இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! – ‘சமஸ்கிருதம்’ ஒரு செயற்கைக் கலவை

ஆரியர்களின் மொழியாகிய சமஸ்கிருதம் கங்கை நாட்டில் கி.மு.3 ஆம் நூற்றாண்டில் உருவாகி கி.பி.5 ஆம் நூற்றாண்டில் இலக்கிய வடிவம் பெற்ற ஒரு செயற்கைக் கலவை மொழி.

சமஸ்கிருதம் என்னும் சொல் திருந்திய வழக்கு என்னும் பொருளுடையது; இதன் எதிர்வழக்கு பிராகிருதம், அதாவது திருந்தா மொழி, சமஸ்கிருதத்தில் புத்தர், அசோகர் கால இலக்கியம் இல்லை.

அசோகர் காலத்தில் பிராகிருத வகைகளே இருந்தன. அவரும் அவருக்கு முன்பு புத்தரும் பேசிய பாலியும், மகாவீரர் பேசிய அர்த்தமாகதியும் அவற்றுக்குட்பட்டவையே. சமஸ்கிருத இலக்கியம் தமிழ்ச் சங்க கால இலக்கியத்துக்கும் திருக்குறளுக்கும் மிகவும் பிற்பட்டது.

சமஸ்கிருதமும் பாணினிக்கும் முற்பட்ட காலத்துப் புராண இதிகாச மொழியும் அதற்கும் முற்பட்ட வேத மொழியும் தொடர்புடையவையானாலும் வெவ்வேறு. இம் மூன்றையும் சமஸ்கிருதம் என்னும் ஒரே பெயரால் வழங்குவதன் மூலம் அது தமிழையொத்த பழமையும் இலக்கியப் பண்பும் மக்கட் சமயச் சார்புடைமையும் பெற்றது என 2000 ஆண்டுகளாக ஆரியர்களால் உலகை நம்ப வைக்க முடிகிறது.

சமஸ்கிருதம் இலக்கிய மொழியானபோதே வழக்கிழந்த மொழியாயிற்று; அதற்குமுன் அது பேச்சு மொழியாய் இருந்தது. அப்பேச்சு மொழிச் சமஸ்கிருதம் உருவான காலத்தில் ஆரியர்கள் நாடோடிகள். இவ்வாழ்வின் சின்னத்தைச் சமஸ்கிருதம் இன்னுந் தாங்கிக் கிடக்கிறது. அதில் இன்னும் நாட்டுப் பெயர்கள் உயர்தினைப் பன்மைப் பெயர்களே. அதாவது, பாண்டிய நாடு என்பது சமஸ்கிருதத்தில் பாண்டியர்கள் எனப்படுகிறது. ‘இராமன் கோசலத்திலிருந்து விதேகத்துக்குச் சென்றான்’ என்பதன் சமஸ்கிருதப் பாணி, ‘இராமன் கோசலத்தாரிடமிருந்து விதேகத்தாரிடம் சென்றான்’ என்பதே. அன்று அவர்களது நாடு, வீடுந் தெருவும் ஊரும் உடைய நாடல்ல, நாடோடிக் கும்பல்களாகத் திரண்டு இடத்துக்கிடம் சென்ற ஒரு மந்தையாகவே இருந்தது என்பதை இது காட்டுகிறது.

(ஆதாரம்: பன்மொழிப் புலவர் அறிஞர் கா. அப்பாத்துரை எழுதிய ‘சரித்திரம் பேசுகிறது’ என்னும் நூல். பக்கம்.138 – 144)

நன்றி: ‘சமஸ்கிருத’ படையெடுப்பு, தொகுப்பு: விடுதலை இராசேந்திரன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன