் போராடியதாகக் கூறப்படும் இந்து சிவாஜி பல இந்துக் கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையிட்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

 

 

இந்து, முசுலீம் அரசர்களுக்கிடையில் பல போர்கள் நடந்திருந்தாலும் இசுலாமியருக்குள்ளேயும், இந்துக்களுக்குள்ளேயும் உள்ள வேறு வேறு பிரிவினரிடையே பல உள்ளூர் மதச் சண்டைகள் நிகழ்ந்திருந்தாலும், பல இந்து சாதிகளுக்கிடையே சாதி மோதல்கள் ஏற்பட்டிருந்தாலும் இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை அவை எதுவும் இரு வேறு மதங்கள், வகுப்புகளாக நாடு தழுவிய ரீதியிலான அணிதிரண்ட சமூகப் பகைமையாக ஒருபோதும் இருந்திருக்கவே முடியாது. அத்தகைய அளவை. தன்மையை அடைவதற்கான அடிப்படையான செய்தித் தொடர்பும், போக்குவரத்தும், ஒருங்கிணைந்த பொருளாதாரமும் இங்கு ஏற்பட்டிருக்கவே இல்லை. இந்து. இசுலாமிய, சீக்கிய ஆகிய நாடு தழுவிய மத, வகுப்புவாத அடையாளங்கள் என்பதும் அதேபோல சாதி, வர்க்க, பிராந்திய தேசிய இன சமூகப் பிரிவுகளும் நவீன காலத் தோற்றங்கள்தாம்.

ஆகவே, அந்திய இசுலாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஓராயிரம் ஆண்டுகால இந்துக்களின் போராட்ட வரலாறே இந்திய வரலாறு என்பது பித்தலாட்டம், கட்டுக்கதை. இந்துக்கள் மட்டுமே இந்த மண்ணின் மைந்தர்கள், தேசப் பக்தர்கள். இந்துத்துவம் மட்டுமே உண்மையான “இந்திய தேசியம்” என்று சித்தரிப்பதற்காகக் கூறப்படும் புணைச்சுருட்டு, இதே நோக்கத்தோடு கிழக்கு வங்கம், மலபார் போன்ற இடங்களில் இந்து ஜமீன்கள் – மிட்டா மிராசுகளை எதிர்த்து இசுலாமிய விவசாயிகளும். பஞ்சாபில் இந்து பெரும் வியாபாரிகள் – வட்டி லேவாதேவிக்காரர்களுக்கு எதிராக சீக்கிய. இசுலாமிய விவசாயிகளும், உத்திரப் பிரதேசத்தில் இசுலாமிய நவாப்புகள், ஆளுநர்கள். தளபதிகள் அடங்கிய கொடுங்கோலர்களுக்கு எதிரான இந்து விவசாயிகளும் நடத்திய சமூகப் பொருளாதாரப் போராட்டங்களும், அரசியல் சுதந்திர இயக்கங்களும் கூட வகுப்புவாத மதச்சாயம் பூசிக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

இசுலாமிய மீர்சாகிப்பைப் போலவே இந்த நாட்டையும் மக்களையும் காட்டிக் கொடுத்த ”இந்து’ ஜெய்சிங்குகளும் எட்டப்பர்களும் உள்ளடங்கியதுதான் “இந்திய தேசிய” வரலாறு என்பதை ஆர்.எஸ். எஸ். பரிவாரங்கள் மூடி மறைக்கின்றன. காலனிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்ட திப்பு சுல்தான், முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குக் கூட்டுத் தலைமையேற்ற நவாப்புகள் – தளபதிகள் முதல் காங்கிரசுத் தலைவராக இருந்து நேரு போன்றவர்களின் துரோகத்தையும் அம்பலப்படுத்திய அபுல் கலாம் ஆசாத் வரை எவ்வளவோ இசுலாமியர்கள் இந்த நாட்டுக்கு விசுவாசமிக்கவர்களாக நின்று போராடி இருக்கிறார்கள். தோழமை ஏடான புதிய கலாச்சாரம் (டிச. ஜன, பிப். ’92) ஆங்கிலேயர்களை வீரதீரமாக எதிர்த் துப் போரிட்ட ஹசரத்மஹல், பைசாபாத் மௌல்வி எனப் பல முஸ்லீம்களை வரலாற்றிருந்து தொகுத்து அறிமுகப்படுத்தியது.

ஆனால் இன்று இந்திய தேசபக்திக்கு ஏகபோக உரிமை பாராட்டும் ஆர்.எஸ். எஸ். பரிவாரங்களின் காலனிய கால நடத்தை – யோக்கியதை என்ன?

ஆர்.எஸ். எஸ்.இன் சித்தாந்த குரு சவார்கர் மற்றும் நிறுவன குரு ஹெட்கேவார் ஆகிய இருவரும் காங்கிரசின் சில மலட்டுத்தனமான இயக்கங்களில் தனிப்பட்ட முறையில் பங்கேற்றுள்ளனர். ஆனால் 1925-ல் நிறுவப்பட்டதில் இருந்து 1947 வரையிலான காலனிய ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கு எதிராக எந்த ஒரு இயக்கத்தையும் அது நடத்தியது கிடையாது. அதற்கு மாறாக ஆங்கிலேய அந்நிய ஆட்சியாளர்களை ஆதரித்து, அதனால் ஆர்.எஸ்.எஸ். ஆதாயம் அடைந்ததற்கு பல சான்றுகள் உள்ளன. அமைப்பு ரீதியில் பலமும் கட்டுப்பாடும் மிக்க ஆர்.எஸ்.எஸ். தனது சக்தியை அந்நிய ஆட்சிக்கு எதிராகத் திருப்பிவிட்டதே கிடையாது; மாறாக இசுலாமியருக்கு எதிரான வெறுப்பப் பிரச்சாரத்துக்கே பயன்படுத்தியது.

ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் எதிர்ப்பு வீரதீர பிரசங்கங்கள் புரிந்தும் எழுதியும் வந்த சவார்கர். 1942-ல் நடந்த ‘வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் போது அரசு நிறுவனங்களைப் புறக்கணித்து பதவி விலகும்படி காங்கிரசு முடிவு செய்திருந்தாலும், இந்து மகா சபா உறுப்பினர்கள் (ஆர்.எஸ்.எஸ்.-ன் கூட்டாளி அமைப்பு) பதவியில் நீடித்து வழமையான பணியாற்ற வேண்டும் என்று அதன் தலைவர் என்கிற முறையில் உத்திரவு போட்டார். அன்றைய இரண்டாம் உலகப் போரின் போதுதான். ‘அரசியலை இந்து மயமாக்கு இந்துத்துவத்தை இராணுவமயமாக்கு” என்று முழக்கத்தை முன்வைத்து இசுலாமியர் எதிர்ப்பு வெறிப்பிரச்சாரத்தையும், பிரிட்டிஷ் அரசுடன் கூட்டுறவும் கொண்டாடினார். “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தினர் சிறை பிடிக்கப்பட்ட அச்சமயத்தில் பிரிட்டிஷ் விசுவாசத்துக்காக இந்து மதவெறி இயக்கத்தினர் முழுச்சுதந்திரமும் ஆதரவும் பெற்றனர்.

பிரிட்டிஷ் எதிர்ப்பு என்பது தேசியத்துக்கும் தேசப் பற்றுக்கும் சமமாக கருதுவது பிற்போக்கானது; சுதந்திரப் போராட்ட இயக்கங்களை பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கங்களாக மாற்றுவது இந்து தேசியத் தன்மைக்கு மக்களை ஈர்ப்பதற்கு எதிரானது” என்று ஆர்.எஸ்.எஸ்.-ன் இரண்டாவது குரு கோல்வால்கர் எழுதியுள்ளார்.

நேதாஜி அமைத்த இராணுவத்தின் ”ஆசாத் இந்த் பவுஜ்” என்கிற பெயரில் இசுலாமிய அந்நிய மொழி வாடை இருப்பதாகக் கூறி ஆர்.எஸ்.எஸ். வெறுக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தை ஏற்பதாகக் கூறும் அதே சமயம் ஜனவரி 26. குடியரசு தினத்தையோ, “தேசிய கீதத்தையோ. மூவர்ணக் கொடியையோ ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் ஏற்பதில்லை. கொண்டாடுவதில்லை. காவிக்கொடி. வந்தே மாதரம், விஜயதசமி, ராமநவமி போன்றவையே அது ஏற்றுக் கொண்டு கொண்டாடுபவை.

ஆகவே, உண்மையில் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தேச துரோகிகள், தேசப்பற்று, “தேசியம்” ஆகியவற்றுக்கும் அவர்களுக்கும் நேரெதிரான உறவுதான் உள்ளது. ஆனால் அவர்கள் தமது மத. வகுப்புவாத. பாசிச நோக்கங்களை “தேசிய” சாயம் பூசி மறைக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல “ராம ராஜ்யம்’ பேசிய காந்தி உட்பட காங்கிரசுப் பெருந்தலைவர்கள் கூட இந்துத்துவத்தையும் தேசியத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பியவர்கள்தாம்.

”அந்நிய ஆக்கிரமிப்பு முசுலீம் ஆட்சியாளர்கள் இந்து தேசியப் போராளிகள்” என்கிற கட்டுக்கதை பங்கிம் சந்திர சட்டர்ஜி. தாகூர். பாரதியார் போன்ற ‘தேசிய வாதி”களின் எழுத்துக்களிலேயே காணக் கிடக்கின்றன. முன்பு மராட்டியத்தில் வகுப்புவாதத்தைத் தூண்டிய கணபதி. சிவாஜி விழாக்களை ஏற்பாடு செய்து நடத்தியவர் பாலகங்காரத திலகர்: அவரது “தேசிய தீவிரவாதம்’ என்பது இந்துத்துவக் கருவைக் கொண்டதுதான்;

சுப்பிரமணியசிவா, வாஞ்சிநாதன், சத்தியமூர்த்தி ஆகியோரது “தேசியமும்” இத்தகைய இந்து மதவாதத்தில் தோய்த்ததுதான். இதையே ஆர்.எஸ்.எஸ். தனது பாரம்பரியமாக வரித்துக் கொண்டுள்ளது. மதன் மோகன் மாளவியா, லாலா லஜபதி ராய் ஆகிய காங்கிரசுத் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்.-ன் முன்னோடியான இந்து மகா சபையில் முக்கிய பங்கு வகித்தனர்; இந்துத்துவ அடிப்படையிலான ”தேசிய”த்தையே பிரச்சாரம் செய்தனர். உள்ளூர் மட்டத்தில் காங்கிரசு மற்றும் மதவாத அமைப்புகளின் அணிகள் இன்னமும் கலந்தே இருக்கின்றனர். வல்லபாய் பட்டேல் காங்கிரசின் தலைமையில் இருந்த இந்து மதவெறி பாசிஸ்டு என்பது பகிரங்கமான உண்மை; எனவேதான் அவரை ஆர்.எஸ்.எஸ். கும்பல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. இந்து-இந்தி-இந்துஸ்தான் என்பதுதான் காங்கிரசின் கண்ணோட்டம் என்பதை இந்து மதவெறி பாசிஸ்டுகளுடன் அக்கட்சி கொண்டுள்ள கள்ளக் கூட்டே நிரூபிக்கிறது.

இந்து மதவெறி காங்கிரசுக்காரர்களை மட்டுமல்ல, அதை எதிர்த்துப் போராடிய அம்பேத்கார். பகத்சிங் போன்றவர்களைக் கூட ஆர்.எஸ்.எஸ். கும்பல் தேசியத் தலைவர்களாக கொண்டாடுகிறது. “தேசியத்தையும்” ”இந்துத்துவத்தையும்” கலக்கிக் குழப்புவதன் மூலம் அதனால் அவ்வாறு செய்ய முடிகிறது. எது தேசியம்? யார் இந்து? என்பவற்றுக்கு தமது வசதியைப்போல வியாக்கியானம், விளக்கமளிப்பதன் மூலம் இந்தப் பித்தலாட்டத்தை அதனால் செய்ய முடிகிறது.

ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்த குரு சவார்கர் 1923-ல் எழுதிய “இந்துத்துவம்- யார் இந்து?” என்கிற நூலில் பின்வருமாறு அப்பட்டமாகவே கூறுகிறார். “இந்துப் பள்ளத்தாக்கில் இருந்து முக்கடல்கள் வரையிலான பாரத வர்சத்தைத் தனது தந்தை நாடாகவும். தனது புனித பூமியாகவும், தனது மதத்தின் தொட்டிலாகவும் எவனொருவன் கருதுகிறானோ அவனே இந்து” பிறப்பெடுத்த பூமி, புண்ணிய பூமி என்கிற இந்தக் கண்ணோட்டத்தின்படி அரபு மற்றும் பாலஸ்தீனத்தை மதப் புனிதத் தலமாகக் கொண்டுள்ள இசுலாமியர். கிறித்துவர்களின் தேசபக்தி சந்தேகத்துக்குரியது: தரங்குறைந்தது ஆகிறது. சுருக்கமாகச் சொன்னால் ‘இந்து அல்லாதவர்கள், இந்துத்துவத்தை ஏற்காதவர்கள் இந்த நாட்டின் அசல் வித்தாக இருக்க முடியாது” என்பதே ஆர்.எஸ்.எஸ். நிலைப்பாடு.

“இந்துக்களில்” பல பிரிவினரிடையே மதநம்பிக்கைகள், சடங்கு சாத்திரங்கள், சாதி-வருண வேறுபாடுகள் இருக்கலாம்: ஒருமைவாதிகள். ஒரே கடவுள், பல கடவுள் நம்பிக்கையுடையவர்கள். நாத்திகர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் உட்பட அனைவரும் இந்துக்கள். எல்லா வேறுபாடுகளையும் மூடிமறைத்துவிட்டு “பொதுப் பண்பாடு, பொது நாகரிகம். பொதுப் பாரம்பரியம்” நிலவுவதாகக் கூறி உண்மையில் பார்ப்பனிய சனாதன வருணாசிரம தர்மத்தைப் புதுப்பிப்பதுதான் இந்துத்துவம். இது தான் ”பல பூக்கள் ஒரே மாலை; பல ஆறுகள் ஒரே சமூத்திரம்” என்கிற ஆர்.எஸ். எஸ்.-ன் இந்து தேசியம்.

ராமகிருஷ்ண பரமகம்சர், விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி போன்ற இந்து மத மீட்பாளர்களை ஏற்றுக்கொண்டு அவர்களது பாரம்பரிய உரிமை கொண்டாடுகிறது ஆர்.எஸ்.எஸ். ஆனால், இசுலாமியர், கிறித்துவர் மீதான சகிப்புத் தன்மை பற்றிய ராமகிருஷ்ணரின் போதனைகளையும், மேல்சாதி மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிய விமர்சனம் மற்றும் ஏழை மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் சாதுக்கள், பார்ப்பனர்களின் சமூக நிலையை, எழுச்சிறும் சூத்திர சாதியினர் பிடித்து விடுவார்கள் என்கிற விவேகானந்தரின் வாக்குகளையும், பார்ப்பன மூட நம்பிக்கைகளையும் ஊழலையும் தாக்கி ஆரிய சமாஜத் தலைவர் தயானந்தர் செய்த பிரச்சாரத்தையும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஏற்கவில்லை.

இதற்குரிய ஒரே காரணம். அக்கும்பல் உண்மையில் அனைத்து “இந்துக்களின்” நலன்களைக்கூட பிரதிபலிப்பது அல்ல. இரட்டைப் பிறப்புடைய வர்ணத்தாரின் குறிப்பாக பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பன சனாதன தர்மத்தை புதுப்பித்து நிலைநாட்டுவதுதான் இந்துத்துவம், இந்து ராஷ்டிரம்.

இன்றைய இந்து மதவெறி பாசிஸ்டுகளின் மாதாவும் பிதாவுமான ஆர்.எஸ். எஸ். எந்தக் காலகட்டத்தில் எந்த சூழ்நிலையில், எந்த நோக்கத்தோடு நிறுவப்பட்டு. எவ்வாறு கட்டியமைக்கப்பட்டு வருகிறது? அதன் வரலாறு அமைப்புத் தன்மைகள் என்னவென்பதைக் கூர்ந்து கவனிக்கும் எவரும் இந்த அடிப்படை உண்மையை அறிய முடியும். இவை பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

தொடரும்….

நன்றி: புதிய ஜனநாயகம் 1993 மே 1-15

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன