காவிமயமாகும் கல்வி-பாசிசத்திற்கான துருப்புச்சீட்டு-1

சாதியை இஸ்லாமியர்கள் தான் புகுத்தினர், இந்துக்களை காப்பாற்றுவதற்கே ஹெட்கேவாரும் முன்ஞ்சே வும் ஆர் எஸ் எஸ் அமைப்பை ஆரம்பித்தனர், ஆரியம்-திராவிடம் என்பது மாயை, அனைத்து இந்திய மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்தே தோன்றியது போன்ற கருத்துக்களை பாடத்திட்டத்தினுள்  சேர்த்துள்ளனர். 

தேசியக் கல்விக் கொள்கையை(NEP) நடைமுறைப்படுத்த 2020 மே மாதத்தில் மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு பள்ளி-கல்லூரிகளின் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளுக்குள், நிதிமூலதனத்தின் ஆதரவு பெற்ற கல்விச் சேவை அமைப்புகளும் மற்றும் காவிகளின் தலையீடுகளும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில் பள்ளி-கல்லூரிகளின் பாடத்திட்டத்தினை மாற்றுவது என்ற வேலைகளில் மிகமும்மரமாக காவி கும்பல்கள் இறங்கியுள்ளன. கடந்த ஆறு மாதங்களில் ஹரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், உத்திராகண்ட், கர்நாடகா ஆகிய மாநில அரசுகள்  NEP ஐ அமல்படுத்துவதற்கான கமிட்டிகளை அமைத்துள்ளன.

 

மார்ச் மாதம் ஹரித்துவாரில் உள்ள தேவ் சன்ஸ்கிரிதி விஸ்வவித்யாலயா வில் பேசிய முன்னாள் அரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு ”தேசியக் கல்விக் கோள்கையின் நோக்கமே கல்வியை இந்தியமயமாக்குவதுதான்.  நமது கல்வி முறை இந்தியமயமாக்கப்பட வேண்டும். ஆனால் இதை சிலர் எதிர்க்கின்றனர்……… நாம் நமது மூலத்தினை நோக்கிப் போகவேண்டும். சிறந்த கலாச்சாரம், பாரம்பரியம், நம்முடைய பழைய புத்தகங்கள் மற்றும் வேதத்தில் உள்ள அறிவுப் புதையல் ஆகியவற்றை புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

ஜூன் மாதம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அமித் ஷா ”நாம் இப்போது சுகந்திரமானவர்கள், நம்முடைய வரலாற்றை எழுதுவதை யாரும் தடுக்க முடியாது’’ என்றார்.

வேத, இதிகாச-புராணங்களில் அறிவியல்-தொழில்நுட்பம் சார்ந்தக் கருத்துக்கள் கொட்டிக் கிடக்கிறது. எனவே மாணவர்கள் அதனைப் படிக்க வேண்டும். இந்திய வரலாறு மேற்கத்திய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்திய வரலாற்று அறிஞர்கள் முகலாய மன்னர்களுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வரலாற்றை எழுதியுள்ளனர். இந்து மன்னர்களைப் பற்றி அதிகமாக இல்லை. எனவே இந்திய வரலாற்றை மாற்றி எழுதவேண்டும். இதுதான் இவர்களது மையமான வாதம்.

குளோனிங்க் முறை இந்தியாவில் இருந்தது, பிளாஸ்டிக் சர்ஜரி தொழில்நுட்பம் கொண்டு விநாயகர் உயிர்பெற்றார், புவிஈர்ப்பு விசையை இந்தியர்கள்தான் முதன்முதலில் கண்டறிந்தனர், ஆகாயவிமானம் பண்டைய காலத்தில் இருந்தது, அணுவைப் பற்றி பழைய இலக்கியங்களில் உள்ளது, பிதாகரஸ் தேற்றத்தை பிதாகரசுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் பயன்படுத்தினர், மாட்டு மூத்திரம் புற்றுநோயைக் குணப்படுத்தும், ராமாயணமும் மாகாபாரதமும் உண்மையாக நடந்தவை என தொடர்ந்து ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பல் பேசி வருகின்றனர். ஆனால் இதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் அதனடிப்படையிலான கோட்பாடு-செயல்முறை விளக்கங்கள் எதுவும் இதுவரை முன்வைக்கவிலை. வேதங்கள், புராண-இதிகாசங்களில் உள்ள சுலோகங்களைக் காட்டி அதற்கு பொழிப்புரைத் தருகின்றனர். பண்டையகால அறிவியல் பெருமைகள் என்று சங்கிகள் சொல்லிக்கொள்கின்ற இவைகளெல்லாம் வெறும் கற்பனைக் கதைகளே. இப்புனைவுகளை ‘பண்டைய இந்திய அறிவியல் அறிவு(Ancient Indian Knowledge system)’ என்ற போர்வையில் பள்ளி-கல்லூரி பாடத்திட்டத்தினுள்  சேர்த்துள்ளனர்.

சாதியை இஸ்லாமியர்கள் தான் புகுத்தினர், இந்துக்களை காப்பாற்றுவதற்கே ஹெட்கேவாரும் முன்ஞ்சே வும் ஆர் எஸ் எஸ் அமைப்பை ஆரம்பித்தனர், இந்து மன்னர்களின் ஆட்சிகாலம் என்பது ஒரு பொற்காலம், பாகிஸ்தான் உருவானத்தற்கு காங்கிரஸ்தான் காரணம், ஆரியம்-திராவிடம் என்பது ஒரு மாயை, அனைத்து இந்திய மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்தே தோன்றியது போன்றவைகள்  ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பல்களால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இக்கருத்துக்களையும் பள்ளி-கல்லூரி பாடத்திட்டத்தினுள்  சேர்த்துள்ளனர்.   (இது குறித்து பிறகு விரிவாக எழுதுகிறோம்)

சமீபத்தில் தி ஒயர் இணையதள நேர்காணலில், மோடி அரசாங்கம் வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் எனக்கூறுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த வரலாற்று ஆய்வாளர் மற்றும் பேராசிரியர் ரோமிலா தாப்பர், ‘காலணியர்கள் வருகைக்கு முன்பு வரை இந்திய வரலாற்றைப் பற்றிய நூல்கள் இங்கு இல்லை. காலணியர்கள் தான் இந்திய வரலாறு பற்றிய நூல்களை எழுத ஆரம்பிக்கின்றனர்.  அதில் குறிப்பாக 1870 ல் ஜேம்ஸ் மில் எழுதிய பிரிட்டீஸ் இந்திய வரலாறு என்ற நூல் வெளியானது. அதில் இந்தியாவில் ஹிந்து தேசம் முஸ்லீம், தேசம் என இரண்டு தேசம் இருந்ததாகவும் அவைகளுக்கிடையே தொடர்ந்து மோதல்கள் இருந்ததாகவும் எழுதியுள்ளார். அதன் பிறகு வந்த காலணிய எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இக்கருத்தையே திரும்பத் திரும்ப சொல்லி வந்தனர். அப்போதை நடுத்தரவர்க்கப் பிரிவினரும்(வர்த்தகம் மற்றும் அரசு பணிகளில் இருந்த, மேற்கத்திய கல்வி பயில வாய்ப்பு பெற்ற உயர்சாதி இந்துக்கள்-ஆர் எஸ் எஸ் –பிஜேபி-இந்து தேசியத்தின் மூதாதையர்கள் இவர்கள்தான்-அழுத்தம் கட்டுரையாளருடையது) இக்கருத்தை ஏற்றுக் கொணடனர்.

ஆனால் ஜேம்ஸ் மில் கூறுவது போல  இந்தியாவில் ஹிந்து தேசம் மற்றும் முஸ்லீம் தேசம் என இரு தேசமாக இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்தியா என்ற நாடு 1947 க்கு பிறகுதான் உருவானது. அக்பர் படைத்தளபதியாக இந்துக்கள் இருந்துள்ளனர். பிரித்திவிராஜ் சௌகான் படையில் முஸ்லீம்கள் தளபதிகளாக இருந்துள்ளனர். பழுதடைந்த குதுப்பினாரை இந்து கைவினைஞர்கள் சரிசெய்ததாக குறிப்புகள் உண்டு. முகலாயர்கள் மற்றும் ராஜ்புத்து குடும்பங்களுக்கிடையே திருமணங்கள் நடந்துள்ளது. மேற்கு கடற்கரை பகுதிகளில் அரேபிய வர்த்தகர்கள் அப்பகுதி மக்களை திருமணம் செய்து கொண்டு உள்ளூர் மக்களோடு கலந்துள்ளனர்‘. என்று கூறியுள்ளார்.

மேலும் சமீபத்திய தொல்லியல் ஆய்வுகள் மற்றும் மரபியல் ஆய்வுகள் திராவிட மொழிக்குடும்பத்தை சார்ந்த தமிழ் உள்ளிட்ட மொழிகள் சமஸ்கிருதத்தோடு தொடர்பில்லாதவை என நிருப்பித்துள்ளன.

போதிய ஆதாரங்கள் இருந்தாலும் ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பல் இவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. தங்களுடைய பார்பனிய மேலாதிக்கத்திற்காக பண்டைய இந்திய வரலாற்றை திரித்தும் அனைத்துமே வேத்ததில் உள்ளது என்று கதையளந்தும் வருகின்றனர். இந்த கட்டுக்கதைகளை பள்ளி-கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் திணிப்பதற்கான துருப்புச் சீட்டே தேசிய கல்விக் கொள்கை—020 ஆகும். இதன் துணையோடு பள்ளி-கல்லூரிகளின் பாடத்திட்டத்தினுள் செய்துள்ள மாற்றங்களை பற்றி அடுத்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

தொடரும்…

அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன